Wednesday, November 12, 2008

தீராத விளையாட்டுப் பிள்ளை.

அ.. ஆ.. - இது நான்..அ.. ஆ.. - இது குழந்தைகள்..

இ.. ஈ.. - இது நான்..இ.. ஈ.. - இது குழந்தைகள்..

என் தூக்கத்தில் எப்பொழுதும் என்னையறியாமல் ஒலிக்கும் சத்தம் மேற்கூறிய்தாகத்தானிருக்கும். ஆம்.. அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியன் நான். நாட்டின் ஒரு கோடியில், கோடிக்கணக்கான எதிர்கால இளைஞர்களில், சில நூறுகளை உருவாக்கும் பணிக்கு பிள்ளையார் சுழியிடும் பொறுப்பு என்னுடையது.

குழந்தைகளுடன் இருப்பது எப்பொழுதும் எனக்கு பிடிக்கும். பணியும் அதற்கேற்றவாறு அமைந்ததில் எனக்கு மகிழ்ச்சி. சில சமயங்கள் அவர்களின் துடுக்குத்தனமும், நல்ல பேர் வாங்குவதில் இருக்கும் அதீத ஆர்வமும் அழகு. அந்த ஆர்வத்தால், சேர்ந்தே தப்பு செய்திருந்தாலும், "சார் சார்.. இன்னிக்கு குமரேசன், வீட்ல இருந்து காசு திருடி, அண்ணாச்சி கடைல வாங்கி தின்னான் சார்.." என்பதில் தொடங்கி, மகாலட்சுமி வகுப்புக்கு குளிக்காமல் வந்த வரை எல்லாம் வந்து விடும்.

துவக்கப்பள்ளிதான் என்பதால் நானே எல்லா வகுப்புகளையும் எடுக்க வேண்டும். கல்லூரிகளில் இது போல் ஒரே ஆசிரியர் எல்லா வகுப்புகளையும் எடுக்கும் முறை அமலில் இருந்தால், மாணவர்களுக்கு எவ்வளவு கடுப்பு ஏற்படும் என்று அவ்வப்பொழுது யோசிப்பேன். அதிலும் ஆசிரியர் ஆணாக இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்.

ஒரு வெயில் காலக் காலை நேரமது. சில நிமிடத் தாமதத்தில், முத்துக்கௌண்டன்புதுர் செல்லும் மினி பஸ்சை விட்டுவிட்டேன். லிஃப்ட் கேட்டு, காய்ந்து போய், ஒரு வழியாய் பள்ளி சென்று சேர்ந்து, அதுவும் சரியாக ப்ரேயர் முடிந்த நேரத்தில் சென்று சேர்ந்து, ஹெச்செமிடம் வாங்கி கட்டிக்கொண்டேன்.

காலை வெயிலோடு கூடி, என் கடுப்பும் உச்சத்தில் இருந்தது. இருந்தாலும் பொறுமையைக் கடைப்பிடிக்க உறுதி மேற்கொண்டு, அன்றைக்காக schedule செய்யப்பட்டிருந்த, 4B-க்கான சமூகவியல் தேர்வை சிரமேற்கொண்டேன்.

மதிய உணவுக்கு இன்னும் சற்று நேரமே இருக்கும். தேர்வும் முடிந்தாகிற்று. விடைத்தாட்களைத் திருத்திக் கொடுத்து விட்டு, காலையிலிருந்து கடைப்பிடித்த பொறுமையை எண்ணி சற்றே கர்வம் கொண்டு, நாற்காலியில் சாய்ந்தேன்.

ஒரு சில நிமிடங்கள் சென்றிருக்கும். கோபாலன் கூப்பிட்டான்.

"சார்.. ஒரு கேள்விக்கு பதில் கரெக்ட். நீங்க தப்புன்னு போட்டுட்டீங்க சார்.. "

மூடியிருந்த கண்களை விழித்து, அவனைப் பார்த்தேன். வகுப்பறையெங்கும் வியாபித்திருந்த அமைதி, எல்லார் கவனத்தையும், என் மேல் முன்னிறுத்தியிருந்தது.

"எந்த கேள்வி டா..?" -சற்றே மேலேற ஆரம்பித்து விட்டது, அடக்கி வைத்திருந்த என் கோபம் என்ற உண்மை அப்போது எனக்கு விளங்கியிருக்கவில்லை.

"10 -ஆவது கேள்வி சார்.."

"உலகிலேயே மக்கள் தொகைப் பெருக்கத்தில் முதலிடம் வகிக்கும் நாடு எது?". கேள்வி இதுதான்.

நன்றாக செதுக்கப்பட்டிருந்த ரூல் பென்சிலில் தெளிவாய் எழுதியிருந்தான் கோபாலன்.

10. பதில்: சை -என்று.

நான் அவன் பேப்பரைப் பார்ப்பதை ஆர்வமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தான் கோபாலன். என் இடக்கைக்கு வாகாய் இருந்த அவன் காதைப் பிடித்து நன்றாய்த் திருகியவாறே கேட்டேன்.

"ஏண்டா.. அதென்ன டா.. சை..? பதில முழுசா எழுத முடியாதோ தொரைக்கு..?"

"சார்.. கரெக்ட்-ஆ தான சார் எழுதிருக்கேன்..?"

அரை வட்டத்திற்கு திருகியிருந்த அவன் காதை, முக்கால் வட்டத்திற்கே கொண்டு சென்று விட்டிருந்தேன் அப்போது நான்.

"எதுத்து வேற பேசறியா டா நீ..?"

"சார்.. சார்.. இல்ல சார்.. 'அ'-னு போட்டா, அ-னா னும், 'க'-னு போட்டா, க-னா னும், சொல்லும்போது, 'சை'-னு போட்டா, சைனா-னு சொல்லக்கூடாதா சார்..?"

எப்போது கன்னம் வழியே, உருண்டோடக்கூடும், என்று தெரியாத அளவுக்கு, கண்களின் விளிம்பில், எட்டிப்பார்த்திருந்த கண்ணீரோடு, பாவமாய்க் கேட்டான் கோபாலன்.

சாதாரணமாய்த் திட்டியிருந்தாலும் பரவாயில்லை. புதியதாய் பள்ளியில் சேர்ந்திருந்த வளர்மதி டீச்சர் முன்னாலேயே ஹெச்செம் திட்டியது தான், கோபாலன் மேல் விடிந்து விட்டதோ என்ற என் சந்தேகத்தை யாரிடம் கேட்பது என்ற கேள்வியோடு, மீண்டும் நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டுவிட்டேன்.



2 மறுமொழிகள்:

Anonymous,  March 11, 2009 at 4:22 PM  

Idhuvum nalla irukungooooo.....Still catching up ur prev ones amidst wrk ;-))) - Ruby

மதன் March 12, 2009 at 8:34 PM  

நன்றிங்க ரூபி..!

  ©Template by Dicas Blogger.

TOPO