Sunday, July 3, 2011

ஒரு முடிவுக்கு வரும் கணம்



நீ இல்லாத நாட்களை
ஒவ்வொன்றாய் கிழித்தெறியத்
துவங்கினேன்

இன்று வந்தது

உடன் புரிய வந்தது
வருங்காலத்திலும் இப்படி
எதையும் கிழித்துக் கொண்டிருப்பதில்
எனக்கு விருப்பமிருக்காது என்பது

அந்த கணத்தில்
எடுக்கப்பட்டிருக்கலாம்
எதிர்காலத்தின் மீதான அஞ்சுதலில்
நிகழ்காலத்தை இறந்த காலமாக்கும்
ஒரு முடிவு

Read more...

Sunday, June 19, 2011

சாருவுடன் ஒரு சந்திப்பு - சில பதிவுகள்..



இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சாரு ஒருமுறை பெங்களூருக்கு வந்தார்.
ஏர்போர்ட் ரோடில் ஒரு ஹோட்டலில் சந்திப்பு நிகழ்வதாக இருந்தது. அன்றைக்கு என்று எனக்கு சரியான காய்ச்சல். செல்ல முடியவில்லை. பின்னர் அவர் தளத்தில் புகைப்படங்களைக் கண்டபோதுதான் அந்தப் பட்டு வேட்டிக்காகவாவது சென்றிருக்கலாமே என்றிருந்தது.

இந்த வாரத் துவக்கத்தில்தான் அறிவித்திருந்தார். பெங்களூரில் வாரக்கடைசியில் ஒரு சந்திப்பு உள்ளதென்று. இம்முறை தவறவிடக்கூடாது என்பதற்கான என் முயற்சிகள் வீண் போகவில்லை. ஜூன் 18 சனிக்கிழமை மாலை 5 மணிக்கெல்லாம் சரியாகக் கிளம்பி விட்டேன். 5 மணிக்குத்தான் நிகழ்வு துவங்குகிறது. goobe's புத்தகக் கடையைக் கண்டுபிடித்துப் போய் சேரும்போது மணி ஐந்தரை.

சாலையிலிருந்து தாழ்வாக இறங்கினால் அந்தக் கடை இருக்கிறது. படிகளில் இறங்கும்போதே மெலிதாய் எனக்குள்ளே ஒரு பரபரப்பு. எத்தனை பக்கங்கள் படித்திருப்போம்.. வாசகனும், எழுத்தாளரும் சந்தித்துக் கொள்வதைப் பற்றி. எனக்கிதுதான் முதல் இலக்கியக் கூட்டம். பெங்களூர் வாசத்தின் காரணமாக நான் தியாகம் செய்ய நேர்ந்த ஒன்றே ஒன்று இலக்கியக் கூட்டங்களில் பங்குகொள்ள முடியாமலிருப்பதுதான். இறங்கிக் கொண்டே இருக்கையிலேயே என்னால் பார்க்க முடிந்தது. மையமாய் கையில் புத்தகத்துடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். இருபதிலிருந்து முப்பது பேர் இருக்கலாம். உட்கார இடமில்லையாதலால் நின்று கொண்டிருந்த சக நேயர்களுடன் சங்கமிக்க நேர்ந்தது.

வீடியோவில் அவர் பேசுவதை பார்க்கும் போதெல்லாம் மனிதர் எழுத்தில் எப்படி வெளிப்படுவாரோ, அச்சசல் அதேபோலத்தான் பேசுகிறாரே என்று வியந்திருக்கிறேன். சமீபமாக எழுதியவற்றில் சிலவும், பேசுகையில் வெளிப்படுவதுண்டு. இன்றும் அது நிகழ்ந்ததை என்னால் அவதானிக்க முடிந்தது. தமிழ் புத்தகங்களை ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கையில் நேரும் நடைமுறைப் பிரச்சினையைப் பற்றியது அது. 'மொழிபெயர்ப்பாளர்களுக்கு தற்கால ஃப்ரெஞ்சு அல்லது ஜெர்மன் இலக்கியத்தைப் பற்றி ஒன்றுமே தெரிவதில்லை. 100 ஆண்டுகள் பின் தங்கியவர்கள் மொழிபெயர்ப்பதால்தான் தமிழ் படைப்புகள் மேலை மொழிகளில் சோபிப்பதில்லை' என்ற கருத்து ஒரு உதாரணம்.

ஸீரோ டிகிரியைப் பற்றி சாரு பேசினார். வாசகர்கள் கேள்வி கேட்டனர். ஸீரோ டிகிரிக்கு, தமிழில், மலையாளத்தில், ஆங்கிலத்தில் நேர்ந்த எதிர்வினைகள் பற்றி சில கேள்விகள். பின்நவீனத்துவம் குறித்து பல கேள்விகள். அதில் நண்பர் கார்த்தி கேட்ட மார்க்ஸியம் மற்றும் போஸ்ட் மார்டனிஸம் குறித்த கேள்விக்கு, மார்க்ஸியத்தை ஆண் பாலினம் என்றும் (பிரமிட் வடிவில், ஒரே சீராக வலுப்பெற்று, தலைமைப் பதவிக்கு வந்து, அதோடு முடிந்து/வீழ்ந்து விடுதல். Ejaculation!) போஸ்ட் மார்டனிஸத்தை பெண் பாலினம் என்றும் (சுழல் வடிவில், முடிவும், துவக்கமும், மையமும் இல்லாமல் பொங்கிக் கொண்டே இருப்பது. Orgasm!) விளக்கியது truly அட்டகாசம்.

போஸ்ட் மார்டனிஸமானது civil society அல்லது human society, எதற்குப் பயன்படுகிறது என்பதும் technically நல்லதொரு கேள்வி. எந்தவொரு சமூகப் பிரச்சினைக்கும் தெருவில் இறங்கிப் போராட போஸ்ட் மார்டனிஸத்தில் வழியில்லையே என்ற ஆதங்கம் இந்தக் கேள்விக்குப் பின்னால் இருந்தது நண்பர்கள் செந்தில் மற்றும் கார்த்தியுடன் பின்னர் உரையாடுகையில் புரிய வந்தது. இந்தக் கேள்விக்கான பதில் தன்னிடம் இல்லை என்றவர், பின்னர் அவரால் இயன்ற வரை தன் கருத்தைக் கூறினார்.

நானும் ஒரு கேள்வி கேட்டேன். எழுத்தாளனாக ஆக வேண்டுமென்பதற்காக நிறைய வாசிக்க வேண்டும். வாசிப்பு உக்கிரமாகும் போது, எழுதப்பட்டிருக்கும் இத்தனைக்கும் மேல் நானெதை சாதிக்கப் போகிறேன் என்ற அயற்சியிலிருந்து மீள்வதைப் பற்றி.

அவர் பதில்களிலேயே படு ஷார்ப்பான பதில் இந்தக் கேள்விக்குத்தான். You can't learn sex by reading books. இதான் என் பதில் என்றார்.

ரோமியோ ஜூலியட்டை முத்தமிட்ட போது, 'you kiss by the book?' என்று ஜூலியட் ஏளனம் செய்தாளாம். அவள் எதிர்பார்த்த முத்தத்தைப் போல எழுத வேண்டும் என்ற தீ உன் குருதியில், மூளையில் கனன்று கொண்டிருக்க வேண்டுமென்பதன் stylish one linerதான் You can't learn sex by reading books என்பது. புரிய வைத்ததும் அவர் கடனே.

குடித்திருந்தார் என்பதையும் அவரேதான் சொன்னார். கேரளாவில் அவர் பாப்புலாரிட்டி பற்றிய கேள்விக்கு, சற்று நேரம் முன்பு, பாரில் குடித்துக் கொண்டிருந்த போது அங்கு பணிபுரிபவர் அவர் காலில் வந்து விழுந்ததையும், அவர் ஒரு மலையாளி என்பதையும் பகிர்ந்து கொள்வதன் பொருட்டு.

கேள்வி பதில் செஷன் முடிந்த பிற்பாடு, புத்தகம் வாங்கிய வாசகர்களுக்குக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். 'மதனுக்கு' என்று தமிழில் கையெழுத்து எனக்கு மட்டும்தான் வாய்த்தது. தான் கையில் வைத்திருந்த மற்றும் இருந்த ஒரே ஒரு தமிழ் பதிப்பை நண்பர் பாலசுப்ரமணியம் எனக்கே கொடுத்தார். அவரிடம் இன்னொன்று இருக்கிறதாம். நன்றிகள் பல.

முகஸ்துதி எல்லாம் இல்லை. எனக்கு என்ன வருகிறதோ அதைத்தான் எழுதுவேன் எப்பொழுதும்.  மனிதரின் ஒவ்வொரு அசைவிலும் அவரிடமிருக்கும் கனிவு என் வழியாகப் பாய்ந்து ஊடுருவிப் பின்னாலிருந்த புத்தக ரேக்குகளைத் தகர்த்துக் கொண்டேயிருந்தது. கேள்விகளுக்குக் காதைக் கூர்தீட்டுகையில், பதில் சொல்கையில், நம்மிடம் பேசுகையில் என்றெப்பொழுதும் கனிவே நம் காட்சி. இவை போன்ற நேரங்களில், ஒருவர் எழுதுவதை வைத்து, அவர் இந்த மாதிரி மனிதர்தான் என்று மேலோட்டமாக முடிவு செய்வதிலிருக்கும் மடமை பொட்டிலடித்தாற் போல் விளங்கும். எனக்கு அவர் கனிவானவர், அன்பானவர் என்பது தெரியும். ஆனால் இந்த அளவுக்கு என்பதுதான் ஆச்சர்யம்.

நிகழ்வு முடிந்த பின்னர், நண்பர் ராஜேஷ் அவர் வண்டியை எடுத்து வரச் சென்றிருக்கையில் (அவருடன் தான் சாரு செல்ல வேண்டும்), ஒரு இரண்டு நிமிடம் சாருவும், நானும் மட்டும். அந்த நிமிடங்களின் கனம் இன்னும் எனக்குப் பிடிபடவில்லை. That was something really special.

ராஜேஷ் வந்தவுடன், டூவீலரில் பின்னாடி உட்கார்ந்து, பை சொல்லிக் கிளம்பி விட்டார். மிஷல் ஃபூக்கோ, சார்த்தர், லெனின், ரோலான் பாக் அனைவரும் பெங்களூரின் குளிர் காற்றில், மிதமான பீர் வாசத்துடன் கரையத் துவங்கினார்கள்.

Read more...

Tuesday, June 14, 2011

வதந்தியா? ரகசியமா?





ஒரு வதந்தியைப் பரப்புவதற்கும்,
ஒரு ரகசியத்தைக் கசியச் செய்வதற்குமான
இடைவெளியில் நின்றுகொண்டு
எப்படி முடிவெடுக்கலாம்?

தேர்ந்தவொரு வதந்தி என்பது 
மிகுந்த ஆர்ப்பாட்டத்துடனும்,
ரகசியம் என்பது மௌனித்த கண்களுடனும்
நிகழ வேண்டும் என்பதால்
நம் சொற்களைப் பொறுத்து..?

வதந்தி என்பது
கிளர்ச்சியைக் கிளப்புவதாகவும்,
ரகசியம் என்பது
பொறுமையை சோதிப்பதாகவும்
இருத்தலே சிறப்பென்றால்
உங்கள் சாதுரியத்தை ஒட்டி?
அல்லது கேட்பவனின் அறியாமையை ஒட்டி..?

உட்புகுத்தப்படும் காதுகளிடமிருந்து
வதந்தியிலிருக்கும் பொய்மை 
வசதியாய் மறைந்து கொள்வதும்,
காதுகளை எதேச்சையாய் சந்தித்ததாகக்
காட்டிக் கொள்ளும் ரகசியத்தின் உண்மை
அக்காதுகளின் முன்
நர்த்தனம் செய்வதும்தான் சம்பிரதாயம் எனில்,
நம் பொய் மெய்களின் புஜபலத்தை உத்தேசித்து..?

சற்றே குழப்பமாக இருக்கிறது..

ஆனால்
ஒன்றை மாத்திரம்
மிக உறுதியோடு சொல்லிக் கொள்கிறேன்..

தயவுசெய்து 
நீங்களாவது ஒரு முடிவுக்கு
வந்து விடுங்கள்..

உங்கள் வதந்தியில் இருக்கும் பொய்
நிஜமாக இருந்துவிடுவதற்குள்..
உங்கள் ரகசியத்தில் இருக்கும் உண்மை
அப்படியில்லாமல் போய்விடுவதற்குள்..
நீங்களாவது ஒரு முடிவுக்கு
வந்து விடுங்கள்..

இதை
ஒரு வதந்தியாய்,
ஒரு ரகசியமாய்
எப்படி எடுத்துக் கொண்டாலும் சரி.

Read more...

Friday, May 20, 2011

கலிலியோவிற்கு ஏன் விஷம் கொடுத்தோம்?


சில விஷயங்களுக்கான காரண காரியங்கள் நம்மால் அறிய முடியாதவையாக இருக்கும். ஆனால் மனம் அதனையே சுற்றிச் சுற்றி வரும். நாம் நம் வாழ்வின் இரு வேறு தருணங்களில் சந்திக்க நேர்ந்த இருவருக்கு, ஒரே மாதிரியான முக ஜாடை இருப்பது ஏனோ என்னை, அதன் அனிச்சைத் தன்மையை உணரச் செய்யாமல், செய்யும் தொந்தரவு அதிகமாக இருக்கிறது.

மடிவாலாவில் கல்லடா ட்ராவல்ஸுக்கு அருகில் A1 Travelsன் அலுவலகம் உள்ளது. இங்கே இருக்கும் மது என்ற மனிதரை, கோவை செல்ல பேருந்து பயணச்சீட்டு முன் பதிவு செய்யச் செல்லும் வகையில் பார்த்திருக்கிறேன். பேசியிருக்கிறேன்.

ஒரு நாள் உடல் நலம் சரியில்லாமல், மருத்துவரைக் கண்டுவிட்டு, மாத்திரை வாங்குவதற்காக எங்கள் ஏரியாவில் இருக்கும் பிரேமா மெடிக்கல்ஸில் மேற்சொன்ன மதுவைக் கண்டேன். அவரிடம் சென்று, சம்பிரதாயமாகச் சிரித்து, மாத்திரை கேட்டேன். ஹேகிதீரா என்றேன். அவர் கண்களிலோ குழப்பம் மிதந்தது. என்னை அவருக்குத் தெரியவில்லை என்ற பரம ரகசியம் ஒருவழியாக எனக்குப் புரிந்த பின்னர், A1 Travelsல் தானே வேலை பார்க்கிறீர்கள் என்றதற்கு அவர் சிரித்தார். இல்லையென்றார்.

என்னால் நம்பவே முடியவில்லை. அவர்களிருவரும் அவ்வளவு நெருக்கமான முக வெட்டுடையவர்கள். வெறும் 2 கிமீ தொலைவில் வாழ்கிறார்கள். இவர்களில் ஒருவரைச் சேர்ந்தவர்கள், இன்னொருவரைக் கண்டு இதுவரை எந்தக் குழப்பமும் நேரவில்லையென்பது மிக்க ஆச்சர்யமூட்டியது. இன்றைக்கும் அவரைப் பார்த்தால் இவரையும், இவரைப் பார்த்தால் அவரையும் நினைத்துக் கொள்ளாமல் இருக்க முடிவதில்லை. தனியாகச் சிரித்துக் கொள்கிறேன்.

இவை போன்ற நிகழ்வுகள் எல்லோருக்குமே நிகழ்பவைதானெனினும், நான் மட்டும் ஏனிப்படிக் காணாததைக் கண்டது போல் உணர்கிறேன் என்று தெரியவில்லை. இவர்களாவது பரவாயில்லை சாதாரணர்களாக வாழும் மிஸ்டர் பொதுஜனங்கள். அடுத்த கதையைக் கேளுங்கள்.

ஹாலிவுட் நட்சத்திரம் Matt Damonக்கும், WWE சூப்பர் ஸ்டார் John Cenaவுக்கும் என்னால் ஆறு வித்தியாசங்களைக் கண்டறிய இயலவில்லை. என்னைத் தவிர வேறு எவருக்கும் இது தோன்றினாற் போலும் இல்லை. வாசன் ஐக் கேருக்குத் தான் செல்ல வேண்டுமோ?




பிரபலங்களின் வரிசையில் இன்னொரு உதாரணம். இது ஓரளவுக்கு அங்கீகரிக்கப்பட்ட ஜோடி! ஹாலிவுட்டின் Tom Hanks-ம், பாலிவுட்டின் Aamir Khan-ம்.




அவ்வளவு ஏன். நம் பதிவுலக எழுத்தர், நண்பர் செல்வேந்திரனும், என் அலுவலகத்தில் பணிபுரியும் சோமுவும் ஒரே போன்றிருப்பதாகவும் பிரம்மையெனக்கு. 




இதுவரை மனுஷ்ய கணக்குகள் தாம். இனிதான் இருக்கின்றன தெய்வானுகூல மஹாத்மியங்கள்!

நான்காண்டுகளுக்கு முன்னர் JP நகரில் இருக்கும் ராகவேந்திரர் கோயிலுக்குச் சென்றிருந்தேன். மிகவும் ப்ராசீனமானதொரு ஆலயம். அங்கே வரையப்பட்டிருந்த ஓவியங்களில் இருந்த ஒரு ராகவேந்திரர் என்னைப் போட்டுப் படுத்தியெடுத்தார். அது ஏனோ தெரியவில்லை. அந்த ராகவேந்திரரின் முகத்தில் நமது ரஜினிகாந்தின் சாயல் என் கண்களுக்கு மட்டும்தான் வழமை போலவே புலப்பட்டது.


ஏறக்குறைய இந்தப் படம் போலத்தான் அதுவுமிருந்தது. இணையத்தில் பிடித்தேன். நிச்சயமாக அந்தப் படம் வரையப்படும் போது ரஜினிகாந்த் பிறந்தே இருக்க மாட்டார். பின் எப்படி அவர் சாயல்? சரி போகட்டும். காக்காய் விழுக்காட்டிய பனம்பழம் என்றே வைத்துக் கொள்வோம். அது ஏன் ஒரு கமல்ஹாசனோ.. இல்லை இப்பூவுலகில் வசிக்கும் வேறொருவரோவன்றி, ரஜினிகாந்தின் சாயலாக அமைய வேண்டும்? நான் இங்கே கிடந்துழல வேண்டும்?

ரஜினிகாந்த் ஒரு தீவிர ராகவேந்திர பக்தர் என்பது உலகறிந்த விஷயந்தானே. இதற்கும், அந்தப் படத்தில் அவர் சாயலிருந்தமைக்கும் ஏதேனும் தொடர்பிருக்குமோ?

ரஜினியின் ஒரு பேட்டியில் கேட்ட ஞாபகம். மந்த்ராலயமும், துங்கபத்ரா நதியும் தன் கனவில் வந்த பிறகுதான் தான் அங்கு சென்றதாகச் சொன்னார். ஒரு வேளை இதற்கும், என் குழப்பத்துக்கும் ஏதும் முடிச்சு இருக்குமா? ஸ்ஸ்ஸபா.. கண்ணைக் கட்டுகிறது போங்கள்.

ஒரே மாதிரி இருக்கும் பிரச்சினையை சற்றே பரணில் போடுவோம். நாம் வேறு வேறு சமயங்களில் சந்தித்த இரு மனிதர்கள், அவர்களிருவரும் வேறேதோ சூழலால், காரணத்தால் நண்பர்களாக இருப்பது இதுகாறும் கண்டது போல ஆச்சர்யத்தை அல்ல.. சுவாரஸ்யத்தைக் கிளப்புகிறது.

என்னுடைய நண்பனும், என்னுடைய வேறொரு நண்பனுடைய நண்பியும், சிறுவயது முதல் நண்பர்கள் என்பது ஆர்க்குட்டின் மூலமாகத் தெரிய வந்தது சில ஆண்டுகளுக்கு முன். அதாம்பா.. ம்யூச்சுவல் ஃப்ரெண்ஸ்!

இறுதியாய் ஒன்றேயொன்று.. என் சகோதரி, தன் கைத்தலம் பற்றக் கனாக் காணும் ஜானகிராமன் அவர்கள், அண்ணன் வா.மணிகண்டனின் கல்லூரி ஜூனியராம்!

இப்போது சொல்லுங்கள்..

உலகம் என்ன வடிவென்று சொன்னதற்காகக் கலிலியோவிற்கு விஷம் கொடுத்தோம்? :)

Read more...

Wednesday, May 18, 2011

மொழியும், மொழிதல் சார்ந்தும்..


ஒன்பது வயதுக்குள்ளான குழந்தைகளுக்கு புதிய மொழிகளைக் கற்றுக் கொள்ளும் ஆற்றல் இயல்பாகவே அதிகமாக இருக்குமாம். எங்கோ படித்த ஞாபகம். அதற்குள்ளாகவே எத்தனை மொழிகளை முடியுமோ, அத்தனையையும் கற்றுக் கொள்ளாமல் போய்விட்டேனோ என்றெண்ணுகிறேன். ஒரு புதிய மொழியைக் கற்றுக் கொள்தல் என்பது எத்தனை சுவாரசியமான, உபயோகமான ஒரு செயலாக இருக்க முடியுமல்லவா?

தாய்மொழி தமிழ். தமிழ்வழிக் கல்வியென்பது ஒரு தடைக்கல்லாகி விடாமல், எப்படி எனக்கு ஆங்கிலம் தடையற வந்தது என்பது இன்றுவரை எனக்கிருக்கும் ஆச்சரியம். எம்பெருமான் ராமபிரானின் கருணையென்பதைத் தவிர வேறெதையும் காரணமாக சிந்திக்க சிந்தை ஒப்பவில்லை. கடந்த நான்கரை ஆண்டுகளாக பெங்களூரில் வாசம் செய்வதன் காரணமாக மட்டுமல்ல. கொஞ்சம் ஆர்வமும் இருந்ததன் காரணமாக, கன்னடம் வருகிறது. 

இதற்கு முன்பு வேலை பார்த்த நிறுவனத்தில் தினமும் அலுவலகக் காரில் தான் செல்வது வழக்கம். அதன் ஓட்டுநர் தேவராஜ்தான் எனக்குக் கன்னடம் பயிற்றுவித்த குரு. தினமும் ஏதேனும் சில சொற்றொடர்களைச் சொல்லி, அதைக் கன்னடத்தில் எப்படிச் சொல்வது என்று கேட்டு, மனதில் இறுத்திக் கொள்வேன்.

கன்னடத்தில் பேச வேண்டும் என்ற சூழ்நிலை வரும் என்பது தெரிந்தால், பேசப் போகும் காட்சிக்குத் (context) தகுந்தாற்போல முன்பே ஒத்திகை பார்த்து, தளை தட்டிக் கொள்வேன். இல்லாவிடில் கடினம். அத்துணை சரளமாக சித்தி வீட்டு வழக்கு வாய்க்கவில்லை இன்னும்.

தினசரி வாழ்க்கையில் பெங்களூரானது தமிழ் தவிர்த்து ஏனைய மொழிகள் தெரியாதோருக்கு ஒரு பிரச்சினையாகவே இருப்பதில்லை. அது எப்படியோ.. பெரும்பாலான கன்னடத்தாருக்கு தமிழ் வந்து விடுகிறது தத்தித் தத்தியேனும்.. இது தமிழின் சிறப்பா, இல்லை கன்னடத்தின் சிறப்பா.. இல்லை தமிழ் திரைப்படங்களின் மசாலாச் சிறப்பா என்பதைத் தெளியச் செய்வோருக்கு ’தக்க சன்மானம்’ தரலாம் என்றிருக்கிறேன். :)

வயது வந்த பின், புதியதாகவொரு மொழி கற்றுக் கொள்வதற்குத் தேவையானவை இரண்டு. ஒன்று படைப்பாற்றல் (Creativity). இரண்டு, தவறாகப் போய்விட்டால் என்ன செய்வது என்ற சங்கோஜமே இல்லாமை. தவறாகப் போய் திருத்தப்படும் விஷயங்கள்தானே நினைவில் நிலைக்கின்றன. வாய்க்கும், வாழ்வுக்கும்.

இவ்விரண்டையும் காரணிகளாக எண்ணியதற்குக் காரணம் என்னவென்று சொல்ல அவா. 

கன்னடத்தினர் பேசும் தமிழில் ஒரு வித்தியாசமான வார்த்தையொன்றை அவதானிக்கலாம். இடையிடையே, ’அப்படியா..’ என்று கேட்க நேருமிடங்களிலெல்லாம் ‘ஆமாவா..’ என்று கேட்டுக் கொண்டேயிருப்பார்கள். 

தமிழில் நாம் வழங்கும் ‘அப்படியா..’என்ற வார்த்தைக்கு ஈடானவொரு சொல் கன்னடத்தில் இல்லை. கன்னடத்தில் ’ஹவுதூ..’ என்றால் ஆமாம் என்ற பொருள். ‘ஹவுதா..’ என்றால் அப்படியா என்ற பொருள். ஆக அவர்களுடைய கன்னட ’ஆமாவா..’-வை நம்முடைய தமிழ் ’அப்படியா’-வுக்குப் பதிலீடாக்குகிறார்கள். எனவே புதிய மொழியில் உரையாடிப் பழக, மேற்சொன்ன இரண்டு பருப்பொருட்களும் தேவையென்பது ஓரளவுக்கு நிரூபணமாகிறது.

-0-

Bachelor என்ற வார்த்தைக்கு ஈடான தமிழ் வார்த்தை என்னவென்று யோசித்ததில் ஸ்பஷ்டமாய் தலைவலி மிஞ்சிற்று. பிரம்மச்சாரி என்றால், பெண்ணைத் தீண்டாதவன் என்றுதானே பொருள். (முதலில் இது தமிழ் சொல்லா என்றே சந்தேகம்!) திருமணமாகாதவன்.. ஆனால், அவனுடைய பெண் சகவாசத்தைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம்.. என்பதுதானே வழக்காற்றில் நாம் கொள்ளும் Bachelor-க்கான பொருள். இதற்கிணையான தமிழ் சொல் அடியேனின் சிற்றறிவுக்கெட்டவில்லை. எவருக்கேனும் எட்டினால், சுட்டுங்கள்.

சமீபமாய் கதா காலக்ஷேபங்களில் நேரம் அதிகமாய் செலவாகிறது. என் வயதுக்கு இதெல்லாம் சற்று விபரீத விதிவிலக்கோ என்ற ஐயப்பாடு எனக்கே சில நேரங்களில் எழுந்தாலும், வல்லான் வகுத்த வாய்க்காலில், வழி தப்பும் பயமெதற்கு என்று திருத்திக் கொள்வேன். 

வேளுக்குடி வைணவத்தை திகட்டத் திகட்டத் தருகிறார். டியெஸ்.பாலகிருஷ்ண சாஸ்திரிக்கு சைவ, வைணவ வேறுபாடெல்லாம் இல்லை. சுகி சிவத்தை ஆன்மிக சொற்பொழிவாளர் என்று சொல்வதை, அவருடைய சுய முன்னேற்றக் கருத்துகள் முறைக்கின்றன. விசாகா ஹரி.. பார்த்த, கேட்ட மாத்திரங்களில் கவர்ந்திழுத்துக் கட்டிப் போடுகிறார். சங்கீத உபன்யாசம் என்ற கான்செப்ட் அட்டகாசமாய் பொருந்துகிறது இவருக்கு. இவரைப் பற்றி பிறிதொரு சமயம் விஸ்தாரமாய் பகிர எண்ணமிருக்கிறது. வாரியார் சுவாமிகள், இவர்கள் எல்லோருக்கும் மூத்தவர். அனுபவம், ஆன்மிகம், ஹாஸ்யம்.. எல்லாமும் கிடைக்கும் அவரிடம். 

வாரியார் சுவாமிகள் சொல்கிறார். மதர் என்ற சொல் மாதா என்ற சொல்லிலிருந்தும், ஃபாதர் என்ற சொல் பிதா என்ற சொல்லிலிருந்தும், பிரதர் என்ற சொல் பிராதா என்ற சொல்லிலிருந்தும் உருவானவை. ’அங்கே’யிருப்பதெல்லாம், ’இங்கி’ருந்து சென்றதுதான் என்று. இவர் இக்கருத்தைத் தமிழ்தான் உலகிலேயே சிறந்த மொழி என்பதை அழுத்தந்திருத்தமாக உணர்த்துவதற்காகச் சொன்னார் (பேசிக் கொண்டிருக்கும் தலைப்பு அவ்வையும், தமிழும்!). அவர் குறிப்பிட்ட எல்லா சொற்களுமே சம்ஸ்கிருதச் சொற்கள் என்பது அவருக்குத் தெரியாமலிருந்திருக்காது என்பது என் அபி. தமிழின் மீதிருக்கும் பிரியம் கண்ணை மறைக்கிறது. வாயை மறைக்கவில்லை. 

இன்னொன்றும் சொன்னார் பாருங்களேன். இதற்காகத்தான் இத்தனை கதையையும் சொல்ல நேர்ந்தது. திருமணமாகாதவன் அதிகம் பேசமாட்டானாம். வெட்கப்படுவானாம். அதாவது பேச்சிலன். இதுதான் Bachelor என்றானது என்றார். 

மெய்ப்பொருள் காண்பதறிவு என்று சொல்லிச் சென்ற மகானை நினைத்துக் கொண்டேன்! :)

Read more...

Thursday, March 3, 2011

127 Hours - இயற்கைப் பெருந்தாயின் முன் மண்டியிடும் மானுடம்..



யாருமிலா வனத்தினுள் வெறி கொண்டு தனித்தலையும் மிருகம் போல, ஏனென்றே அறியாமல் திரைப்படங்களாகப் பார்த்துக் குவித்துக் கொண்டிருக்கிறேன் சில நாட்களாக. The Shutter Island, Memories of Murder, Primal Fear, Good Fellas, Taxi Driver, The American Gangster போன்றவை அவற்றுள் குறிப்பிடத்தக்க சில.

இப்பட்டியலில், இவ்வாண்டு அகாதமி விருதுக்குப் பரிசீலிக்கப்பட்டவைகளுள் ஒன்றான 127 Hours ஏனோ உள்ளே பதுங்கிக் கிடந்த எழுத்துப் பூனையின் வாலை இழுத்துப் பார்த்து விட்டதில், மனவெளியெங்கும் இறைந்து கிடந்த வார்த்தைக் குப்பைகளைத் துழாவித் துழாவி, சிலதை அனுப்பிக் கொண்டிருக்கிறேன் விரல் முனைகளுக்கு.

என்ன சொல்ல? ஒரே வரியில் சொல்வதென்றால், இயற்கை என்னும் சொல்லிலடங்காப் பெருந்தேவிக்கு முன்பாக மானுடம் எனும் அற்பத்தின் ஆழத்தைக் கூறு போட்டிருக்கிறார் Danny Boyle. படம் முழுக்க எனக்கு உறுத்திக் கொண்டேயிருந்தது இதுதான். இவ்வுலகையே நாம்தான் ஆள்கிறோம் என்பதை வெட்கமில்லாமல் முரசு கொட்டும் வண்ணமாக மரங்களைக் கொன்றழிக்கிறோம். நீர்நிலைகளை அபார்ட்மெண்டுகளாக்குகிறோம். ஐந்நூறடிக்கு போரைப் போட்டு அவள் குருதியை உறிஞ்சியெடுக்கிறோம். யார் கொடுத்த உரிமையிது நமக்கு?

படத்தின் துவக்கத்தில் James Francoவின் சைக்கிள் வேகத்தில், உடல் மொழியில் தென்படும் அசாத்தியம், அனாயாசம், வீறு கொண்டெழுந்திருக்கும் மலையைக் காண்கையில் துலங்கும் அலட்சியம், ஆகிய அனைத்தும் நாமாகவே கையிலெடுத்துக் கொண்ட இயற்கைக்கு எதிரான செயல்களின் குறியீடாகவே தோன்றுகிறது. Francoவைப் போலவே நாமும் மண் துகள்களாலான மகா பிண்டமான அத்தாயின் முன் மண்டியிட்டுக் கதறும் நிலை வரும் என்பதைக் கூறும் அபாய மணிதான் 127 Hours.

உலகமறிந்த நேரடிக் கதை. மலையேறுபவன், எதிர்பாராமல் பாறை தன் கையின் மீதேறி சிக்கிக் கொள்கிறான். கையை அறுத்துப் போட்டுவிட்டுத் தப்பிப்பதற்குள்ளான 127 மணி நேரங்களை ஒரு திரைப்படமாக எடுப்பது பெரிதல்ல. கதை தெரிந்த ரசிகர்களையும் கட்டிப் போடும் வித்தையை செயல்படுத்திக் காட்டும் சாமர்த்தியம் இருப்பவன்தான் அதில் வெற்றி பெற முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் இயக்குனர்.

இயற்கையை ஏளனமாய் பார்த்துத் திரியும் ஒருவன், காலை 9.30க்குத் துவங்கி 15 நிமிடங்கள் மாத்திரமே தன்மேல் படும் சூரிய ஒளிக்காக ஏங்குவது, தினமும் காலை அவ்வழியே பறந்து செல்லும் கழுகைக் கண்டு ஆச்சரியப்படுவது, தொங்கிக் கொண்டே தூங்கும் அவன் மேல் எறும்புகள் ஊர்கையில், அவனுக்கும், எறும்புக்கும் என்ன பேதம் என்றென்னை யோசிக்க வைத்தது, என ஒவ்வொன்றுமே இயற்கையின் பேராண்மையை, பெரும் பெண்மையைப் பேசுவதாகவே எண்ணுகிறேன்.

இவற்றுள் மிக முக்கியமான குறியீடு நீர். இருக்கும் ஒரே ஒரு பாட்டில் நீரை வைத்துக் கொண்டு தீர்ந்து விடும் பதற்றத்தில் கொஞ்சம், கொஞ்சமாக அருந்துகிறான். தாகத்தின் வெக்கை ஒவ்வொரு அணுவுக்குள்ளும் ஊடுபாய்ந்து ஒவ்வொன்றையும் ஆயிரந் துணுக்குகளாக சிதறடிக்கிறது. திடீரெனப் பெய்யும் பெருமழை அவன் சிக்கிக் கொண்டிருக்கும் நீளமான பாதை முழுக்க நீரால் நிரப்பி, இந்தா.. இதற்குத்தானே ஆசைப்பட்டாய்.. குடி.. குடி.. என்று அவனை மூழ்கடிக்கும் காட்சியின்போது, பக்கத்தில் இருந்த என் வாட்டர் பாட்டிலை இறுகப் பற்றிக் கொண்டேன்.

பஞ்ச பூதங்களின் முன் பச்சைக் குழந்தைகள் நாமெலாம்!

நம்மையெல்லாம் பிரசவித்து விட்ட போதும் நிற்காமல் கொட்டிக் கொண்டிருக்கும் இயற்கைத் தாயின் பன்னீர்க்குடம்தானே மானுடத்திற்கு நீரைக் கொடுக்கிறது.

Franco சிக்கிக் கொண்டிருக்கும் இடத்திலிருந்து அப்படியே பின்னால் வரும் கேமராக்கண்கள், சில ஆயிரம் அடி உயரம்வரை உயர்ந்து நின்றன. இரு மலைகளுக்கு இடையேயான பிளவுக்குள் கிடக்கிறான் Franco. தொண்டைக்குழி கிழியக் கத்திக் கொண்டிருக்கும் அவன் சத்தம் எவர் செவிகளையும் சேரவியலாத சூழலை மட்டும் உணர்த்தவில்லை அக்காட்சி.

வெறும் வார்த்தை ஜாலத்துக்காக சொல்லவில்லை. அப்பிளவு எனக்கு இயற்கை அன்னையின் பிறப்புறுப்பாகவே தோன்றியது. இங்கிருந்து தான் வந்தோம். அங்குதான் சென்று மடியப் போகிறோம் என்று தோன்றியதில் உள்ளே சற்று கிலி கிளம்பியது.

தாகம் ஒரு உடற் தேவை மாத்திரமல்ல. அது ஒரு தொப்புள் கொடி பந்தம். நாமே நினைத்தாலும் அறுத்துக் கொள்ள முடியாதவாறு பிணைக்கப்பட்டிருக்கிறோம் பெற்றவளோடு.

நான் பார்த்தவற்றுள், தாகமும் ஒரு பாத்திரமாகக் கூடவே பயணிக்கும் சில திரைப்படங்கள் Sahara (1995) - இரண்டாம் உலகப்போரின் போது ஒரு பீரங்கியில் சஹாரா பாலையைக் கடக்க முயற்சிக்கும் இராணுவ வீரர்களின் கதை மற்றும் The Alive (1993) - 1972ஆம் ஆண்டு விமான விபத்தில் சிக்கிக் கொள்ளும் ஒரு ரக்பி அணி மற்றும் உறவினர்கள் பனி மலைகளுக்கு நடுவே பரிதவிக்கும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் ஆகிய இரண்டும் சட்டென நினைவுத் திரையில் கீறல் விழச் செய்தவை.

127 Hours போலவே கதையமைப்பைக் கொண்ட இன்னொரு திரைப்படம் என்று நான் கருதுவது மிகப் பிரபலமான Cast Away (தல Tom Hanks!). Cast Awayல் மனோ வலி அதிகம். 127 Hoursல் உடல் வலி அதிகம். முன்னதில் ஐந்து ஆண்டுகள். பின்னதில் ஐந்து நாட்கள். வலியைத் தாங்குவதில் மனத்தின் மகத்துவம், உடலுக்கு மிகக் குறைவு என்பேன். உடல், வலியோடு மோதத் திராணியின்றி சிதைவுறுகிறது. மனம், வலியை விழுங்கிக் கொண்டு திண்மையுறுகிறது. இரண்டு படங்களிலும் ஸ்தூல உடல் தரும் வேதனையை மீறி மேலெழுந்து வரும் கிளர்ச்சியை நாயகர்களுக்கு அளிப்பது அவர்களின் மனோதிடமே.

என் கையின் மேல் விழத்தான் இந்தப் பாறை இலட்சம் ஆண்டுகளாகக் காத்திருந்தது. எனதொவ்வொரு மூச்சும், செயலும், இந்தக் கணத்தை நோக்கித்தான் தள்ளின என்ற வசனம் எனக்கு மிகப்பிடித்தது.

மற்றபடி, அம்மா, அப்பா, தங்கை, மனைவி ஆகியோரின் நினைவு, அவர்கள் அனைவரும் தன் முன்னிருப்பது போல் அவன் மனம் சிருஷ்டித்துக் கொள்ளும் காட்சிகள் இயல்பாய் அமைந்திருக்கின்றன. நம் மனம் ஒன்றிலிருந்து மிகத் தீவிரமாக, மிக ஆவேசமாகத் தன்னை விடுவித்துக் கொள்ளப் பிரயத்தனித்து, அது சாத்தியமில்லை என்பதை உணர்ந்து கொள்கையில் ஒன்றே ஒன்று மட்டும்தான் நிகழ்கிறது. அச்சூழலில் இருந்து தற்காலிகமான விடுதலையைத் தனக்குத் தானே அளித்துக் கொள்ள ஒரு கனாச் சூழலை உருவாக்கிக் கொள்கிறது.

சிறிய வயதில் கிரிக்கெட் பைத்தியத்தில், இந்திய அணிக்காக ஆடுவது போலவும், அத்தனை பந்துகளிலும் சிக்சர் அடிப்பது போலவும் (விழித்திருக்கையில்!) கனவு கண்டு மொத்த பந்துகளை ஆறால் பெருக்கிக் கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது! வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும், இக்கனவுகள் மாறினவே தவிர கனவுகள் வருவது மாறவில்லை.

James Franco மிகையில்லாமல் சிறப்பாகச் செய்திருக்கிறார். அடி வயிற்றிலிருந்து பெருங்குரலெடுத்து அழுவதிலிருந்து, நரக ரணத்தில், கற்பனையில் பங்குபெறும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காமெடி வரை குறையாக எதுவும் படவில்லை. சிறந்த நடிகருக்கான அகாதமி விருதுப் பரிந்துரைக்குத் தகுதியான performanceதான் என்பது என் தாழ் அபி!

ரஹ்மான் ஆங்காங்கே முத்திரை பதிக்கிறார். மனிதருக்கு இன்னமும் அள்ளித்தர காலம் காத்துக் கொண்டிருக்கிறது.

அறுத்துப் போட்ட கையை புகைப்படமெடுத்துக் கொண்டு திரும்பும்போது Franco சொல்லும் ஒரு Thank You நிறையச் சொன்னது எனக்கு. அந்தளவுக்கு நிறைவான Thank Youக்களைத் திரும்பத் திரும்பச் சொல்ல முயற்சிக்கிறேன். உடலிலிருந்து உலகு வரை அனைத்துமாகி, அனைத்திலுமாகி, உறைந்திருக்கும் பஞ்ச பூதங்களுக்கும், அவற்றுள் உயிர்த்திருக்கும் பரம்பொருளுக்கும்!

Read more...

Tuesday, February 15, 2011

உறங்கிக் கொண்டிருப்பவர்களிடம் விடைபெறுதல்




ஒரு பூ மலரும் அவசரத்தோடு
அவிழ்ந்து கொண்டிருந்தது அவ்விரவு

கிழக்கை விரும்பாத காலைகளுக்கே
உரித்தான அமானுஷ்யம்
இருட்டின் காதோர
ரோமங்களினுள் முத்தமிட்டு
அதிகாலை நியான் மஞ்சளில்
கனத்துக் கொண்டிருந்தது

ரோமாஞ்சனம் வழியும்
பார்வையைத் தொலைத்த அக்காலை
விடிதலை மறந்த
சுழற்சியில் நின்றுவிட்டிருக்கிறது

இக பர
பரமபதத்தின் மீது
ஒற்றைப் பகடையாய்
உருளத் துவங்கும் புள்ளியில்

உறங்கிக் கொண்டிருப்பவர்களிடம்
விடைபெறும் வைகறைகள்
புலர்ந்து விடுவதில்லை
அத்தனை சுலபத்தில்.


விக்ரமாதித்யன் நம்பியின் ‘பொருள்வயின் பிரிவு’ என்ற கவிதையின் பாதிப்பில்.

 நன்றி: உயிரோசை 7/2/2011 மின்னிதழ்

Read more...

Wednesday, February 2, 2011

அதீதமாய் ஒரு கவிதை


அரந்து, பரந்து ஓடி, நாலு காசு பார்க்க மாட்டோமாவென்று அனைவரும் உழன்று கொண்டிருக்கும் எந்திர கதி வாழ்வுத் தளத்தில் ஒரு சிற்றிலக்கிய (இந்த ‘சிற்றிலக்கியம்’ என்ற சொல்லாடலிலேயே எனக்கு உடன்பாடில்லை) இதழைத் துவங்கும் எண்ணம் வருவதற்குத் தேவைப்படும் மனோ திடத்தைக் கற்பனை செய்து பார்ப்பதில் பெருமூச்சு மிஞ்சுகிறது.

இந்த வகையில் சகோதரி மீரா ப்ரியதர்ஷினியின் மின்னஞ்சலில் தெரிய வரப்பெற்றது அதீதம் என்ற இணைய இலக்கிய இதழ் குறித்து. மீரா மற்றும் அதீதம் ஆசிரியர் குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளையும், அனுப்பிய கவிதையைப் பிரசுரித்தமைக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பார்க்க: http://www.atheetham.com

இனி கவிதை.

இசைய அமைத்தல்




வலுக்கட்டாயமாக 
ஏதேனுமொரு பாடலை யோசித்து
அறைத் தோழனுக்குக் 
கேட்கும்படி முணுமுணுப்பேன்.

மிக அணிச்சையாய் காட்டிக்கொள்ளப்பட்ட
அந்தப் பாடலுக்குப் பின்புறம்
மெல்லிழையாய் படிந்திருக்கும்
என் கயமை குறித்து
அவனுக்குத் தெரியாது,
சற்று நேரம் கழித்து
அதே பாடலை அவன்
முணுமுணுக்கையில்.

அப்போது நான் புன்னகைப்பதும்


Read more...

  ©Template by Dicas Blogger.

TOPO