Tuesday, March 2, 2010

மனம் பிறழ்ந்தவனின் நாட்குறிப்புகள் - 02/03/2010

ஹேராம் படத்தில் ஒரு காட்சி. காந்தியடிகளைக் கொல்ல வேண்டுமென்ற எண்ணத்துடன் டெல்லிக்கு வரும் சாகேத்ராமன் ஹோட்டல் ஒன்றின் அறையை வாடகைக்கு எடுக்கச் செல்வான். அப்போது அந்த ஹோட்டலின் வரவேற்பாளர் அவன் பெயரைக் கேட்பார். தன் பெயரை பைரவ் என்று பொய் சொல்லும் சாகேத்ராமன், பின் திடீரென K.பைரவ் என்று மாற்றிச் சொல்வான்.

ஒருநாள் எதற்காகவோ டூ வீலரில் சென்று கொண்டிருந்தேன். மாலை நேரம். Typical Bangalore Traffic. திடீரென்று என் மண்டைக்குள் ஒரு பல்பெரிந்தது. சாகேத்ராமன், பைரவ் என்று சொன்னதை, K.பைரவ் என்று ஏன் மாற்றிச் சொன்னான் என்று!

கேளுங்களேன்.. K.பைரவ் என்றால் கால பைரவ். கெட்டவர்களைக் கூறு போட வந்த கால பைரவன்!

'காந்தியடிகளின் மேல் சாகேத்ராமனுக்கு இருந்த கோபத்தை எத்தனை சூசகமாக சொல்லியிருக்கிறார் கமல்' என்று ஆச்சர்யப்படுபவர்கள், இத்தனை நுணுக்கமான விஷயம் எத்தனையோ நாட்கள் கழித்து, சம்பந்தமேயில்லாத சமயத்தில் எனக்குப் புரிந்தது எப்படி என்றும் கொஞ்சம் ஆச்சரியப்படுங்கள்.

ஹேராம் பற்றிய என் மற்றொரு பதிவு

-0-

ஒரு பொன்மொழி!

சாலையில் வேகத்தடைகள் எப்படி அதிகப்படியான வேகத்தைக் குறைத்து விபத்தில்லாத பயணத்திற்கு உதவுகின்றனவோ அப்படித்தான் வாழ்வில் பிரச்சினைகளும். கொஞ்சம் நிதானப்படுத்தி, துவண்டு போகாமல் யோசித்து பிரச்சினைகளைக் கடந்து செல்லச் செல்லத்தான் வாழ்வின் பயணமும் வசந்தப்படும்.

எதிர்காலத்தில் எட்டாம் வகுப்புப் பிள்ளைகள் சமூக அறிவியல் புத்தகத்தில் படிக்கப்போகும் மேற்கண்ட பொன்மொழியைச் சொன்ன மகானுபாவர் யாரென்று உங்களுக்கு இன்னுமா புரியவில்லை?

வேற யாரு.. சாக்ஷாத் அடியேன்தான்.

-0-

வாரக்கடைசிகளின் பின்னிரவு நேரங்களில் All Time Great ஹாலிவுட் படங்களில் ஏதேனும் ஒன்றினைப் பார்ப்பதன் அலாதியே தனி. நான் தண்ணியடிப்பதில்லை என்பதால் உருளைக்கிழங்கு சிப்ஸும், அப்பா வாங்கிக் கொடுத்தனுப்பிய லாலா ஸ்வீட்ஸ் ஜிலேபியும் உடனிருத்தல் நலம்.

நேற்றிரவு Rob Reiner இயக்கத்தில் 1992ஆம் ஆண்டு வெளிவந்த A Few Good Men பார்த்தேன். என்னதான் படத்தின் ஹீரோ Tom Cruise என்றாலும், 15 நிமிடமே வரும் நம்ம தல Jack Nicholson-னின் நடிப்பு தான் ஹைலைட்டே. அட்டகாசமான நீதிமன்றக் காட்சிகளின் போதெல்லாம் படு Sharp வசனங்களில் கொள்ளை கொள்கிறார்கள் Tomஉம், Jackஉம்.

அத்தனை பெரிய நடிகர் Jack Nicholson கிளைமாக்சில் Tom-மிடம் தோற்று, அவமானப்பட்டு வெளியேறும் காட்சியில் எப்படி நடிக்க ஒத்துக் கொண்டார் என்று தோன்றியது எனக்கு. என்ன செய்ய? எல்லாம் நம் படங்களின் தாக்கம்தான்!

-0-

இந்த வலைத்தளத்தை ஆரம்பிக்கையில் இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தபோது, "பலப்பம்" என்ற பெயரையும் யோசித்தேன். 'எழுதிப் பழகுவதற்கு' என்ற அர்த்தத்தில். ஆனால் வேறு சில காரணங்களால் அந்தப் பெயரை வைக்கவில்லை.


ஏன் சொல்கிறேன் என்றால், எழுதிப் பழகும் என் அபிப்ராயம், கவிதைகளின் மீதான ஆவலாலும், நேரமின்மையாலும், கவிதைகளுடனேயே நின்று விட்டது. எழுத்தின் பழக்கத்தை மீண்டும் கொணரவும், மன ரஞ்சகமான எழுத்துடன், சற்று ஜன ரஞ்சகமாகவும் எழுத ஒரு முயற்சிதான் இந்த மனம் பிறழ்ந்தவனின் நாட்குறிப்புகள்!

சரி. அதற்கு ஏன் 'மனம் பிறழ்ந்தவனின் நாட்குறிப்புகள்' என்று பெயர் வைத்தேன் என்று கேட்கிறீர்களா? அட என்னங்க நீங்க.. இலக்கியவாதினா அப்படித்தான் பேர் வெப்பான். இது கூடவா தெரியாது உங்களுக்கு.. என்னமோ போங்க!



4 மறுமொழிகள்:

Ashok D March 2, 2010 at 10:12 AM  

hello தலைப்பு எனதுங்கண்ணா :)

நல்லாயிருந்தது நாட்குறிப்பு.. K.bairav :)

Balakumar Vijayaraman March 2, 2010 at 4:45 PM  

நாட்குறிப்பு நல்லா இருக்கு.

மதன் March 2, 2010 at 9:51 PM  

@அஷோக் -

தலைப்பு உங்களுடையதா? சாரி அஷோக். இதனால ரெண்டு உண்மைகள் புலனாகுது.

1. நான் நிறைய வாசிக்கறதில்ல.

அப்றம் ரொம்ப முக்கியமா..
2. நீங்க யோசிச்ச தலைப்ப நானும் வெச்சுட்டதால நானும் இலக்கியவாதி ஆகிட்டேன்.

கரெக்டா? :)

நன்றி நந்தா.

நன்றிங்க பாலகுமார்.

Ashok D March 3, 2010 at 12:17 PM  

அஸ்கு புஸ்கு நான் இலக்கியவாதி கிடையாதே :)

  ©Template by Dicas Blogger.

TOPO