Showing posts with label வார்த்தை விளையாடாமை. Show all posts
Showing posts with label வார்த்தை விளையாடாமை. Show all posts

Wednesday, September 22, 2010

வார்த்தை விளையாடாமை - 5

காதலி.. என்றழைத்தேன்.

பெயர்ச்சொல்லா..
வினைச்சொல்லா.. என்றாள்.

இரண்டும்.. என்றேன்.

பின்னொரு சமயம்
காதலா.. என்றழைத்தாள்.

நானும்
பெயர்ச்சொல்லா..
வினைச்சொல்லா.. என்றேன்.

அசடு.. இதிலென்ன சந்தேகம்..
என்று சிரித்தாள்..

என்ன செய்ய?
மொழி கூட
அவள் பக்கம்தான்.

Read more...

Thursday, July 22, 2010

வார்த்தை விளையாடாமை - 4

தொலைபேசிக் கொண்டிருந்தேன்
அவளுடன்

அவள் பேசுவதையெல்லாம்
அவளின் துடுக்குத் தோழி
அவளைப் போலவே
திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பது
எனக்கும் கேட்டது

திரும்பச் சொல்ல முடியாதபடி
'என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ'
என்று சொல்லச் சொன்னேன்

எவளிடமும் அவள்
தோற்கக் கூடாது
என்ற ஆணவத்தில்

தோழி சொல்ல முடியாதபடி
எதுவுமே சொல்லவில்லை அவள்

எவரிடமும் என்னைத்
தோற்கக் கூடாது
என்ற அன்பில்..

Read more...

Tuesday, February 23, 2010

வார்த்தை விளையாடாமை - III

கண்ணே கத பேசுதே
என்றேன்.
என் மிகையின் எள்ளலை
அறிந்து கொண்டவள்
நான் கவிஞன் என்பதால்
இல்லாதவற்றையெல்லாம்
இருப்பதாகக் கூறுவதாகக்
குற்றம் சாட்டினாள்.
இல்லாதவற்றையெல்லாம்
இருப்பதாகக் கூறினாலும்,
இருப்பதை இருப்பதாகக்
கூற இயலாத
குற்றத்தை
ஒப்புக் கொண்டு விட்டேன்.



வார்த்தை விளையாடாமை - II

Read more...

Thursday, December 3, 2009

வார்த்தை விளையாடாமை - II

மருதாணி போட்டுக் கொண்டால்
ஊட்டி விடுவாயா என்றாள்.
மருதாணி போட்டுக் கொண்டு
ஊட்டி விடு என்றேன்.
அழகாய் சிவந்தது
காதல்.

வார்த்தை விளையாடாமை - I

Read more...

Wednesday, June 24, 2009

வார்த்தை விளையாடாமை - I

கண்மூடி
வாங்கிக்கொள்வாயா என்றேன்.
வாங்கிய பின்
கண்மூடிக்கொள்வேன் என்றாள்.
மோக்ஷமடைந்தது
முத்தம்.

Read more...

  ©Template by Dicas Blogger.

TOPO