பெரியது கேட்பின்..
நீ பெரிதா
நான் பெரிதா
என்பதிலல்ல.
உன்னுடைய நான் பெரிதா
என்னுடைய நான் பெரிதா
என்பதில்தான்
எல்லாம்.
நீ பெரிதா
நான் பெரிதா
என்பதிலல்ல.
உன்னுடைய நான் பெரிதா
என்னுடைய நான் பெரிதா
என்பதில்தான்
எல்லாம்.
ஒட்டாமல் கேட்டல்
அப்பொழுது 6ஆம் வகுப்பா, 7ஆம் வகுப்பா என்று சரியாக நினைவிலில்லை. பள்ளி இலக்கிய மன்ற விழாவில் தமிழாசிரியை எழுதிக் கொடுத்த 'நாளைய பாரதம், நவமணிப் பூ ரதம்!' என்ற கட்டுரையை உணர்ச்சி பொங்கப் படித்துக் கைதட்டல் வாங்கிய ஆர்வத்தில், தமிழைத் தவிர வேறெதையும் சிந்திக்காமலும் இருந்தேன்.
பல்வலி என்று மருத்துவரிடம் அழைத்து சென்றிருந்தார்கள்.
சிகிச்சை முடிந்த பின் டாக்டரிடம், "டாக்டர்.. நீங்க ஒரு பல்துறை வித்தகர்" என்ற வாசகத்தை, 'பல்'லென்பதை மட்டும் நன்றாக அழுத்திச் சொல்லிவிட்டு அதையே காட்டி சிரித்தேன்.
வாய்விட்டுச் சிரித்த டாக்டர் என் வாழ்வின் முதல் ஃபாரின் சாக்லேட்டைப் பரிசளித்தார்.
-0-
அப்போதெல்லாம் பள்ளிக்கு CEO வருகிறாரென்றால் ஒரே தடபுடல்தான். ஆளாளுக்கு ச்சார்ட்டெழுதுவது, வகுப்பறைகளில் ஒட்டுவது என்றெல்லாம்.
அது போன்றதொரு காலகட்டத்தில், எதையோ பற்றிப் பேச தலைமையாசிரியர் அறைக்குச் சென்ற தமிழாசிரியர், உடன் என்னையும் அழைத்துச் சென்றுவிட்டார்.
பேசிக்கொண்டிருக்கும்போது எதிர்பாரா சமயத்தில் CEO வந்துவிட்டார். அப்படி வந்து சோதிப்பதுதானே அவர் பணி.
கல்வி சம்பந்தமானவை தவிர இதர பணிகளுக்கு மாணவர்களைப் பயன்படுத்துவது குறித்து சர்ச்சைகளிருந்த காலமது.
"இவர் தமிழாசிரியர்.. இவர் யார்..?" என்று என்னைக் கைகாட்டியவாறே குறுகுறு பார்வையுடன் பார்க்கிறார் CEO.
சிறியது என்று குறிப்பிடும் தொனியில் கைகளை வைத்து "இவர் தமிழா-சிறியர். நல்லாப் படிப்பார்" என்று கூறிய தமிழாசிரியரின் அங்கதத்தை CEO ரசித்துச் சிரித்தார். தலைமையாசிரியர் பயந்தெளிந்து சிரித்தார். நான் வெட்கித்து சிரித்தேன்.
-0-
கல்லூரிக் காலங்களில்தான் எத்தனை லூட்டிகள்.
எப்போது பார்த்தாலும் வள் வள்ளென்று விழுந்து கொண்டே இருப்பார் ஒரு சார்.
பார்த்தான் பரத் ஸ்றீனிவாசன்!
எங்கள் கல்லூரி பார்க்கிங் ஏரியாவின் நடைபாதையில் வைத்திருந்த No Parking போர்டில் டைகர் பிஸ்கட் விளம்பரம் செய்யப்பட்டிருக்கும். ஒரு சனிக்கிழமையாகப் பார்த்து அதை லவட்டிக் கொண்டு வந்து, Parking என்ற வார்த்தையில் இருந்த Pஐ Bயாக மாற்றியதோடு, ஸ்டாஃப் ரூமில் குறிப்பிட்ட அந்த சார் அமருமிடத்தில் வைத்துவிட்டான்.
மேசை மேலொரு டைகர் பிஸ்கட் பேக்கட்டும்!
-0-
அலுவலகத்தில் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் பிரேக்.
காஃபியருந்திக் கொண்டிருக்கையில், தொலைவில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணை மிகப் பிடித்து விட்டது நண்பன் ஹரிக்கு.
கல்லூரியில் இருந்து கார்ப்பரேட்டுக்குள் நுழைந்திருக்கும் பால் மணம் மாறா பாலகர்கள் ஹரியும், அஷ்வினும்.
ஹரி சொன்னான்.
"மச்சான்.. குத்து வெளக்காட்ட இருக்காடா.. ச்சான்ஸே இல்ல.."
சலனப்படாமல் சொன்னான் அஷ்வின்.
"பாத்த உட்னே முடிவு பண்ணாத மச்சி.. குத்துன வெளக்காக் கூட இருக்கலாம்"
இடி இடியென்று சிரித்தேன். மிக நீஈஈண்ட நாட்களுக்குப் பிறகு!
நேற்று மாலை Forum Mallன் உணவரங்கத்தில் இருக்கையில்தான் அது நடந்தது. அங்கிருந்த ChicKing என்ற அங்காடியிலிருந்து அழகாகப் பேக் செய்யப்பட்ட பெட்டிகளில் பொறித்த கோழி வறுவற் துண்டுகளைப் பெற்று செல்லும் எத்தனையோ தட்டுகளில் ஏதேனும் ஒரு தட்டு எனக்குள் அதை வாங்கியுண்ணும் ஆசையை என் நாவணுக்களுள் மீட்டி விட்டது.
அதற்கென்ன வாங்கிச் சாப்பிட வேண்டியதுதானே? என்கிறீர்களா. பிரச்சினை அதுவல்ல. அடிப்படையில் நான் பிறந்தது ஒரு அசைவம் சாப்பிடும் குடும்பத்தில்தான் என்றாலும், பின்னாளில் என் தனிப்பட்ட கோட்பாடுகளின் மீதான பற்றின் பொருட்டு என்னை சைவியாகத் திரித்துக் கொண்டேன்.
1999ல் நான் ஒன்பதாம் வகுப்புப் படிக்கையில் அசைவம் சாப்பிட்டது. அதற்குப் பின் நேற்றுவரை தொட்டது கூட கிடையாது. அம்மா சமையலையே வெற்றி கொண்டவன் இந்த பிசாத்து ச்சிக்கிங்-ல் எப்படி மனதைப் பறி கொடுத்தேன் என்று தெரியவில்லை. ஆசை வித்தை ஊன்றி விடும் அந்த ஒரு நொடி.. அந்தப் புள்ளியைக் கடந்து செல்வதுதான் நம்மைக் காத்துக் கொள்ளும் ரகசியம் என்றெல்லாம் தத்துவம் பேசப் போவதில்லை நான். என் நோக்கம் வேறு.
ஆசைப் பட்டாலும் எப்படியோ தப்பித்துக் கொண்டு வந்துவிட்டேன். இன்று காலை எழுந்து இணையத்தை நோண்டிக் கொண்டிருக்கும்போது நண்பர் ஒருவரின் ஸ்டேடஸ் மெஸேஜில் பார்த்தேன்.
♫ http://www.meat.org/ - The Website that Meat Industry & Meat'atarians do not want to see.If they had glasswalls, everyone would be vegetarian...
நல்ல வேளையாக கோழியைத் திங்காமல் வந்தேன். இல்லையென்றால் அறைக்குள் கூணிப் படுத்திருப்பேன். குற்றவுணர்ச்சி என்னைக் கொன்றிருக்கும்.
ஏன் என்பதை அந்தத் தளத்தைப் பார்த்தே தெரிந்து கொள்ளுங்கள்!
1)
துரோகத்தின் ஈர முத்தங்கள்
அந்தராத்மாவின் கழுத்தில்
இறுகத் துவங்கியிருக்கும்
முடிச்சினிடையே சிக்கியிருப்பது
தாய்ப்பாலின் மணம் மாறாத
ஆலகால துரோகமாகவோ,
நிராகரிப்பின் பீடத்தில் தலையைப்
பலி கொடுத்த தன்மானத்தின்
முண்டத் துடி உதறலாகவோ
இருக்கக் கூடும்.
மந்தகாச வதனத்தில்
தொலைத்து விட்ட
இதயக்குஞ்சின் அலகினுள் பக்குவமாய்
புகட்டிவிடலாம்
விஷந்தோய்ந்த குருதியினை.
ஓங்கி அடர்ந்த
அத்துவானத் தனிமையில்
சுய புணர்தலின்
உச்சத்தில் வெண் துளிகள் ஏனோ
சிவந்து ஒழுகையில்
வெதும்பித் தெறிக்கும்
ஆசுவாசப் பெருமூச்சின் போது
கருகக் கூடும்
துரோகங்களுக்கும்,
புறக்கணிப்புகளுக்குமான
வாசனாதி
இத்யாதிகள்
2)
மழைக்காரி
நினைவுகளைத் தேக்கிய
கண்ணாடிக் குவளைகளைக்
கல்லெனத் திரளும்
பிரிவின் வலியிலிருந்து
ஒளித்து வைக்க வேண்டுமென்கிறாய்
நனைதலின்
மீதானவுன் பிரியத்துக்கு
மஞ்சள் குடைகளும்
உடன் நனையும் நேசம்
எனக்குப் புரியாதென்கிறாய்
உன் மலரினின்று
என் பிரியத்தின் மணம் உதிர்ந்தால்
வேர்களுக்குள் முளை விடுகிறது
எரிமலை என்கிறாய்
நானே குவளையாகி
நிறைந்து வழிகிறேன்
நானே குடையாகி
நனைந்து நைகிறேன்
நானே எரிமலை வேரில்
புதைந்து போகிறேன்
உனதான மழையென்றும்
என்னோடே
பெய்யுமெனில்
-தாக்ஷாயணிக்கு!
நன்றி: அகநாழிகை (மார்ச் 2010 இதழ்)
என்னுடைய முந்தைய கட்டுரையில் நான் கொஞ்சமாய் பதிவு செய்திருந்த ‘தரமான திரைப்படங்கள் நம் புறத்தே உருவாகாமலிருப்பதற்கான’ என் ஆதங்கத்திற்குக் கிடைத்த ஒரு பதிலாகவே நான் அங்காடித் தெரு-வைக் கண்ணுறுகிறேன்.
இந்தப் படத்தின் தொழில்நுட்ப அம்சங்களைப் பற்றியோ, பின்னணி இசையின் தரம் பற்றியோ, கதையின் நேர்த்தி பற்றியோ, நேர் மற்றும் எதிர் மறையான இன்னபிற எந்தக் காரணிகளையுமோ அலசிக், கொடியில் தொங்கப் போடுவது என் நோக்கமல்ல.
அன்றி, வணிகக் கட்டுப்பாடுகளின் கொடுங்கரங்கள் இயக்குனரின் குரல்வளையை இறுகப் பற்றிக் கொண்டிருக்க, கத்தரியைக் கூர் தீட்டிக் கொண்டு சென்சாரார்கள் கண்ணில் விட விளக்கெண்ணெய் தேட, அரசியல்வாதிகளும், மதவாதிகளும் வக்கீல் நோட்டீஸ் அச்சடிக்க ஆளுக்கொரு பிரசுரம் வைத்திருக்க..
நீளும் இப்பட்டியலின் வேலிகளைத் தாண்டி தரமான, யதார்த்தமான, சமகால வாழ்வின் கரும் பக்கங்களைப் பதிவு செய்து வைக்கும் வகையில் படமெடுக்கும் திறனுள்ள, தைரியமுள்ள படைப்பாளிகள் ஊக்குவிக்கப் படவேண்டும் என்றால், தமிழ் சினிமாவின் ரசிகப் பெருமக்களான நாமனைவரும் தயவுசெய்து திரையரங்குக்குச் சென்று அங்காடித் தெரு-வைப் பார்க்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்துதான் இந்தப் பதிவு.
பனி பொழியும் பின்னிரவுகளில் ஏதேனுமொரு மேலை நாட்டுத் திரைப்படம் முடிந்து மனம் அழுந்தி, கனக்கும் சமயத்தில், ஏன் நம் பிரதேசத்தில் இவை போன்ற படங்கள் உருவாவதில்லை என்ற எண்ணம் மேலோங்கி நிற்பதை எத்தனையோ முறை உணர்ந்துள்ளேன். ஒருவாறு ஆற்றிக் கொண்டு சென்னையின் மேன்ஷன்களில் தூங்காமல் ஓரிரு அசிஸ்டண்ட் டைரக்டர்களேனும் என்னைப் போலவே நினைத்துக் கொண்டிருக்க மாட்டார்களா என்று அவர்கள் மேல் பாரத்தைப் போட்டுவிட்டுத் தூங்கப் போய் விடுவேன்.
வணிகப் படங்கள் கெட்ட படங்கள்.. புதுமையான படங்கள்தான் நல்ல படங்கள்.. என்ற கருத்தை நோக்கி உங்களைத் தள்ளுவது என் பணியல்ல. உங்களுடைய சுயவிருப்பில் என் மூக்கு நுழைவது எனக்கு உவப்பானதுமல்ல. அவரவர்களுக்கு எதெது வேண்டுமென்பதைத் தெரிவு செய்வது அவரவர் விருப்பமேயொழிய எவரும், யாரையும் கட்டுப்படுத்தத் தேவையில்லை.
ஆனால் நான் கேட்பது இதுதான். இது மட்டுந்தான். வேட்டைக்காரனையும், ஆதவனையும், அவனையும், இவனையும் எப்படி உளம் நிறைந்த உவகையுடன் திரையரங்குக்குச் சென்று பார்க்கிறீர்களோ.. அதே போன்றதொரு அங்கீகாரத்தை அங்காடித் தெரு-வுக்கும் நீங்கள் வழங்க வேண்டும். இதைச் செய்யத் துவங்கினீர்களானால், வணிகப் படங்களுக்குக் கிடைக்கும் பொருளாதார ஆதரவுகள், மாற்று சினிமா உருவாக்கத்துக்கும் எளிதில் கிடைக்கும் சூழல் உருவாக ஏதுவாக இருக்கும்.
இங்கே நான் இன்னொரு விஷயத்தையும் தெளிவுபடுத்தியாக வேண்டும். நான் சிலாகித்துக் கொண்டிருக்கும் அங்காடித் தெரு என்ற இத்திரைப்படம் உங்களுக்குப் பிடிக்காமலும் போகலாம். அதனால் என்ன.. போகட்டுமே. ஒரு பரிசோதனை முயற்சியின் விளைவுகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாமல்லவா. அது தோல்வியாகவே இருப்பினும், அடுத்த எட்டிலாவது வெற்றி என்ற இலக்கை எட்டிப் பிடிக்க குறிப்பிட்ட அந்தப் படைப்பாளிக்கு நீங்கள் செலவு செய்யும் பணம் சிறிதளவேனும் உதவி செய்யும்.
இந்தப் படத்தில் குறையே இல்லையென்றோ, 100 சதம் எனக்கிந்தப் படம் பிடித்தது என்றோ நான் கூறவில்லை. இவ்வகையான படங்களை, பொழுதுபோக்கு அம்சங்களைக் கருத்தில் கொள்ளாமல் நாம் அங்கீகரிக்கத் துவங்கும் புள்ளியில்தான், வித்தியாசமான முயற்சிகளுக்கு முதல் போட்டாலும், போட்ட காசு வரும் என்ற நம்பிகையை தயாரிப்பாளருக்குள் முளைவிடச் செய்யும் விதைப்புள்ளியாக இருக்கும்.
ஏதோ தமிழ் திரையுலகத் தயாரிப்பாளர்களிடம் காசே இல்லாதது போல், இந்தப் படம் ஒன்றரை ஆண்டுகள் வெளியாகாமல் இருந்ததும், இந்தக் காலகட்டத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடி, கோடிகளைக் குவித்த so called மசாலாப் படங்களும் நம் சினிமா ரசனைக்கு சான்றுகள்! உங்களுக்கெப்படியோ தெரியவில்லை. எனக்கு வெட்கமாக இருக்கிறது.
இதை உலக சினிமா ரசிகனாக சொல்லவில்லை. வசந்தபாலனின் அடுத்த திரைப்படத்தை, இன்னும் ஆவலுடன் (அவரது இயக்கத்துக்காகவா, இல்லை அடுத்த படத்தையாவது பெட்டிக்குள் முடக்காமல் வெளியிட மாட்டார்களாவென்ற ஏக்கத்துக்காகவா என்று தெரியாமலே) எதிர்பார்க்கத் துவங்கியிருக்கும் ஒரு சராசரி தமிழ் சினிமா ரசிகனாக சொல்லிக் கொள்கிறேன்.
குறிப்பு: தமிழ் சினிமாவின் தரம், கலைப்படம், வணிகப்படம் போன்றவை குறித்தான சில வீடியோக்கள் பகிர்தலுக்காக:
http://www.youtube.com/watch?v=XRTFdAxGW6g
http://www.youtube.com/watch?v=WswDvFJqjvA
http://www.youtube.com/watch?v=VyYYAyzbhKs
©Template by Dicas Blogger.