Thursday, July 29, 2010

சில ஹாடம்பாக்கத் திரைப்படங்கள்..

மஞ்சளாய் இருத்தலை விட வெளுத்த மதியங்கள்தான் இந்நாட்களில் அதிகம் வாய்க்கின்றன பெங்களூரில். வெயில் நாட்களில் கடவுள் குண்டு பல்பு போட்டுவிட்டார் எனவும், வெயிலில்லாத குளிர் நாட்களில் ட்யூப் லைட் போட்டுவிட்டார் எனவும் சிறு வயதில் எண்ணித் திரிந்திருக்கிறேன். அதுபோன்றதொரு ட்யூப்லைட் மதியத்தில் எழுதத் துவங்குகிறேன்.

உடன் எவருமில்லாத நாட்களைப் பொசுக்கும் எரிபொருளுக்காகவேனும் என்னால் எல்லாக் கோணங்களிலும் புணருறும் மடிக்கணினியில் சமீபமாய் பார்த்த சில ஆங்கிலத் திரைப்படங்களைப் பற்றி சில வார்த்தைகள் பேச உத்தேசம்.


 Bob Zemeckis எனக்குப் பிடித்த இயக்குனர்களிலொருவர். Forrest Gump அவர் இயக்கியவைகளுள் நான் பார்த்த முதல் திரைப்படம். மூன்று முறை பார்த்த  பின்னர்தான் Tom Hanks என்ற எக்காளமிடும் நடிப்பாசுரனைத் தாண்டி இயக்குனரின் யுக்திகள் புலப்படவே துவங்கின. இருவருக்குமே ஆஸ்கரைப் பெற்றுத் தந்த பெருமைக்குத் தகுதியான படம் Forrest Gump.

Zemeckis, Forrest Gumpக்கு முன் இயக்கிய படம் Back to the Future. தலைப்பே கவிதை. அறிவியற் புனைகதைகளின் காட்ஃபாதர் கான்செப்ட்டான டைம் மெஷின் கதை. 1985ல் வெளிவந்தது. டைம் மெஷினைப் பயன்படுத்தி எதிர்பாராமல் 30 ஆண்டுகள் பின்னே (1955க்கு) சென்று விடுகிறான் கதையின் 18 வயது நாயகன் Marty.

30 ஆண்டுகள் வித்தியாசத்தில் அவன் நகரம் சந்தித்திருக்கும் மாற்றங்கள், காலாச்சார, வாழ்வியல் மாற்றங்களென்று எல்லாவற்றையும் கதையின் போக்கிலேயே சுட்டிக் காட்டுகிறார் Zemeckis. Marty பருவ மங்கையாகவிருக்கும் தன் தாயைப் பார்க்கிறான். நண்பர்களிடம் அடிவாங்கும் அசடாக தன் தந்தையைப் பார்க்கிறான். தாயோடு பேசுகையில் நீ இவ்ளோ ஒல்லியா..என்று ஆரம்பித்துத் தடுமாறுவதில் துவங்கி, அவன் தாய் தந்தைக்குள் ஈர்ப்பு வர அவனே உதவுவது வரை காட்சிகள் சுவாரசியம் மங்காது செல்கின்றன.

அவன் வேண்டாமென்று சொல்லச் சொல்ல, அவன் தாய் அவனுடன் சல்லாபிக்க ஆசைப்படும் காட்சிகள் கொஞ்சம் கொழ கொழா. நல்ல வேளையாக முத்தம் கொடுத்த பின்பு, உன்னை முத்தமிடுவது என் சகோதரனை முத்தமிடுவது போலத்தானிருக்கிறது என்று சொல்லிவிடுகிறாள் தாய்.

நிகழில் டைம் மெஷினைக் கண்டறிந்த புத்திஜீவியும் அப்போது இளமையாக இருக்கிறார். தான் எதிர்காலத்தில் கண்டறியப்போகும் டைம் மெஷின் பற்றிய அரைகுறைக் குறிப்புகளை Martyயிடம் அவரே பெற்றுக் கொள்கிறார். அவரின் உதவியுடன் Marty மீண்டும் எதிர்காலத்திற்கு எப்படி வருகிறான் என்பதுதான் ஒற்றை அங்குல லாஜிக் கூட பிசகாமல் Zemeckis உருவாக்கியிருக்கும் Back to the Future. இந்தப் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து மூன்று பாகங்கள் வந்துள்ளனவாம். எல்லாவற்றையும் பார்க்கலாமென்றிருக்கிறேன்!


அடுத்து Beowulf. இதுவும் Zemeckisன் படைப்புதான். தொழில்நுட்ப அடிப்படையில் வலிமையான திரைப்படம். ஆனால் கதை என்றெல்லாம் சொல்லிக் கொள்ளும்படி எதுவுமில்லை என்னைப் பொறுத்தவரை. சும்மா ஒரு monster வந்துச்சு. அதக் கொல்ல ஒரு ஹீரோ வேணும். ஆ.. தோ வந்துட்டாண்டா Beowulf..  என்பதாய்த் தொடரும் fantasy heroism வகையறாதான் Beowulf.  

இதில் monsterன் அம்மாவாக வரும் ஏஞ்சலினா ஜோலியை ஏன்தான் அரை நிர்வாணியாகவே அலைய விட்டார்களோ. அனிமேஷன் திரைப்படம் என்பதொரு சிறப்பம்சம். ஒருமுறை பார்க்கலாம்.. இஷ்டப்பட்டால்!


 A Clock Work Orange. IMDB-ன் தரவரிசைப் பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் எப்போதும் இருக்கும் படம். காலஞ்சென்ற திரைமேதை Stanley Kubrick இயக்கியது. மிகு வன்முறையும், பாலியல் வன்கொடுமை குறித்த எள்ளலும் படத்தை மூன்று நான்கு முறை வயதுக்கு வரச் செய்திருக்கின்றன. 1971லேயே ஹாலிவுட்டில் இத்தகு படங்கள் சாத்தியமாகியிருக்கின்றன என்பது ஆச்சரியத்திற்குள்ளாக்குகிறது.

முதற் பாதியில் கதையின் மையப் பாத்திரத்தின் மேல் நமக்கு ஏற்படும் அளவு கடந்த கோபம், பிற்பாதியில் கருணை வழியும் பரிதாபமாய் நம்மையறியாமலேயே உருமாறுவதில் இருக்கும் ஆச்சர்யம், அது நிகழ்ந்து முடிந்த பின்தான் நமக்குப் புலனாகிறது என்பதில் Stanley Kubrickன் மேதைமை பளிச்சிடுகிறது. A Classical Thriller!


ஆ.வி ஹாய் மதன் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்னொருமுறை கமல்ஹாசனுடன் Spartacus படத்தின் பெருமைகளைப் பேசினால், பேசிக் கொண்டேயிருக்கலாம்.. என்று மதன் (எ) கோவிந்த குமார் (!) சொல்லியிருந்தது நினைவில்(ஏயே) இருந்த ஒரே காரணத்துக்காகவே Spartacus படத்தைத் தரவிறக்கினேன். 1960ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது மூன்றே கால் மணி நேரம் ஓடும் இந்தப் படம்.

ஆச்சரியம் என்னவென்றால் இப்படமும் Stanley Kubrick-னுடையதுதான் என்பது படம் ஓடத் துவங்கிய பின்னர்தான் தெரிய வந்தது. பணத்திற்காக விற்கப்படும் அடிமாட்டு அடிமைகளாயிருந்து, மக்களின் குரூர ரசனைக்காக சண்டையிட்டு மடியும் க்ளாடியேட்டர்களைப் பற்றி அப்போதே படமெடுத்து விட்டார்கள் என்பது கூட பிறகுதான் தெரிய வந்தது. இந்த விஷயத்தில் Ridley Scottஐத்தான் முன்னோடியென்று நினைத்திருந்தேன்.

இரண்டு தலைமுறைகளுக்குப் பிந்தைய ஒருவன், 50 ஆண்டுகளுக்குப் பின்னரும் பார்க்கும் வகையில் தொய்வில்லாமல் எடுத்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் சிறையிலிருந்து தப்பிக்கும் அடிமைகள் தடுப்பு சுவராக வைக்கப்பட்டிருக்கும் இரும்புக் கம்பிகளை ஒரு கும்பலாகத் தலைக்கு மேல் தூக்கி, இன்னொரு தடுப்பின் மீது மோதிச் சாய்க்கும் காட்சி. என்னடா எங்கேயோ பார்த்தது போலிருக்கிறதே என்று யோசித்தால்.. ஆம்.. அதேதான்.. விருமாண்டி க்ளைமேக்ஸ்.

எதையெதையெல்லாம் உருவலாம் என்பதற்காக சினிமாக்காரர்கள் உலக சினிமா பார்க்கிறார்கள். எதையெதையெல்லாம் உருவியிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்காக ரசிகர்களாகிய நாம் உலக சினிமா பார்க்கிறோம். ஆஹா.. இப்படியல்லவா வாழ வேண்டும் கலை!

இந்த லட்சணத்தில் கோடம்பாக்கத்தை கோலிவுட் என்று சொல்லக் கூடாதாம். ஹாலிவுட்டைத்தான் ஹாடம்பாக்கம் என்று சொல்ல வேண்டுமாம். இந்தக் கருத்தை உதிர்த்த நடிகரின் பொன்விழாக் கொண்டாட்டத்தில் அல்லக்கை ஒருவர் இதைப் பெருமையாக வேறு சொல்கிறார். யப்பா.. சாமி.. உங்கள் தன்னம்பிக்கைக்கு ஒரு அளவில்லையா.. எங்கள் கோய்ந்த்தூர்ப்பக்கம் சொல்லும் ஒரு பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. கேக்கறவன் கேணயனா இருந்தா எரும் மாடு கூட ஏரோப்ளேன் ஓட்டுமாம்..

கமல்ஹாசன் எதற்கு இப்படி சொன்னார்.. இது டி.ராஜேந்தர் டைப் வசனமாக இருக்கிறதே.. என்றுதான் நினைத்தேன். டி.ராஜேந்தர் தானே நிஜத்தை மறந்து விட்டு இப்படி தன்னம்பிக்கைக் குழைச்சலாக உளறிக் கொட்டிக் கொண்டிருப்பார்? உங்கள் மேலெல்லாம் கொஞ்ச நஞ்சம் நம்பிக்கை மிச்சமிருக்கிறது அய்யா. பேசுவதை.. கொண்டாட்டங்களை.. விருதுகளை.. இவைகளையெல்லாம் நிறுத்திவிட்டு செயலில் காட்டுங்களேன்.. ப்ளீஸ்!

ஒரு நடிகருக்குக் குழந்தை பிறந்ததை சிங்கத்துக்கு சிங்கம் பிறந்திருப்பதாக எஸ்ஸெம்மெஸ்ஸிக் கொண்டாடும் ரசிகர் மந்தைகளான எங்களை வைத்துக் கொண்டு இந்தப் பேச்செல்லாம் ரொம்பவே ஓவராகப்படுகிறது! 


சும்மாயிருக்காமல் பார்த்துத் தொலைத்த இன்னொரு படம் Patch Adams. இது இன்னும் மோசம். ஹாலிவுட்டிலிருந்து இந்திக்கு வந்து, அங்கிருந்து ஒட்டுமொத்தத் தென்னிந்தியாவும் காப்பியடித்த முன்னாவசூல் ராஜாபாய்க்களின் மூலம்தான் Patch Adams.

Memento – கஜினி, Derailed – பச்சைக்கிளி முத்துச்சரம், Planes, Trains and Automobiles அன்பே சிவம்.. என்று நீளும் பட்டியலைப் பற்றியெல்லாம் யாராவது பேசுவீர்களா.. ம்ம்.. மூச்ச்..!

எங்கேயோ துவங்கி, எங்கோ சென்று விட்டேன். அதனாலென்ன.. பரவாயில்லை. அப்படி எழுதினால்தானே பின்னால் உட்கார்ந்திருக்கும் நவீனாவின் கள்ளக் காதலனென்று ஒத்துக் கொள்வார்கள்!

Read more...

Thursday, July 22, 2010

வார்த்தை விளையாடாமை - 4

தொலைபேசிக் கொண்டிருந்தேன்
அவளுடன்

அவள் பேசுவதையெல்லாம்
அவளின் துடுக்குத் தோழி
அவளைப் போலவே
திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பது
எனக்கும் கேட்டது

திரும்பச் சொல்ல முடியாதபடி
'என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ'
என்று சொல்லச் சொன்னேன்

எவளிடமும் அவள்
தோற்கக் கூடாது
என்ற ஆணவத்தில்

தோழி சொல்ல முடியாதபடி
எதுவுமே சொல்லவில்லை அவள்

எவரிடமும் என்னைத்
தோற்கக் கூடாது
என்ற அன்பில்..

Read more...

Friday, July 16, 2010

உன்னதத்தின் போதனை


இதில் கூச்சப்பட
ஏதுமேயில்லை

வாருங்கள்
கற்றுக் கொள்வோம்

நிரம்பி வழியும்
இதயத்தின் கனத்தில்
தாழும்
இடப்புற விதை மறந்து
கரும்புறத்து இத்யாதிகளை
வலப்புறமே வைத்துக் கொள்வது
எப்படி என்பதை.

Read more...

Monday, July 12, 2010

மஞ்சள் விளக்கடி விளையாட்டு

ஊருக்கு வந்து சேரும் காலைகள் பெரும்பாலும் ஒரே போன்றிருக்கக் கூடியவை. காந்திபுரத்து மாற்றங்களில் துவங்கி அடுத்த 18 கிமீ தொலைவு வரைக்கும் என் நகரம் சந்தித்திருக்கும் மாற்றங்களை அசைபோடும் சன்னலோரப் பயணங்களாய் பனி வழிபவை.

சமீபத்தில் மொழிக்காக எடுக்கப்பட்ட மாநாடு எந்தளவுக்கு மொழிக்குத் தொண்டு செய்ததென்று புரியாவிடினும், சாலைகள் சற்று மெருகேறியிருந்ததும், நகருக்குப் பூசப்பட்டிருந்த சந்தர்ப்பவாத அரசியல் டால்கம் பவுடர்கள் மணம் மங்கத் துவங்கியிருப்பதும், சுள்ளென்றடிக்கும் உண்மையின் வெயிலால் வழியும் வியர்வையில் அவை வெள்ளைத் திட்டுகளாக அப்பியிருப்பதும், பாதியில் நிறுத்தப்பட்டிருந்த சாலைப் பணிகளை சப்பாத்திக் கட்டை கொண்டு தேய்த்து மக்களேதான் முடித்துக் கொள்ள வேண்டுமாவென்பன போன்ற கேள்விகளுடனும் சூலூர் வந்து சேர்ந்தேன்.

எப்பொழுதும் வாரக்கடைசிகளில்தான் ஊருக்கு நம் விஜயம். ஆனால் இந்த முறை அதிர்ஷ்டவசமாக வியாழன் முதல் ஞாயிறு வரை நான்கு நாட்கள் அம்மா கை சாதம் வாய்த்திருந்தது. இதனைப் பயன்படுத்திக் கொண்டு நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் சில பணிகளை முடிக்க உத்தேசித்திருந்தேன். அவைகளில் ஒன்று என் பள்ளிக்குச் சென்று, பள்ளியையும், ஆசிரிய, யைகளையும் பார்த்து வருவதென்பது.

காலை 10 மணிக்கே கிளம்பி விட்டேன். நடக்கத் துவங்கிய அதே வழியில்தான் பன்னிராண்டுகள் பள்ளிக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் இன்றென்னை அந்தப் பாதையில் வசிக்கும் மக்கள் அந்நியமாகத்தான் பார்க்கிறார்கள். என் வெளுத்துப்போன ஜீன்ஸும், டீ ஷர்ட்டும் அவர்களிடமிருந்து என்னைத் தொலைவுறச் செய்ததில் ஆச்சரியமேதுமில்லை. வழியில் தென்பட்ட சில முகங்கள் சிரிப்போடு நிறுத்திக் கொண்டன. சில அப்பாவை விசாரித்தன. சில என் இருப்பையும், பணியையும் பற்றிய வழக்கமான கேள்விகளைக் கேட்டன. ஊருக்குச் சென்றால் திரும்பும் வரை இன்ஸ்டண்ட் புன்னகையொன்று உதட்டோரமாக இருத்தல் அவசியம்.

பள்ளிக்கருகில் சென்றுவிட்ட போது சற்று பதட்டமாகவும், அதே சமயம் excitement (குதூகலம்?!) ஆகவும் இருந்தது. 1947ல் துவங்கப்பட்ட சூலூர் அரசினர் ஆண்கள் மேனிலைப்பள்ளியின் படர்ந்திருந்த அமைதி உள்ளுக்குள் சென்று எங்கோ இடித்து நின்றது.

பார்வையின் ஒவ்வொரு நகர்வுடனும் மோதித் தெறித்துக் கொண்டிருந்த நினைவுத் துளிகளில் சறுக்கிச் செல்தல் வயதை மறக்கடித்துக் கொண்டிருந்தது. காலத்தின் ஊமை சாட்சிகளாய் நின்றிருக்கும் ஒவ்வொரு மரத்திற்கு அருகிலும் சென்று நலம் விசாரிக்கத் தோன்றியது.

பால்யத்தின் பச்சை நினைவுகள் இரவு இரயில் பயணத்தில் காணும் தூரத்து மஞ்சள் விளக்குகளாய் மினுக்கின. என் பயணத்தை விட்டிறங்கி அந்த வெளிச்சத்தை நோக்கி நடக்கத் தொடங்கலாமா என யோசிக்க வைத்தன. ஆனால் அது அத்தனை சுலபமில்லையே.

நாங்களனைவரும் புத்தகத்தை விரித்துக் கொண்டமர்ந்து படிப்பதாகப் பாவனை செய்யும் அந்த அரங்கைக் கடந்து, தலைமையாசிரியர் அறைக்குச் சென்றேன். நான் படிக்கும் போதிருந்த தலைமையாசிரியர் ஓய்வு பெற்று விட்டதால் இப்போதிருப்பவருடன் மனம் அத்துணை ஒன்றவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சம்பிரதாயமான பேச்சுகளைத் தவிர வேறு எதுவும் சாத்தியப்படவில்லை. மற்ற ஆசிரியைகளைக் கண்டு வருகிறேன் என்று கூறிவிட்டு 10ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியைகள் அறைக்குச் சென்றேன்.

தொலைவில் செல்கையிலேயே தெரிந்தது. ஒரே ஒரு ஆசிரியை மட்டுமே Teacher’s roomல் அமர்ந்திருந்தார். பின்புறமிருந்து பார்க்க எவரெனத் தெரியவில்லை. அறைக்குள் சென்று திரும்பிய பின்னர்தான் மகிழ்ச்சி பிரவாகங் கண்டது. ஆம். யாரைப் பார்க்க வேண்டுமென்று மிகவும் ஆசைப்பட்டேனோ.. எங்கே இன்றென்று பார்த்து லீவெடுத்திருப்பார்களோ என்று பயந்திருந்தேனோ.. அதே இராதாமணி ஆசிரியை அவர்கள்.

மிஸ் என்னைத் தெரிகிறதா என்று கேட்டேன். மெள்ளத் தலை நிமிர்த்தி என்னைக் கண்டவர், முகம் ஞாபகத்திலிருக்கிறது. ஆனால் பெயர் மறந்து விட்டது என்று கூறினார்கள். வயோதிகத்தின் சுருக்கங்கள் நினைவின் தடங்களிலும் விழுந்திருந்தன. எந்த பேட்ச் என்றார்கள். என்ன படிச்ச என்றார்கள். என்ன செய்ற என்றார்கள். எங்க இருக்க என்றார்கள். ஒவ்வொரு பதிலுக்கும் அவரின் முகப் பிரகாசமும், புன்னகையின் அடர்த்தியும் கூடிக் கொண்டேயிருந்தன.

என்னதான் சொல்லுங்கள். இங்கே எத்தனை கஷ்டமிருந்தாலும், ஊருக்குச் செல்கையில் என்னப்பா செய்ற என்ற கேள்விக்கு, சாஃப்ட்வேர் என்ஜினியர் என்று சொல்லுகையில் என்னுள்ளே உணரப்படும் சராசரித்தனம், கேட்பவரின் மகிழ்ச்சியை, ஆச்சர்யத்தைக் காணும் போது சற்றே பெருமையாக உருக்கொள்ளத்தான் செய்கிறது. அந்த மகிழ்ச்சிக்குப் பின்னால் படிக்காத (அ) படித்தும் வேலை கிடைக்காத சில சொந்த (அ) சொந்தக்காரப் பிள்ளைகளுக்கான சோகம் இழையோடுவதை நான் நன்கறிவேன். நாம் ஒன்றும் பெரிதாக சாதித்து விடவில்லை என்பதை எப்படிப் புரிய வைக்க என்று தோன்றும்.

நான் பேச ஆரம்பித்தேன்.

மிஸ் எனக்கு நீங்கனா ரொம்ப இஷ்டம். நான் டெந்த் டீ க்ளாஸ்ல படிக்கும்போது நீங்கதான் சைன்ஸ்க்கு வந்திங்க. Infact அப்போதான் ஃபர்ஸ்ட் டைமா நீங்க எங்க க்ளாஸுக்கு வந்திங்க. உங்களோட way of presentation எனக்கு ரொம்பப் பிடிக்கும். புக்கயே தொடாம பாடம் நடத்தறதப் பாக்கும்போது வகுப்புக்காக நீங்க பண்ணிருக்கற ஹோம் வொர்க் தெரியவரும். முகஸ்துதிக்காக சொல்லலங் மிஸ். It was majestic!

PSGல படிச்ச மூணு வருஷமும் நான் இஃபோரியா-ங்கற கல்ச்சரல் ஃபங்ஷன் காம்பியரிங் பண்ணேன். அதுக்கு உங்களோட way of presentationம், body languageம் one of the inspiration.

SSLC 3ர்ட் ரிவிஷன்ல நான்தான் மிஸ் சைன்ஸ்ல ஸ்கூல் டாப்பர். 97 வாங்கினேன். அதுக்காக நீங்க ஒரு பென் ப்ரெஸண்ட் பண்ணிங்க. அத நான் இன்னும் வெச்சுருக்கேன்.

இன்னும் நிறையப் பேசியிருப்பேன் போல. சற்று மூச்சிரைத்தது முடித்தவுடன்.

மேற்கண்டவையெல்லாம் மற்றவர்களுக்கு சராசரியாகத் தோன்றலாமோ என்னவோ.. எனக்கு மிகவும் precious ஆனவை. எல்லோருக்குமே ஒரு இன்ஸ்பிரேஷன் இருந்தாலும் அதை பெரும்பாலும் நாமெல்லோரும் பகிர்ந்து கொள்வதோ, அதற்கு நன்றி சொல்வதோ இல்லை. நான் அந்தத் தவறை செய்ய விரும்பவில்லை.

மிகவும் சந்தோஷப்பட்டார்கள். தன் பணிவாழ்வின் கடைசி ஆண்டில் தனக்குக் கிடைத்த பெரிய பாராட்டு இது.. இப்போதாவது வந்தாயே என்று சிரித்தார்கள். இவை போன்ற வார்த்தைகளைக் கேட்கையில்தான் தாமும் தம் கெரியருக்கு சிறிது அர்த்தம் சேர்ப்பித்திருப்பதாகத் தோன்றுவதாகச் சொன்னார்கள். ஆனால் முன் போலவெல்லாம் வகுப்பெடுப்பதில்லையாம் இப்பொழுது. ஏதோ ALM என்றொரு பாடமுறையைத்தான் பின்பற்ற வேண்டுமாம். அதன்படி ஆசிரியர்களும், மாணவர்களும் புத்தகத்தினைப் பார்த்துதான் பாடம் நடத்த / கவனிக்க வேண்டுமாம்.

ஆசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் பாடம் நடத்துவதற்கென்று ஒரு ஸ்டைல் இருக்கும். சும்மா அதிலெல்லாம் இவர்கள் ஏன் மூக்கை நுழைக்கிறார்கள் என்று தெரியவில்லை. சரி அது கிடக்கட்டும்.

என் கவிதைத் தொகுப்பைக் கொடுத்தேன். ஒரே சந்தோஷப் பேரின்பம் மீண்டும். இண்டர்வெல்லின் போது அறைக்கு வந்த மற்றும் பள்ளியில் புதிதாய் சேர்ந்திருந்த ஆசிரியைகள் அனைவரிடமும் புத்தகத்தைக் காட்டி எங்க ஸ்டூடண்ட் பாத்திங்ளா.. எங்க ஸ்டூடண்ட் பாத்திங்ளா.. என்று பெருமையோடு சொல்லிக் கேட்கக் கொஞ்சம் குழைவுற்றது உள்.

2002ல் பள்ளிப் படிப்பை முடித்த இந்த 8 ஆண்டுகளில் அப்போதிருந்தவர்களில் இரண்டே இரண்டு ஆசிரியைகள்தான் இப்போதிருந்தனர். இன்னொருவரும் முக்கியமானவரே. தமிழாசிரியை கனகாங்கி அவர்கள். நினைவில் கொள்ளும் கலை என்றவொரு கவிதையில் தமிழாசிரியை பெயரும் வந்திருந்ததைப் பார்த்து, எல்லாருமே சந்தோஷப்பட்டார்கள். அவரும் மிகவும்.

இராதாமணி ஆசிரியை அவர்கள் முன்பை விட இன்றைய மாணவர்களைப் படிக்க வைப்பதிலிருக்கும் நடைமுறை சிக்கல்களைப் பற்றி சிறிது பேசினார்கள். எனக்கும் அவையெல்லாம் நியாயமாகத்தான் பட்டன.

தனியார் பள்ளிகள் போல, சேர்த்துக் கொள்ளும் போதே, மாணவன் திறமையானவனா என்பது முதல் படிப்பதற்கு ஏதுவான சூழ்நிலை அவன் வீட்டில் வாய்க்குமா என்பது வரை எல்லாவற்றையும் கணக்குப் போட்ட பின்னர் மாணவர்களைச் சேர்த்துக் கொண்டு மிகச் சுலபமாக செண்ட் பர்செண்ட் ரிசல்ட் காட்டுவதில்லையே அரசு பள்ளிகள்.

வருபவர்கள் எல்லோரையும் சேர்த்துக் கொண்டு, படிக்க வைக்கத் தொண்டை கிழிவுறப் போராடும் அரசு பள்ளி ஆசிரியர்களைப் பற்றிய பேச்சுகளில் இந்த சமூகத்திற்கு அவர்கள் வகுப்பறையில் தூங்குவதும், இண்டர்வெல் பஜ்ஜி சொஜ்ஜியும் மட்டுமே நினைவுக்கு வருவது அவர்கள் துரதிர்ஷ்டம்.

பரவால்லப்பா.. கவர்மெண்ட் ஸ்கூல் பையன் இந்தளவுக்கு வந்திருக்கன்னா.. என்று புதிதாக வந்த ஒரு மிஸ் ஆரம்பிக்க..

அப்படி நாமளே நம்ம பசங்கள சொல்லக் கூடாது.. என்ன கொறஞ்சு போய்ட்டாங்க நம்ம பசங்க.. என்று சிறிய கோபத்துடன் இடைமறித்துக் கேட்டது நம்ம இராதாமணி மிஸ்தான். அந்தக் கேள்வியில் உறைந்திருந்த நியாயம் எனக்குப் பிடித்திருந்தது.

உண்மைதான். என்ன குறைந்து போய்விட்டது அரசு பள்ளி மாணவர்களுக்கு? எங்களால் இயன்றதனைத்தையும் சாதித்துக் கொண்டுதானே இருக்கிறோம். இந்த ஆண்டு SSLC தேர்வில் அரசு பள்ளி மாணவிதானே மாநிலத்தில் முதல் மதிப்பெண். நம் காலத்தின் சராசரியான ஒரு மாணவன் எட்டக்கூடிய அதிகபட்ச உயரம் சாஃப்ட்வேர் என்ஜினியராவதாகத்தானே இருக்கிறது. தமிழகத்தின் நம்பர் ஒன் பள்ளியான கோபாலபுரம் DAV மாணவனும் இங்குதான் வருகிறான். கார்ப்பரேஷன் பள்ளியில் படித்த நானும் இங்குதான் போஜனத்தை ஓட்டுகிறேன் எனும்பொழுது, அவனுக்கு எப்படி இது இழுக்கில்லையோ அப்படியே எனக்கும் இது சாதனையில்லை. ஆனால் தராசுகள் சில சமயம் ஒரு பக்கமாகச் சாய்கையில் இந்த ஒப்பீட்டை எங்களாலும் தவிர்க்க முடிவதில்லை.

அதற்காக சாஃப்ட்வேர் என்ஜினியராகும் விகிதாசாரம் இருபுறமும் ஒரே அளவிலிருக்கிறது என்று நான் கூற மாட்டேன். பூசணிக்காயை எழுத்திலும் எப்படி மறைக்க முடியும். பொத்தாம் பொதுவாக அரசு பள்ளி மாணவர்களின் திறமையைக் குறைத்து மதிப்பிடுவது தவறென்பதுதான் என் கருத்து.

இந்த மாதிரி ஒரு பையனக் கூப்ட்டு இலக்கிய மன்ற விழாவுல பேசச் சொன்னா என்ன நம்ம ஹெச்செம்க்கு.. நம்ம கொழந்தைகளுக்கும் உபயோகமா இருக்கும்.. என்றார் இராதாமணி ஆசிரியை. என்ன சொல்ல.. என் ஆதிநாட் கனவுகளுள் ஒன்று அது. இந்தக் கேள்வி வருமளவுக்கு என் பாதை சரியாக அமைந்திருப்பதற்கு நன்றி சொல்கிறேன் இறைக்கு. கண்டிப்பாக ஒருநாள் எங்கள் பள்ளி இலக்கிய மன்ற விழாவில் பேசுவேன். அதைப்பற்றியும் எழுதுவேன். நீங்கள் வேண்டுமானால் பாருங்கள்!

அதற்குள் இராதாமணி மிஸ்ஸுக்கு நேரமாகி விட்டது டெந்த் C வகுப்புக்குச் செல்ல. நீ நல்லா வருவ.. என்று கைகளைப் பிடித்து வாழ்த்திவிட்டு, கண்களைப் பிடித்து விடை பெற்று வகுப்பை நோக்கி நடக்கத் துவங்கிய அவர்களை ஏனோ பார்த்துக் கொண்டே இருந்தேன். கருணையே இல்லாத காலம் ஒரு நல்ல ஆசிரியரின் கடைசி ஆண்டினை நொடிகளாகக் கரைத்துக் கொண்டிருந்தது.

மஞ்சள் விளக்கடி விளையாட்டிலிருந்து எப்பொழுது என் பயணத்திற்குத் திரும்பினேன் என்று தெரியவில்லை. தட தடக்கும் லௌகீக இரயிலின் வேகத்தில் காற்று முகத்திலறைகிறது.


Read more...

Wednesday, July 7, 2010

திட்டமிட்டதொரு விபத்து

உறவுக்கும் விலகலுக்குமான
விடையைத் தேடியலைந்த
பாதையின் ஒரு திருப்பத்தில்
குறிக்கப்பட்டிருக்க வேண்டும்
சம்பவம் அரங்கேற வேண்டிய இடம்

உயிர் பிழைப்புகள் 
இல்லா வண்ணம் 
கச்சிதமாக நிகழ்ந்து விடல் நலம்

முடமாகிப் போதலென்பது
பிறிதொரு திட்டத்திற்கான
காத்திருப்பே
சக்கர நாற்காலிகளின்
கருணா சுழற்சிகளால்
பயனில்லை

அடையாளங் காண
முடியாததாகக் கசகசத்துப்போன 
முகத்துக்காரர்கள்
பாக்கியவான்கள்

பொதுக் கழிப்பிட யூரினலில்
ஒட்டியிருக்கும் 
சுருண்ட ஒற்றை மயிராய்
பார்க்கப்படுதலை விட

Read more...

Friday, July 2, 2010

சொர்க்க வாசல் முகடு


ஒரே படுக்கையிலான
இருவரின் சுய போக
orgasmகள் சந்தியாதபோது

பூ மத்தியில்
புகைந்து கொண்டிருந்த
Aப்படத்தின்
juices are 
flowing

வாய்கொள்ளா
MILFகளின்
முலைப் பெரு விடைப்புகள்
பரியந்தம்

ரோமாஞ்சனத்தை
squirtஇக் கொண்டிருக்கிறார்கள்
இலக்குவ
சூர்ப்பனகைகள்
சூப்பர்னகைகள்

orgasmக்கும்
ejaculationக்குமான 
இடைவெளியில் கழுத்தறுபடுகிறாள்
காம தேவதை

சொர்க்க வாசல் முகட்டுப்
பேரூழியில்
நனைந்து கொண்டிருக்கிறது
நாம்

Read more...

  ©Template by Dicas Blogger.

TOPO