Friday, September 24, 2010

Band of Brothers! – சில கருத்துகள், பகிர்வுகள்..



Saving Private Ryanல் துவங்கிய யுத்தத் திரைப்படங்களின் மீதான மோகம், எனையறியாமலேயே என்னுள் காட்டுத்தீயென உருக்கொண்டு, இரண்டாம் உலகப்போரில் நானும் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு ஓடுவது போலெனக்குக் கனவுகள் வருமளவுக்கு யுத்தக்களத்தைக் கதைக்களமாகக் கொண்ட படங்களைப் பார்த்திருக்கிறேன்.

இந்தப் பட்டியலில் இடம்பெற்ற திரைப்படங்களிலேயே ஆகச்சிறந்த படைப்பு என்று கருதக் கூடியது Saving Private Ryan என்றுதான் நினைத்திருந்தேன், சமீபத்தில் Band Of Brothersஐப் பார்க்கும் வரை. HBOவில் வாரமொரு முறையென்று பத்து வாரங்களுக்கு ஒளிபரப்பான இந்த மினி-சீரீஸ், உலகத்தரம் வாய்ந்தவொரு படத்துக்கான எல்லாத் தகுதிகளையும் உள்ளடக்கியதாகவுள்ளது.

Title Cardன் இசையே என்னமோ செய்ய ஆரம்பித்து விடுகிறது. மெது மெதுவாகப் பெயர்கள் திரையில் நகரத் துவங்கிய பின், Executive Producers என்ற titleக்காக நான் காத்திருப்பேன். ஏனென்றால் BOBன் Executive Producers, எனக்கு ரொம்பப் பிடிச்ச Steven Spielbergம், Tom Hanksம்! (ஒரு நல்ல படைப்பாளியின் பணத்தில் உருவாகும் படைப்பு நல்லதாகத்தானே இருக்கும்!) ஒவ்வொரு எபிசோடிலும் அவர்கள் பெயரைப் பார்க்கையில் உள்ளே பொங்கிய உற்சாகம், அவர்கள் மேலான என் பிரியத்துக்குப் பதமான ஒரு சோறு!

Saving Private Ryan-ன் நீட்சிதான் Band Of Brothers என்பது என் அபி! போர் என்ற ஈரெழுத்து வார்த்தை தருவிக்கும் வதையை, வாதையை, போதையைப் பதிவிக்க 120 நிமிடங்கள் போதாதென்பதால்தான், 600 நிமிடங்களுக்கு நம்மைக் கட்டிப் போட்டுப் பாடம் கற்பிக்கிறார்கள் போலும் இருவரும்.

Band Of Brothers-ல் கதையென்றெல்லாம் எதுவும் கிடையாது. போர்! இதுதான் கதை. அமெரிக்க இராணுவத்தின் 101st Air Borne, அதாவது Easy Company எனப்படும் Para-Trooper  (விமானத்திலிருந்து பாராசூட் மூலம் குதித்துப் போர் செய்யும் வீரர்கள்) போர்க்குழுவின் பயிற்சிக்காலம் முதல் (1942), இரண்டாமுலக யுத்தம் முடிவுறுவது வரை (1945) Easy Companyயின் வெற்றிகளை, தோல்விகளை, ஒவ்வொரு வீரனும் போரின் சூழ்நிலைகளை எதிர்கொள்வதை, அதில் சிலர் வெற்றி பெறுதலை, சிலர் தோல்வியுறுதலை, உணவு, நீர் மற்றும் ஐரோப்பியக் குளிருக்குத் தக்க ஆடைகளென்று இன்றியமையாத பொருட்கள் கூட இல்லாமல் போரின் ரணத்தில் அவர்கள் அலைக்கழிதலை, நில்லாது நீளும் இன்னபிற காற்புள்ளிகளை.. என்று ஒரு யுத்தப் பட இரசிகனுக்குத் தேவையான அத்துணை விஷயங்களும் Band Of Brothersல் அடக்கம்.

பத்து எபிசோடுகளில், ஐந்தாறு முறை கண்களில் நீர் பூத்திருக்கும். யூதர்களை அகதிகளாக அடைத்து வைத்திருந்த முகாம் காட்சிகளை நினைத்தாலே பதைக்கிறது. மிகுந்த யதார்த்தமுடன், அச்சு அசல், உண்மைக் காட்சிகளைப் போலவே உருவாக்கியிருக்கிறார்கள். ஜெர்மானியர்களால் கருக்கப்பட்ட யூத உடற் பிண்டங்கள் சிதறிக் கிடப்பதைப் பார்க்கும் அமெரிக்க வீரர்கள் அடையும் அதிர்ச்சி நம்மிலும் அதிர்கிறது.

ஒவ்வொரு எபிசோட் துவங்கும் முன்பும் சில நிமிடங்களுக்கு இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்டு உயிர் தப்பிய நிஜ வீரர்கள் (இன்றைய தாத்தாக்கள்!) சிலர் பேசுவார்கள் பாருங்களேன். அவர்கள் பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் முள்ளாய்த் தைக்கின்றன. கண்களுக்கு முன்பு நடந்தேறிய குருதிக்களரிகளை நினைத்து, குரல் தழு தழுக்க, பேச முடியாமல் விக்கித்துப் போகிறார்கள் சிலர். போலவே நமக்கும்!


 பெரும்பாலான கதாபாத்திரங்கள் முகந்தெரியாத நடிகர்களாம். ஆகச்சிறந்த தேர்வுகள் ஒவ்வொன்றும். Casting was bloody brilliance I ‘d say! அவரவர்களுக்குக் கொடுத்த வேலையைக் கன கச்சிதமாகச் செய்து முடித்திருக்கிறார்கள். குறிப்பாக Major.Richard Winters ஆக வரும் Damian Lewis, மற்றும் Captain.Lewis Nixon ஆக வரும் Ron Livingston. மொத்த சீரீஸுமே உண்மைச் சம்பவங்களைத் தழுவியெடுக்கப்பட்டது என்ற தகவல் சற்று கிலியூட்டுகிறது.

2001ல் வெளிவந்த இப்படைப்பு Golden Globe விருது பெற்றிருக்கிறது.

வெறுமனே வெடித்துச் சிதறும் உடற் குவியல்களை மட்டும் காட்டுவது யுத்தம் சார்ந்தவொரு நல்ல படைப்பின் கருதுகோளாக இருக்க இயலாது. உடன், அவ்வீரர்களைப் பீடிக்கும் உளவியல் அழுத்தக் கூறுகளைக் காட்சிகளின் வாயிலாகப் பதிவு செய்வதும்தான் யுத்த சினிமாவைக் கையிலெடுக்கும் கனவான்களின் கற்பனைக்கேற்ற சக்தி வாய்ந்த சவால். அதிலும் கேள்விக்கே இடமில்லாமல் சபாஷ் போட வைக்கிறது BOB.

என் வரிகள் உங்களுக்கு சற்று உயர்வு நவிற்சியாகப் படலாம். ஆனால் நீங்கள் BOBஐப் பார்க்கக் கூட வேண்டாம். இணையத்தில் அதன் விமர்சனங்களைப் படித்தாலே புரியும், நான் மிகை கூட்டியெழுதவில்லை என்பது.

பத்துப் பாகங்களில் ஐந்தாவதானதை இயக்கியிருப்பவர் Tom Hanks என்பது உபரித்தகவல். அவரேதான் இயக்கினாரா, இல்லை மற்றொரு தயாரிப்பாளர் உதவினாரா என்று கேட்பவர்களுக்கு என்னிடம் பதிலில்லை! J

Steven Spielbergம், Tom Hanksம், மீண்டுமொரு 200 மில்லியன் டாலரைக் கொட்டி உருவாக்கிய The Pacific என்ற மற்றொரு மினி-சீரீஸ் 2010ல் வெளியாகியிருக்கிறது. இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானுடனான அமெரிக்கப் போர் பற்றியது. இதுவும் பத்து எபிசோடுகள். இன்னுமென்ன.. தரவிறக்கியாயிற்று! மற்றுமொரு கொண்டாட்டத்துக்குத் தயாரானது போல் குதிக்கிறது மனது. பார்த்து விட்டு நான் எதுவும் எழுதப் போவதில்லை. நன்றாகத்தானிருக்கும். நீங்களும் ஒரு யுத்தப் பிரியரென்றால் (?!) இவ்விரு படைப்புகளையும் தவற விடாதீர்கள். விடவே விடாதீர்கள்!

BOBஐ ஒரு ரசிகனாக மட்டுமல்லாமல், ஒரு மனிதனாகவும் என் காலத்துக்கும் உடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

-0-

என் கல்லூரிக் காலத்தில் தமிழ் சினிமா சம்பந்தப்பட்ட இருவரை சந்திக்க வேண்டும் என்ற ஆசையிருந்தது. ஒருவர் கமல்ஹாசன். இன்னொருவர் இளையராஜா. இப்பொழுது அந்த ஆசையில்லை என்றல்ல. ஏனோ கால மாற்றத்திலோ, நெஞ்சமுறும் முதிர்வில் நிகழும் சத்தமிலா நகர்வுகளிலோ நீர்த்து விட்டது அவ்வாசை. இப்பொழுது கேட்டால், Steven Spielbergஐயும், Tom Hanksஐயும் சந்திக்க ஆசை என்று சொல்கிறது மனது. இது எத்தனை நாட்களுக்கு என்று தெரியவில்லை. மனமெனும் குரங்குக்குக் கிளைகளுக்கா பஞ்சம்?

கீழே நான் கொடுத்திருக்கும் வீடியோக்களைப் பாருங்களேன் (I Insist!).


சந்திக்க ஆசைப்படுகிறேன் என்று நான் சொன்ன இருவரும், ஆஸ்கர் விருது வாங்கிய மேடையில் கூட எத்தனை அடக்கத்துடன், நேயத்துடன் பேசுகிறார்கள் என்பது புலனாகும்.

Tom Hanks அவர் மனைவியின் மேல் எத்தனை காதலுடன் பேசுகிறார் பார்த்தீர்களா? (...and I am standing here because the woman I share my life with, has taught me and demonstrates for me everyday, just what Love is!)

Spielberg சொல்லவே வேண்டாம். அவர் ஆஸ்கர் வாங்கிய இரண்டு படங்களும் அஸ்சாதாரணமான படங்கள். (Schindlers List மற்றும் Saving Private Ryan) அப்படியிருந்தும் அவரால் இவ்வளவு அடக்கத்துடன் எப்படித்தான் பேச முடிகிறதோ?

Schindlers Listக்காக ஆஸ்கர் வாங்கிய மேடையிலேயே, படுகொலை செய்யப்பட்ட அறுபது லட்சம் யூதர்களுக்காகப் பொங்கிய கண்ணீரை மறைக்கத் தெரியாமல் மறைக்கும் அவரின் மனிதம், அவரும் ஒரு யூதர்தான் என்பதால் மட்டுமல்ல என்று நம்புவதால்தான் எனக்கும் வரச்செய்கிறது கண்ணுக்கொன்று வீதம் இரண்டே துளிகளை!

Read more...

Wednesday, September 22, 2010

வார்த்தை விளையாடாமை - 5

காதலி.. என்றழைத்தேன்.

பெயர்ச்சொல்லா..
வினைச்சொல்லா.. என்றாள்.

இரண்டும்.. என்றேன்.

பின்னொரு சமயம்
காதலா.. என்றழைத்தாள்.

நானும்
பெயர்ச்சொல்லா..
வினைச்சொல்லா.. என்றேன்.

அசடு.. இதிலென்ன சந்தேகம்..
என்று சிரித்தாள்..

என்ன செய்ய?
மொழி கூட
அவள் பக்கம்தான்.

Read more...

Thursday, September 16, 2010

மொழியும், மொழி சார்ந்து சொறிதலும்!


மொழியை மையப்படுத்தி எழுப்பப்படும் / இருப்பதாக நீட்டி முழக்கப்படும் உணர்வெழுச்சிகள், அம்மொழியின் வளர்ச்சியைக் காட்டிலும், தனிப்பட்ட சிலரின் ஆதாயங்களுக்காகவும், அரசியலுக்காகவும் பலிகடாவாதலே வரலாற்றின் பெரும்பான்மைப் பக்கங்களில் காணக் கிடைக்கின்றன. தமிழுணர்வு என்ற வார்த்தையைப் போல கன்னடவுணர்வு, தெலுங்குணர்வு என்றெல்லாம் கூட இருக்குமா என்று அவ்வப்போது என் சிற்றறிவிலோர் ஐயப்பாடு தோன்றுவதுண்டு. கன்னட ரக்ஷண வேதிகே என்ற அமைப்பு அவ்வப்பொழுது அடிக்கும் கூத்துகளுக்கெல்லாம் வேறென்ன பெயர் சொல்வது எனக்கு நானே பதிலையும் சொல்லிக் கொள்வேன்.

வரம்புகளுக்கப்பாற்பட்டு தமிழ் சார்ந்த உணர்வு இருப்பதானவொரு தோற்றம் தமிழ்நாட்டில் தென்பட்டாலும், அதற்கான வழியில் நாம் நடந்து கொள்கிறோமா என்று சற்று சிந்தித்தால், பெரியதொரு ஓட்டை விழுந்த அரை டிரவுசர்தான் நினைவுக்கு வருகிறது.

சமீபமாய் நிகழ்ந்தேறிய மாநாட்டுக் குழப்படிகளிலிருந்து தப்பிப்பதற்காகவேனும் அண்டை மாநில வாசம் உதவியதே என்று நான் நினையாத நாளில்லை அக்காலத்தில். சென்ற வாரம் கோவை சென்றிருக்கும் பொழுது ஒரு கடையின் பெயரை கவனித்தேன். குவாலிட்டி அடுமனைஎன்றிருந்தது. இப்பெயரில் எது தமிழ்? Quality Bakes என்றிருக்கும்போது அப்பெயர் நல்லதொன்றாகத்தான் பட்டது. அக்கடையின் வகைமையைத் தமிழ்ப்படுத்தினால் போதுமா? அக்கடையின் அடையாளமாய் விளங்கும் பெயரையும் translate செய்திருந்தாலல்லவா நீங்கள் செய்ய விழைந்த பணி முழுமையடைந்திருக்கும்? ஏன் இப்படி அரைகுறையாக transliterate செய்து, ஏதோ தமிழ்த்தொண்டு புரிந்தாற் போலான சீன் போடுவானேன்?

0

சரி போகட்டும். நம் பெயரை தமிழில் எழுதச் சொன்னால் நம்மில் எத்தனை பேர் நம் இனிஷியலையும் (இனிஷியலுக்குத் தக்க தமிழ் வார்த்தை தெரியாத குற்றத்தை தமிழன்னை கண்டுகொள்ள மாட்டாளாக!) தமிழில் எழுதுகிறோம்? என் பெயரை எப்பொழுது எழுதினாலும் மதன்.வே என்றெழுதும் பழக்கம் எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனால் நல்லவேளையாக அப்படித்தான் சிறு வயது முதலே எழுதி வருகிறேன்.

எனக்குப் பிடித்த எழுத்தாளர்களுள் ஒருவரான அபிலாஷின் பெயர் எங்கு கண்டாலும் ஆர்.அபிலாஷ் என்றுதான் இருக்கிறது. அவரைக் குற்றம் சொல்வது என் நோக்கமில்லை. உதாரணத்திற்கு அவர் பெயர்தான் எளிதில் சிக்கிற்று. அவர் மட்டுமல்ல. நம்மில் பெரும்பாலானோர் செய்யும் காரியந்தானிது. சுட்டிக் காட்ட வேண்டுமென்பதல்ல. திருத்திக் கொள்ள வேண்டுமென்பதே நோக்கு!

0

நான் அலுவலகத்துக்கு cabல் தான் செல்ல வேண்டும். நரகத்தனமான போக்குவரத்தில் நாள் முழுவதும் பாடுபடும் வண்டியோட்டிகளுக்கு FM ரேடியோ என்பது மிகப்பிடிக்கிறது. அவர்கள் புண்ணியத்தில் 'போக' மற்றும் 'வர' என்று ஒரு நாளைக்கு ஒன்றரை மணிநேரம் கன்னடத் திரைப்பாடல்களைக் கேட்டு, நான்காண்டுகளில் ஓரளவுக்குக் கூடவே பாடுகிறேன்.

இதில் கவனிக்கத் தக்க அம்சம் என்னவென்றால், கன்னட நாட்டையும், மொழியையும் பற்றி இவர்கள் பாடியிருக்கும் அளவுக்கு நிச்சயமாக நம் எம்ஜியார் தொட்டு இன்றுவரையான நடிகர்கள் கூட முயற்சித்ததில்லை எனலாம். எதற்கெடுத்தாலும் கன்னட மாத்தே.. , நம்ம நாடூ.. கரூ நாடூ.. , ஆச்சா போச்சா என்கிறார்கள்.

சாம்பிளுக்கு ஒரு பாடலைப் பற்றி சொல்கிறேன். சில முறை கேட்டதிலிருந்து எனக்கந்தப் பாடலின் ட்யூன் பிடித்திருந்ததால் முணுமுணுத்துக் கொண்டிருந்தேன். கற்பனையில் டாக்டர்ர்ர் ராஜ்குமார் அவர்கள் பாடுவதாக ஒரு கற்பனைக் கழுதை வேறு ஓடிக் கொண்டிருந்தது.

ஒருநாள் ஆர்வம் தாங்காமல் யூட்யூபில் பார்த்தால், நம்ம எஸ்பீபீ அவர்கள் பாடி, நடித்திருந்தார். அநேகமாக அவர் வெயிட் போட ஆரம்பித்திருந்த சமயமாகவிருக்கும். ஒரு மேடையில் நின்று, சங்கடமே படாமல் கையைக் கையை மேலே தூக்கிப் பாடிக் கொண்டிருந்தார். அவர் எதைச் செய்தாலும் மிகுந்த தொழில் பக்தியுடன் செய்வாராதலால், இந்தப் பாடலிலும் உணர்வு பொங்க நடித்திருந்தார். பாதகமில்லை. ஆனாலும் எனக்கேனோ ஏதோ ஒன்று உறுத்தியது. அவ்வுறுத்தல், அடிப்படையில் ஒரு தெலுங்கரான இவரைக் கன்னடவுணர்வு பொங்கும் ஒரு பாடலுக்கு நடிக்க வைத்துக் கொண்டாடும் கன்னட சமூகம் குறித்தானதா.. அல்லது மூன்று மொழிகளிலுமே இம்மாதிரிப் பாடல்களைப் பாடியிருக்கும் இவர், தன் தாய்மொழியுணர்வுக்குப் பாடுகையில், சற்றேனும் குற்றவுணர்ச்சி வராதா என்பது குறித்தானதா என்று புலனாகவில்லை.

இந்தப் பாடலின் முதல் சில வரிகள்:

இதே நாடூ.. இதே பாஷே..
எந்தெந்தூ நன்னதாகிறலி..
எல்லே இரலி.. ஹேகே இரலீ..
கன்னடவே நன்ன உசிரல்லி..

அது இன்னா மேட்டர்னா.. இதே நாடும், இதே பாசையும் என்னிக்கும் இவ்ரோடத்துதானாம். மேல சொன்னாக்கா.. எங்கேந்தாலும், எப்டீந்தாலும், கன்னடந்தா இவ்ருக்கு உஸுராம்!

பாடலைக் காண!


0

என்னமோ போங்கப்பா.. நமக்கும் ஓடுகிறது வாழ்க்கையெனும் வண்டி.

பிழைத்துக் கிடந்தால் சந்திப்போம்! :)

Read more...

Tuesday, September 14, 2010

ஸ்வர்ணலதா!

மனதுக்கு மிகவும் நெருங்கிய பாடகி ஸ்வர்ணலதா அவர்கள் காலமான செய்தி கேட்டு வேதனையடைந்தேன்.

சில வாரங்களுக்குப் பின்னர் இன்றுதான் வலையைத் திறந்தேன். பார்த்தால், அவர் காலமான செய்திக்குப் பின், ஸ்வர்ணலதாவின் பெயரை இணையத்தில் தேடிய சில அன்பர்கள் ஸ்வர்ணலதா என்றொரு குயில்குரலி என்ற இந்தக் கட்டுரையைப் படித்திருந்தார்கள்.

நல்லதொரு பாடகிக்கு என்னாலானதைச் செய்ய இயன்றதே என்ற எண்ணம் தரும் திருப்தி போதுமானதாக இல்லை, மனதுக்குள் நேற்று முதல் என்னையறியாமல் கேட்டுக் கொண்டேயிருக்கும் இந்தப் பாடலின் காரணமாக! :(

Read more...

  ©Template by Dicas Blogger.

TOPO