நானும், இளைய தளபதி விஜயும்..
அவள் அழகாயிருப்பாள். எங்கள் அலுவலகத்தில்தான் வேலை செய்கிறாள். மேகக் கூந்தல், சங்குக் கழுத்து போன்ற உவமைகளிலெல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை. உயர்வு நவிற்சி எனக்கு எப்போதும் ஒவ்வாத ஒன்று. எதையும் உள்ளது உள்ளதைப் போன்று வழங்குதலே நலம் என்று நினைப்பவன். அவளைப் பெற்றவர்களும் எனக்கு சிரமமேதும் வைக்காமல், இருப்பவைகள் இருக்க வேண்டியவைகளைப் போலவே இருக்க வைத்ததில் மகிழ்வே.
வேலை செய்யும் இடம் அருகிலிருந்தாலும் அடிக்கடி அவளைப் பார்க்க முடியாது. போகையிலும், வருகையிலும் 'எங்க டாடி குதிருக்குள்ளில்லை' எனும்படி அவளையே பார்ப்பதில் எனக்கு உவப்பில்லை. சில நேரங்களில் கண்ணை விட புத்தி சொல்வதையும் கேட்கத்தானே வேண்டும். ஒரே ஆறுதல் மதிய உணவு வேளைதான். ஜனத்திரளின் நடுவே அவள் எங்கேயென்று தேடிக் கண்டறிகையில் அவளல்லாத முகங்கள் மறைந்து கொண்டே வரும் ஒன்றன் பின் ஒன்றாய். ஏதோ ஒரு மேஜையில் மிதமான புன்சிரிப்புடன் பருக்கைகளை அவள் விரல்கள் துழாவிக் கொண்டிருப்பதைக் காண்கையில், எங்களைத் தவிர மீதமிருந்த அனைவரும் ஆவியாகி, நாங்கள் மட்டுமே இருப்போம்.
பொருளாதாரப் பற்றாக்குறைக்கு முன்பாகவே உடையில் சிக்கனம் காட்டிவந்த IT மகளிர், சமீபகாலங்களில் ஐம்பதடி தூரத்திலிருந்தே எங்கள் கண்ணைக் குத்தும் முடிவோடுதான் அலுவலகம் வருகிறார்கள். அதுவும் வெள்ளிக்கிழமைகளில் குலக்கொழுந்துகளின் தாக்குதல் வன்மை மிக்கதாயிருக்கும். சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள். வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாள் என்று.
இப்படியானதொரு கூட்டத்திற்கு நடுவே அடர்நிறச் சுடிதார்களைக் கூடத் தவிர்த்து, அவ்வப்போது மல்லியோ, முல்லையோ சூடிவரும் இவளைப் போன்ற ஒருத்தி, என்னைப் போன்ற ஒரு சராசரி மானுடப் பிறவியைக் கவர்ந்ததில் ஆச்சரியம் இருக்க நியாயமே இல்லை. விடுத்து, மதிய வேளைகளில் என்னைப்போல் இன்னும் எத்தனை பேர் இவளுக்கு நைவேத்யம் செய்த பின் உணவுண்டு கொண்டிருக்கின்றார்களோ என்ற கேள்வி மிகவும் நியாயமான ஒன்று எனலாம்.
கல்லூரிக்காலம் முடியும் வரை காதலைப் பொறுத்தமட்டில், நானொரு நாத்திகன். 'அதெப்பட்றா.. பாத்த உடனே பொங்குமா உங்களுக்கெல்லாம்?' என்று ஃபிகரைக் கூட்டிக்கொண்டு சினிமாவுக்குச் செல்லும் நம்மவன்களைக் கிழித்துக் கொண்டிருந்தவன்தான். என்றாலும் இப்போது இவளைப் பார்க்கையிலெல்லாம், தமிழ் சினிமாவின் படு அபத்தமான காதல் படக்காட்சிகள் எல்லாம் ஞாபகம் வந்து தொலைக்கின்றன. என்ன செய்வது. ஒரு வாசல் மூடித்தான் மறு வாசல் வைப்பான் இறைவன். அவன் தாள் போற்றி.
பெண்ணைப் பார்த்த உடனே காதலிக்க ஆரம்பித்து விடுவதற்காக நம் பையன்களைக் குறை சொல்லிப் பிரயோஜனமில்லை. இதுபோன்ற சமயத்தில் அவனைச் சுற்றி நடக்கும் அத்தனை நிகழ்வுகளுமே சுவர்க்கத்தில் முன்னமே நடைபெற்றுவிட்ட நிச்சயதார்த்தத்தின் தாம்பூலத் தேங்காய் கொண்டு அவன் மண்டையைத் தட்டிக் கொண்டிருப்பதாய் அவனுக்கு ஒரு தோற்றம். உண்மையாகவும் இருக்கலாம். யார் கண்டது?
சில சமயங்களில் உணவருந்த ஆரம்பித்து சில நேரம் கழித்துதான் இவள் ஞாபகம் வரும். பரீட்சைக்குப் போகும் வழியில் பேனா இல்லாத சட்டைப்பையை எதேச்சையாகத் தொட்ட மாணாக்கன் எந்த வேகத்தில் வந்த திசையில் திரும்புவானோ அந்த வேகத்தில் தேடத்துவங்குவேன் அவளை.
ஒன்றரை நொடி கூட ஆகியிருக்காது. சட்டென கண்ணில் சிக்கிப் போவாள் அந்தக் கூட்டத்திலும். அதுவும் நான் அமர்ந்து கொண்டிருக்கும் இருக்கையிலிருந்து பார்ப்பதற்கு வாகான இடம் ஏதாவது ஒன்றில். காக்காய் உட்கார்ந்து விழுக்காட்டிய பனம்பழம் எல்லாம் இல்லை. இதுபோல பலமுறை. ஒவ்வொரு முறையும் என்னை நானே ஏதாவது சமாதானம் செய்து கொள்ள முயற்சித்தேன். அவையெல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போலாயின என்று உவமை தேடச் சொல்லாதீர்கள் தயவுசெய்து.
இயற்கையும் சில சமயம் பழியெடுக்கும். அமைதியாய் இருந்த சூழலில் திடீரென வீசத்தொடங்கும் காற்றினூடே அவளைப் பார்ப்பது என் வீழ்ச்சிக்கான முக்கியக் காரணங்களிலொன்று. அதிலும், இடக்கண்ணுக்கு, வலப்புறம் வந்துவிட்ட, நான்கு முடிகளை, வலக்கையால், இடக்காதின் பின்புறம் சொருகிவிட்டு, அவள் பாட்டுக்கு, அவள் சிரிப்புக்கு அழகு சேர்க்கத் தொடங்கிவிடுவாள். எனக்கோ இடது மார்பை நோக்கி, நகரத் துடிக்கும் வலக்கையைக் கட்டுப்படுத்த முடியாத கொடுமை பிழிந்துருக்கும்.
கூட வரும் நண்பன் என்னை அழைத்து டேய்.. உன்னோட அப்புச் செல்லம் அங்க இருக்கு என்று கைகாட்டிய நிகழ்வுகளிலெல்லாம், பொங்கிப் பெருக்கெடுத்து ஓடும் பிரவாகம், உள்ளே நிரம்பி கண்களில் வழியும். ஆனால் சமயத்தில், ஏண்டா இப்படி ஊத்தற? என்று பரிகசிக்கும் அளவுக்கு நான் அல்பித்து விடுவதைத்தான் எப்படியாவது தவிர்க்க முயற்சித்து வந்தேன். தனியாக நான் நடந்து கொண்டிருக்கும் சமயங்களில், அபர்ணா.. அபர்ணா.. என்று வெவ்வேறு ஸ்தாயிகளில், ஸ்ருதிகளில் சொல்லிப் பார்க்கையில் சிரிப்பு வரும்.
இவ்வாறாக மதில் மேல் காதலாக என் கதை ஓடிக்கொண்டிருக்க, ஒருநாள் முன்மாலை நேரமொன்றில் கீழே வருவதற்காக லிஃப்ட்டுக்குக் காத்திருந்தேன். லிஃப்ட் வந்தது. கதவு திறந்தது. உள்ளே யாரும் இல்லை. அவளைத் தவிர. இதுநாள்வரை காலம் செய்து வந்த கொடுமைக்குக் கடவுள் கால்காசுக் கருணையைத் தெளித்துவிட்டார் போலும். சரேலென மனக்கண்ணில் வந்த காட்சியில், என்னைப் போலவே இருந்த தருமியொருவன், ஒரு புற்தரையில் புரண்டு கொண்டிருந்தான். அவனது சட்டையணியாத முதுகில் பனித்துளிகள் பட்டன அப்போது.
அமைதி ஆட்கொண்டிருந்த அந்த ஐந்து சதுர அடி அறுகோணப் பரப்பின் இருவேறு சுவர்களில் சாய்ந்திருந்தோம். என் ஆசைகள் அனைத்தும் செவ்வெறும்புகளாய் தரையில் ஊர்வதைப் போல இருந்தது. சிரமப்பட்டு அவளைப் பார்க்காமலிருக்க முயலுகையில், சுற்றியிருக்கும் எல்லா புறங்களிலும் கண்ணாடி பதிக்க முடிவெடுத்த மகான் மட்டும் என் கையில் கிடைத்தால் அவரை எதில் அடிக்கலாம் என்று என்னால் யோசிக்க முடியவில்லை.
தும்பைப்பூ சுடிதாரிலிருந்த சிறிய வாடாமல்லி நிறப் பூவின் பெயர் என்ன என்றாவது கேட்டுத் தொலைக்க மாட்டேனா? எங்களைக் கடந்து சென்ற ஒவ்வொரு விநாடியும், தனித்தனியாகத் திரும்பி என்னைப் பார்த்து வாய் மேல் ஒரு கை வைத்து சிரிப்பதைப் போல உணர்ந்தேன். பெறாமல் பெற்ற வாய்ப்பு என்பது மாறி, இந்த அவஸ்தை எப்போது முடியும்.. மதியம் கூட சரியாக இருந்த தரைத்தளத்தை பாதாளத்தில் கொண்டு வைத்து விட்டார்களா.. இவ்வளவு நேரமாக இறங்கிக் கொண்டிருக்கிறோம்.. என்றாகி விட்டது.
ஒருவழியாக என் தவிப்புக்கொரு முடிவு கிட்டியது. காற்றின் பகுமுறையியிலில் எங்கள் பார்வைப் பாகைகளும் ஏதோவொரு X, Y-களில் வெட்டிக் கொள்ளத்தான் செய்தன. முதல் முறை இரண்டே நொடிகள். இரண்டாம் முறை பரவாயில்லை. ஒரு நான்கு, ஐந்துக்காவது நீண்டது. என்ன நினைத்தாளோ தெரியவில்லை. மெலிதாகச் சிரித்துவிட்டாள். நானும் சிரித்து வைத்தேன். ஆண்டவா நான் வழிகிறேன் என்பதை தயவுசெய்து காட்டிக்கொடுத்து விடாதே என்ற பிரார்த்தனைகள் உள்ளோடின.
அளவான ஒரு ஹாய் சொன்னாள். தமிழா என்றாள். எந்த ப்ராஜெக்ட் என்றாள். எந்த ஊர் என்றாள். ஓரிரு வாக்கியங்களுக்கு மிகாமலிருந்தது உரையாடல். தெளிவான பார்வை. கபடமில்லாத கண்கள். இயல்பான இயல்பு நிலையிலிருந்தாள். துளிகூடப் பதற்றம் தென்படவில்லை. இந்தப் பெண்களுக்கு மட்டும் இது எப்படித்தான் சாத்தியப்படுகிறதெனப் புரியவில்லை.
அந்த இமைகள் ஏன்தான் இப்படி அடித்துக் கொள்கின்றனவோ. பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு சிமிட்டல் போல. வலிக்கப் போகிறது. பாருங்கள்.. என்னையும் உயர்வு நவிற்சிக்க வைத்துவிட்டாள். ஆமாம்.. காதலிக்கவே வைத்துவிட்டாளாம். இது எம்மாத்திரம். போனால் போகிறது. கொள்கைதானே.
தரைத்தளம் வந்தது. ஒழுங்கில்லாமல் அலைந்து கொண்டிருந்தனர் மக்கள். லிஃப்ட்டில் இருந்த அமைதி லிஃப்ட்டோடு மேலே போய்விட்டிருந்தது. இந்த ஒழுங்கின்மை நான் சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள உதவியாயிருந்தது. அடைத்து வைத்திருந்த ஏதோ ஒன்று திறந்து விட்டதைப் போலவும் பாரம் குறைந்தாற் போலவுமிருந்தது.
"நான் மெக் டி-க்கு வந்தேன். பசிக்குது. லேட் ஆயிடுச்சில்ல.. கேஃப்டீரியால ஒண்ணும் இல்லை. நீங்க?"
கழுத.. ATM கிடக்கிறது. பின்பு பார்க்கலாம். பொதுக்குழுவையெல்லாம் கூட்டிக் கொண்டிருக்க முடியாது.
"நானும் மெக் டி-க்கு தான் வந்தேன்". பொய்யின் வாசம் எனக்கு மட்டும் அடித்தது. "போறேன்" என்று சொல்லாமல் "வந்தேன்" என்று சொன்ன என் சாமர்த்தியத்துக்கு முதுகில் தட்டிக் கொடுக்கலாம்.
மெக் டி. கண்ணாடிகளால் ஆன கனசதுரமது. மலைக்குள் ஆழ்ந்து கொண்டிருந்த சூரியனின் தகதகத்த இளமஞ்சள் கண்ணாடியைக் கிழித்துக் கொண்டு தரையில் படிந்திருந்தது. என் பாவனைகளில் நிதானமும், ஒரு சராசரி நாளுக்கான தோரணையும் இன்னமும் ஒட்டிக் கொண்டிருப்பதன் ஆச்சரியத்தை வெளிக்காட்டாமலிருந்தேன். ஆளுக்கொரு மெக் வெஜ்ஜி வாங்கிக் கொண்டோம்.
ஹேராமைப் 10 முறைக்கு மேல் பார்த்துவிட்டு, அதே சூட்டில் 'அபர்ணா' என்ற பெயருள்ள பெண்தான் மனைவியாக வரவேண்டும் என்று கனவு கண்டு திரிந்ததுக்கும் பலன் இருக்கும் போலதானோ. நிரம்பி வழியாத ரொமான்சும், வீணாய்ப் போகும் அமைதியும் இல்லாமல் ஒருவாறு சாதாரண அளவளாவலாகத்தான் இருந்தது. நானும் சிறிது பேசினேன்.
"ரொம்ப நாளா பாத்துருக்கோம். பட்.. பேசினதுதான் இல்ல.. இல்ல..?" இது அவள்.
"ஆமாம்" என்றேன்.
"உங்ககிட்ட பேசினா ஒண்ணு சொல்லணும்னு நெனச்சுட்ருந்தேன். நீங்க தப்பா நெனக்கலனா சொல்லலாமா..?"
ம்ஹும்ம்.. இதற்கும் நான் அசரவில்லையே. குறிப்பிட்ட ஏதோ ஒரு விஷயத்தைத்தான் அவள் சொல்ல வேண்டுமென்று நானாக எதையுமே எதிர்பார்க்காதவனைப் போல "சொல்லுங்களேன்" என்றேன்.
அவள் திருவாயில் வைத்திருந்த ஒருவாய் பர்கரை விழுங்கியவள், லேசாய் எட்டிப் பார்த்த அந்த ஃபேவரிட் சிரிப்புடன், எண்ணி நான்கு விநாடி கழித்து சொன்னாள்.
"நீங்க விஜய் மாதிரியே இருக்கிங்க.. எனக்கு விஜய்னா ரொம்பப் பிடிக்கும். உங்களுக்கு?"
இதை சொல்லத்தான் இவ்வளவு பீடிகையா? ஹடிப்பாவி.. உன் ரசனையில் மண் விழ. நான் என்னை மாதிரி இருப்பதுதான் எனக்கு மகிழ்ச்சியென்று இருப்பவனுக்கு ஊரான் படத்தையெல்லாம் ரீ-மேக்கும் ஒருவரைப்போல் இருக்கிறேன் என்று ஒரு காம்ப்ளிமென்ட்டா? கவுண்டமணி மாதிரி இருக்கிறேன் என்று சொல்லியிருக்கலாம். வேறு யாருமே கிடைக்கவில்லையா? எனக்கு இவளை எவ்வளவு பிடிக்குமோ, அதைவிட அதிகமாய் விஜயைப் பிடிக்காது.
கல்லுளிமங்கன் நான் இப்போதும் எதையும் காட்டிக் கொள்ளவில்லையே.
"ஹோ.. இஸ் இட் சோ..? இண்ட்ரெஸ்டிங்..!"
அவளுக்கு பை சொல்லிவிட்டு நடக்கையில், "Opposite Poles Attract" என்ற ஆங்கில சொலவடை ஏனோ நினைவுக்கு வந்ததுடன் எனக்குள் ஒரு பாடல் முணுமுணுக்கத் தொடங்கியிருந்தது.
கண்டேன்.. கண்டேன்.. உயிர்க்காதல் நான் கண்டேன்..!
குறிப்பு: புகைப்படத்தில் நான்தான். கதையில் நானில்லை!