Tuesday, January 26, 2010

போர்களுக்கு முந்தைய விருந்துகள்



போர்களுக்கு
முந்தைய விருந்துகள்
சுவாரசியமானவை

கைசேரும்
குவளைகள் நிரப்பும் துளிகள்
உவர்த்த உதடுகளில்
வெண்மைப் படிகமாகி
உலர்வதும்

பின்சேரும்
கரங்கள் அழுந்த
உடையத் தயாராய் இருக்கும்
நினைவின் குமிழிகள்
மௌனம் சுரந்து
முட்டிக் கொள்வதும்

அடரும் இறுக்கம்
விரிய வழியின்றி
இணை சேர்ந்து கிடந்த
கண்ணலைவரிசைகள்
எதிர்கோட்டில்
வலுந்தூர்தலும்

இன்னபிற
இன்னபிற
உம்களும்
உம்களும்..

விருந்துகளின் முடி தருணங்களில்
போதையுற வீழ்ந்து விடல்
உத்தமமான
போதனையாகப் படுகிறது

பொழுதோடு வியர்த்த
பிரியுயிரை எதிர்நோக்க உதவும்
சூனிய சலனங்கள்

எதிராளியும் அயர்ந்திருக்கும்
அவன் விருந்தின்
நிச்சலனம் செவிசேர

விரல்கள் மட்டும்
பின்னியிருக்கும்

போர்களுக்கு
முந்தைய விருந்துகள்
சுவாரசியமானவை



25/01/2010 உயிரோசை மின்னிதழில் பிரசுரமானது

Read more...

Monday, January 25, 2010

மிஸ்டுகால் ரிங்டோன்

மிஸ்டுகாலுக்கு என்று
தனியான ரிங்டோன்
வைக்கச் சொன்னாள்
குழந்தை.

இழக்கும் முன்பே
இழப்புகளை
அறிந்து கொள்ள முடிந்தால்
நன்றாகத்தான் இருக்கும்
என்று நினைத்துக் கொண்டேன்.

Read more...

Tuesday, January 12, 2010

இந்தி எதிர்ப்புப் போராட்டம் - சரியா?

’இந்தி எதிர்ப்புப் போராட்டம்’ - இந்த வாசகம் குறித்து நான் புரிந்து கொண்டது இதுதான். 1960களில் இந்தியை அனைத்து மாநிலங்களிலும் கட்டாயப் பாடமாக்க அப்போதிருந்த மத்திய அரசு உத்தரவிட்டதும், அதனைத் தொடர்ந்து தமிழர்களின் கொதித்தெழுந்த மொழிப்பற்று காரணமாக, அரசின் உத்தரவை எதிர்த்துக் களமிறங்கிய இளைஞர் பட்டாளம், தங்கள் நோக்கத்தில் செவ்வனே வெற்றி பெற்று, இந்தியை நீக்கியது மட்டுமல்லாது, அதன் மூலம் பெற்றுவிட்ட 'தமிழ் காவலர்கள்' அடையாளத்தினை முதலாகக் கொண்டு, தமிழகத்தை ஆளும் வாய்ப்பையும் பெற்று, தங்கள் வாரிசுகளுக்கு மாத்திரம் இந்தியுடன், ஃப்ரென்ச்சும், ஜெர்மனும் பயிற்றுவித்து, தத்தம் துறைகளில் அவர்களை ஜொலிக்கச் செய்து விட்டார்கள் என்பதுதான்.

2005-ஆம் ஆண்டு நான் இளங்கலை பட்டப் படிப்பை முடித்து, பெங்களூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணியிலமர்ந்தேன். என்னோடு, இந்தியா முழுவதிலும் இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் ஒரே சமயத்தில் பணியிலமர்ந்தோம். அப்போதே, 'தேசிய மொழியைக் கூடத் தெரியாதென்று சொல்கிறாயே..'என்று அம்ரித் ராஜ் என்னை அசிங்கப்படுத்தினான். 'சொல்கிறாயே..' என்ற வார்த்தையின் தொடர்ச்சியாக, ’உனக்கு வெட்கமாக இல்லையா..’ என்ற தொடரை அவன் கேட்கவில்லை. ஆனால் எனக்குக் கேட்டது.

அன்றிலிருந்து இன்று வரை, இதுபோன்ற எண்ணற்ற அவமானங்களை சந்தித்து விட்டேன். மென்பொருள் துறையில் ஒரு 3 அல்லது 4 ஆண்டுகளாகப் பணிபுரியும் வட இந்தியர்களிடம் நான் அறிமுகமாகுகையில், நான் தமிழன் என்று தெரிந்ததுமே, அவர்கள் எனக்கு இந்தி தெரியாது என்பதைத் தெரிந்து கொள்வதைக் கண்டிருக்கிறேன்.

ஒரு சமயம், எனக்கு இந்தி தெரியாது என்று கூறிய உடனேயே, நிறையத் தாடி வைத்திருந்த சிங் ஒருவர், ”தூ.. மதராசி?” என்று கேட்டார். நான் பயந்து விட்டேன். என்னடா.. துப்புகிறாரே என்று. ஆனால் அவர் துப்பவில்லை. 'தூ' என்றால் இந்தியில் 'நீ' என்று அர்த்தமாம்!

நான் தெரியாமல்தான் கேட்கிறேன். இன்னொரு மொழி நம் மாநிலத்தினுள் வந்தால், அது நம் மொழிக்கு நாம் செய்யும் துரோகமா? இல்லை அது நம் மொழியின் அழிவுக்குதான் வித்திடுமா? முதலில் நாடு, நதி, மொழி என்று எல்லாக் கருமங்களையும், அம்மா, தங்கை என்று பெண்ணுறவு கொண்டு விளிக்கும் கலாச்சாரத்தை அழித்தொழிக்க வேண்டும்.

பள்ளி நாட்களில், ’தமிழன்னை’ என்று கூறும் போது, ஏதோ ஒன்று உள்ளே பொங்குவதை உணர்ந்திருக்கிறேன். அப்படியொரு உணர்வு வருவதில் தவறில்லை. ஆனால், அது நம் மொழியின் மீதான வெறியாகவும், இன்னபிற மொழிகளின் மீதான துவேஷமாகவும், உருமாறுவது இயல்பாக நடந்தேறி விடுகிறது. அதனால் தான் இந்த அம்மா, தங்கை செண்டிமெண்ட்டெல்லாம் வேண்டாமென்கிறேன்.

தொலைநோக்குப் பார்வை கொண்ட சில தமிழ் பெற்றோர், தத்தம் குழந்தைகளுக்கு இந்தி டியூஷன் வைத்தாவது, கற்பித்து விடுகிறார்கள். ஆனால், அந்த அளவுக்கு முற்போக்கு எண்ணமில்லாத, போதுமான படிப்பறிவில்லாத, அறிவிருந்தாலும் டியூஷனுக்குக் காசில்லாத நிலையில்தானே பெரும்பான்மையான நம் பெற்றோர் சமூகம் இருக்கிறது.

நிலைமை இப்படியிருக்கையில், நம் நாட்டின் தேசிய மொழியை, அரசே, அரசுப் பள்ளிகளில் கற்பித்தலில் என்ன பாதகம் வந்து விடப் போகிறது?

இந்தி தெரியாமல் வட மாநிலம் ஒன்றுக்கு நம்மால் போக முடிகிறதா? எல்லா சூழ்நிலைகளிலும் ஆங்கிலம் உதவாதே அய்யா!

தமிழகத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் இந்த நிலையைப் பார்க்க முடியாது. கன்னடர்கள், தெலுங்கர்கள் என்று எல்லாருக்கும் இந்தி தெரியும்போது, நமக்கு மட்டும் தெரியவில்லை என்றால் அது பெருமையா? பெருமையென்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் இன்னும் பெரிய கொடுமை! செய்து வைத்திருக்கும் அறிவீனத்துக்கு பெருமை ஒரு கேடு.

இந்தி நமக்குத் தெரிந்திருந்தால், மென்பொருள் துறையில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இளைஞர்கள் இன்னும் பரிமளித்திருப்பார்கள். நான் உட்பட! 3 அல்லது 4 பேர், ஒரு issue-வை investigate செய்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது சம்மந்தமான நம் உரையாடல் அல்லது விவாதம், நம்மை அந்த issue-வைத் தீர்ப்பதற்கு நமக்கு உதவும். இங்கே நம்மைத் தவிர மற்றவர்கள் அனைவரும் இந்தியில் உரையாடத் துவங்கி விடுகிறார்கள். நமக்கு வந்து சேர வேண்டிய செய்திகள் வருவதில்லை. இதனாலேயே appraisal வரும்போது நம்மவர்கள் பின்தங்குகிறார்கள். இந்தி தெரிந்தவர்கள் முந்துகிறார்கள்.

இங்கே இந்தியில் பேசுபவர்களைக் குற்றம் சொல்லிப் பிரயோஜனமில்லை. 4 தமிழர்கள் சேர்ந்திருக்கும் இடத்தில், தமிழில்தானே பேசுவீர்கள். 5ஆவதாக அங்கிருக்கும் மாற்று மொழியானை நினைவிலா வைத்திருப்பீர்கள்?

வட இந்தியர்கள் பணிக்கு வர சென்னையை விட, பெங்களூரை ஏன் பெரிதும் விரும்புகிறார்கள்? மொழிதான் முதற்காரணி. ஆட்டோ, பேருந்து, அண்ணாச்சி கடை என்று அடிப்படைத் தேவைகளுக்குக் கூட இந்தியை அவன் பயன்படுத்த முடியாது எனும்போது அவன் எப்படி வருவான்? ஆக, நமக்கு மட்டுமல்ல. நம் மாநிலத்தின் வளர்ச்சிக்குக் கூட இந்நிலை இடையூறாகத்தான் இருக்கிறது.

சற்றே நிதானத்துடன் யோசித்தால் 'மொழியைக் காப்பாற்ற எந்தக் கொம்பனும் தேவையில்லை' என்பதும் 'மொழியைக் காப்பாற்றிக் கொள்ள, மொழிக்கு அப்பாற்பட்ட எந்த சக்தியாலும் முடியாது' என்பதும் விளங்கும்.

எங்கே நானும் மொழியைக் காக்கப் பிறந்த ஆபத்பாந்தவனாகவும், அநாதரக்ஷகனாகவும், இவர்களைப் போன்ற அரைவேக்காடாகவும் ஆகிவிடுவேனோ என்ற அச்சத்தில், தமிழின் மீதிருக்கும் இயல்பான அன்பு குறித்து கூட சற்று சந்தேகப்பட வேண்டியுள்ளது.

எங்களூர்ப்பக்கம் ஒரு பழமொழியுண்டு. 'கொளத்து மேல கோவப்பட்டு, கால் களுவாம வர்றது..' என்று. குளத்தின் மேல் கோபப்பட்டு, 'கழுவாமல்' வந்தால், யாருக்கு நஷ்டம். குளத்துக்கா? அப்படித்தான். இந்திக்கும் சரி. எல்லாவற்றுக்கும் காரணமான அசிங்கவாதிகளுக்கும் சரி. ஒரு நஷ்டமும் இல்லை.

எல்லா எளவும் மிடில்கிளாஸ் வெங்காயங்களான நமக்குதான்!


-சென்ற வார உயிரோசைக்கு அனுப்பினேன். ஏனோ பிரசுரமாகவில்லை.

Read more...

Friday, January 8, 2010

கண்ணாடியாலான கல்

என் திரைக்குள்
ஊடுபாயும் சன்னலின் வெளிச்சத்தினின்று
விடுபட முயற்சிக்கிறேன்.
நீளும்
திரைக்கும், சன்னலுக்குமான
மாறாட்டத்திற்கிடையே
நான் கூட தெரிந்தேன்
எனக்கே.

Read more...

  ©Template by Dicas Blogger.

TOPO