Friday, May 20, 2011

கலிலியோவிற்கு ஏன் விஷம் கொடுத்தோம்?


சில விஷயங்களுக்கான காரண காரியங்கள் நம்மால் அறிய முடியாதவையாக இருக்கும். ஆனால் மனம் அதனையே சுற்றிச் சுற்றி வரும். நாம் நம் வாழ்வின் இரு வேறு தருணங்களில் சந்திக்க நேர்ந்த இருவருக்கு, ஒரே மாதிரியான முக ஜாடை இருப்பது ஏனோ என்னை, அதன் அனிச்சைத் தன்மையை உணரச் செய்யாமல், செய்யும் தொந்தரவு அதிகமாக இருக்கிறது.

மடிவாலாவில் கல்லடா ட்ராவல்ஸுக்கு அருகில் A1 Travelsன் அலுவலகம் உள்ளது. இங்கே இருக்கும் மது என்ற மனிதரை, கோவை செல்ல பேருந்து பயணச்சீட்டு முன் பதிவு செய்யச் செல்லும் வகையில் பார்த்திருக்கிறேன். பேசியிருக்கிறேன்.

ஒரு நாள் உடல் நலம் சரியில்லாமல், மருத்துவரைக் கண்டுவிட்டு, மாத்திரை வாங்குவதற்காக எங்கள் ஏரியாவில் இருக்கும் பிரேமா மெடிக்கல்ஸில் மேற்சொன்ன மதுவைக் கண்டேன். அவரிடம் சென்று, சம்பிரதாயமாகச் சிரித்து, மாத்திரை கேட்டேன். ஹேகிதீரா என்றேன். அவர் கண்களிலோ குழப்பம் மிதந்தது. என்னை அவருக்குத் தெரியவில்லை என்ற பரம ரகசியம் ஒருவழியாக எனக்குப் புரிந்த பின்னர், A1 Travelsல் தானே வேலை பார்க்கிறீர்கள் என்றதற்கு அவர் சிரித்தார். இல்லையென்றார்.

என்னால் நம்பவே முடியவில்லை. அவர்களிருவரும் அவ்வளவு நெருக்கமான முக வெட்டுடையவர்கள். வெறும் 2 கிமீ தொலைவில் வாழ்கிறார்கள். இவர்களில் ஒருவரைச் சேர்ந்தவர்கள், இன்னொருவரைக் கண்டு இதுவரை எந்தக் குழப்பமும் நேரவில்லையென்பது மிக்க ஆச்சர்யமூட்டியது. இன்றைக்கும் அவரைப் பார்த்தால் இவரையும், இவரைப் பார்த்தால் அவரையும் நினைத்துக் கொள்ளாமல் இருக்க முடிவதில்லை. தனியாகச் சிரித்துக் கொள்கிறேன்.

இவை போன்ற நிகழ்வுகள் எல்லோருக்குமே நிகழ்பவைதானெனினும், நான் மட்டும் ஏனிப்படிக் காணாததைக் கண்டது போல் உணர்கிறேன் என்று தெரியவில்லை. இவர்களாவது பரவாயில்லை சாதாரணர்களாக வாழும் மிஸ்டர் பொதுஜனங்கள். அடுத்த கதையைக் கேளுங்கள்.

ஹாலிவுட் நட்சத்திரம் Matt Damonக்கும், WWE சூப்பர் ஸ்டார் John Cenaவுக்கும் என்னால் ஆறு வித்தியாசங்களைக் கண்டறிய இயலவில்லை. என்னைத் தவிர வேறு எவருக்கும் இது தோன்றினாற் போலும் இல்லை. வாசன் ஐக் கேருக்குத் தான் செல்ல வேண்டுமோ?




பிரபலங்களின் வரிசையில் இன்னொரு உதாரணம். இது ஓரளவுக்கு அங்கீகரிக்கப்பட்ட ஜோடி! ஹாலிவுட்டின் Tom Hanks-ம், பாலிவுட்டின் Aamir Khan-ம்.




அவ்வளவு ஏன். நம் பதிவுலக எழுத்தர், நண்பர் செல்வேந்திரனும், என் அலுவலகத்தில் பணிபுரியும் சோமுவும் ஒரே போன்றிருப்பதாகவும் பிரம்மையெனக்கு. 




இதுவரை மனுஷ்ய கணக்குகள் தாம். இனிதான் இருக்கின்றன தெய்வானுகூல மஹாத்மியங்கள்!

நான்காண்டுகளுக்கு முன்னர் JP நகரில் இருக்கும் ராகவேந்திரர் கோயிலுக்குச் சென்றிருந்தேன். மிகவும் ப்ராசீனமானதொரு ஆலயம். அங்கே வரையப்பட்டிருந்த ஓவியங்களில் இருந்த ஒரு ராகவேந்திரர் என்னைப் போட்டுப் படுத்தியெடுத்தார். அது ஏனோ தெரியவில்லை. அந்த ராகவேந்திரரின் முகத்தில் நமது ரஜினிகாந்தின் சாயல் என் கண்களுக்கு மட்டும்தான் வழமை போலவே புலப்பட்டது.


ஏறக்குறைய இந்தப் படம் போலத்தான் அதுவுமிருந்தது. இணையத்தில் பிடித்தேன். நிச்சயமாக அந்தப் படம் வரையப்படும் போது ரஜினிகாந்த் பிறந்தே இருக்க மாட்டார். பின் எப்படி அவர் சாயல்? சரி போகட்டும். காக்காய் விழுக்காட்டிய பனம்பழம் என்றே வைத்துக் கொள்வோம். அது ஏன் ஒரு கமல்ஹாசனோ.. இல்லை இப்பூவுலகில் வசிக்கும் வேறொருவரோவன்றி, ரஜினிகாந்தின் சாயலாக அமைய வேண்டும்? நான் இங்கே கிடந்துழல வேண்டும்?

ரஜினிகாந்த் ஒரு தீவிர ராகவேந்திர பக்தர் என்பது உலகறிந்த விஷயந்தானே. இதற்கும், அந்தப் படத்தில் அவர் சாயலிருந்தமைக்கும் ஏதேனும் தொடர்பிருக்குமோ?

ரஜினியின் ஒரு பேட்டியில் கேட்ட ஞாபகம். மந்த்ராலயமும், துங்கபத்ரா நதியும் தன் கனவில் வந்த பிறகுதான் தான் அங்கு சென்றதாகச் சொன்னார். ஒரு வேளை இதற்கும், என் குழப்பத்துக்கும் ஏதும் முடிச்சு இருக்குமா? ஸ்ஸ்ஸபா.. கண்ணைக் கட்டுகிறது போங்கள்.

ஒரே மாதிரி இருக்கும் பிரச்சினையை சற்றே பரணில் போடுவோம். நாம் வேறு வேறு சமயங்களில் சந்தித்த இரு மனிதர்கள், அவர்களிருவரும் வேறேதோ சூழலால், காரணத்தால் நண்பர்களாக இருப்பது இதுகாறும் கண்டது போல ஆச்சர்யத்தை அல்ல.. சுவாரஸ்யத்தைக் கிளப்புகிறது.

என்னுடைய நண்பனும், என்னுடைய வேறொரு நண்பனுடைய நண்பியும், சிறுவயது முதல் நண்பர்கள் என்பது ஆர்க்குட்டின் மூலமாகத் தெரிய வந்தது சில ஆண்டுகளுக்கு முன். அதாம்பா.. ம்யூச்சுவல் ஃப்ரெண்ஸ்!

இறுதியாய் ஒன்றேயொன்று.. என் சகோதரி, தன் கைத்தலம் பற்றக் கனாக் காணும் ஜானகிராமன் அவர்கள், அண்ணன் வா.மணிகண்டனின் கல்லூரி ஜூனியராம்!

இப்போது சொல்லுங்கள்..

உலகம் என்ன வடிவென்று சொன்னதற்காகக் கலிலியோவிற்கு விஷம் கொடுத்தோம்? :)

Read more...

Wednesday, May 18, 2011

மொழியும், மொழிதல் சார்ந்தும்..


ஒன்பது வயதுக்குள்ளான குழந்தைகளுக்கு புதிய மொழிகளைக் கற்றுக் கொள்ளும் ஆற்றல் இயல்பாகவே அதிகமாக இருக்குமாம். எங்கோ படித்த ஞாபகம். அதற்குள்ளாகவே எத்தனை மொழிகளை முடியுமோ, அத்தனையையும் கற்றுக் கொள்ளாமல் போய்விட்டேனோ என்றெண்ணுகிறேன். ஒரு புதிய மொழியைக் கற்றுக் கொள்தல் என்பது எத்தனை சுவாரசியமான, உபயோகமான ஒரு செயலாக இருக்க முடியுமல்லவா?

தாய்மொழி தமிழ். தமிழ்வழிக் கல்வியென்பது ஒரு தடைக்கல்லாகி விடாமல், எப்படி எனக்கு ஆங்கிலம் தடையற வந்தது என்பது இன்றுவரை எனக்கிருக்கும் ஆச்சரியம். எம்பெருமான் ராமபிரானின் கருணையென்பதைத் தவிர வேறெதையும் காரணமாக சிந்திக்க சிந்தை ஒப்பவில்லை. கடந்த நான்கரை ஆண்டுகளாக பெங்களூரில் வாசம் செய்வதன் காரணமாக மட்டுமல்ல. கொஞ்சம் ஆர்வமும் இருந்ததன் காரணமாக, கன்னடம் வருகிறது. 

இதற்கு முன்பு வேலை பார்த்த நிறுவனத்தில் தினமும் அலுவலகக் காரில் தான் செல்வது வழக்கம். அதன் ஓட்டுநர் தேவராஜ்தான் எனக்குக் கன்னடம் பயிற்றுவித்த குரு. தினமும் ஏதேனும் சில சொற்றொடர்களைச் சொல்லி, அதைக் கன்னடத்தில் எப்படிச் சொல்வது என்று கேட்டு, மனதில் இறுத்திக் கொள்வேன்.

கன்னடத்தில் பேச வேண்டும் என்ற சூழ்நிலை வரும் என்பது தெரிந்தால், பேசப் போகும் காட்சிக்குத் (context) தகுந்தாற்போல முன்பே ஒத்திகை பார்த்து, தளை தட்டிக் கொள்வேன். இல்லாவிடில் கடினம். அத்துணை சரளமாக சித்தி வீட்டு வழக்கு வாய்க்கவில்லை இன்னும்.

தினசரி வாழ்க்கையில் பெங்களூரானது தமிழ் தவிர்த்து ஏனைய மொழிகள் தெரியாதோருக்கு ஒரு பிரச்சினையாகவே இருப்பதில்லை. அது எப்படியோ.. பெரும்பாலான கன்னடத்தாருக்கு தமிழ் வந்து விடுகிறது தத்தித் தத்தியேனும்.. இது தமிழின் சிறப்பா, இல்லை கன்னடத்தின் சிறப்பா.. இல்லை தமிழ் திரைப்படங்களின் மசாலாச் சிறப்பா என்பதைத் தெளியச் செய்வோருக்கு ’தக்க சன்மானம்’ தரலாம் என்றிருக்கிறேன். :)

வயது வந்த பின், புதியதாகவொரு மொழி கற்றுக் கொள்வதற்குத் தேவையானவை இரண்டு. ஒன்று படைப்பாற்றல் (Creativity). இரண்டு, தவறாகப் போய்விட்டால் என்ன செய்வது என்ற சங்கோஜமே இல்லாமை. தவறாகப் போய் திருத்தப்படும் விஷயங்கள்தானே நினைவில் நிலைக்கின்றன. வாய்க்கும், வாழ்வுக்கும்.

இவ்விரண்டையும் காரணிகளாக எண்ணியதற்குக் காரணம் என்னவென்று சொல்ல அவா. 

கன்னடத்தினர் பேசும் தமிழில் ஒரு வித்தியாசமான வார்த்தையொன்றை அவதானிக்கலாம். இடையிடையே, ’அப்படியா..’ என்று கேட்க நேருமிடங்களிலெல்லாம் ‘ஆமாவா..’ என்று கேட்டுக் கொண்டேயிருப்பார்கள். 

தமிழில் நாம் வழங்கும் ‘அப்படியா..’என்ற வார்த்தைக்கு ஈடானவொரு சொல் கன்னடத்தில் இல்லை. கன்னடத்தில் ’ஹவுதூ..’ என்றால் ஆமாம் என்ற பொருள். ‘ஹவுதா..’ என்றால் அப்படியா என்ற பொருள். ஆக அவர்களுடைய கன்னட ’ஆமாவா..’-வை நம்முடைய தமிழ் ’அப்படியா’-வுக்குப் பதிலீடாக்குகிறார்கள். எனவே புதிய மொழியில் உரையாடிப் பழக, மேற்சொன்ன இரண்டு பருப்பொருட்களும் தேவையென்பது ஓரளவுக்கு நிரூபணமாகிறது.

-0-

Bachelor என்ற வார்த்தைக்கு ஈடான தமிழ் வார்த்தை என்னவென்று யோசித்ததில் ஸ்பஷ்டமாய் தலைவலி மிஞ்சிற்று. பிரம்மச்சாரி என்றால், பெண்ணைத் தீண்டாதவன் என்றுதானே பொருள். (முதலில் இது தமிழ் சொல்லா என்றே சந்தேகம்!) திருமணமாகாதவன்.. ஆனால், அவனுடைய பெண் சகவாசத்தைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம்.. என்பதுதானே வழக்காற்றில் நாம் கொள்ளும் Bachelor-க்கான பொருள். இதற்கிணையான தமிழ் சொல் அடியேனின் சிற்றறிவுக்கெட்டவில்லை. எவருக்கேனும் எட்டினால், சுட்டுங்கள்.

சமீபமாய் கதா காலக்ஷேபங்களில் நேரம் அதிகமாய் செலவாகிறது. என் வயதுக்கு இதெல்லாம் சற்று விபரீத விதிவிலக்கோ என்ற ஐயப்பாடு எனக்கே சில நேரங்களில் எழுந்தாலும், வல்லான் வகுத்த வாய்க்காலில், வழி தப்பும் பயமெதற்கு என்று திருத்திக் கொள்வேன். 

வேளுக்குடி வைணவத்தை திகட்டத் திகட்டத் தருகிறார். டியெஸ்.பாலகிருஷ்ண சாஸ்திரிக்கு சைவ, வைணவ வேறுபாடெல்லாம் இல்லை. சுகி சிவத்தை ஆன்மிக சொற்பொழிவாளர் என்று சொல்வதை, அவருடைய சுய முன்னேற்றக் கருத்துகள் முறைக்கின்றன. விசாகா ஹரி.. பார்த்த, கேட்ட மாத்திரங்களில் கவர்ந்திழுத்துக் கட்டிப் போடுகிறார். சங்கீத உபன்யாசம் என்ற கான்செப்ட் அட்டகாசமாய் பொருந்துகிறது இவருக்கு. இவரைப் பற்றி பிறிதொரு சமயம் விஸ்தாரமாய் பகிர எண்ணமிருக்கிறது. வாரியார் சுவாமிகள், இவர்கள் எல்லோருக்கும் மூத்தவர். அனுபவம், ஆன்மிகம், ஹாஸ்யம்.. எல்லாமும் கிடைக்கும் அவரிடம். 

வாரியார் சுவாமிகள் சொல்கிறார். மதர் என்ற சொல் மாதா என்ற சொல்லிலிருந்தும், ஃபாதர் என்ற சொல் பிதா என்ற சொல்லிலிருந்தும், பிரதர் என்ற சொல் பிராதா என்ற சொல்லிலிருந்தும் உருவானவை. ’அங்கே’யிருப்பதெல்லாம், ’இங்கி’ருந்து சென்றதுதான் என்று. இவர் இக்கருத்தைத் தமிழ்தான் உலகிலேயே சிறந்த மொழி என்பதை அழுத்தந்திருத்தமாக உணர்த்துவதற்காகச் சொன்னார் (பேசிக் கொண்டிருக்கும் தலைப்பு அவ்வையும், தமிழும்!). அவர் குறிப்பிட்ட எல்லா சொற்களுமே சம்ஸ்கிருதச் சொற்கள் என்பது அவருக்குத் தெரியாமலிருந்திருக்காது என்பது என் அபி. தமிழின் மீதிருக்கும் பிரியம் கண்ணை மறைக்கிறது. வாயை மறைக்கவில்லை. 

இன்னொன்றும் சொன்னார் பாருங்களேன். இதற்காகத்தான் இத்தனை கதையையும் சொல்ல நேர்ந்தது. திருமணமாகாதவன் அதிகம் பேசமாட்டானாம். வெட்கப்படுவானாம். அதாவது பேச்சிலன். இதுதான் Bachelor என்றானது என்றார். 

மெய்ப்பொருள் காண்பதறிவு என்று சொல்லிச் சென்ற மகானை நினைத்துக் கொண்டேன்! :)

Read more...

  ©Template by Dicas Blogger.

TOPO