Thursday, May 13, 2010

குரல்வளையில் தடம் பதியும் தனிமையின் கொடும் பற்கள் (அ) என்னை என் தனிமை கொன்றால் அது கொலையா தற்கொலையா (அ) என் நிர்வாணத்தை எப்போதும் தனிமை எட்டிப்பார்த்து விடுகிறது



நெடுமரங்களடர்ந்த அத்துவானத்திற்குள் என்னை ஒளித்து வைத்துக் கொண்டு என்னோடே சித்து விளையாடிக் கொண்டிருக்கிறது என் தனிமை. தாடைக்குள் அடங்காத நாவில் ஒழுகிக் கொண்டேயிருக்கும் ஞாபகச் சொட்டுகளை கவனியாமல், வழி மறந்தலையும் ஒரு செவலை நாய், மரங்களை நோக்கிக் காலைத் தூக்கி, நிறுத்தாமல் அடித்து விடுகிறது அந்தந்த நாட்களுக்கான காழ்ப்புகளை, வன்மக் கழிவுகளை.

எனதிலிருந்து எனது விலகி என்னைக் காண்கையில், கரைந்து வரும் கடமைகள் குறித்தான உன்மத்தப் பிரவாகம் தென்படலாம். என் மீதான பரிவின் கரையில் நிகழ்வதது என்பதுதான் என் வாதப் பிரதிவாதம்.

கண் நீளக்கூடிய தொலைவு மட்டும் மணற் கடலாய் இறைந்து கிடக்கும் பிரதேசம்தான் நான் தேடிக் கொண்டிருக்கும் வாழ்க்கை என்ற துகளாய் உருக்கொண்டு விடுமோ என்ற பயம், நான் உறங்கும் போதும் என் விழியசைவின் பதற்றத்தில் தெரிவதாகக் காலையெழுந்ததும் கண்ணாடி சொல்கிறது.

நான் தூங்கும் எழிலைப் பார்த்து ரசிக்க தாக்ஷாயணி இல்லாத குறையை இந்தக் கண்ணாடிதானே போக்குகிறது என்ற சமாதானம் எனக்குத் தேவையேயில்லை எனும்போது அது சொல்லும் கூறு கெட்ட வார்த்தைகளுக்குச் செவி மடுக்கும் தேவை மட்டும் எங்கிருந்து வரும்?

பகிர்தலின் தளத்தில்தான் வாழ்வு பல்கிப் பெருகுகிறது என்பதில் நிறைந்து கிடக்கும் உண்மை, இந்தப் பத்துக்குப் பதினைந்து அறைக்குள் வசிக்கத் துவங்கும் முன் வரை என் கபாலத்திற்குள் கால் பதிக்கவில்லை.

ஆங்காங்கே கிடக்கும் பொருட்கள் ஏன் என்னைப் பார்த்துக் கொண்டேயிருக்கின்றன? உள்ளே உருளும் ஒரு துளிக் கடலினுள் சங்கமித்து விடத் தெரியாத அற்பமான என்னிடம் அவை அப்படி எதைத்தான் எதிர்பார்க்கின்றன? நானும் அவைகளும் தனியதுகளாகத்தான் வாழ்கிறோம் என்றாலும், எங்களின் தனிமைகள் ஒற்றுமையோடு இருப்பதை எனக்கு உறைக்க வைக்கத் திட்டம் போடுகின்றனவா?

ஒவ்வொரு நாளையும் நக்கித் தீர்த்துப் பணமாக ஆக்கிவிட்ட திருப்தியுடன் வீடு திரும்பிய பின், குறிப்பிட்ட ஏதேவொரு பொருளை நான் வைத்திராத ஓரிடத்தில் காண்கிறேனோ என்ற ஐயப்பாடு, அந்த நொடியை, க்ஷணத்திலொரு குத்தூசியாக மாற்றித் தணலில் ஊற வைத்தெடுத்து என் கண்களில் குத்துகிறதோ என்னவோ.. என் குறியைக், குதத்தை எதை ஊன்றிப் படுத்தாலும், உறக்கத்தில் மட்டும் கண் முழுக மாட்டேனென்கிறது.

நாவாட நான் விரும்பாவிடினும், இந்த மின்விசிறி என்னுடன் எதையாவது பேசிக் கொண்டேயிருக்கிறது. அதற்கு மின்சாரம் பீய்ச்சும் காப்பர் கம்பிகளுக்கு உப்புக் காப்பிட யோசித்தேன், அப்படியேனும் அதற்கு ரோஷம் வர. என் திட்டத்தைப் பற்றி எனக்கே சொல்லிக் கெக்கலிக்கிறது. பொருட்களை இடம் மாற்றி வைத்து, பயமாள்ந்த கிணற்றில் என்னைத் தள்ளிவிட்ட கயவாளி அதுதான் போலும்.

Cast Awayயில் வரும் Wilson என்ற பந்துக் கதாபாத்திரத்தைப் போலென்னைப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறது. தனிமையின் அமானுஷ்யத்தில், தான் பிறழ்ந்து விடாமல் இருக்க என்னைப் பகடையாக்கி, உருட்டுகிறது. ஒளி வலையொன்று தோன்றி மறையப் போகும் ஒரு கால நுனிக்குப் பின்பு நான் உறைந்து போவது நிகழும் என்று ஜோஸ்யம் சொல்கிறது.

வெள்ளொளி மின்னும் புத்தம் புதுக் கத்தி ஒன்று வாங்கி வந்த பின்தான் என் கற்பனைக் குதிரைக்குக் கடிவாளம் அறுபட்டது. அதற்குப் பின்பும் கூட, 'எழுதி வைத்ததெல்லாம் என் மேலான குற்றப்பத்திரிக்கையல்ல. உன் மரண வாக்குமூலம்..' என சளைக்க வைக்கிறதெனை, தன் வாலைத் தான் கவ்வச் சுற்றும் நாய் ஜன்மமாம் இந்த மின்விசிறி. உதிர வாசந் தெரியாத சைவக்கத்தி வைத்திருக்கும் பெண்டுகன் என்கிறது.

ஆகட்டும். மின்னலை அறுத்தெரிபவனுடைய கத்தி, அவன் நரம்பு வாயில்களைத் திறப்பித்த துர்லபத்தை சாதித்துக் காட்டியதில், இன்னமும் நிறுத்தாமல் பேசிக் கொண்டிருக்கும் மின்விசிறியை விட, நக இணுக்கு வழியே நச்சைப் புகட்டி என்னைக் கோழையாக்கியிருக்கும் இந்தத் தனிமையின் கங்கணத்திற்குப் பங்கதிகம்.

என் கருங்குருதிக் கறையைக் காய வைக்க வேகவேகமாய் தன்னை சுழற்றிக் கொள்ளப்போகும் மின்விசிறிக்காக, அதன் றெக்கைகளுக்குள் ஊடுபாவி, சுக்கு ஆயிரமாய் குதறப்போகும் தனிமையை நான் மிச்சம் வைத்துச் செல்லும் நெகிழ்வுடன், இடக்கை வாகில் அறுத்துக் கொள்ளத் துவங்குகிர்ர்....

Read more...

Monday, May 10, 2010

நானிற்குள் பதுங்கும் விலங்கு


















ஒரே மொடக்கில்
அன்பின் இறுதிச் சொட்டுவரை
உறிஞ்சி விட எத்தனிக்கும்
வாய்களை நிரப்பத்
தினவெடுத்தவிரு முலைகளில்லாதது
என் நான்

மடியில் தலை வைத்த காலத்துக்கு
திதியாகி விட்டது
தலையில் மடி வைத்துப்
பாளம் பாளமாய் வெடித்துக்
கிடந்த வெக்கைப் பரப்பின்
அருகம்புற் பனித்துளியில்
முகம் பார்க்கையில்

தலையில் வைத்திருந்த
மடிக்குள்ளேயே உறிஞ்சப்பட்டது
முழுவுடலும்

முனை மழுங்கிய
கோரைப்பற்களை மறைக்க முற்படுகிறது
நானிற்குள் பதுங்கிய
விலங்கொன்று


நன்றி: கீற்று

Read more...

Friday, May 7, 2010

விளைவின் விளையாட்டு

ஒன்றுமில்லாத இடத்தில்
ஒளி வந்தது

ஒளி மறைந்த இடமோ
நிழலெனப்பட்டது

ஒளிக்கும்
நிழலுக்கும் இடையே
இடம் தொலைந்தது

Read more...

Monday, May 3, 2010

காஃப் ஸிரப் குடிகாரர்கள்!


நிகழ்வு 1:

அன்று எனக்கு உடம்பு சரியில்லை. தென் பெங்களூரில், டாக்டர் ஜெக்தீஷ் அந்த்தின் (Jagdish Antin) ஒரு விசிட்டுக்கு 200 ரூபாய் வாங்கினாலும் மொய்ராசிக்காரர். அவரைப் பார்த்து ஒரு ஊசி போட்டுக்கொண்டு எதிரே இருந்த பத்மா மெடிக்கல்ஸில் மருந்து வாங்கிக் கொண்டிருந்தேன். அப்போது Avengerல் வந்திறங்கிய ஒரு மனிதருக்கும், மருந்துக் கடைக்காரருக்கும் நிகழ்ந்த உரையாடல்:

வந்தவர்: குரூ.. ஈ சிரப் கொடீ குரூ.. (குறிப்பிட்ட ஒரு காஃப் சிரப்பைக் கேட்கிறார். பெயர் நினைவிலில்லை)

ம.கா: Prescription இதியா..?

வந்தவர்: இல்லா.. குரூ.. சல்ப அர்ஜண்ட்டாகிதே.. அதே.. கொடீ குரூ..

ம.கா: யேய்.. இல்லாப்பா.. Prescription இல்லாந்த்ரே ஹோகி.. ஆகல்லா.. மத்தே.. நனகு பிரஷ்னே பரத்தே.. ஈவாக லாஸ்ட் டைமே தும்பப் பிரஷ்னே ஆயித்து..

மருந்தைக் கொடுக்க ஏன் இந்தக் கடைக்காரர் இத்தனை பிகு செய்கிறார் என்று தோன்றினாலும், எனக்கிருந்த தலைவலிக்கு அவர்கள் உரையாடலில் கவனம் செலுத்தத் திராணியில்லாமல் என் மருந்தை வாங்கிக் கொண்டு வந்துவிட்டேன்.. அதற்குப் பின்பும் வந்தவர் கடைக்காரரைக் கெஞ்சிக் கொண்டுதானிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வு: 2

மதுப்பழக்க மறுவாழ்வு மையமொன்றில் அனுமதிக்கப்பட்டு, சில காலம் அங்கிருந்துவிட்டு அப்போதுதான் வீட்டிற்கு வந்திருந்தார் என் நண்பனொருவனின் அப்பா. அவரோடு பேசிக் கொண்டிருக்கையில் தெரியவந்த தகவலொன்று. குடிப்பழக்கம் காரணமாக அந்த மையத்தில் அனுமதிக்கப்பட்டவர்களை விட, கஞ்சா முதலிய பொருட்களுக்கு அடிமையானவர்கள்தான் அதிகமாம். அதுவும் காஃப் சிரப் அடிமைகள் இன்னும் அதிகமாம். 15 வயசுப் பையனொருவனின் கதையையெல்லாம் சொன்னார். கேட்கவே காதுகளுக்கு மிகவும் குளிர்ச்சியாக இருந்தது.

நிகழ்வு 3:

மீண்டும் புலர்ந்து விட்ட இன்னுமொரு நாளின் காலையில் உணவருந்த அன்னபூர்ணேஸ்வரிக்குச் சென்றேன். எதிர்பாராவிதமாக கடை சாத்தியிருந்தது. இதென்னடா.. மதுரைக்கு வந்த சோதனையாக இருக்கிறேதேயென்று, இதுபோன்ற இடுக்கண் சமயங்களில் இருக்கும் ஒரே ஆப்ஷனான Joy Bakes எனப்படும் பேக்கரி இலக்கணங்கள் மாறாதவொரு கேரளத்துப் பேக்கரிக்குச் சென்றேன்.

நான் பஃப்ஸைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, ஒரு பேக்கரிக்குள் நுழைகையில் இருக்க வேண்டிய அச்சு அசல் உரிமைத் தொனியுடன் உள்ளே வந்தார் ஒருவர். கல்லாவுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு திண்டில் சௌகர்யமாக அமர்ந்தவர், பேண்ட் பாக்கெட்டிலிருந்து RexCof என்ற காஃப் சிரப்பை எடுத்தார். திறந்தார். கவுத்தினார். அரை பாட்டில் காலி.

தண்ணியடிக்கையில் வரக்கூடிய அதே தொண்டைக் கனைப்பு, கண்ணை இறுக்கி மூடித் திறத்தல் போன்றவையும் காணக் கிடைத்தன. பாட்டிலை மீண்டும் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு, மலையாளங் கலந்த கன்னடமா, இல்லை கன்னடங் கலந்த மலையாளமாவென்று தெரியாத பாஷையில் பேசிச் சிரித்தவாறே சென்று விட்டார். என்னுடைய நாளுக்கு மீண்டு வர சற்று அவகாசம் தேவைப்பட்டது எனக்கு.

இதைப் பற்றி கட்டாயம் எழுதித்தான் ஆக வேண்டுமா என்று யோசித்தேன். இதைப் பார்த்துவிட்டு அடடே.. இதுவும் நல்லா இருக்கும் போலிருக்கே என்று யாராவது களத்தில் குதித்தால், ஏதாவது ஒரு மகராசியின் சாபம் எனக்கு வந்து சேருமேயென்று.

நாம் சொல்லித்தான் இனி எவரும் கெட்டுப் போகப் போவதில்லை. அதே போல் நாம் சொல்லித்தான் இவர்கள் யாரும் திருந்தவும் போவதில்லை என்பதுதான் நிதர்சனமாகப்பட்டது.

ஏன்தான் இப்படி அல்ப போதைக்கெல்லாம் அலைகிறார்களோ என்று வெறுப்பு மேலிடுகிறது. எங்கு நோக்கினும் போதை.. எதற்கெடுத்தாலும் போதை.. படித்தவன் படிக்காதவன் எல்லாருக்கும் போதை.. ஜெயித்தாலும் போதை.. தோற்றாலும் போதை.. அப்படி இந்த போதையில் என்னதான் இருக்கிறது என்ற உள்ளுந்தல் மதுக்கடைகளைத் தாண்டுகையில் ஏற்படுவதுண்டு.

தனிமனித ஒழுக்கம் சார்ந்த விஷயங்களில் முறை பிறழ்ந்த காமத்துக்கு என்ன மரியாதையோ, அதே வகையில்தான் போதையையும் நான் பார்க்கிறேன். என்னைப் போன்ற பழம் பஞ்சாங்கமாகவோ, வீட்டுக்கு பயந்த கோழையாகவோ, இன்னும் என்னென்ன பட்டங்களெல்லாம் குடிக்காதவர்களுக்கு சூட்டுவார்களோ, எல்லாமாகவும் நானிருப்பதில் எனக்கு வருத்தமில்லை. ஆனால் இப்படி வரைமுறையில்லாமல் கண்டதையும் வாங்கிக் குடித்து, உடலையும் கெடுத்து, குடும்பத்தையும் குப்புறக் கவிழ்த்து… எங்கேதான் சென்று கொண்டிருக்கிறதோ நம் நாடு..

குடிப்பது விஷம்தான் என்றாலும், நல்ல பிராண்ட் விஷத்த வாங்கிக் குடியுங்களேன் என்று சொல்வதைப் போலிருக்கிறது எனக்கு!

எல்லாரும் கொஞ்சம் பாத்து, பதனமா இருந்துக்கங்கப்பா.. பொல்லாத உலகமா இருக்கு.. வேறொண்ணும் சொல்றதுக்கில்ல!

Read more...

  ©Template by Dicas Blogger.

TOPO