கோவையிலிருந்து சூலூர் வரை!
கடந்த வாரக்கடைசியில் கோவை சென்றிருந்தேன். தோழியின் திருமண விழாவுக்கு அம்மாவுடன் சென்றுவிட்டு, காந்திபுரம் மஃப்சல் பேருந்து நிலையத்தில், எங்களூரான சூலூர் செல்லும் பேருந்துக்காகக் காத்திருந்தோம். அப்போது வந்தவொரு தனியார் திருப்பூர் பேருந்தில் ஏற முற்படுகையில், "திருப்பூர் மட்டும் ஏறிக்கோ.. திருப்பூர் மட்டும் ஏறிக்கோ.." என்ற கூவல் கேட்டது.
"ணா.. சூலூர் போறவெங்கெல்லாம் ஏறக்கூடாதாண்ணா.." என்றதற்கு,
"முன்னாடி நிக்கற வண்டீல போயேறிக்கப்பா.. நீயேறி உக்காந்துக்குவ.. அப்பறம் திருப்பூர் டிக்கட்டெல்லாம் ஏத்த வேண்டாமா" என்று அன்புமிழும் பதிலை வாங்கிக் கட்டிக் கொண்டேன்.
"யேண்ணா.. நாங்கெல்லாம் காசு குடுக்கறதில்ல..?" நமக்கும் இருக்குமல்லவா ரோஷம்.
"யேறாதனா.. யேறாதப்பா.. போ..!"
இதற்கு மேலும் பேசாதிருந்தால், வாய்கலப்பானது, கை மற்றும் கால் கலப்புகளாகி நான் அடிபடும் (?!) வாய்ப்பு பிரகாசமானது என்று தெரியுமாதலால், என்னை அமைதிப்படுத்தி, அடுத்த பேருந்தைக் கண்டறியும் சீரிய முயற்சியில் அம்மா ஈடுபட வேண்டியதாயிற்று.
சூலூர் டவுன் பஞ்சாயத்து கோவை நகரிலிருந்து, திருப்பூர் செல்லும் வழியில் முதல் 18 கி.மீ தொலைவிலுள்ளது. இரண்டாம் 18 கி.மீ தொலைவில், பல்லடம் நகரும், மூன்றாம் 18 கி.மீ தொலைவில் திருப்பூர் நகரும் உள்ளன. மேலும் உடுமலை, தாராபுரம் போன்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளும் சூலூர் வழியாகத்தான் சென்றாக வேண்டும்.
ஆனால் சூலூர் பயணிகள் ஏறி, 'அமர்ந்து' கொள்வதால் திருப்பூர், உடுமலை போன்ற ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் உட்கார இடமின்றி ஏற மாட்டார்கள். எனவே பேருந்து நிறையும் வரை, இறுதி வரை செல்லும் பயணிகளை மட்டும் ஏறச் சொல்லிவிட்டு, 'சூலூர் செல்லும் பயணிகள் நின்று கொண்டு பயணம் செய்தால் போதும்' என்ற அலட்சிய மனோபாவத்தை, எழுதாத விதியாகப் பின்பற்றுவதுதான் இங்கு பிரச்சினையே.
சூலூரிலிருந்து, திருப்பூர் செல்லும் பயணிகளை ஏற்ற எப்படியும் சூலூரில் பேருந்தை நிறுத்தித்தான் ஆகவேண்டும். சூலூரில் ஏறும் பயணிகள் நின்று கொண்டுதான் திருப்பூர் வரை பயணமும் செய்கிறார்கள். இது இப்படியிருக்கையில், ஒரு 18 கி.மீ மட்டும் நாங்கள் அமர்ந்து கொண்டு பயணம் செய்வதை இவர்களால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. இடமில்லாவிட்டால் சரி. நின்று கொள்கிறோம். இருக்கும் போது ஏன் நிற்க வேண்டும்?
கவனிக்க வேண்டிய அடுத்த அம்சம், இறுதி வரை செல்லும் பயணிகள் எந்த ஆட்சேபணையும் காட்டாமல், அடுத்த பேருந்தில் ஏறிக் கொள்கின்றனர். அதுதான் 5 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இருக்கிறதே. பிரச்சினை துவங்கும் புள்ளி, பண முதலைகளின், காசாசை கொளுந்து விட்டெறிகையில்தான்.
'தனியார் பேருந்துகள்தான் இப்படியா' என்று கேட்டால், 'அரசுப் பேருந்துகளில் இன்னும் மோசமாகத் திட்டுகின்றனர்' என்று சொல்கிறார்கள். என் கல்லூரிக் காலத்தில் இதே பிரச்சினை தலை தூக்கியபோது, அமைதியாகத்தான் மறியல் செய்ய அமர்ந்தோம். ஆனால் பேச்சு, வீச்சாக மாறி, சில பல பேருந்துகள், தங்களின் சில பல கண்ணாடிகளை இழக்கும் நிலை வந்த பின், சூலூர் மக்கள் மதிக்கப்பட்டோம். இருக்கும் குரூரத்துக்கு மீண்டும் அவையெல்லாம் விரைவில் நடக்கும் (அ) நடக்கவேண்டும் என்று தோன்றுகிறது.
முடிந்த அளவுக்கு காந்தியனாக இருக்கத்தான் நான் முயற்சிக்கிறேன். ஆனால் முகத்திலறைந்தாற் போல் வந்து விழும் வார்த்தைகள், கொள்கைகளைத் தூக்கிக் குப்பைக் கூடையில் குமுறிவிட்டு, "ஒரு கண்டக்டருக்கே இத்தன திமிருன்னா.." என்று கிளப்பிவிடும் எண்ணக் கசடுகளில், காந்தியன் ஹிட்லரியனாக மாறுவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. எய்தவனைப் பற்றி யோசிக்காமல் அம்பின் மேல் கோபம் வரத்தான் செய்கிறது.
நான் பரவாயில்லை. நின்று கொண்டு வருகிறேன். முதியவர்கள் என்ன செய்வர்? நகரப் பேருந்தில் செல்லலாம் என்றால், முதலாவதாக எண்ணிக்கையில் அவை குறைவு. இரண்டாவதாக மஃப்சல் பேருந்து நிலையத்திலிருந்து, நகரப் பேருந்து நிலையம் ஏறக்குறைய முக்கால் கி.மீ. எல்லோருக்கும் நடக்கக் காலாலாகுமா?
இங்கே கர்நாடகத்தில் பரவாயில்லை. மக்களைக் கொஞ்சமேனும் மனிதர்களாக மதிக்கிறார்கள். ஒவ்வொரு முறை தமிழ்நாடு செல்லும் போதும், 'கூடிய வரை இங்கே வரக்கூடாது' என்ற எண்ணம் வலுப்பெறும் வகையில்தான் ஒவ்வொன்றும் நடக்கின்றன.
இதையெல்லாம் எண்ணி, எனக்கு வந்த கோபத்துக்கு, மனதுக்குள் எல்லாருக்கும் மரண தண்டனை விதித்து விட்டு, வலையிலும் பதிவித்து விட்டேன். எதற்கும் கையாலாகாத பொதுஜனங்களான நம்மால் வேறென்ன செய்துவிட முடியும்? சொல்லுங்கள்!