Monday, April 5, 2010

அங்காடித் தெரு - தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

என்னுடைய முந்தைய கட்டுரையில் நான் கொஞ்சமாய் பதிவு செய்திருந்த ‘தரமான திரைப்படங்கள் நம் புறத்தே உருவாகாமலிருப்பதற்கான’ என் ஆதங்கத்திற்குக் கிடைத்த ஒரு பதிலாகவே நான் அங்காடித் தெரு-வைக் கண்ணுறுகிறேன்.

இந்தப் படத்தின் தொழில்நுட்ப அம்சங்களைப் பற்றியோ, பின்னணி இசையின் தரம் பற்றியோ, கதையின் நேர்த்தி பற்றியோ, நேர் மற்றும் எதிர் மறையான இன்னபிற எந்தக் காரணிகளையுமோ அலசிக், கொடியில் தொங்கப் போடுவது என் நோக்கமல்ல.

அன்றி, வணிகக் கட்டுப்பாடுகளின் கொடுங்கரங்கள் இயக்குனரின் குரல்வளையை இறுகப் பற்றிக் கொண்டிருக்க, கத்தரியைக் கூர் தீட்டிக் கொண்டு சென்சாரார்கள் கண்ணில் விட விளக்கெண்ணெய் தேட, அரசியல்வாதிகளும், மதவாதிகளும் வக்கீல் நோட்டீஸ் அச்சடிக்க ஆளுக்கொரு பிரசுரம் வைத்திருக்க..

நீளும் இப்பட்டியலின் வேலிகளைத் தாண்டி தரமான, யதார்த்தமான, சமகால வாழ்வின் கரும் பக்கங்களைப் பதிவு செய்து வைக்கும் வகையில் படமெடுக்கும் திறனுள்ள, தைரியமுள்ள படைப்பாளிகள் ஊக்குவிக்கப் படவேண்டும் என்றால், தமிழ் சினிமாவின் ரசிகப் பெருமக்களான நாமனைவரும் தயவுசெய்து திரையரங்குக்குச் சென்று அங்காடித் தெரு-வைப் பார்க்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்துதான் இந்தப் பதிவு.

பனி பொழியும் பின்னிரவுகளில் ஏதேனுமொரு மேலை நாட்டுத் திரைப்படம் முடிந்து மனம் அழுந்தி, கனக்கும் சமயத்தில், ஏன் நம் பிரதேசத்தில் இவை போன்ற படங்கள் உருவாவதில்லை என்ற எண்ணம் மேலோங்கி நிற்பதை எத்தனையோ முறை உணர்ந்துள்ளேன். ஒருவாறு ஆற்றிக் கொண்டு சென்னையின் மேன்ஷன்களில் தூங்காமல் ஓரிரு அசிஸ்டண்ட் டைரக்டர்களேனும் என்னைப் போலவே நினைத்துக் கொண்டிருக்க மாட்டார்களா என்று அவர்கள் மேல் பாரத்தைப் போட்டுவிட்டுத் தூங்கப் போய் விடுவேன்.

வணிகப் படங்கள் கெட்ட படங்கள்.. புதுமையான படங்கள்தான் நல்ல படங்கள்.. என்ற கருத்தை நோக்கி உங்களைத் தள்ளுவது என் பணியல்ல. உங்களுடைய சுயவிருப்பில் என் மூக்கு நுழைவது எனக்கு உவப்பானதுமல்ல. அவரவர்களுக்கு எதெது வேண்டுமென்பதைத் தெரிவு செய்வது அவரவர் விருப்பமேயொழிய எவரும், யாரையும் கட்டுப்படுத்தத் தேவையில்லை.

ஆனால் நான் கேட்பது இதுதான். இது மட்டுந்தான். வேட்டைக்காரனையும், ஆதவனையும், அவனையும், இவனையும் எப்படி உளம் நிறைந்த உவகையுடன் திரையரங்குக்குச் சென்று பார்க்கிறீர்களோ.. அதே போன்றதொரு அங்கீகாரத்தை அங்காடித் தெரு-வுக்கும் நீங்கள் வழங்க வேண்டும். இதைச் செய்யத் துவங்கினீர்களானால், வணிகப் படங்களுக்குக் கிடைக்கும் பொருளாதார ஆதரவுகள், மாற்று சினிமா உருவாக்கத்துக்கும் எளிதில் கிடைக்கும் சூழல் உருவாக ஏதுவாக இருக்கும்.

இங்கே நான் இன்னொரு விஷயத்தையும் தெளிவுபடுத்தியாக வேண்டும். நான் சிலாகித்துக் கொண்டிருக்கும் அங்காடித் தெரு என்ற இத்திரைப்படம் உங்களுக்குப் பிடிக்காமலும் போகலாம். அதனால் என்ன.. போகட்டுமே. ஒரு பரிசோதனை முயற்சியின் விளைவுகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாமல்லவா. அது தோல்வியாகவே இருப்பினும், அடுத்த எட்டிலாவது வெற்றி என்ற இலக்கை எட்டிப் பிடிக்க குறிப்பிட்ட அந்தப் படைப்பாளிக்கு நீங்கள் செலவு செய்யும் பணம் சிறிதளவேனும் உதவி செய்யும்.

இந்தப் படத்தில் குறையே இல்லையென்றோ, 100 சதம் எனக்கிந்தப் படம் பிடித்தது என்றோ நான் கூறவில்லை. இவ்வகையான படங்களை, பொழுதுபோக்கு அம்சங்களைக் கருத்தில் கொள்ளாமல் நாம் அங்கீகரிக்கத் துவங்கும் புள்ளியில்தான், வித்தியாசமான முயற்சிகளுக்கு முதல் போட்டாலும், போட்ட காசு வரும் என்ற நம்பிகையை தயாரிப்பாளருக்குள் முளைவிடச் செய்யும் விதைப்புள்ளியாக இருக்கும்.

ஏதோ தமிழ் திரையுலகத் தயாரிப்பாளர்களிடம் காசே இல்லாதது போல், இந்தப் படம் ஒன்றரை ஆண்டுகள் வெளியாகாமல் இருந்ததும், இந்தக் காலகட்டத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடி, கோடிகளைக் குவித்த so called மசாலாப் படங்களும் நம் சினிமா ரசனைக்கு சான்றுகள்! உங்களுக்கெப்படியோ தெரியவில்லை. எனக்கு வெட்கமாக இருக்கிறது.

இதை உலக சினிமா ரசிகனாக சொல்லவில்லை. வசந்தபாலனின் அடுத்த திரைப்படத்தை, இன்னும் ஆவலுடன் (அவரது இயக்கத்துக்காகவா, இல்லை அடுத்த படத்தையாவது பெட்டிக்குள் முடக்காமல் வெளியிட மாட்டார்களாவென்ற ஏக்கத்துக்காகவா என்று தெரியாமலே) எதிர்பார்க்கத் துவங்கியிருக்கும் ஒரு சராசரி தமிழ் சினிமா ரசிகனாக சொல்லிக் கொள்கிறேன்.

குறிப்பு: தமிழ் சினிமாவின் தரம், கலைப்படம், வணிகப்படம் போன்றவை குறித்தான சில வீடியோக்கள் பகிர்தலுக்காக:

http://www.youtube.com/watch?v=XRTFdAxGW6g
http://www.youtube.com/watch?v=WswDvFJqjvA
http://www.youtube.com/watch?v=VyYYAyzbhKs



3 மறுமொழிகள்:

நேசமித்ரன் April 5, 2010 at 9:37 PM  

மதன்

உங்கள் வேண்டுகோளின் முன் நிறுத்த தாங்கள் எடுத்துக் கொண்டிருக்கும்
காரணிகளில் எனக்கும் ஒப்புதலுண்டு

மிக்க நன்றி

மதன் April 7, 2010 at 2:14 AM  

நன்றி நேஸ்! :)

Gurusamy Thangavel April 7, 2010 at 8:59 AM  

நானும் உங்களை வழிமொழிகிறேன்.

  ©Template by Dicas Blogger.

TOPO