Tuesday, November 25, 2008

காதலித்த கவிதைகள்..

கையிலேந்த வழியின்றி,
வெட்கங்கள் வீணாகின்றன.
தொலைபேசிக்
காதலிக்கையில்.

*************************************************

சில்லிடல்களும், சிலிர்ப்புறல்களும்
மரத்துப் போகின்றன
காதலின்
கைப்பிடித்தல்களில்.

*************************************************

பார்த்துக் கொண்டேயிருக்கும்
இருளில் நகரும்
உருவிலா
வெள்ளை உருவங்கள்போல்,
இருப்பும், இல்லாமையும்
ஒருங்கே காதலில்.

*************************************************

வார்த்தைக்கும் வலிக்காமலே
கவிதை
எழுதுகிறேன்.
காதலை
எழுதுகையில்.

*************************************************

அவளுக்கும், எனக்கும்
மட்டுமின்றி
சரிக்கும், தவறுக்கும்
இடையேயும்
ஊடாடுகிறது.
காதலென்ற மாயச்சரடு.

*************************************************

கடித்துத் துப்பிய நகம்
அவள் கன்னக் கதுப்பில்
பட்டுத் தெறிக்கையில்,
மஞ்சள்ப்பூ
இதழ் விரித்து,
முறைப்போடு சேர்ந்த
சிரிப்பொன்று வருகையில்,
நகங்கடித்தலும்
நல்ல பழக்கமாகிறது.

*************************************************

மயிர்கோதி
மருவி மைகோதி ஆனதாம்.
குழல் பொதிந்து,
ஈரம் படிந்து,
வெளிவருகையில்
என் ஆறடி அரையடியாகிறது.
மைகோதி மாத்திரம் எம்மாத்திரமாம்?

*************************************************

காதலின் சுகந்தம்
நாசி நுழைந்து, உடல் நிறைத்தது.
கருவிழி மேல்சென்று
இமைக்குள் மறைந்தது.
சற்றே வெண்மை குன்றி,
ஒற்றை முடி சுற்றியிருந்த
மல்லிகையை முகர்ந்தபோது.

*************************************************

நினைவுகள் நிறைகின்றன.
நிறைக்கின்றன.
நீ நிறைய,
நான் நிறைய,
நிறைய நீயும்,
நிறைய நானும்,
நிறைந்த நீயும்,
நிறைந்த நானுமாய்,
நிறையவே நினைவுகள்.
நிறைந்த நினைவுகள்.

*************************************************

சூரியனில்
முகம் கழுவும் பனித்துளியாய்
எட்டிப் பார்த்து உலரும்
உன் கோபக் கீற்றுகள்,
மின்னல் குழந்தைகளாய்
கிள்ளிவிட்டுச் செல்கின்றன.

*************************************************

இறக்கடிக்கும்
இறந்த செல்கள்.
அவள் முடியும், நகமும்.

*************************************************

தெய்வீகப் பூச்சுகளெல்லாம்
தேவையில்லை.
இருந்தவாறு இருத்தலே
நலம்.
நம் காதலுக்கு.

*************************************************

வண்ணமும், வாசமும்
மருங்காப் பூவொன்று
பூத்துக்கொண்டே
இருக்கின்றது
ஒவ்வொருவரின் பதின்மங்களிலும்.

*************************************************

தொட்டும், தொடாமலும்
விரல் முட்டும்
நடை வேளைகளில்,
சிந்துகிறது
அரைத் துளிக் காமம்.
என்னையும் அறியாமல்.

*************************************************

வேண்டுமென்றே
அடுத்த பெண்ணை ஏறிடுகிறேன்.
இவளின்
செல்லக் கடிதல்களில்
உள்ளுக்குள்
மின்மினித் துந்துபிகள்.

*************************************************

உனக்குள்
எனக்காக ஊறிய
ஒரு பொட்டு நேசம்,
என் பாலைகளிலும்
பால் வடிக்கிறது.

*************************************************

நிகழும் சந்திப்புகள்
முடியும் வேளைகள்.
பிரிவு பீடிக்கும்
பீடிகை நிமிடங்கள்.
பரிதவிக்கும்
பட்டாம்பூச்சிக் கண்களில்
தெரிகிறது.
காதலின் கனம்.

*************************************************

என் காதலைச் சொல்லும்
எழுத்தே..
உன் காதலை
எப்படிச் சொல்வேன்..
ஈரம் உலராப்
பேனா முத்தம்
என்றா?

*************************************************

காலமும், மொழியுங்
கடந்து
காதல் வழிந்த
கவிதைகள்
ஆயிரங்கோடி தாண்டியும்,
தீரப்போவதேயில்லை.
காதலும் சரி.
கவிதையும் சரி.



0 மறுமொழிகள்:

  ©Template by Dicas Blogger.

TOPO