Tuesday, November 25, 2008

குழப்பத் தீர்வுகள்



சில நாட்களின் எவருமற்ற பொழுதுகளில்
திணிவுறும் தனிமைகள்.
நட்பு வட்டத்தின் சுற்றளவு
ஒற்றைப் புள்ளிக்குச் சிறுத்தாற்போல்
என் எல்லோரும் எங்கேனும் ஏதேனும்
நிமித்தங்களின் நிமித்தமாய்.

மலைபோல் குவியும்
எண்ணக் குப்பைகளுக்கு
மத்தியில் உழல்கையில்,
எதிர்காலப்பயம் வந்து அச்சுறுத்தும்.

முன்னெப்போதோ,
பள்ளிக்காலத்தின் ஒரு சனிக்கிழமை மதியத்தில்,
அம்மா மடியில் கிடந்திருக்கையில்,
அவள் சொன்னது நினைவில் வரும்.
நீ பொறக்றப்போ பாத்துட்டுதான்டா இருந்தேன் நான் என்று.
பொங்கும் நெஞ்சுரத்தை
அளக்க ஆகாது என்னால்.
உதிரும் சிரிப்போடு
கவலை உதிரிகளைக் கால்தள்ளி,
அடுத்த வேலையைக் கைகொள்வேன்.
மீண்டும் பிறந்து,
மீண்டவனாய்.

உயிரோசை 22/12/2009 மின்னிதழில் பிரசுரமானது.



0 மறுமொழிகள்:

  ©Template by Dicas Blogger.

TOPO