Tuesday, August 25, 2009

அரிப்பெடுத்தலும், ஆகாசமளத்தலும்!

காதலைப் பிடிக்கவே பிடிக்காத என் அறைத்தோழரும், மாமாவும் ஆனவரின் உறவினன் ஒருவன் காதலித்துத் திருமணம் செய்து கொண்டான். வழக்கம் போலவே வடசென்னை வார்த்தைகள் மாமாவின் வாயிலிருந்து அள்ளி வழங்கப் பெற்றுக் கொண்டிருக்கையில், இருவர் வீட்டிலும் காதலுக்கு ஒப்புக் கொண்டிருந்ததாகவும், அந்தப் பையனின் தங்கை திருமணம் முடிந்த பின், ஊரழைத்து செய்விப்பதாகவும் கூறியிருந்த நிலையில், இவன் இப்படித் திருமணம் செய்து கொண்டு வந்து நின்றதில் கோபம் உச்சாணிக்கேறியிருந்தது.

"சரி விடுங்க மாமா.. பாவம் அவனுக்கென்ன கஸ்டமோ" என்று என் வேதாந்தம் பல்லிளிக்கையில், சினத்துடன், "அவனுக்கு அரிப்புடா வேறென்ன.." என்றது மாமா. மாமாவின் அந்தவொரு சொல்லாடல் எனக்கு பல்வேறு சிந்தனைகளைத் தந்தது. காமத்தை அரிப்புடன் ஒப்பிடும் நுண் வர்ணனை இதுவரை சாத்தியப்பட்டிராத பரிமாணங்களை வெளிச்சப்படுத்தியது.

காமம், அரிப்பு என்ற வேறுபட்ட இரு ஊக்கிகளுக்கான இணை புள்ளிகளை இதுவரை யாரேனும் பதிவு செய்துள்ளனரா தெரியவில்லை. அந்தரங்க உறுப்பில் ஏற்படும் அரிப்புதனை, எதிர் பாலுறுப்பில் தேய்த்து ஆற்றிக் கொள்ளும் ஆழரசியல் இவ்வகை சொல்லாடல்களினூடே ஒளித்து வைக்கப்பட்டுள்ளதோ.

போலவே அரிப்பெடுத்தலின் போது நாமாற்றும் எதிர் வினைகள் போன்றே காமத்தின் ஆரம்பம் முதல் உச்சம் வரையிலான செயற்பாடுகளும் அமைந்திருத்தல் ஆச்சரியமளிக்கிறது. யோசித்துப் பாருங்களேன். காமத்தின் படிநிலைகள் விரலில் துவங்கி, உதடு வழியே, உறுப்புகளில் முடிவடைகின்றன. ஒவ்வொரு நிலையிலும் கருவிகள் யாதாயினும், அசைவுகள் சொறிதலைப் போன்ற இயக்கத்தையே கொண்டிருக்கின்றன.

காமம், அரிப்பு இரண்டுக்குமே தோல்தான் களமாகிறது. தோல் மீதான, தோலின் வேட்கையே அரிப்புக்கும், காமத்துக்குமான மூலாதாரம்.

ஊர்ப்பக்கம் ஆட்டுக்கு முதுகரிக்கையில், சுவரில் சென்று தேய்த்திருத்தலைக் கண்டிருப்போம். அதேபோல பாலுறுப்புகளில் அரிப்பாக ஊரும் ஏதோ ஒன்றும், சொறிதலை அல்லது அதை ஒத்தவொரு தேய்த்தலை எதிர்நோக்கி நம்மை உந்தித் தள்ளுதலே நம்மினம் நிலைத்திருப்பதற்கு ஊற்றுச்சுனையாகிறது.

உடல் முழுதும் முத்தமிடலாம்தான் என்றாலும், காதுமடல் எப்படி சில்லிட்டு சிலிர்க்க வைக்கும் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்களோ (எனக்குத் தெரியாது!), அதே போல, நடுமுதுகில் பயன்படுத்தப்படும் சீப்பும் சற்று அதிகப்படியான சுகத்தைத் தருகிறதே.

'சொறிய சொறிய சொகந்தான்..', 'சொறுஞ்சுட்டவங் கை சும்மாருக்காது..' என்று கொங்கு நாட்டில் சில சொலவடைகள் உண்டு. இவைகளை ஆராய்ந்தால் இன்னொரு கட்டுரை எழுதலாம் போலிருக்கிறது!

இங்கே ஒற்றுமைகளை நிறுத்திவிட்டு இந்தவிரு விஷயங்களுக்கான சில வேறுபாடுகளைப் பார்ப்போம்.

சுகத்தை மனதிற் கொண்டு சொறிதல் நிகழ்வதில்லை. ஆனால் வெளித்தூண்டி அல்லது வேதியூக்கி ஒன்றின் விளைவாய் துவங்கும் சொறிதல் சுகத்தையும் தந்து செல்கிறது. மறுபுறம் காமத்திலோ அதன் பிரதான காரணியான இனவிருத்தியைக் காட்டிலும் சுகித்திருத்தலே கிளர்ச்சியினை ஊக்குவிக்கிறது. இன்பத்தேடலே காமத்தின் ஆதாரப்புள்ளியாகிறது.

அரிப்பு ஓரிடத்தில் ஏற்படுகையில், உதவிக்கு வரும் விரல்களுக்கு எந்த இன்பமும் இல்லை. ஆனால் காமத்தில் இந்த ஏற்பாடு இருந்திருந்தால், அதாகப்பட்டது ஒரு பாலருக்கு மட்டும் சுகமென்றாகியிருந்தால் மானுடத்தின் சம நிலைக்கே பங்கம் வந்திருக்குமல்லவா!

எப்போதோ படித்ததன்படி, மனிதனுக்கடுத்து, இன்பம் பெறும் நோக்கோடு துணையோடு கலவும் ஒரேயொரு இனம் டால்ஃபின். டால்ஃபின்களுக்கு அரிப்பு ஏற்பட்டால் சொறிகையில் அதுவும் நம்மைப் போலவே இன்பத்தையும் பெறுகிறதா இல்லை தோலின் மேலான வேதிவினையோடு நின்று விடுகிறதா தெரியவில்லை.

எனக்குத் தெரிந்த வேற்றுமைகள் அவ்வளவே.

பெண்பாலரின் அதி உணர்வு குவிமையமான க்ளிட்டோரிஸில் பீறிட்டு வழிவது அரிப்பா, காமமா என்று ஒருகணம் யோசித்தல் என் பார்வையின் பிம்பத்துக்கு முழுமையாய் உங்களைக் கூட்டிச் செல்லலாம். தேய்ப்புகளால் திமிறியெழும் உணர்வுகளைச் சொல்ல க்ளிட்டோரிஸை விட தோதானதொரு உதாரணம் இருக்க முடியாது. உறவின் போது பெண்ணின் இந்த விடை தெரியாத் தவிப்புக்கு வினையாற்றுதலே ஆணின் தலையாய கடனாகிறது.

இந்த சிந்தனைகளுக்குப் பின்பெல்லாம், கொசுக்கடித்து லேசாய் தடித்து, சிவந்தாலும் க்ளிட்டோரிஸின் ஞாபகம் வந்து தொலைக்கிறது எனக்கு!



3 மறுமொழிகள்:

Anonymous,  August 25, 2009 at 11:23 AM  

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

நிகழ்காலத்தில்... August 25, 2009 at 9:46 PM  

அதிகமான காம உணர்வை, அல்லது பருவ வயதுக்கு முந்தய காமத்தை அரிப்பு என்பது கோவை வழக்கு,

மதன் August 25, 2009 at 11:06 PM  

நானும் கோவைதான். ஆனால் புழக்கத்தில் இதைக் கேட்டதில்லை. சென்னையை வட்டார மொழி பேசும் ஒருவர் சொல்லித்தான் கேட்டேன்.

  ©Template by Dicas Blogger.

TOPO