Friday, June 26, 2009

இன்று காலை காற்றடித்ததே பார்த்தீர்களா?

வெயிலில்லாத இன்று காலையில்
நான் காற்றடித்ததைப் பார்த்தேன்.
ஓடி வந்து கட்டிக்கொண்ட
குழந்தையை ஒத்து
மெதுவாய் துவங்கி
ஆவர்த்தன வேகமெடுத்து.
ஆச்சரியம் சுரந்தூறியது எனக்குள்.
உங்களுக்குத் தெரியாது..
எத்தனையாண்டுகளுக்குப் பின்
இன்று காற்றடித்தது என்று.
அதுவும் அத்தனை இதமாக.
அத்தனை மிருதுவாக.
சுற்றியிருந்த செடி கொடி மரங்களின்
காற்றுக்கு ஆடும் தன்மை
எனக்கு நினைவுக்கு வந்துவிட்டது.
அவைகளும் சந்தோஷித்தன
காற்றைக் கண்டு.
எப்படி வளர்ந்து விட்டது
தெரியுமா அது?
இத்துனூண்டில் பார்த்தது.
அப்படியே பாவாடையைப்
பரப்பிக் கொண்டு வந்து
இருப்பது, இல்லாதது
என்று எல்லாவற்றையும்
அள்ளிக் கொண்டு போனது.
காற்றை நோக்கிய
இன்று காலைய புன்னகைதான்
என்னுடைய மிக அழகானதாக
இருக்கக் கூடும்.
அது சரி..
நான் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறேன்.
நீங்கள் காற்றைப் பார்த்தீர்களா?

Read more...

Thursday, June 25, 2009

நம்ம செந்தில்குமாரும், தனலட்சுமியும்..

சற்றே இலகுவாக எழுதி நாள்பட்டாற் போல இருந்தது. எதையேனும் எழுதுவோமே என்று தொடங்குகிறேன். நகைச்சுவை முயற்சிக்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது. பாழும் மனதிற்கு ஆசைக்கா பஞ்சம்? உழைப்பும், முயற்சியும் தான் பற்றாக்குறையில் லோல்படுகின்றன.

மென்பொருள் பணியில் இருப்பதனால் சந்திக்க நேரும் பிரச்சினைகளைப் பற்றி அவ்வப்போது எண்ணிக்கொண்டிருப்பதுண்டு. அதில் குறிப்பிடத்தக்க ஒன்று. ஒவ்வொரு முறை ஊருக்கு செல்லும் போதும், சொந்தக்கார மற்றும் / அல்லது பெரியவர்கள் எவரையேனும், எதிர்கொண்டு பதில் சொல்ல வேண்டி வரும். தலைமுறை இடைவெளிக் கண்றாவியெல்லாம் இல்லை. நான் என்னதான் சிரத்தையாகப் பேசவேண்டும் என்று முயற்சித்தாலும், இவர்கள் செய்யும் அட்டூழியம் அளவில்லாமல் பொறுமையை சோதிக்கும்.

"எந்தக் கம்பெனி" என்பார்கள். சொல்வேன்.
"பெங்களூர்தான?" கொஞ்சம் முன்னாடிதான் யாராவது சொல்லிச் சென்றிருப்பார்கள். இருந்தாலும் கேட்பார்கள்.
"ஆமாம்". 'சரி சொல்லியாயிற்று' என்று பெருமூச்சு விட்டால் ஆயிற்றா. இனிமேல்தான் இருக்கும் பட்டாசே.
சற்றே நெற்றியைத் தேய்த்து யோசித்து.. "அந்தக் கம்பெனில.. உனக்கிந்த செந்தில் குமாரத் தெரியுமா..? நம்ம தண்டபாணி பையன்!"

ஐய்யா.. எனக்குத் தாங்காமல்தான் கேட்கிறேன்.. எங்க கம்பெனி என்ன சுப்ரமணியம் & கோ.வா..? எல்லாக் 'குமார்'களையும் தெரிந்து வைத்துக் கொள்ள..? பெருமைக்காக சொல்லவில்லை.. பத்துக்கும் மேற்பட்ட கிளைகளில் பெங்களூர் முழுதுக்கும் இருக்கும் 30,000க்கும் அதிகமானவர்களில் நான் எங்கிருந்து செந்தில் குமாரைத் தேடுவேன்? அப்படியே எனக்கு அந்தப் புண்ணியவானைத் தெரிந்தாலும், இப்போது அவரைப் பற்றிப் பேசி என்ன சாதிக்கப் போகிறோம்?

இவர்களுக்கு எதையாவது பேச வேண்டும். எதையாவது என்றால் எதையாவது.. அந்த 'எதையாவது' என்ற வார்த்தையை Ctrl+B மற்றும் Ctrl+U செய்து கொள்ளுங்கள். என்னிடம் எப்படியும் மைக்ரோசாஃப்ட், மெய்ண்டெனென்ஸ், டெவெலப்மெண்ட் என்று பேச முடியாதுதான். போகட்டும். சரி.. சகித்துக் கொள்ளும்படியாகவாவது முயற்சி செய்யக் கூடாதா? தமிழ், சமூகம், குடும்பம், அரசியல், தொடங்கி நமிதாவின் நாபிக்கமலம் வரை எதுவானாலும் கூட அவர்கள் கருத்தை அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் பேசுவேன். இப்படியொரு கேள்வி கேட்டால் கடுப்பாகுமா.. இல்லையா..?

இது பரவாயில்லை. சென்ற முறை ஒருவர், கம்பெனியைப் பற்றி கவலைப்படாமல், பெங்களூர் என்றவுடனேயே ஒரு 'தனலட்சுமி'யைப் பற்றிக் கேட்டார். எனக்குப் பற்றிக்கொண்டு வந்துவிட்டது. 'இவர்களிடம் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் பெயரை மட்டும் சொல்லக் கூடாது' என்று முடிவு செய்தேன். அடுத்த முறை இவர்கள் செந்தில்குமாரிடமும், தனலட்சுமியிடமும் கேட்க வேண்டுமென்று என் பெயரைக் குறித்துக் கொள்வார்கள். யார் கண்டது.. ஏற்கெனவே என் மேல் எத்தனை பேர் காண்டாகியிருக்கிறார்களோ?!

Read more...

Wednesday, June 24, 2009

வார்த்தை விளையாடாமை - I

கண்மூடி
வாங்கிக்கொள்வாயா என்றேன்.
வாங்கிய பின்
கண்மூடிக்கொள்வேன் என்றாள்.
மோக்ஷமடைந்தது
முத்தம்.

Read more...

Tuesday, June 23, 2009

முதல் கடைசி நிசி கழிதலின் சில தன்சிதறல்கள்


அடர் இரவின் இந்தப் பொழுதுக்கென்று இருக்க வேண்டிய சற்றே குளிர்ந்த சுகந்தத்தை நுகர்வில் கண்டடைய முயன்று, தோல்வியுற்றுக் கொண்டிருக்கிறேன். நான் எனக்கான மனோபாவ நிலைகளிலிருந்து விலகி, வெகுதூரம் வந்திருந்ததை அவ்வப்போது உணரச் செய்து கொண்டேயிருந்தது சூழல். தணிவுக்கான சாதகாம்சங்கள் சாத்தியப்படுவதற்கான விகிதாச்சாரம், இறுகும் பனிக்கட்டியின் வெப்பநிலையோடு போட்டி போடுகிறது.

என் எந்த சாதிப்புகளையும் பிரஸ்தாபிக்கும் சகஜப் புத்தி நினைவுக்கு வராத போதும், இலக்கியப் பரிச்சயத்தையேனும் முன்னிறுத்தி சொல்வதானால், பித்தேறியிருக்கிறேன் நான். எதை எழுதினாலும் எழுத்தில் வித்தை காட்டச் சொல்லி மேலோங்கும் எண்ணம், ஏனோ இப்போது, "திடீரென" மனசாட்சி விழித்துக் கொண்ட பிச்சைக்காரனுக்குரிய கூச்சத்தினை எனக்குள் உட்புகுத்துகின்றது.

விகல்பமில்லாத உணர்வுகள் பிரவாகிக்கின்றன. திரைகளே தேவையில்லாத இத்தனை உணர்வுகள் ஊற்றிக் கொண்டேயிருப்பது, என் சராசரி வாழ்வுக்கு முதல் முறையாதலால், பதட்டம் கூடுவதும், நொடிமுள் நகர்வதும் என் காலத்தின் நேர்மறையான கூறுகளாகி இருக்கின்றன.

ஒரு தோல்வி.. சாதாரணமான ஒரு தோல்வி என்பது இப்படி பூதாகரமான ஒன்றாக உருப்பெற்றது, நான் என்னை உலக வீரனாக பாவித்துக் கொண்டிருந்த ஒரு ஆட்டத்தின் பொன்வேளையில், அது நிகழப் பெற்றதால் இருக்கலாம். நான் கவ்வாவிடினும், என் வாய்வழி புகுத்திய மண்பிடி, என்னால் நேசிக்கப்பட்ட உள்ளங்கையினுடையது என்பதே இந்தக் கணத்தில் நான் அனுபவிக்கும் எல்லா நன்மை, தீமைகளுக்கும் ஊற்றுக்கண்ணென்பது சற்றே கலங்கலாகப் புரிகிறது.

இத்துணை வர்ணிப்புகளுடன் எதன் பொருட்டு இதை எழுதிக் கொண்டிருக்கிறேன் என்ற கேள்வியை யாரேனும் கேட்டு விடுவீர்களோ என்ற பயம் உள்ளுரத் தோன்றுகிறது. அந்தக் கேள்வியின் நியாயம் புரிவது போலிருந்தாலும் தெம்பூறவில்லை. ஆம். எதன் பொருட்டு இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்? எது நடக்காது என்று நான் இறுமாந்து திரிந்திருந்தேனோ, அது செவ்வனே நடந்து முடிந்த பின், எதை எழுதிக் கிழித்துக், கற்றை கட்டினாலும், நடந்து முடிந்த ஒன்று, இல்லாமல் போகாது எனும்போது, உங்கள் கேள்விக்கு என்னிடம் பதிலில்லை.

பிரிவைத் தவிர வேறெதற்கும் இத்தனை வல்லமை இருக்குமா என்ற இப்போதைய ஐயம், தனக்கு வந்த தலைவலியையும், பல்வலியையும் பற்றிப் பேசும் பழமொழியை நினைவுறுத்துகிறது. அவ்வக் காலங்களுக்கான உணர்வுகள், அவ்வப்போது பெரியவை. இப்போது.. மற்றும் வேறெப்போதையும் விட எனக்கிந்தப் பிரிவு பெரியதாயும், ரணம் மிக்கதாயும் இருக்கிறது. நாளை அடுத்தது. சுழற்சி என்ற வட்டத்தைத்தான் நம்மையறியாமல், நாமாகவோ, அல்லது அடுத்தவருக்காகவோ, நம்மைச் சுற்றிக் கிழித்துக் கொண்டிருக்கிறோமே.

நேற்று வரை கூட இப்படியொரு பொழுது எனக்கு வாய்க்கும் என்று நம்பவில்லை. அதிகமில்லாத ஓரிரு நிமிடங்கள்தான். அவசரத்துக்கு உதாரணமாய், ஆண்டுக்கணக்கில் காதலித்தவளை முதலிரவில் புணர்கையில், முதல் உச்சத்தில் வாய்க்கும் அந்த தேவமணித்துளிகளைப் போல ஒரு சில நிமிடங்கள்தான். சந்தித்தறியா இரவொன்றைப் பரிசளித்துவிட்டு சற்றே தள்ளி நின்று, பரிகசித்துக் கொண்டிருக்கின்றன.

நான் கேட்பது சிக்கலில்லாத ஒரு கேள்விதான். காதல் தோல்வி, நட்பில் தோல்வி, உறவில் தோல்வி, மயிரில் தோல்வி.. என்று என் புலம்பலுக்கான காரணம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே. இரண்டு மணி நேரம் முன்பு வரை வெற்றி பெற்றுக் கொண்டிருந்த இருவரை, அல்லது ஒருவரை, இப்போது தோல்வி பிழிந்து சப்பும் சந்தர்ப்பவசத்தை வார்த்தைகள் வாரித் தந்து விடும் என்ற உண்மை புரிந்திராத வாயிலிருந்து வந்து விழவில்லையே நஞ்சில் தோய்ந்த சொற்கள்!

தெருவில் விடப்பட்ட என் நேசம், என்னை நோக்கித்தானே பாவமாய் பார்க்கிறது. எருமைக்கு ஒப்புவிக்கப்பட்டதுதான் என் தோலென்றாலும், அந்நேசத்திற்காகவேனும் நான் ஒரு பதிலைத் தேடி உழல வேண்டியது அவசியமாகிறது. உடல், மன, ஆன்ம எல்லைகள் வலியின் வரம்புகளை ஸ்பரிசிக்கின்றன. கோழைத்தனம் என் சுவாசக் குழாயெங்கும் நிரம்புவதை உணர்கிறேன். வெட்கிக், குறுகிக், குனிந்து படுத்து, அவமானத்தைப் புணர்ந்தெழப் ப்ரியப்படுகிறேன். ஆசுவாசம் கிட்டும் அப்பொழுதேனும் என்றின்னும் நம்பிக் கொண்டிருப்பதால்.

ஒரு புது வரியைத் தொடங்கும், இந்தக் கணத்தில் என் செயல்பாடுகள் யாவும் நின்று போய்விடக் கூடாதா என்ற ஏக்கம் உள் முழுதும் செங்குத்தாய் நிலைகொள்கிறது. உயிர் இருக்கட்டும். அசைவுகள் இல்லாது போகட்டும். நகர்வுதான் குத்துகிறது. குமைகிறது. அது நின்று போகக் கடவட்டும். ஆனால் உயிரில்லாமல் போய்விட்டால், இந்த இரவைக் கடந்து சென்று நான் சாதிக்க விரும்பும் விடியல், நரகத்தின் வாயிலில் கிடைக்கக் கூடியதாகப் போய்விடும்.

நேசங்கள், சாபங்களாக வந்து வீழாதிருக்கும் சமயம் மிக மெதுவாகவே கடந்து செல்கிறது. வென்று காட்டிய அத்தனையும் நிலையாமையென்ற பள்ளத்தினுள் உருண்டு, இருண்ட பாதாளத்தினுள் சத்தமெழுப்பாது மறைகின்றன. அதிக சலனமில்லாமல் இந்த இரவைக் கடக்க ஆசைப்படுகிறேன். வெற்றியென்ற இலக்குக்கு, இலக்கான அனுபவம், பக்குவமாக சுவாசிக்க உதவுகிறது. இதுவே என் கடைசி நிசியாக இருந்தாலும், பொழுது விடிவது எவ்வித மாற்றத்திற்கும் ஆளாகாதிருக்க நான் வரமளிக்கிறேன்.

ஒரு புள்ளியில் மையங் கொண்டு, ஆழ்ந்த ஒரு மூச்சுவிட்டு, என்னைத் தூக்கியெறிந்த என் நேசங்களின் திசைகளுக்காகப் பொங்கித் ததும்பும் மகிழ்வோடு புன்னகைக்கிறேன். என் பிறழ்வுகள் எனக்குள் புதைதலைப் போல, அவர்களுக்கான என் காழ்ப்புகள், பிரார்த்தனைகளாக உருமாறும் இத்தருணத்தில், நானே தேவனாக.. நானே அமரனாக.. நானே யாதுமாக ஆதலில் அமைதிக்குள் அழியத் துவங்குகிறேன். இரவு தீர்ந்து கொண்டிருக்கிறது..

Read more...

Friday, June 19, 2009

ஒரு புகைப்படம் மற்றுமொரு கவிதை

சமீபத்தில் ஆர்க்குட்டை மேய்ந்து கொண்டிருந்த போது, என் நண்பன் வினோத் எடுத்த புகைப்படம் ஒன்றைக் காண நேர்ந்தது. நிச்சலனமான மனநிலையோடு இருந்ததாலோ என்னவோ, பார்த்த மாத்திரத்தில் அந்தப் படம் என்னுள் ஏற்படுத்திய உள்மன ரீதியிலான மாற்றங்கள் அசாதாரணமானவையாகவும், அடர்வு மிக்கவையாகவும் இருந்தன.

வினோத் புகைப்படக் கலையில் மிகுந்த நாட்டம் கொண்டவன். முறையான பயிற்சி இல்லாதபோதும், விருப்பத்தின் பொருட்டே அக்கலையின் நுண்கூறுகளைக் கற்று, தனக்குத் தானே பயிற்சி செய்து வருபவன். என்னுடைய 'நானும், இளைய தளபதி விஜயும்' என்ற கதையில் ஏற்றப்பட்டிருக்கும் என்னுடைய புகைப்படங்கள் வினோத்தின் கண்வண்ணமே.

இயல்பான, இறுக்கமில்லாத துகள்களை ஒருசேரக் கோர்த்து, கடற்கரைக் காற்றை சிறிது தூவி, சூரியனைக் கொஞ்சம் குனிந்து அமரச் சொல்லி, அழகு, மழலை, அக்கறை, பசி, பகிர்தல் என்று நீளும் ஒரு கற்றை உணர்வுகளையும், மணலாய் சிந்திவிட்டு, மனம் கனக்கப் பார்த்துக் கொண்டேயிருந்தேன். அவளை!

அந்தத் தருணத்தில் எனக்குள் உண்டான எண்ணங்களை எங்கேயாவது பத்திரப்படுத்தி வைக்க வேண்டுமே என்று பதற்றப்பட்டதன் விளைவாய், 'வழக்கம்போல்' ஒரு கவிதை வாய்த்தது. படமும், கவிதையும் தொடர்கின்றன.

வினோத்தின் ஏனைய புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.


விழி கொள்ளாத வெளியானபோதும்
கூண்டில் திளைக்கும் கிள்ளையில்லாத
வானைக் காட்டிப் பதைக்கிறாள்.
அடி மறைக்கும்
துண்டுகள் கிழிந்திருப்பினும்
இருட்டக் காத்திருக்கும்
அந்திமங்களில் ஒளி துப்பி ஒத்துழையும்
பெட்ரமாக்ஸுக்குத்
தலைப்பாகையிட்டவனைத்
தொழப் போகிறேன்.
சுழலுக்குத் தாளாமல்
பெட்டியோடு ஒண்டியிருக்கும் சருகும்
என்றேனும் பசுமையாய் இருந்திருக்கும்.
விரிபட்ட வெள்ளைச் சீட்டில் விழுவது
அவன் பசிமைக்குப் பத்தப்போவதில்லை.
மிஞ்சியவையெல்லாம்
பெட்டி, பெட்ரமாக்ஸ் காதலும்,
பாசமாய்ப் பார்க்கும்
பிங்க் ஷூக்களுமே!

Read more...

Thursday, June 4, 2009

ஒரு கவிதையும், அது கற்றுத் தந்த பாடமும்.

வெற்றிகள் இனித்துக் கொண்டே இருக்கக் கூடியவை. எல்லாருக்குமே வெற்றியைப் பகிர்ந்து கொள்வதில்தான் எத்தனை ஆனந்தம். மனித மனத்தின் நுண் உளவியல் தன் தீரங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும், நிலைப்பாட்டை அர்த்தம் செய்து கொள்வதற்கும் உதவிகரமாயிருப்பதால், விளம்பர மனோ நிலையிலேயே உழலக் கற்றுக் கொண்டிருக்கிறது.

வெற்றி பெற்றுக் கொண்டே இருத்தல் என்பது இயலாத ஒன்றானதால், பெற்ற வெற்றிகள் இதுவரை அளித்து வந்த போதையின் வெற்றிடத்தை நிரப்பவேனும் மனிதன் மீண்டும், மீண்டும் முயற்சிகளைத் துவங்குகிறான். வெற்றிகளைப் பொதுவில் வைத்து இன்பம் காணும் மனம், ஒரு தோல்வியையேனும் அடுத்திருப்பவனுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராய் இருப்பதில்லை.

என்னளவில் தோல்விகள் தரும் வலியைப் பகிர்ந்து கொள்வதற்கு என் நண்பர்களுள் எவரேனும் ஒருவரை என்னை அறியாமல் நான் தெரிவு செய்து வந்திருக்கிறேன். ஒருவருடன் பகிர்ந்து கொண்டேன் என்பதிலில்லாத ஆச்சரியம், எல்லாத் தோல்விகளையும் அதிகபட்சம் ஒருவருடன் மட்டுமே பகிர்ந்து கொள்ள முனைந்தும், அதற்கான காரணமாக, அவருடனான அன்யோன்யத்தை முன்னிறுத்தியும், என் மனம் செய்து வந்த உள்ளரசியல் இன்றென்னை ஆச்சரியத்திற்குள்ளாக்குகிறது.

இந்த ஆடு புலி ஆட்டத்திற்கொரு முடிவு கட்டும் எண்ணம் என்னை ஆட்கொண்டது, இன்று சில கோப்புகளைப் புரட்டிக் கொண்டிருக்கையில்தான். உயிரோசைக்கு அனுப்பிய கவிதைகளையெல்லாம் இட்டு வைத்திருந்த ஃபோல்டரில், ஒரு கவிதையைக் கண்டேன். நீண்ட நாட்களுக்கு முன்பு எழுதி, உயிரோசையில் அந்த வாரம் வராமல் போன பிறகு அதனை மறந்தே போயிருந்தேன்.

பிரசுரமாயிருந்தால் அடுத்த நிமிடமே வலையில் இட்டு வைக்கும் மனம், ஒரு தோல்வியை மட்டும் தலையணைக்கடியில் ஒளித்து வைத்தது என் நடுவு நிலைமைக்கு சான்றாகாது என்பது அந்தக் கவிதையைப் பார்த்த மாத்திரத்தில் உறைத்தது. சுமாரான ஒன்றாக இருந்தாலும், அது கற்றுக் கொடுத்த பாடத்திற்கும், அப்பாடத்தைப் பின்பற்ற முடிவு செய்ததற்கும் விளைவான அக்கவிதை கீழே.

துளியாய் வழிதலின் ஆராய்வு

முத்தம் உகுத்த நிலவோடு
நானும் உதிர்ந்து கிடக்கும்
இரவில்
உன் நினைவின் வீச்சம்
விஷப் பொழுதின் வீதிகளில்
ஓடி விளையாட என்னை
அழைத்துத் துரத்துவதும்,
உரசியுலவும் வளிப்புள்ளிகள் போல்
என் புறத்தில் நீ நடந்த நாள்
நினைவிலிருப்பதன் நீட்சியாகவே
நீ வந்து நின்றவுடன் அடிக்கும்
உன் பிரத்தியேக வாசம்
செய்த குழப்படிகளை
என்னால் மறக்கலாகாததும்,
வெகுநேரம் நீர்ப்பட்டுத்
தாரைகளிலூறிய விரல்களாய்
சொத, சொதத்த மனதும்,
மற்றும் உள்ளே நைந்த நீயும்
காரணமாயிருக்கலாம்.
என் வரிகளின் சிதிலத்தில்
துளித் துளியாய் இன்னும்
நீ வழிந்திருத்தலுக்கு.

Read more...

  ©Template by Dicas Blogger.

TOPO