Friday, November 14, 2008

இசையோடு

மீட்டப்படும்
வயலின் நரம்புகள்
காற்றில் நடந்து
செவிவழி சேர்கையில்,
நினைவு கடந்த
வெற்றுப் பெருவெளியில் அலைகிறேன்.

ஒத்திசையும்
மிருதங்க நாதம்
பேரண்டத்தின்
இருண்ட மூலையொன்றில்
பருப்பொருளாக்கி விடுகிறது.

குரல்வளைக்கும்
இத்துணை வசீகரத்தை
இசை பூசப்பட்ட
காற்று அளிப்பதன்
ஆச்சர்யக் கோடுகளுக்குள்
பிணையுண்டு சாகிறேன்.

கிறங்கடிக்கும்
ஏகாந்த வாசம்
காதுக் கணவாய் புகுந்து,
பின்னிக் கிடக்கும்
மூளை நரம்புகளைச்
சிக்கெடுத்து சிலிர்ப்புற வைக்கிறது.

இசை.
சங்கீதம்.
நாதம்.
மற்றும்பல சந்தப் படிமங்கள்.
நீண்டு கிடக்கும்
யாருமற்ற ஸ்வர சாயங்காலங்கள்.
இவற்றுக்குள் காணாமற்போய்,
என்னை நானே தேடியலைகிறேன்.
மீட்டெடுக்க மனமின்றி,
வெறுங்கையுடன்
வீடு திரும்புகிறேன்.



0 மறுமொழிகள்:

  ©Template by Dicas Blogger.

TOPO