Friday, February 6, 2009

என் கவிதைகள் கையாலாகாதவை

என் கவிதைகள் கையாலாகாதவை.
முனையில் துருவேறிய குண்டூசிகள் போன்றவை.
சக்திவிரயம் என்று சொன்னாலும்
சுயமைதுனத்திலும் சுகமிருக்கும்.
என் கவிதைளால்
கண்ட சுகம் ஈதென்று எதுவுமில்லை.
எழுதி என்னத்தைக் கிழித்தேன் என்று
கவிதைக்கு வார்த்தை தேடிய வழிகளிலெல்லாம்
தேடிப்பார்த்தும் விளங்கவில்லை.
மிதித்த மலம் மட்டுமே மிச்சமாகிறது.
நேசித்த மரத்தோழிகள் கற்பழிகையில்,
உட்கார்ந்து கவிதையெழுதும் நானொரு நாயேன்.
மற்றும் என் கவிதைகள் கையாலாகாதவை.
தோழிக்குப் பருத்த இரு முலைகளில்லைதான்.
இருந்த ஒற்றை உயிரும்
இருந்தவாறே எரியிலேற,
மரத்த நேயம் தலைக்குள் திரண்டு பாரம் மிக,
ஒன்றுக்கும் ஆகாத இந்தக் கவிதையால்
ஆகப் போவது ஒன்றுமில்லை.
ஆம். என் கவிதைகள் கையாலாகாதவை.

பெங்களூர் Outer Ring Road மற்றும் பல பகுதிகளிலும் சாலை விரிவாக்கத்தின் பொருட்டு இருபுறமும், உயிரோடு எரிக்கப்படும் சில நூறு மரங்களுக்காக.



25 மறுமொழிகள்:

பாண்டித்துரை February 6, 2009 at 6:44 AM  

கவிதை நல்லா இருக்குனு சொல்லமுடியலை. கடைசியில் கவிதைக்கான குறிப்பை படித்ததும்.
எழுதும் பெரும்பாலோருக்குள் இப்படித்தான் தோன்றும். என் தற்போதைய சிந்தனை கூட உங்களின் கவிதையின் தலைப்பைஒட்டித்தான் இருதுகொண்டிருக்கிறது. அலுவலகத்தில் நான் மட்டும் இருப்பதால் கொஞ்சம் சுயாதினமாக சிந்திக்கவும் முடிகிறது.

ஆதவா February 6, 2009 at 7:47 AM  

கவிதை பரவாயில்லீங்க..

சுயமைதுனம்னா என்னங்க?

மதன் February 6, 2009 at 9:12 AM  

வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி பாண்டித்துரை. இரண்டு விளக்கங்கள் உங்களுக்கு. முதலாவது.. நன்றாக இருக்கு என்று சொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் இக்கவிதையை மட்டுமல்ல. நான் பொதுவாக எதையுமே எழுதுவதில்லை. இப்படி நினைத்து நான் எழுதி, ஒருவேளை ஒருவர் நன்றாக இல்லையென்று சொன்னால், அது என்னைத் துவளச் செய்யும். ஆகவே அப்படி நினைக்காமல் எழுதிவிட்டு, எவரேனும் பிடிக்கவில்லை என்றால், அடுத்த முறை நன்றாக எழுத முயல வேண்டும் என்றெண்ணிக் கொள்வேன். எழுத்தும் கூராகும். உளைச்சலும் இல்லை. :)

இரண்டாவது.. கவிதையெழுதி என்னால் இங்கு எதையும் நகர்த்திவிட இயலாது என்பதால், என் மீதும், என் கவிதை மீதும் எனக்கு வந்த கோபத்தை எழுத்தில் வடிக்கவே உத்தேசித்திருந்ததால், இந்தத் தலைப்பு சரியானதாகத் தோன்றிற்று. வேறு எவர் அல்லது எதன் மீதும் கோபத்தைக் காட்ட எண்ணவில்லை. வெறும் கவிதைக்காக இல்லை.. மரங்களின் மீதான என் நேசம் சற்று அபரிமிதமானது. அதன் வெளிப்பாடுதான். வேறொன்றுமில்லை. :)

@ஆதவா,

தங்கள் கருத்துக்கு நன்றி. சபையறிய சுயமைதுனம் என்றால் என்ன என்று ஒரு பதிவர் கேட்பது நம்பத்தகுந்ததாக இல்லை. Google இட்டுப் பாருங்களேன். :)

முரளிகண்ணன் February 7, 2009 at 3:41 PM  

உங்கள் கவிதைகள் நன்றாய் இருக்கின்றன

மதன் February 7, 2009 at 7:07 PM  

பாராட்டுக்கு நன்றிகள் முரளிகண்ணன்..!

கவிக்கிழவன் February 8, 2009 at 1:56 AM  

நன்றாக உள்ளது உங்கள் படைப்புக்கள். வித்தியாசமான சிந்தனை. சிறந்த படைப்புக்களில் உங்களது படைப்பும் ஒன்று. உங்களை மனமாற வாழ்த்துகின்றேன்........ இலங்கையிலிருந்து

மதன் February 8, 2009 at 7:41 AM  

வாழ்த்துதலுக்கு நன்றி கவிக்கிழவன்.

பாண்டித்துரை February 9, 2009 at 8:47 AM  

//கவிதை நல்லா இருக்குனு சொல்லமுடியலை. ///

மதன் இதை எந்த விதத்தில் நீங்கள் அர்த்தப்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள் என்பது எனக்கு தெரியாது.

ஒரு கவிதையை படித்ததும் கிடைக்கின்ற ஆழமான வெளிப்பாடு அல்லது அந்த கவிதையால் வாசகனுக்கு ஏற்படக்கூடிய தாக்கம் கவிதையை நன்றாக இருக்கிறது என்று சொல்லவிடுவதில்லை. அதைதான் நான் அப்படி குறிப்பிட்டது.

ஆரம்பத்தில் நான் கவிதை எழுதும்போது நன்றாக இருக்குனு யாரு சொன்னா எங்க இன்னொருமுறை சொல்லுங்கனு கேட்கதோன்றும். ஆனா என் நண்பர் அரவிந்தன் என் கவிதைகள் மீது வைக்ககூடிய விமர்சினம் (ரொம்ப கேவலாமால இருக்கும்க) என்னை ஓரளவிற்கு மாற்றக எழுத சிந்திக்க வைத்துள்ளது

///
கவிதையெழுதி என்னால் இங்கு எதையும் நகர்த்திவிட இயலாது என்பதால், என் மீதும், என் கவிதை மீதும் எனக்கு வந்த கோபத்தை எழுத்தில் வடிக்கவே உத்தேசித்திருந்ததால், //


இந்த செய்தி என்னுள்ளும் ஒத்துப்போகிறது. பல நேரங்களில் பேச முடியாமல் மௌனிக்கும்போது எழுதிவிடுகிறேன்

பாண்டித்துரை February 9, 2009 at 8:49 AM  

//நன்றாக இருக்கு என்று சொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் இக்கவிதையை மட்டுமல்ல. நான் பொதுவாக எதையுமே எழுதுவதில்லை.///

எனது குட்டி தேவதை கவிதைக்கு பிறகு நானும்தாங்க

குட்டிதேவதை கவிதை எனது வலைப்பக்கத்தில் உள்ளது

பாண்டித்துரை February 9, 2009 at 8:52 AM  

///ஆதவா said...
கவிதை பரவாயில்லீங்க..

சுயமைதுனம்னா என்னங்க?
///

அய்யப்பமாதவன் ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.
இப்ப கைவசம் இல்லை தேடி தட்டிவிடுகிறேன்

மதன் February 9, 2009 at 11:29 AM  

@பாண்டித்துரை - ஆழமான தாக்கம் ஏற்பட்டது என்பது மகிழ்வு தரும் செய்தி. தங்களின் முந்தைய பின்னூட்டம் தலைப்புக்கும், கவிதைக்கும் இன்னும் சற்று பொருத்தம் இருந்திருக்கலாம் என்று கூறுவதைப் போலவும் ஒரு பாவத்தை ஏற்படுத்தியதால் குழப்பம் நேர்ந்துவிட்டது. :)

குட்டி தேவதை கவிதையின் லிங்க் இருந்தால் தாருங்களேன். தங்கள் வலைப்பக்கத்தில் தேடினேன். கண்டுபிடிக்க முடியவில்லை. :) அப்படியே அய்யப்பமாதவன் கவிதையையும் தேடிப் பாருங்கள்..!

பாண்டித்துரை February 9, 2009 at 2:00 PM  

//அப்படியே அய்யப்பமாதவன் கவிதையையும் தேடிப் பாருங்கள்///


சுயஇன்பம் - அய்யப்பமாதவன்

மூளையில்
ஒரு சொல் இவளைப் போல துன்புறுத்துகிறது
ரத்தம் கரையும் இவனுடல் நடக்கத் திராணியற்று
சுவர்களுக்குள் சுவராக
உடல் காட்டி முகம் காட்டி
மறைத்தவளின் பிம்பத்தை
நினைத்து நினைத்துப் புணர்கிறான்
தனித்த காமத்தின் மூச்சிரைத்து சரிகிறான்
இவள் ஒரு அழகுணர்ச்சி ததும்பும் தேவதை
புன்னகைத்து இவன் மதிக்குள் இறங்குகிறாள்
இவனுக்குள் ஆடை கலைந்து
மயக்கும் பார்வைகளை வீசுகிறாள்
கைகளில் முத்தமிட்டு இதழ்களைக் கவ்வி
பேரின்ப உலகைத் திறக்கிறாள்
இவள் முலைகள் பெரும் மலைகளாய் விரிகின்றன
இவள் யோனி பெரும் சுரங்கமாய் நீள்கிறது
உட்சென்று உட்சென்று
இன்பத்தின் கடைசிவரை செல்கிறான்
இவன் இவளாகி இவள் இவனாகி
துர்பாக்கியம்

பாண்டித்துரை February 9, 2009 at 2:04 PM  

குட்டிதேவதை

http://pandiidurai.wordpress.com/2007/05/01/7/

இந்த கவிதை ஒரு அற்புதமான கவிதை என்று சொல்லிவிடமுடியாது ஆனால் இந்த கவிதைதான் எனக்கு கவிதையை உணர்த்தியது. இதற்கு பின்னர்தான் எனது கவிதைகளில் நிறைய மாற்றம் ஏற்பட்டது. அதனாலே இந்தகவிதை மீது அலாதி ப்ரியம் எனக்கு

பாண்டித்துரை February 9, 2009 at 2:06 PM  

//தங்களின் முந்தைய பின்னூட்டம் தலைப்புக்கும், கவிதைக்கும் இன்னும் சற்று பொருத்தம் இருந்திருக்கலாம் என்று கூறுவதைப் போலவும் //

நான் அங்கு சொல்ல நினைத்ததை முழுமையாக சொல்லவில்லை என்பது உங்களின் பின்னூட்டத்திற்கு பின்பே உணர்ந்தது. நீங்கள் சொன்னதிலும் தவறொன்றும் இல்லை

மதன் February 9, 2009 at 2:30 PM  

கவிதைக்கும், நிரலுக்கும் நன்றி பாண்டித்துரை. நண்பர் ஆதவா கேட்ட பதில் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.

ஜீவா February 11, 2009 at 12:06 PM  

உங்க பதிவு விகடனில் பிரசுரமாகியுள்ளது

http://youthful.vikatan.com/youth/bcorner.asp

வாழ்த்துக்கள்

மதன் February 11, 2009 at 6:30 PM  

தகவலுக்கு நன்றி ஜீவா.. நானும் நீங்கள் கொடுத்த லிங்க்கை முன்பே பார்த்தேன். ஆனால் இந்த யூத்ஃபுல் விகடன் அச்சில் வருகிறதா இல்லை இணைய இதழா? தற்சமயம் பெங்களூரில் இருப்பதால் என்னால் மேலதிக தகவல்கள் பெற முடியவில்லை.

உயிரோடை February 13, 2009 at 2:56 AM  

நல்ல கவிதை. பதைக்கிறது மனம். மனிதன் வசதிக்காக எதை இழந்து கொண்டி இருக்கிறோம் என்றே தெரியாமல் இயற்கையை அழித்துக் கொண்டு இருக்கின்றோம். மரத்தையும் தோழியாக பார்க்கும் உங்கள் மனித நேயம் பிடித்து இருக்கின்றது.

மதன் February 13, 2009 at 2:59 AM  

நன்றி மின்னல்..! :)

jagan February 13, 2009 at 3:35 PM  

Good Stuff da, enna padikiradhukku thaan konjam time aayiduchu !

மதன் February 15, 2009 at 10:22 AM  

வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி வண்ணத்துபூச்சியார்!

ச.முத்துவேல் February 19, 2009 at 6:39 PM  

நல்ல கவிதை.சில விடயங்களில் நமது இயலாமைகளை இப்படி உண்ர்வெழுச்சிகளாக்கிகொள்கிறோம். (அந்த வகையிலாவது இலக்கியம் படிப்பதை மற்றவர்களிடத்தில் நியாயப்படுத்தலாம்.)இக்கவிதையை நான் இன்றைய இலங்கைச் சூழலுக்கு கற்பித்து படித்துக்கொண்டு போனேன்.பொருத்தமாகவும், நன்றாகவும் இருந்தது.ஆனால்,கடைசியில் நீங்கள் இக்கவிதையின் பின்னணியை சொல்லிவிட்டீர்கள்.தோழமையோடு ஒன்று சொல்ல விரும்புகிறேன். கவிதை, அது தரும் பன்முகத்தன்மையை, அதன் வழி விட்டுவிடலாம்.
மரங்களின் மீதான நேசத்தை பதிவு செய்ததும் நல்லதுதான்.

மதன் February 19, 2009 at 11:10 PM  

இலங்கைப் பிரச்சினையுடன் இதை ஒப்பிடும் கருத்தை நான் முன்பே எதிர்பார்த்தேன் முத்துவேல். நீங்கள்தான் சொல்லியிருக்கிறீர்கள். எழுத ஆரம்பித்தது மரங்களுக்காகத்தான். பாதியில் தோன்றியது.. இலங்கையும் உள்ளே வருகிறாற் போரிடுக்கிறதே என்று.

கவிதை தரும் பன்முகத்தன்மை பற்றி நீங்கள் சொன்னதை நான் மறுக்கவே முடியாது. முன்பே நான் கூறியவாறு, மரங்களின் மீதான என் நேசமும், தினமும் கண் கொண்டு காண முடியாத கொடுமையும் என்னை அக்குறிப்பை எழுத வைத்துவிட்டன.

  ©Template by Dicas Blogger.

TOPO