Sunday, November 28, 2010

தாகத்தின் இறுதித் துளி


நான் விழுந்து கொண்டிருக்கிறேன்
இப்பொழுது.

எந்தவொரு தடையுமில்லாமல்
எதன் மீதும் பிடிப்புக் கொள்ளாமல்

காற்றின் அந்தர வெளிக்குள்
நான் விழுந்து கொண்டிருக்கிறேன்
யுக யுகங்களாய்.

எனக்கிது பிடித்திருக்கிறது

ஆம்..
எங்கோ ஆழாதியாழத்தில்
இருக்கும் அந்த ஒன்றின் மீதான
தாகத்தின் இறுதித் துளி
நாவினடியில் பத்திரமாய் இருப்பது தெரிந்திருக்கும் வரை
இது எனக்குப் பிடித்ததாகவே இருக்கும்

ஆனால்
அது என்னவென்பதோ
அல்லது நான் எப்பொழுது அதை அடையப் போகிறேன் என்பதோ
அல்லது எனக்கு எப்பொழுது அது கிடைக்கப் போகிறது என்பதோ

இவற்றில் ஏதோவொன்று உறுதிப்பட்டாலும்
அதே கணத்தில்
ஒரு பிரளயம் என்னை சந்திக்கக் காத்திருக்கும்
என்பது தெரிந்திராத வரை மட்டுமே
இது எனக்குப் பிடித்ததாக இருக்கும்

தெரிந்த நிலையிலிருந்து
தெரிந்து கொள்ளாத நிலைக்கான
எனது பயணம்
தேடலின் மீதான ஆசையாகித்
தொலைந்து கொண்டிருக்கிறது

நான் விழுந்து கொண்டிருக்கிறேன்
இப்பொழுதும்..

Read more...

Monday, November 15, 2010

முலைக்கடிகை


கைகளாலும்,முலைகளாலுமான
இரு பரிமாணம்
காலத்தோடுமியைந்து
முப்பரிமாணமானது
இப்போதாவெனத் தெரியவில்லை

ஆனாலும்

தீரத் தீரத்
திருப்பி வைக்கும்
பதைப்பில்லாத கைகள்
தளர்தலில் ஆழ்ந்திருந்தன

ஏனென்றால்

மேசையில்
நேர்குத்தாக நிறுவப்பட்டிருக்கும்
உனதிரு முலைகளினிடையே
சன்னமாய்
உதிர்ந்து கொண்டிருக்கும்
நம் பிரியத்தின் பொன் துகள்கள்
நின்றுபோகும் அளவை
காலத்துக்குள்
காலமாகி விட்டதால். 

Read more...

Sunday, November 14, 2010

ஓவியத்தின் கண்


உள்ளாடைக்குள் உருண்டு கொண்டிருந்த
நிர்வாணம் திசையறு வடிவில் நீண்டிளகி
முகத்தின் பரப்பில்
வெளிறி முடிவுற்றது

பாகங்களைக் குறித்த பிறகு
கண்ணின் படம் வரையத் துவங்கும்
குருடனின் ஓவியத்திலிருந்து
உதிரத் துவங்கின கண்கள்

நேற்று பெய்ததும்,
இன்று பெய்வதும் பொதுவாய்
மழையென்றுணர்ந்தாலும்

அவை வேறென்றறியத்
தேவை

உதிரிக் கண்களில்
நனையாதவொன்றை
மழையென்றழைத்தலில்
இல்லாதவுண்மை

Read more...

Friday, September 24, 2010

Band of Brothers! – சில கருத்துகள், பகிர்வுகள்..



Saving Private Ryanல் துவங்கிய யுத்தத் திரைப்படங்களின் மீதான மோகம், எனையறியாமலேயே என்னுள் காட்டுத்தீயென உருக்கொண்டு, இரண்டாம் உலகப்போரில் நானும் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு ஓடுவது போலெனக்குக் கனவுகள் வருமளவுக்கு யுத்தக்களத்தைக் கதைக்களமாகக் கொண்ட படங்களைப் பார்த்திருக்கிறேன்.

இந்தப் பட்டியலில் இடம்பெற்ற திரைப்படங்களிலேயே ஆகச்சிறந்த படைப்பு என்று கருதக் கூடியது Saving Private Ryan என்றுதான் நினைத்திருந்தேன், சமீபத்தில் Band Of Brothersஐப் பார்க்கும் வரை. HBOவில் வாரமொரு முறையென்று பத்து வாரங்களுக்கு ஒளிபரப்பான இந்த மினி-சீரீஸ், உலகத்தரம் வாய்ந்தவொரு படத்துக்கான எல்லாத் தகுதிகளையும் உள்ளடக்கியதாகவுள்ளது.

Title Cardன் இசையே என்னமோ செய்ய ஆரம்பித்து விடுகிறது. மெது மெதுவாகப் பெயர்கள் திரையில் நகரத் துவங்கிய பின், Executive Producers என்ற titleக்காக நான் காத்திருப்பேன். ஏனென்றால் BOBன் Executive Producers, எனக்கு ரொம்பப் பிடிச்ச Steven Spielbergம், Tom Hanksம்! (ஒரு நல்ல படைப்பாளியின் பணத்தில் உருவாகும் படைப்பு நல்லதாகத்தானே இருக்கும்!) ஒவ்வொரு எபிசோடிலும் அவர்கள் பெயரைப் பார்க்கையில் உள்ளே பொங்கிய உற்சாகம், அவர்கள் மேலான என் பிரியத்துக்குப் பதமான ஒரு சோறு!

Saving Private Ryan-ன் நீட்சிதான் Band Of Brothers என்பது என் அபி! போர் என்ற ஈரெழுத்து வார்த்தை தருவிக்கும் வதையை, வாதையை, போதையைப் பதிவிக்க 120 நிமிடங்கள் போதாதென்பதால்தான், 600 நிமிடங்களுக்கு நம்மைக் கட்டிப் போட்டுப் பாடம் கற்பிக்கிறார்கள் போலும் இருவரும்.

Band Of Brothers-ல் கதையென்றெல்லாம் எதுவும் கிடையாது. போர்! இதுதான் கதை. அமெரிக்க இராணுவத்தின் 101st Air Borne, அதாவது Easy Company எனப்படும் Para-Trooper  (விமானத்திலிருந்து பாராசூட் மூலம் குதித்துப் போர் செய்யும் வீரர்கள்) போர்க்குழுவின் பயிற்சிக்காலம் முதல் (1942), இரண்டாமுலக யுத்தம் முடிவுறுவது வரை (1945) Easy Companyயின் வெற்றிகளை, தோல்விகளை, ஒவ்வொரு வீரனும் போரின் சூழ்நிலைகளை எதிர்கொள்வதை, அதில் சிலர் வெற்றி பெறுதலை, சிலர் தோல்வியுறுதலை, உணவு, நீர் மற்றும் ஐரோப்பியக் குளிருக்குத் தக்க ஆடைகளென்று இன்றியமையாத பொருட்கள் கூட இல்லாமல் போரின் ரணத்தில் அவர்கள் அலைக்கழிதலை, நில்லாது நீளும் இன்னபிற காற்புள்ளிகளை.. என்று ஒரு யுத்தப் பட இரசிகனுக்குத் தேவையான அத்துணை விஷயங்களும் Band Of Brothersல் அடக்கம்.

பத்து எபிசோடுகளில், ஐந்தாறு முறை கண்களில் நீர் பூத்திருக்கும். யூதர்களை அகதிகளாக அடைத்து வைத்திருந்த முகாம் காட்சிகளை நினைத்தாலே பதைக்கிறது. மிகுந்த யதார்த்தமுடன், அச்சு அசல், உண்மைக் காட்சிகளைப் போலவே உருவாக்கியிருக்கிறார்கள். ஜெர்மானியர்களால் கருக்கப்பட்ட யூத உடற் பிண்டங்கள் சிதறிக் கிடப்பதைப் பார்க்கும் அமெரிக்க வீரர்கள் அடையும் அதிர்ச்சி நம்மிலும் அதிர்கிறது.

ஒவ்வொரு எபிசோட் துவங்கும் முன்பும் சில நிமிடங்களுக்கு இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்டு உயிர் தப்பிய நிஜ வீரர்கள் (இன்றைய தாத்தாக்கள்!) சிலர் பேசுவார்கள் பாருங்களேன். அவர்கள் பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் முள்ளாய்த் தைக்கின்றன. கண்களுக்கு முன்பு நடந்தேறிய குருதிக்களரிகளை நினைத்து, குரல் தழு தழுக்க, பேச முடியாமல் விக்கித்துப் போகிறார்கள் சிலர். போலவே நமக்கும்!


 பெரும்பாலான கதாபாத்திரங்கள் முகந்தெரியாத நடிகர்களாம். ஆகச்சிறந்த தேர்வுகள் ஒவ்வொன்றும். Casting was bloody brilliance I ‘d say! அவரவர்களுக்குக் கொடுத்த வேலையைக் கன கச்சிதமாகச் செய்து முடித்திருக்கிறார்கள். குறிப்பாக Major.Richard Winters ஆக வரும் Damian Lewis, மற்றும் Captain.Lewis Nixon ஆக வரும் Ron Livingston. மொத்த சீரீஸுமே உண்மைச் சம்பவங்களைத் தழுவியெடுக்கப்பட்டது என்ற தகவல் சற்று கிலியூட்டுகிறது.

2001ல் வெளிவந்த இப்படைப்பு Golden Globe விருது பெற்றிருக்கிறது.

வெறுமனே வெடித்துச் சிதறும் உடற் குவியல்களை மட்டும் காட்டுவது யுத்தம் சார்ந்தவொரு நல்ல படைப்பின் கருதுகோளாக இருக்க இயலாது. உடன், அவ்வீரர்களைப் பீடிக்கும் உளவியல் அழுத்தக் கூறுகளைக் காட்சிகளின் வாயிலாகப் பதிவு செய்வதும்தான் யுத்த சினிமாவைக் கையிலெடுக்கும் கனவான்களின் கற்பனைக்கேற்ற சக்தி வாய்ந்த சவால். அதிலும் கேள்விக்கே இடமில்லாமல் சபாஷ் போட வைக்கிறது BOB.

என் வரிகள் உங்களுக்கு சற்று உயர்வு நவிற்சியாகப் படலாம். ஆனால் நீங்கள் BOBஐப் பார்க்கக் கூட வேண்டாம். இணையத்தில் அதன் விமர்சனங்களைப் படித்தாலே புரியும், நான் மிகை கூட்டியெழுதவில்லை என்பது.

பத்துப் பாகங்களில் ஐந்தாவதானதை இயக்கியிருப்பவர் Tom Hanks என்பது உபரித்தகவல். அவரேதான் இயக்கினாரா, இல்லை மற்றொரு தயாரிப்பாளர் உதவினாரா என்று கேட்பவர்களுக்கு என்னிடம் பதிலில்லை! J

Steven Spielbergம், Tom Hanksம், மீண்டுமொரு 200 மில்லியன் டாலரைக் கொட்டி உருவாக்கிய The Pacific என்ற மற்றொரு மினி-சீரீஸ் 2010ல் வெளியாகியிருக்கிறது. இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானுடனான அமெரிக்கப் போர் பற்றியது. இதுவும் பத்து எபிசோடுகள். இன்னுமென்ன.. தரவிறக்கியாயிற்று! மற்றுமொரு கொண்டாட்டத்துக்குத் தயாரானது போல் குதிக்கிறது மனது. பார்த்து விட்டு நான் எதுவும் எழுதப் போவதில்லை. நன்றாகத்தானிருக்கும். நீங்களும் ஒரு யுத்தப் பிரியரென்றால் (?!) இவ்விரு படைப்புகளையும் தவற விடாதீர்கள். விடவே விடாதீர்கள்!

BOBஐ ஒரு ரசிகனாக மட்டுமல்லாமல், ஒரு மனிதனாகவும் என் காலத்துக்கும் உடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

-0-

என் கல்லூரிக் காலத்தில் தமிழ் சினிமா சம்பந்தப்பட்ட இருவரை சந்திக்க வேண்டும் என்ற ஆசையிருந்தது. ஒருவர் கமல்ஹாசன். இன்னொருவர் இளையராஜா. இப்பொழுது அந்த ஆசையில்லை என்றல்ல. ஏனோ கால மாற்றத்திலோ, நெஞ்சமுறும் முதிர்வில் நிகழும் சத்தமிலா நகர்வுகளிலோ நீர்த்து விட்டது அவ்வாசை. இப்பொழுது கேட்டால், Steven Spielbergஐயும், Tom Hanksஐயும் சந்திக்க ஆசை என்று சொல்கிறது மனது. இது எத்தனை நாட்களுக்கு என்று தெரியவில்லை. மனமெனும் குரங்குக்குக் கிளைகளுக்கா பஞ்சம்?

கீழே நான் கொடுத்திருக்கும் வீடியோக்களைப் பாருங்களேன் (I Insist!).


சந்திக்க ஆசைப்படுகிறேன் என்று நான் சொன்ன இருவரும், ஆஸ்கர் விருது வாங்கிய மேடையில் கூட எத்தனை அடக்கத்துடன், நேயத்துடன் பேசுகிறார்கள் என்பது புலனாகும்.

Tom Hanks அவர் மனைவியின் மேல் எத்தனை காதலுடன் பேசுகிறார் பார்த்தீர்களா? (...and I am standing here because the woman I share my life with, has taught me and demonstrates for me everyday, just what Love is!)

Spielberg சொல்லவே வேண்டாம். அவர் ஆஸ்கர் வாங்கிய இரண்டு படங்களும் அஸ்சாதாரணமான படங்கள். (Schindlers List மற்றும் Saving Private Ryan) அப்படியிருந்தும் அவரால் இவ்வளவு அடக்கத்துடன் எப்படித்தான் பேச முடிகிறதோ?

Schindlers Listக்காக ஆஸ்கர் வாங்கிய மேடையிலேயே, படுகொலை செய்யப்பட்ட அறுபது லட்சம் யூதர்களுக்காகப் பொங்கிய கண்ணீரை மறைக்கத் தெரியாமல் மறைக்கும் அவரின் மனிதம், அவரும் ஒரு யூதர்தான் என்பதால் மட்டுமல்ல என்று நம்புவதால்தான் எனக்கும் வரச்செய்கிறது கண்ணுக்கொன்று வீதம் இரண்டே துளிகளை!

Read more...

Wednesday, September 22, 2010

வார்த்தை விளையாடாமை - 5

காதலி.. என்றழைத்தேன்.

பெயர்ச்சொல்லா..
வினைச்சொல்லா.. என்றாள்.

இரண்டும்.. என்றேன்.

பின்னொரு சமயம்
காதலா.. என்றழைத்தாள்.

நானும்
பெயர்ச்சொல்லா..
வினைச்சொல்லா.. என்றேன்.

அசடு.. இதிலென்ன சந்தேகம்..
என்று சிரித்தாள்..

என்ன செய்ய?
மொழி கூட
அவள் பக்கம்தான்.

Read more...

Thursday, September 16, 2010

மொழியும், மொழி சார்ந்து சொறிதலும்!


மொழியை மையப்படுத்தி எழுப்பப்படும் / இருப்பதாக நீட்டி முழக்கப்படும் உணர்வெழுச்சிகள், அம்மொழியின் வளர்ச்சியைக் காட்டிலும், தனிப்பட்ட சிலரின் ஆதாயங்களுக்காகவும், அரசியலுக்காகவும் பலிகடாவாதலே வரலாற்றின் பெரும்பான்மைப் பக்கங்களில் காணக் கிடைக்கின்றன. தமிழுணர்வு என்ற வார்த்தையைப் போல கன்னடவுணர்வு, தெலுங்குணர்வு என்றெல்லாம் கூட இருக்குமா என்று அவ்வப்போது என் சிற்றறிவிலோர் ஐயப்பாடு தோன்றுவதுண்டு. கன்னட ரக்ஷண வேதிகே என்ற அமைப்பு அவ்வப்பொழுது அடிக்கும் கூத்துகளுக்கெல்லாம் வேறென்ன பெயர் சொல்வது எனக்கு நானே பதிலையும் சொல்லிக் கொள்வேன்.

வரம்புகளுக்கப்பாற்பட்டு தமிழ் சார்ந்த உணர்வு இருப்பதானவொரு தோற்றம் தமிழ்நாட்டில் தென்பட்டாலும், அதற்கான வழியில் நாம் நடந்து கொள்கிறோமா என்று சற்று சிந்தித்தால், பெரியதொரு ஓட்டை விழுந்த அரை டிரவுசர்தான் நினைவுக்கு வருகிறது.

சமீபமாய் நிகழ்ந்தேறிய மாநாட்டுக் குழப்படிகளிலிருந்து தப்பிப்பதற்காகவேனும் அண்டை மாநில வாசம் உதவியதே என்று நான் நினையாத நாளில்லை அக்காலத்தில். சென்ற வாரம் கோவை சென்றிருக்கும் பொழுது ஒரு கடையின் பெயரை கவனித்தேன். குவாலிட்டி அடுமனைஎன்றிருந்தது. இப்பெயரில் எது தமிழ்? Quality Bakes என்றிருக்கும்போது அப்பெயர் நல்லதொன்றாகத்தான் பட்டது. அக்கடையின் வகைமையைத் தமிழ்ப்படுத்தினால் போதுமா? அக்கடையின் அடையாளமாய் விளங்கும் பெயரையும் translate செய்திருந்தாலல்லவா நீங்கள் செய்ய விழைந்த பணி முழுமையடைந்திருக்கும்? ஏன் இப்படி அரைகுறையாக transliterate செய்து, ஏதோ தமிழ்த்தொண்டு புரிந்தாற் போலான சீன் போடுவானேன்?

0

சரி போகட்டும். நம் பெயரை தமிழில் எழுதச் சொன்னால் நம்மில் எத்தனை பேர் நம் இனிஷியலையும் (இனிஷியலுக்குத் தக்க தமிழ் வார்த்தை தெரியாத குற்றத்தை தமிழன்னை கண்டுகொள்ள மாட்டாளாக!) தமிழில் எழுதுகிறோம்? என் பெயரை எப்பொழுது எழுதினாலும் மதன்.வே என்றெழுதும் பழக்கம் எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனால் நல்லவேளையாக அப்படித்தான் சிறு வயது முதலே எழுதி வருகிறேன்.

எனக்குப் பிடித்த எழுத்தாளர்களுள் ஒருவரான அபிலாஷின் பெயர் எங்கு கண்டாலும் ஆர்.அபிலாஷ் என்றுதான் இருக்கிறது. அவரைக் குற்றம் சொல்வது என் நோக்கமில்லை. உதாரணத்திற்கு அவர் பெயர்தான் எளிதில் சிக்கிற்று. அவர் மட்டுமல்ல. நம்மில் பெரும்பாலானோர் செய்யும் காரியந்தானிது. சுட்டிக் காட்ட வேண்டுமென்பதல்ல. திருத்திக் கொள்ள வேண்டுமென்பதே நோக்கு!

0

நான் அலுவலகத்துக்கு cabல் தான் செல்ல வேண்டும். நரகத்தனமான போக்குவரத்தில் நாள் முழுவதும் பாடுபடும் வண்டியோட்டிகளுக்கு FM ரேடியோ என்பது மிகப்பிடிக்கிறது. அவர்கள் புண்ணியத்தில் 'போக' மற்றும் 'வர' என்று ஒரு நாளைக்கு ஒன்றரை மணிநேரம் கன்னடத் திரைப்பாடல்களைக் கேட்டு, நான்காண்டுகளில் ஓரளவுக்குக் கூடவே பாடுகிறேன்.

இதில் கவனிக்கத் தக்க அம்சம் என்னவென்றால், கன்னட நாட்டையும், மொழியையும் பற்றி இவர்கள் பாடியிருக்கும் அளவுக்கு நிச்சயமாக நம் எம்ஜியார் தொட்டு இன்றுவரையான நடிகர்கள் கூட முயற்சித்ததில்லை எனலாம். எதற்கெடுத்தாலும் கன்னட மாத்தே.. , நம்ம நாடூ.. கரூ நாடூ.. , ஆச்சா போச்சா என்கிறார்கள்.

சாம்பிளுக்கு ஒரு பாடலைப் பற்றி சொல்கிறேன். சில முறை கேட்டதிலிருந்து எனக்கந்தப் பாடலின் ட்யூன் பிடித்திருந்ததால் முணுமுணுத்துக் கொண்டிருந்தேன். கற்பனையில் டாக்டர்ர்ர் ராஜ்குமார் அவர்கள் பாடுவதாக ஒரு கற்பனைக் கழுதை வேறு ஓடிக் கொண்டிருந்தது.

ஒருநாள் ஆர்வம் தாங்காமல் யூட்யூபில் பார்த்தால், நம்ம எஸ்பீபீ அவர்கள் பாடி, நடித்திருந்தார். அநேகமாக அவர் வெயிட் போட ஆரம்பித்திருந்த சமயமாகவிருக்கும். ஒரு மேடையில் நின்று, சங்கடமே படாமல் கையைக் கையை மேலே தூக்கிப் பாடிக் கொண்டிருந்தார். அவர் எதைச் செய்தாலும் மிகுந்த தொழில் பக்தியுடன் செய்வாராதலால், இந்தப் பாடலிலும் உணர்வு பொங்க நடித்திருந்தார். பாதகமில்லை. ஆனாலும் எனக்கேனோ ஏதோ ஒன்று உறுத்தியது. அவ்வுறுத்தல், அடிப்படையில் ஒரு தெலுங்கரான இவரைக் கன்னடவுணர்வு பொங்கும் ஒரு பாடலுக்கு நடிக்க வைத்துக் கொண்டாடும் கன்னட சமூகம் குறித்தானதா.. அல்லது மூன்று மொழிகளிலுமே இம்மாதிரிப் பாடல்களைப் பாடியிருக்கும் இவர், தன் தாய்மொழியுணர்வுக்குப் பாடுகையில், சற்றேனும் குற்றவுணர்ச்சி வராதா என்பது குறித்தானதா என்று புலனாகவில்லை.

இந்தப் பாடலின் முதல் சில வரிகள்:

இதே நாடூ.. இதே பாஷே..
எந்தெந்தூ நன்னதாகிறலி..
எல்லே இரலி.. ஹேகே இரலீ..
கன்னடவே நன்ன உசிரல்லி..

அது இன்னா மேட்டர்னா.. இதே நாடும், இதே பாசையும் என்னிக்கும் இவ்ரோடத்துதானாம். மேல சொன்னாக்கா.. எங்கேந்தாலும், எப்டீந்தாலும், கன்னடந்தா இவ்ருக்கு உஸுராம்!

பாடலைக் காண!


0

என்னமோ போங்கப்பா.. நமக்கும் ஓடுகிறது வாழ்க்கையெனும் வண்டி.

பிழைத்துக் கிடந்தால் சந்திப்போம்! :)

Read more...

Tuesday, September 14, 2010

ஸ்வர்ணலதா!

மனதுக்கு மிகவும் நெருங்கிய பாடகி ஸ்வர்ணலதா அவர்கள் காலமான செய்தி கேட்டு வேதனையடைந்தேன்.

சில வாரங்களுக்குப் பின்னர் இன்றுதான் வலையைத் திறந்தேன். பார்த்தால், அவர் காலமான செய்திக்குப் பின், ஸ்வர்ணலதாவின் பெயரை இணையத்தில் தேடிய சில அன்பர்கள் ஸ்வர்ணலதா என்றொரு குயில்குரலி என்ற இந்தக் கட்டுரையைப் படித்திருந்தார்கள்.

நல்லதொரு பாடகிக்கு என்னாலானதைச் செய்ய இயன்றதே என்ற எண்ணம் தரும் திருப்தி போதுமானதாக இல்லை, மனதுக்குள் நேற்று முதல் என்னையறியாமல் கேட்டுக் கொண்டேயிருக்கும் இந்தப் பாடலின் காரணமாக! :(

Read more...

Tuesday, August 17, 2010

தெரிந்தும் தெரிந்துமே



















அழ வேண்டும் என்று
முடிவு செய்தால்
எத்தனை சத்தமாக அழ முடியுமோ
அத்தனை சத்தமாக அழ வேண்டும்

அழ வைக்க வேண்டும் என்று
முடிவு செய்தாலோ
எந்தளவுக்கு சத்தம் வராமல் அழ முடியுமோ
அப்படி அழ வைக்க வேண்டும்

ஒப்புக் கொள்ள வேண்டுமென்று
தோன்றிவிட்டால்
செய்ததில் பாதியை எல்லோர் முன்பும்
ஒப்புக் கொள்ள வேண்டும்

காட்டிக் கொடுக்க வேண்டுமென்று
தோன்றிவிட்டாலோ
செய்யாததில் பாதியையும்
குறிப்பிட்ட மிகச்சிலரிடம்
காட்டிக் கொடுக்க வேண்டும்

நம்மைப் பெருமைப்படுத்துபவர்கள்
குனிந்து நம் மணிக்கட்டில்
முத்தமிட்டால் போதுமானது

நாம் பெருமைப்படுத்துபவர்களுக்கோ
குனிய வைத்து
பின்புறம் முத்தமிட வேண்டும்

தற்கொலை செய்துகொள்ள
வேண்டுமென்று யோசித்தால்
எவ்வளவு கொடூரமாகச் சாக முடியுமோ
அவ்வளவு கொடூரமாகச் சாக வேண்டும்

கொலை செய்வதைப் பற்றி யோசித்தாலோ
எத்தனை சாந்தமுடன்
ஒரு கொலை சாத்தியப்படுமோ
அவ்வண்ணம் நிகழ்த்த வேண்டும்

சரி.
இவையெலாம் எதற்காக?

தெரிந்தோ தெரியாமலோ
நமக்கென வாய்த்து விட்ட
அனுதாபத்தையோ,
பெருமிதத்தையோ
தக்க வைத்துக் கொள்ளவும்

அதைவிட முக்கியமாய்

தெரிந்தோ தெரியாமலோ
பிறருக்கென வாய்த்து விட்ட
அனுதாபத்தையோ,
பெருமிதத்தையோ
தெரிந்தும் தெரிந்துமே
சிதைத்தொழிக்கவும்


நன்றி: உயிரோசை 16/8/2010

Read more...

Sunday, August 8, 2010

காலத்தின் You டர்ன்

துளிர்த்தலின் மீதான கனவுடன்
கிளையைத் தேடி
மேலெழும்பிய சருகுக்கு
பின்னகரும் காலத்தின்
துவக்கப் புள்ளி
சூட்சுமம்
உறைத்திருக்கவில்லை

விதைக்குள் திணிவதற்காகக்
கீழிறங்கிக் கொண்டிருந்த
மரத்தின் செடியை
நடு வழியில்
காணும் வரை

Read more...

Thursday, July 29, 2010

சில ஹாடம்பாக்கத் திரைப்படங்கள்..

மஞ்சளாய் இருத்தலை விட வெளுத்த மதியங்கள்தான் இந்நாட்களில் அதிகம் வாய்க்கின்றன பெங்களூரில். வெயில் நாட்களில் கடவுள் குண்டு பல்பு போட்டுவிட்டார் எனவும், வெயிலில்லாத குளிர் நாட்களில் ட்யூப் லைட் போட்டுவிட்டார் எனவும் சிறு வயதில் எண்ணித் திரிந்திருக்கிறேன். அதுபோன்றதொரு ட்யூப்லைட் மதியத்தில் எழுதத் துவங்குகிறேன்.

உடன் எவருமில்லாத நாட்களைப் பொசுக்கும் எரிபொருளுக்காகவேனும் என்னால் எல்லாக் கோணங்களிலும் புணருறும் மடிக்கணினியில் சமீபமாய் பார்த்த சில ஆங்கிலத் திரைப்படங்களைப் பற்றி சில வார்த்தைகள் பேச உத்தேசம்.


 Bob Zemeckis எனக்குப் பிடித்த இயக்குனர்களிலொருவர். Forrest Gump அவர் இயக்கியவைகளுள் நான் பார்த்த முதல் திரைப்படம். மூன்று முறை பார்த்த  பின்னர்தான் Tom Hanks என்ற எக்காளமிடும் நடிப்பாசுரனைத் தாண்டி இயக்குனரின் யுக்திகள் புலப்படவே துவங்கின. இருவருக்குமே ஆஸ்கரைப் பெற்றுத் தந்த பெருமைக்குத் தகுதியான படம் Forrest Gump.

Zemeckis, Forrest Gumpக்கு முன் இயக்கிய படம் Back to the Future. தலைப்பே கவிதை. அறிவியற் புனைகதைகளின் காட்ஃபாதர் கான்செப்ட்டான டைம் மெஷின் கதை. 1985ல் வெளிவந்தது. டைம் மெஷினைப் பயன்படுத்தி எதிர்பாராமல் 30 ஆண்டுகள் பின்னே (1955க்கு) சென்று விடுகிறான் கதையின் 18 வயது நாயகன் Marty.

30 ஆண்டுகள் வித்தியாசத்தில் அவன் நகரம் சந்தித்திருக்கும் மாற்றங்கள், காலாச்சார, வாழ்வியல் மாற்றங்களென்று எல்லாவற்றையும் கதையின் போக்கிலேயே சுட்டிக் காட்டுகிறார் Zemeckis. Marty பருவ மங்கையாகவிருக்கும் தன் தாயைப் பார்க்கிறான். நண்பர்களிடம் அடிவாங்கும் அசடாக தன் தந்தையைப் பார்க்கிறான். தாயோடு பேசுகையில் நீ இவ்ளோ ஒல்லியா..என்று ஆரம்பித்துத் தடுமாறுவதில் துவங்கி, அவன் தாய் தந்தைக்குள் ஈர்ப்பு வர அவனே உதவுவது வரை காட்சிகள் சுவாரசியம் மங்காது செல்கின்றன.

அவன் வேண்டாமென்று சொல்லச் சொல்ல, அவன் தாய் அவனுடன் சல்லாபிக்க ஆசைப்படும் காட்சிகள் கொஞ்சம் கொழ கொழா. நல்ல வேளையாக முத்தம் கொடுத்த பின்பு, உன்னை முத்தமிடுவது என் சகோதரனை முத்தமிடுவது போலத்தானிருக்கிறது என்று சொல்லிவிடுகிறாள் தாய்.

நிகழில் டைம் மெஷினைக் கண்டறிந்த புத்திஜீவியும் அப்போது இளமையாக இருக்கிறார். தான் எதிர்காலத்தில் கண்டறியப்போகும் டைம் மெஷின் பற்றிய அரைகுறைக் குறிப்புகளை Martyயிடம் அவரே பெற்றுக் கொள்கிறார். அவரின் உதவியுடன் Marty மீண்டும் எதிர்காலத்திற்கு எப்படி வருகிறான் என்பதுதான் ஒற்றை அங்குல லாஜிக் கூட பிசகாமல் Zemeckis உருவாக்கியிருக்கும் Back to the Future. இந்தப் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து மூன்று பாகங்கள் வந்துள்ளனவாம். எல்லாவற்றையும் பார்க்கலாமென்றிருக்கிறேன்!


அடுத்து Beowulf. இதுவும் Zemeckisன் படைப்புதான். தொழில்நுட்ப அடிப்படையில் வலிமையான திரைப்படம். ஆனால் கதை என்றெல்லாம் சொல்லிக் கொள்ளும்படி எதுவுமில்லை என்னைப் பொறுத்தவரை. சும்மா ஒரு monster வந்துச்சு. அதக் கொல்ல ஒரு ஹீரோ வேணும். ஆ.. தோ வந்துட்டாண்டா Beowulf..  என்பதாய்த் தொடரும் fantasy heroism வகையறாதான் Beowulf.  

இதில் monsterன் அம்மாவாக வரும் ஏஞ்சலினா ஜோலியை ஏன்தான் அரை நிர்வாணியாகவே அலைய விட்டார்களோ. அனிமேஷன் திரைப்படம் என்பதொரு சிறப்பம்சம். ஒருமுறை பார்க்கலாம்.. இஷ்டப்பட்டால்!


 A Clock Work Orange. IMDB-ன் தரவரிசைப் பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் எப்போதும் இருக்கும் படம். காலஞ்சென்ற திரைமேதை Stanley Kubrick இயக்கியது. மிகு வன்முறையும், பாலியல் வன்கொடுமை குறித்த எள்ளலும் படத்தை மூன்று நான்கு முறை வயதுக்கு வரச் செய்திருக்கின்றன. 1971லேயே ஹாலிவுட்டில் இத்தகு படங்கள் சாத்தியமாகியிருக்கின்றன என்பது ஆச்சரியத்திற்குள்ளாக்குகிறது.

முதற் பாதியில் கதையின் மையப் பாத்திரத்தின் மேல் நமக்கு ஏற்படும் அளவு கடந்த கோபம், பிற்பாதியில் கருணை வழியும் பரிதாபமாய் நம்மையறியாமலேயே உருமாறுவதில் இருக்கும் ஆச்சர்யம், அது நிகழ்ந்து முடிந்த பின்தான் நமக்குப் புலனாகிறது என்பதில் Stanley Kubrickன் மேதைமை பளிச்சிடுகிறது. A Classical Thriller!


ஆ.வி ஹாய் மதன் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்னொருமுறை கமல்ஹாசனுடன் Spartacus படத்தின் பெருமைகளைப் பேசினால், பேசிக் கொண்டேயிருக்கலாம்.. என்று மதன் (எ) கோவிந்த குமார் (!) சொல்லியிருந்தது நினைவில்(ஏயே) இருந்த ஒரே காரணத்துக்காகவே Spartacus படத்தைத் தரவிறக்கினேன். 1960ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது மூன்றே கால் மணி நேரம் ஓடும் இந்தப் படம்.

ஆச்சரியம் என்னவென்றால் இப்படமும் Stanley Kubrick-னுடையதுதான் என்பது படம் ஓடத் துவங்கிய பின்னர்தான் தெரிய வந்தது. பணத்திற்காக விற்கப்படும் அடிமாட்டு அடிமைகளாயிருந்து, மக்களின் குரூர ரசனைக்காக சண்டையிட்டு மடியும் க்ளாடியேட்டர்களைப் பற்றி அப்போதே படமெடுத்து விட்டார்கள் என்பது கூட பிறகுதான் தெரிய வந்தது. இந்த விஷயத்தில் Ridley Scottஐத்தான் முன்னோடியென்று நினைத்திருந்தேன்.

இரண்டு தலைமுறைகளுக்குப் பிந்தைய ஒருவன், 50 ஆண்டுகளுக்குப் பின்னரும் பார்க்கும் வகையில் தொய்வில்லாமல் எடுத்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் சிறையிலிருந்து தப்பிக்கும் அடிமைகள் தடுப்பு சுவராக வைக்கப்பட்டிருக்கும் இரும்புக் கம்பிகளை ஒரு கும்பலாகத் தலைக்கு மேல் தூக்கி, இன்னொரு தடுப்பின் மீது மோதிச் சாய்க்கும் காட்சி. என்னடா எங்கேயோ பார்த்தது போலிருக்கிறதே என்று யோசித்தால்.. ஆம்.. அதேதான்.. விருமாண்டி க்ளைமேக்ஸ்.

எதையெதையெல்லாம் உருவலாம் என்பதற்காக சினிமாக்காரர்கள் உலக சினிமா பார்க்கிறார்கள். எதையெதையெல்லாம் உருவியிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்காக ரசிகர்களாகிய நாம் உலக சினிமா பார்க்கிறோம். ஆஹா.. இப்படியல்லவா வாழ வேண்டும் கலை!

இந்த லட்சணத்தில் கோடம்பாக்கத்தை கோலிவுட் என்று சொல்லக் கூடாதாம். ஹாலிவுட்டைத்தான் ஹாடம்பாக்கம் என்று சொல்ல வேண்டுமாம். இந்தக் கருத்தை உதிர்த்த நடிகரின் பொன்விழாக் கொண்டாட்டத்தில் அல்லக்கை ஒருவர் இதைப் பெருமையாக வேறு சொல்கிறார். யப்பா.. சாமி.. உங்கள் தன்னம்பிக்கைக்கு ஒரு அளவில்லையா.. எங்கள் கோய்ந்த்தூர்ப்பக்கம் சொல்லும் ஒரு பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. கேக்கறவன் கேணயனா இருந்தா எரும் மாடு கூட ஏரோப்ளேன் ஓட்டுமாம்..

கமல்ஹாசன் எதற்கு இப்படி சொன்னார்.. இது டி.ராஜேந்தர் டைப் வசனமாக இருக்கிறதே.. என்றுதான் நினைத்தேன். டி.ராஜேந்தர் தானே நிஜத்தை மறந்து விட்டு இப்படி தன்னம்பிக்கைக் குழைச்சலாக உளறிக் கொட்டிக் கொண்டிருப்பார்? உங்கள் மேலெல்லாம் கொஞ்ச நஞ்சம் நம்பிக்கை மிச்சமிருக்கிறது அய்யா. பேசுவதை.. கொண்டாட்டங்களை.. விருதுகளை.. இவைகளையெல்லாம் நிறுத்திவிட்டு செயலில் காட்டுங்களேன்.. ப்ளீஸ்!

ஒரு நடிகருக்குக் குழந்தை பிறந்ததை சிங்கத்துக்கு சிங்கம் பிறந்திருப்பதாக எஸ்ஸெம்மெஸ்ஸிக் கொண்டாடும் ரசிகர் மந்தைகளான எங்களை வைத்துக் கொண்டு இந்தப் பேச்செல்லாம் ரொம்பவே ஓவராகப்படுகிறது! 


சும்மாயிருக்காமல் பார்த்துத் தொலைத்த இன்னொரு படம் Patch Adams. இது இன்னும் மோசம். ஹாலிவுட்டிலிருந்து இந்திக்கு வந்து, அங்கிருந்து ஒட்டுமொத்தத் தென்னிந்தியாவும் காப்பியடித்த முன்னாவசூல் ராஜாபாய்க்களின் மூலம்தான் Patch Adams.

Memento – கஜினி, Derailed – பச்சைக்கிளி முத்துச்சரம், Planes, Trains and Automobiles அன்பே சிவம்.. என்று நீளும் பட்டியலைப் பற்றியெல்லாம் யாராவது பேசுவீர்களா.. ம்ம்.. மூச்ச்..!

எங்கேயோ துவங்கி, எங்கோ சென்று விட்டேன். அதனாலென்ன.. பரவாயில்லை. அப்படி எழுதினால்தானே பின்னால் உட்கார்ந்திருக்கும் நவீனாவின் கள்ளக் காதலனென்று ஒத்துக் கொள்வார்கள்!

Read more...

Thursday, July 22, 2010

வார்த்தை விளையாடாமை - 4

தொலைபேசிக் கொண்டிருந்தேன்
அவளுடன்

அவள் பேசுவதையெல்லாம்
அவளின் துடுக்குத் தோழி
அவளைப் போலவே
திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பது
எனக்கும் கேட்டது

திரும்பச் சொல்ல முடியாதபடி
'என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ'
என்று சொல்லச் சொன்னேன்

எவளிடமும் அவள்
தோற்கக் கூடாது
என்ற ஆணவத்தில்

தோழி சொல்ல முடியாதபடி
எதுவுமே சொல்லவில்லை அவள்

எவரிடமும் என்னைத்
தோற்கக் கூடாது
என்ற அன்பில்..

Read more...

Friday, July 16, 2010

உன்னதத்தின் போதனை


இதில் கூச்சப்பட
ஏதுமேயில்லை

வாருங்கள்
கற்றுக் கொள்வோம்

நிரம்பி வழியும்
இதயத்தின் கனத்தில்
தாழும்
இடப்புற விதை மறந்து
கரும்புறத்து இத்யாதிகளை
வலப்புறமே வைத்துக் கொள்வது
எப்படி என்பதை.

Read more...

Monday, July 12, 2010

மஞ்சள் விளக்கடி விளையாட்டு

ஊருக்கு வந்து சேரும் காலைகள் பெரும்பாலும் ஒரே போன்றிருக்கக் கூடியவை. காந்திபுரத்து மாற்றங்களில் துவங்கி அடுத்த 18 கிமீ தொலைவு வரைக்கும் என் நகரம் சந்தித்திருக்கும் மாற்றங்களை அசைபோடும் சன்னலோரப் பயணங்களாய் பனி வழிபவை.

சமீபத்தில் மொழிக்காக எடுக்கப்பட்ட மாநாடு எந்தளவுக்கு மொழிக்குத் தொண்டு செய்ததென்று புரியாவிடினும், சாலைகள் சற்று மெருகேறியிருந்ததும், நகருக்குப் பூசப்பட்டிருந்த சந்தர்ப்பவாத அரசியல் டால்கம் பவுடர்கள் மணம் மங்கத் துவங்கியிருப்பதும், சுள்ளென்றடிக்கும் உண்மையின் வெயிலால் வழியும் வியர்வையில் அவை வெள்ளைத் திட்டுகளாக அப்பியிருப்பதும், பாதியில் நிறுத்தப்பட்டிருந்த சாலைப் பணிகளை சப்பாத்திக் கட்டை கொண்டு தேய்த்து மக்களேதான் முடித்துக் கொள்ள வேண்டுமாவென்பன போன்ற கேள்விகளுடனும் சூலூர் வந்து சேர்ந்தேன்.

எப்பொழுதும் வாரக்கடைசிகளில்தான் ஊருக்கு நம் விஜயம். ஆனால் இந்த முறை அதிர்ஷ்டவசமாக வியாழன் முதல் ஞாயிறு வரை நான்கு நாட்கள் அம்மா கை சாதம் வாய்த்திருந்தது. இதனைப் பயன்படுத்திக் கொண்டு நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் சில பணிகளை முடிக்க உத்தேசித்திருந்தேன். அவைகளில் ஒன்று என் பள்ளிக்குச் சென்று, பள்ளியையும், ஆசிரிய, யைகளையும் பார்த்து வருவதென்பது.

காலை 10 மணிக்கே கிளம்பி விட்டேன். நடக்கத் துவங்கிய அதே வழியில்தான் பன்னிராண்டுகள் பள்ளிக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் இன்றென்னை அந்தப் பாதையில் வசிக்கும் மக்கள் அந்நியமாகத்தான் பார்க்கிறார்கள். என் வெளுத்துப்போன ஜீன்ஸும், டீ ஷர்ட்டும் அவர்களிடமிருந்து என்னைத் தொலைவுறச் செய்ததில் ஆச்சரியமேதுமில்லை. வழியில் தென்பட்ட சில முகங்கள் சிரிப்போடு நிறுத்திக் கொண்டன. சில அப்பாவை விசாரித்தன. சில என் இருப்பையும், பணியையும் பற்றிய வழக்கமான கேள்விகளைக் கேட்டன. ஊருக்குச் சென்றால் திரும்பும் வரை இன்ஸ்டண்ட் புன்னகையொன்று உதட்டோரமாக இருத்தல் அவசியம்.

பள்ளிக்கருகில் சென்றுவிட்ட போது சற்று பதட்டமாகவும், அதே சமயம் excitement (குதூகலம்?!) ஆகவும் இருந்தது. 1947ல் துவங்கப்பட்ட சூலூர் அரசினர் ஆண்கள் மேனிலைப்பள்ளியின் படர்ந்திருந்த அமைதி உள்ளுக்குள் சென்று எங்கோ இடித்து நின்றது.

பார்வையின் ஒவ்வொரு நகர்வுடனும் மோதித் தெறித்துக் கொண்டிருந்த நினைவுத் துளிகளில் சறுக்கிச் செல்தல் வயதை மறக்கடித்துக் கொண்டிருந்தது. காலத்தின் ஊமை சாட்சிகளாய் நின்றிருக்கும் ஒவ்வொரு மரத்திற்கு அருகிலும் சென்று நலம் விசாரிக்கத் தோன்றியது.

பால்யத்தின் பச்சை நினைவுகள் இரவு இரயில் பயணத்தில் காணும் தூரத்து மஞ்சள் விளக்குகளாய் மினுக்கின. என் பயணத்தை விட்டிறங்கி அந்த வெளிச்சத்தை நோக்கி நடக்கத் தொடங்கலாமா என யோசிக்க வைத்தன. ஆனால் அது அத்தனை சுலபமில்லையே.

நாங்களனைவரும் புத்தகத்தை விரித்துக் கொண்டமர்ந்து படிப்பதாகப் பாவனை செய்யும் அந்த அரங்கைக் கடந்து, தலைமையாசிரியர் அறைக்குச் சென்றேன். நான் படிக்கும் போதிருந்த தலைமையாசிரியர் ஓய்வு பெற்று விட்டதால் இப்போதிருப்பவருடன் மனம் அத்துணை ஒன்றவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சம்பிரதாயமான பேச்சுகளைத் தவிர வேறு எதுவும் சாத்தியப்படவில்லை. மற்ற ஆசிரியைகளைக் கண்டு வருகிறேன் என்று கூறிவிட்டு 10ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியைகள் அறைக்குச் சென்றேன்.

தொலைவில் செல்கையிலேயே தெரிந்தது. ஒரே ஒரு ஆசிரியை மட்டுமே Teacher’s roomல் அமர்ந்திருந்தார். பின்புறமிருந்து பார்க்க எவரெனத் தெரியவில்லை. அறைக்குள் சென்று திரும்பிய பின்னர்தான் மகிழ்ச்சி பிரவாகங் கண்டது. ஆம். யாரைப் பார்க்க வேண்டுமென்று மிகவும் ஆசைப்பட்டேனோ.. எங்கே இன்றென்று பார்த்து லீவெடுத்திருப்பார்களோ என்று பயந்திருந்தேனோ.. அதே இராதாமணி ஆசிரியை அவர்கள்.

மிஸ் என்னைத் தெரிகிறதா என்று கேட்டேன். மெள்ளத் தலை நிமிர்த்தி என்னைக் கண்டவர், முகம் ஞாபகத்திலிருக்கிறது. ஆனால் பெயர் மறந்து விட்டது என்று கூறினார்கள். வயோதிகத்தின் சுருக்கங்கள் நினைவின் தடங்களிலும் விழுந்திருந்தன. எந்த பேட்ச் என்றார்கள். என்ன படிச்ச என்றார்கள். என்ன செய்ற என்றார்கள். எங்க இருக்க என்றார்கள். ஒவ்வொரு பதிலுக்கும் அவரின் முகப் பிரகாசமும், புன்னகையின் அடர்த்தியும் கூடிக் கொண்டேயிருந்தன.

என்னதான் சொல்லுங்கள். இங்கே எத்தனை கஷ்டமிருந்தாலும், ஊருக்குச் செல்கையில் என்னப்பா செய்ற என்ற கேள்விக்கு, சாஃப்ட்வேர் என்ஜினியர் என்று சொல்லுகையில் என்னுள்ளே உணரப்படும் சராசரித்தனம், கேட்பவரின் மகிழ்ச்சியை, ஆச்சர்யத்தைக் காணும் போது சற்றே பெருமையாக உருக்கொள்ளத்தான் செய்கிறது. அந்த மகிழ்ச்சிக்குப் பின்னால் படிக்காத (அ) படித்தும் வேலை கிடைக்காத சில சொந்த (அ) சொந்தக்காரப் பிள்ளைகளுக்கான சோகம் இழையோடுவதை நான் நன்கறிவேன். நாம் ஒன்றும் பெரிதாக சாதித்து விடவில்லை என்பதை எப்படிப் புரிய வைக்க என்று தோன்றும்.

நான் பேச ஆரம்பித்தேன்.

மிஸ் எனக்கு நீங்கனா ரொம்ப இஷ்டம். நான் டெந்த் டீ க்ளாஸ்ல படிக்கும்போது நீங்கதான் சைன்ஸ்க்கு வந்திங்க. Infact அப்போதான் ஃபர்ஸ்ட் டைமா நீங்க எங்க க்ளாஸுக்கு வந்திங்க. உங்களோட way of presentation எனக்கு ரொம்பப் பிடிக்கும். புக்கயே தொடாம பாடம் நடத்தறதப் பாக்கும்போது வகுப்புக்காக நீங்க பண்ணிருக்கற ஹோம் வொர்க் தெரியவரும். முகஸ்துதிக்காக சொல்லலங் மிஸ். It was majestic!

PSGல படிச்ச மூணு வருஷமும் நான் இஃபோரியா-ங்கற கல்ச்சரல் ஃபங்ஷன் காம்பியரிங் பண்ணேன். அதுக்கு உங்களோட way of presentationம், body languageம் one of the inspiration.

SSLC 3ர்ட் ரிவிஷன்ல நான்தான் மிஸ் சைன்ஸ்ல ஸ்கூல் டாப்பர். 97 வாங்கினேன். அதுக்காக நீங்க ஒரு பென் ப்ரெஸண்ட் பண்ணிங்க. அத நான் இன்னும் வெச்சுருக்கேன்.

இன்னும் நிறையப் பேசியிருப்பேன் போல. சற்று மூச்சிரைத்தது முடித்தவுடன்.

மேற்கண்டவையெல்லாம் மற்றவர்களுக்கு சராசரியாகத் தோன்றலாமோ என்னவோ.. எனக்கு மிகவும் precious ஆனவை. எல்லோருக்குமே ஒரு இன்ஸ்பிரேஷன் இருந்தாலும் அதை பெரும்பாலும் நாமெல்லோரும் பகிர்ந்து கொள்வதோ, அதற்கு நன்றி சொல்வதோ இல்லை. நான் அந்தத் தவறை செய்ய விரும்பவில்லை.

மிகவும் சந்தோஷப்பட்டார்கள். தன் பணிவாழ்வின் கடைசி ஆண்டில் தனக்குக் கிடைத்த பெரிய பாராட்டு இது.. இப்போதாவது வந்தாயே என்று சிரித்தார்கள். இவை போன்ற வார்த்தைகளைக் கேட்கையில்தான் தாமும் தம் கெரியருக்கு சிறிது அர்த்தம் சேர்ப்பித்திருப்பதாகத் தோன்றுவதாகச் சொன்னார்கள். ஆனால் முன் போலவெல்லாம் வகுப்பெடுப்பதில்லையாம் இப்பொழுது. ஏதோ ALM என்றொரு பாடமுறையைத்தான் பின்பற்ற வேண்டுமாம். அதன்படி ஆசிரியர்களும், மாணவர்களும் புத்தகத்தினைப் பார்த்துதான் பாடம் நடத்த / கவனிக்க வேண்டுமாம்.

ஆசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் பாடம் நடத்துவதற்கென்று ஒரு ஸ்டைல் இருக்கும். சும்மா அதிலெல்லாம் இவர்கள் ஏன் மூக்கை நுழைக்கிறார்கள் என்று தெரியவில்லை. சரி அது கிடக்கட்டும்.

என் கவிதைத் தொகுப்பைக் கொடுத்தேன். ஒரே சந்தோஷப் பேரின்பம் மீண்டும். இண்டர்வெல்லின் போது அறைக்கு வந்த மற்றும் பள்ளியில் புதிதாய் சேர்ந்திருந்த ஆசிரியைகள் அனைவரிடமும் புத்தகத்தைக் காட்டி எங்க ஸ்டூடண்ட் பாத்திங்ளா.. எங்க ஸ்டூடண்ட் பாத்திங்ளா.. என்று பெருமையோடு சொல்லிக் கேட்கக் கொஞ்சம் குழைவுற்றது உள்.

2002ல் பள்ளிப் படிப்பை முடித்த இந்த 8 ஆண்டுகளில் அப்போதிருந்தவர்களில் இரண்டே இரண்டு ஆசிரியைகள்தான் இப்போதிருந்தனர். இன்னொருவரும் முக்கியமானவரே. தமிழாசிரியை கனகாங்கி அவர்கள். நினைவில் கொள்ளும் கலை என்றவொரு கவிதையில் தமிழாசிரியை பெயரும் வந்திருந்ததைப் பார்த்து, எல்லாருமே சந்தோஷப்பட்டார்கள். அவரும் மிகவும்.

இராதாமணி ஆசிரியை அவர்கள் முன்பை விட இன்றைய மாணவர்களைப் படிக்க வைப்பதிலிருக்கும் நடைமுறை சிக்கல்களைப் பற்றி சிறிது பேசினார்கள். எனக்கும் அவையெல்லாம் நியாயமாகத்தான் பட்டன.

தனியார் பள்ளிகள் போல, சேர்த்துக் கொள்ளும் போதே, மாணவன் திறமையானவனா என்பது முதல் படிப்பதற்கு ஏதுவான சூழ்நிலை அவன் வீட்டில் வாய்க்குமா என்பது வரை எல்லாவற்றையும் கணக்குப் போட்ட பின்னர் மாணவர்களைச் சேர்த்துக் கொண்டு மிகச் சுலபமாக செண்ட் பர்செண்ட் ரிசல்ட் காட்டுவதில்லையே அரசு பள்ளிகள்.

வருபவர்கள் எல்லோரையும் சேர்த்துக் கொண்டு, படிக்க வைக்கத் தொண்டை கிழிவுறப் போராடும் அரசு பள்ளி ஆசிரியர்களைப் பற்றிய பேச்சுகளில் இந்த சமூகத்திற்கு அவர்கள் வகுப்பறையில் தூங்குவதும், இண்டர்வெல் பஜ்ஜி சொஜ்ஜியும் மட்டுமே நினைவுக்கு வருவது அவர்கள் துரதிர்ஷ்டம்.

பரவால்லப்பா.. கவர்மெண்ட் ஸ்கூல் பையன் இந்தளவுக்கு வந்திருக்கன்னா.. என்று புதிதாக வந்த ஒரு மிஸ் ஆரம்பிக்க..

அப்படி நாமளே நம்ம பசங்கள சொல்லக் கூடாது.. என்ன கொறஞ்சு போய்ட்டாங்க நம்ம பசங்க.. என்று சிறிய கோபத்துடன் இடைமறித்துக் கேட்டது நம்ம இராதாமணி மிஸ்தான். அந்தக் கேள்வியில் உறைந்திருந்த நியாயம் எனக்குப் பிடித்திருந்தது.

உண்மைதான். என்ன குறைந்து போய்விட்டது அரசு பள்ளி மாணவர்களுக்கு? எங்களால் இயன்றதனைத்தையும் சாதித்துக் கொண்டுதானே இருக்கிறோம். இந்த ஆண்டு SSLC தேர்வில் அரசு பள்ளி மாணவிதானே மாநிலத்தில் முதல் மதிப்பெண். நம் காலத்தின் சராசரியான ஒரு மாணவன் எட்டக்கூடிய அதிகபட்ச உயரம் சாஃப்ட்வேர் என்ஜினியராவதாகத்தானே இருக்கிறது. தமிழகத்தின் நம்பர் ஒன் பள்ளியான கோபாலபுரம் DAV மாணவனும் இங்குதான் வருகிறான். கார்ப்பரேஷன் பள்ளியில் படித்த நானும் இங்குதான் போஜனத்தை ஓட்டுகிறேன் எனும்பொழுது, அவனுக்கு எப்படி இது இழுக்கில்லையோ அப்படியே எனக்கும் இது சாதனையில்லை. ஆனால் தராசுகள் சில சமயம் ஒரு பக்கமாகச் சாய்கையில் இந்த ஒப்பீட்டை எங்களாலும் தவிர்க்க முடிவதில்லை.

அதற்காக சாஃப்ட்வேர் என்ஜினியராகும் விகிதாசாரம் இருபுறமும் ஒரே அளவிலிருக்கிறது என்று நான் கூற மாட்டேன். பூசணிக்காயை எழுத்திலும் எப்படி மறைக்க முடியும். பொத்தாம் பொதுவாக அரசு பள்ளி மாணவர்களின் திறமையைக் குறைத்து மதிப்பிடுவது தவறென்பதுதான் என் கருத்து.

இந்த மாதிரி ஒரு பையனக் கூப்ட்டு இலக்கிய மன்ற விழாவுல பேசச் சொன்னா என்ன நம்ம ஹெச்செம்க்கு.. நம்ம கொழந்தைகளுக்கும் உபயோகமா இருக்கும்.. என்றார் இராதாமணி ஆசிரியை. என்ன சொல்ல.. என் ஆதிநாட் கனவுகளுள் ஒன்று அது. இந்தக் கேள்வி வருமளவுக்கு என் பாதை சரியாக அமைந்திருப்பதற்கு நன்றி சொல்கிறேன் இறைக்கு. கண்டிப்பாக ஒருநாள் எங்கள் பள்ளி இலக்கிய மன்ற விழாவில் பேசுவேன். அதைப்பற்றியும் எழுதுவேன். நீங்கள் வேண்டுமானால் பாருங்கள்!

அதற்குள் இராதாமணி மிஸ்ஸுக்கு நேரமாகி விட்டது டெந்த் C வகுப்புக்குச் செல்ல. நீ நல்லா வருவ.. என்று கைகளைப் பிடித்து வாழ்த்திவிட்டு, கண்களைப் பிடித்து விடை பெற்று வகுப்பை நோக்கி நடக்கத் துவங்கிய அவர்களை ஏனோ பார்த்துக் கொண்டே இருந்தேன். கருணையே இல்லாத காலம் ஒரு நல்ல ஆசிரியரின் கடைசி ஆண்டினை நொடிகளாகக் கரைத்துக் கொண்டிருந்தது.

மஞ்சள் விளக்கடி விளையாட்டிலிருந்து எப்பொழுது என் பயணத்திற்குத் திரும்பினேன் என்று தெரியவில்லை. தட தடக்கும் லௌகீக இரயிலின் வேகத்தில் காற்று முகத்திலறைகிறது.


Read more...

Wednesday, July 7, 2010

திட்டமிட்டதொரு விபத்து

உறவுக்கும் விலகலுக்குமான
விடையைத் தேடியலைந்த
பாதையின் ஒரு திருப்பத்தில்
குறிக்கப்பட்டிருக்க வேண்டும்
சம்பவம் அரங்கேற வேண்டிய இடம்

உயிர் பிழைப்புகள் 
இல்லா வண்ணம் 
கச்சிதமாக நிகழ்ந்து விடல் நலம்

முடமாகிப் போதலென்பது
பிறிதொரு திட்டத்திற்கான
காத்திருப்பே
சக்கர நாற்காலிகளின்
கருணா சுழற்சிகளால்
பயனில்லை

அடையாளங் காண
முடியாததாகக் கசகசத்துப்போன 
முகத்துக்காரர்கள்
பாக்கியவான்கள்

பொதுக் கழிப்பிட யூரினலில்
ஒட்டியிருக்கும் 
சுருண்ட ஒற்றை மயிராய்
பார்க்கப்படுதலை விட

Read more...

Friday, July 2, 2010

சொர்க்க வாசல் முகடு


ஒரே படுக்கையிலான
இருவரின் சுய போக
orgasmகள் சந்தியாதபோது

பூ மத்தியில்
புகைந்து கொண்டிருந்த
Aப்படத்தின்
juices are 
flowing

வாய்கொள்ளா
MILFகளின்
முலைப் பெரு விடைப்புகள்
பரியந்தம்

ரோமாஞ்சனத்தை
squirtஇக் கொண்டிருக்கிறார்கள்
இலக்குவ
சூர்ப்பனகைகள்
சூப்பர்னகைகள்

orgasmக்கும்
ejaculationக்குமான 
இடைவெளியில் கழுத்தறுபடுகிறாள்
காம தேவதை

சொர்க்க வாசல் முகட்டுப்
பேரூழியில்
நனைந்து கொண்டிருக்கிறது
நாம்

Read more...

Tuesday, June 29, 2010

அழகர்சாமி? ஆர்க்குட்? அசிங்கம்? அடப்போங்கய்யா.. என்னத்தனு பேரு வெக்க!


இன்றைய இளைஞர்களில் சிலரின் தரக்குறைவான நடத்தை பற்றிய என்னுடைய முந்தைய பதிவை இங்கே பார்க்கலாம். இது பார்ட்-II என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.

மேட்டர் இதுதான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு ஃபார்வர்ட் மின்னஞ்சலில்தான் அறிமுகமானார் அழகர்சாமி காத்தவராயன். இவர் ஒரு முன்னாள் இராணுவ வீரர். இவருடைய மகனுக்குப் பெண் தேட ஆர்க்குட்டில் ஒரு கம்யூனிட்டியைத் துவக்குகிறார்.

ஆர்க்குட் ஒரு சோஷியல் நெட்வொர்க்கிங் சைட். அதாகப்பட்டது சமூக நட்புறவு வலைத்தளம். இங்கு வந்து இவர் ஏன் தன் மகனுக்குப் பெண் தேடுகிறார் என்ற சந்தேகத்துடனேயே அவருடைய ஸ்க்ராப் புக்கைத் திறந்தால் நமக்குப் பேரதிர்ச்சி காத்திருக்கிறது.

சகிக்க / பிரசுரிக்க முடியாத கெட்ட வார்த்தைகளிலெல்லாம் இவரைப் போட்டுக் காய்ச்சியெடுக்கிறார்கள் நம்முடைய so called இளைய தலைமுறையினர். அதாவது இவருக்கு ஆர்க்குட்டைப் பற்றித் தெரியவில்லையாம். இவரே ஒரு டப்பாத் தலையராம் (இதுதான் அங்கு இருப்பதிலேயே டீஸண்ட்டான வார்த்தையாக இருக்கிறது!). இவருக்குப் பெண் கிடைத்ததே பெருசாம். இந்த லட்சணத்தில் இவர் பையனுக்கு வேற பொண்ணு பாக்க வந்துட்டாராம். இவருக்கு ஆர்க்குட்டெல்லாம் ஒரு கேடா.. எனபதுதான் இவர்களின் பொதுவான நிலைப்பாடாக இருக்கிறது.

இதற்கு மேல் அங்கிருக்கும் ஸ்க்ராப்களை நீங்கள்தான் போய் படித்துக் கொள்ள வேண்டும். சாம்பிளுக்கு இந்தப் பக்கத்தை வேண்டுமானால் பாருங்கள். Vomit bag இருந்தால் அருகே வைத்துக் கொள்ளல் நலம்.

-

இந்த ப்ரொஃபைல் குறித்து இதுவரை எனக்குப் புரிந்தவைகள் பின்வருமாறு. முதலில் இது ஒரு fake ப்ரொஃபைல். முகம் தெரியாதவர்களின் புகைப்படங்களைக் கொண்டு இவனுங்களா அழகர்சாமி காத்தவராயன் என்றொரு டுபாக்கூர் ப்ரொஃபைலை க்ரியேட் செய்திருக்கிறார்கள். பெயர், புகைப்படம் என்று எல்லாமே எள்ளலுக்குரிய வகையிலேயே தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

அப்புறம் இவனுங்களா ஒரு பையன் ப்ரொஃபைல் (கனகரத்தினம் அழகர்சாமி). இவனுங்களா ஒரு அம்மா ப்ரொஃபைல் (அழகர்சாமியின் மனைவி தமிழரசி அழகர்சாமி என்ற பெயரில். Fake ப்ரொஃபைலுக்கு வெச்சானுங்க பாரு பேரு!). அப்புறம் இவனுங்களா முருகேசன் என்ற இன்னொரு மகனுக்குப் பெண் தேட wife for Murugesan என்ற பெயரில் ஒரு கம்யூனிட்டியும் க்ரியேட் செய்து அதை ஃபேமஸும் ஆக்கியிருக்கிறார்கள்.

எதுக்கு?

எல்லாம் விளம்பரத்துக்குத்தான். ஒரு தனியார் இணையதளம் செய்திருக்கிறது இத்தனை கூத்தையும். நம் மக்கள்தான் எதையாவது பார்த்து விட்டால் ஒடனே ஸ்க்ரீன் ஷாட்டெடுத்து மெயில்ல போட்டு, நாந்தான் மொதல்ல பாத்தேன்னு பல்லிளித்துக்கொண்டு ஊருக்கே அனுப்பும் கூட்டமாயிற்றே. இப்படியே ஃபார்வர்டில் பிரபலமாகி, வந்து பார்க்கும் இளஞ் சிங்கங்கள் எல்லாம் கண்ட மேனிக்குக் கெட்ட வார்த்தை ஸ்க்ராப்புகளைப் போட்டுப் போட்டு, அகில உலக ஃபேமஸாகி விட்டார் அழகர்சாமி.

சரி எல்லாம் செய்தார்களே. அந்த மூன்று ப்ரொஃபைல்களிலும் போட்ட புகைப்படங்களுக்கு உரியவர்களை நினைத்துப் பார்த்தார்களா? அவர்களோ, அவர்கள் பிள்ளைகளோ, உறவினர்களோ இதையெல்லாம் பார்க்க நேர்ந்தால் என்னத்துக்கு ஆகும்? எவ்வளவு அவமானம் அது அவர்களுக்கு?

அதை விட அவமானமாக இருக்கிறது எனக்கு. இது போன்ற ஒரு இளைஞர் பட்டாளத்தில் ஒருவனாகத்தானே நானும் கருதப்படுவேன் என்று நினைத்தால்.

அழகர்சாமி ப்ரொஃபைல் மட்டுமல்ல. மூன்று ப்ரொஃபைல்களின் ஸ்க்ராப் புக்குகளையுமே படிப்பவர்கள் கூசிப்போகுமளவுக்குக் கெட்ட வார்த்தைகளைக் கொண்டு நிரப்பியிருக்கிறார்கள் நம் பையன்கள். பெண்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன. அவர்களும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். ஹேய் மாமா.. உன் பையன் சூப்பராயிருக்கான்.. கட்டித் தரியா என்ற ரேஞ்சுக்கு.

இணையத்திலும், வலையுலகிலும் அனானிகளாக வந்து ஆபாசங்களை அரங்கேற்றுவதைப் பல நூறு முறை கண்டிருக்கிறோம். ஆனால் இங்கோ நிஜ ப்ரொஃபைலிலேயே வந்து, கூடியுட்கார்ந்து கும்மியடிக்கிறது நம் இளைஞர் சமுதாயம்.

ஒரே ஆறுதல் என்னவென்றால் இந்த விளம்பர வேகம் ஓரளவுக்கு மட்டுப்பட்டுக் கடைசி ஒரு ஆண்டுக்கும் மேலாக எந்த ஸ்க்ராப்பும் வரவில்லை. இருந்தாலும் இவைகளையெல்லாம் டெலிட் செய்து தொலைந்தார்களென்றால் தேவலை. நானே ஒரு ஆறேழு முறை அப்யூஸை ரிப்போர்ட்டி விட்டேன் ஆர்க்குட்டுக்கு. ஒன்றும் நடந்த பாட்டைத்தான் காணோம்.

நீங்களே சொல்லுங்கள்.. யாரைக் குற்றம் சொல்வது .. விளம்பரத்துக்காக எல்லாவற்றையும் துவக்கியவர்களையா.. இல்லை.. ஒரு public forumல் இப்படி லோக்கலாக நடந்து கொண்டவர்களையா?

வெட்கக் கேடு!

-

தொடர்புடைய லிங்க்குகள்


அழகர்சாமி
அவர் மகன்
அவர் மனைவி
அவர் தொடங்கிய கம்யூனிட்டி

Read more...

Monday, June 28, 2010

விகடனில்!

ஜன ரஞ்சகமான ஒரு எழுத்து ஊடகத்தின் ஓரத்தில், ஒரே ஒரு கவிதை வந்ததற்கே துள்ளிக் குதித்த மனதைக் கண்டபின், பாப்புலாரிட்டி எனும் போதைக்காக மசாலாப் படங்களாகத் தேர்ந்தெடுத்து நடிக்கும் ஹீரோக்களின் மீதான என் கோபத்தின் அர்த்தமின்மையை உணர்ந்தேன் ஒரு மாதத்திற்கு முன்பு என்னுடைய ஒரு கவிதை விகடனில் பிரசுரமானபோது!

சுகுணாவின் முகவரி தந்து, கவிதைகள் அனுப்பச் சொன்ன பா.ரா-வுக்கும், சுகுணாவுக்கும் நன்றி.


இனி கவிதை!


சாகா முத்தங்கள்


உன் முத்தத்துக்கும்,
முத்தத்தின் சத்தத்துக்கும்
நடுவே நான்
செத்து விட வேண்டும்
என்றேன்


சத்தம் வராத முத்தங்களில்
சாகா வரமளிக்கிறாள்
அன்று முதல்!

Read more...

Saturday, June 26, 2010

நிழற்படம் ஒன்றும், நிஜப்பாடல் ஒன்றும்!

மிகச் சாதாரணமாகக் கடந்து போக வேண்டிய தருணமொன்று எதிர்பாராமல் அடர்வேறி, நம்மைப் புரட்டிப் போட்டு விட்டு அருகேயே நின்று மலங்க மலங்க விழிக்குமே உணர்ந்திருக்கிறீர்களா? அந்த ஒரு கணத்திற்கு முன்னாலிருந்த லாவகம் எங்கே தொலைந்ததென்று புரியாமல், கூட்டத்தில் கையைத் தொலைத்த குழந்தையாய் தவிக்கும் தருணங்கள் நினைவிருக்கிறதா?

அலுவலகம் முடிந்து எப்பொழுதும் இண்டிகாவிலோ இல்லை சுமோவிலோ வருவது வழக்கம். நேற்று நமக்கென்று வாய்த்தது ஒரு டெம்போ ட்ராவலர். இது சற்று பெரிய வண்டியாதலால் தெருக்கோடியில் தான் இறங்கிக் கொள்ள வேண்டும். இரவு ஒரு மணி. நான் பாட்டுக்கு இறங்கி நடந்து போய்க் கொண்டிருக்கையில்தான் அந்தக் காட்சியைப் பார்த்தேன்.

காட்சி புரியவே சில நொடித் துளிகள் பிடித்தன. புலப்பட்ட பின் அலையலையாய் கொட்ட ஆரம்பித்த எண்ணக் குழைச்சல்களிலிருந்து விடுபட சில நிமிடங்கள் தேவைப்பட்டன. முன்னர் நானே எழுதியிருப்பது நினைவுக்கு வருகிறது. பகிர்தலின் தளத்தில்தான் வாழ்வு பல்கிப் பெருகுகிறதென்று.



அப்படியே நின்று விட்டேன். புகைப்படம் எடுக்கையில் ஏனோ சற்று உறுத்தியது. என்னதான் இது போன்ற ஆயிரம் புகைப்படங்கள் இணையத்திலும் இன்ன பிற ஊடகங்களிலும் காணக் கிடைக்கும் என்றாலும், நாமே நேரில் கண்டடையும் அனுபவம் சிலிர்க்கத்தான் வைத்து விடுகிறது.

அந்த நைந்து போகாத கம்பளிக்குள் நாய்க்கும் தஞ்சமளித்த நவயுக புத்தனை, அவர் முகத்தைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. கம்பளியை விலக்கி இரண்டு தூக்கங்களைக் கெடுக்க மனமிலையாதலால் வந்து விட்டேன்.

அதிகாலைக் குளிரில், பிளாட்பாரத்தில் எல்லாவற்றையும் மறந்து தூங்கும் மனசு வாய்க்கப் பெற்றதே.. அது போன்றதொரு இலகுவை எனக்கும் தர மாட்டாயா என்று முன்னாலிருந்த பிரசன்ன ஆஞ்சநேயரைக் கேட்டு விட்டு வந்தேன். வேறென்ன செய்ய?

-0-

ஆங்கிலப் பாடல் எதுவும் இதுவரை நான் கேட்டதில்லை. முதல்முறையாக ஷகிராவின் வக்கா வக்காவைக் கேட்டுவிட்டுப் பித்துப் பிடித்தாற் போலாகியிருக்கிறேன். என்னா பாட்டு.. என்னா வரிகள்.. And ofcourse.. என்ன்னா ஒரு ஆட்டம்.. வாய்ப்புகளே இல்லை!

நேற்று தொட்டு, இன்று மட்டும் எத்தனை முறை கேட்டிருப்பேன் என்றே தெரியாது. முழுவதுமாய் வசீகரித்து எனை தனக்குள் விழுங்கி விட்டது இந்தப் பாடல். ஷகிராவுக்கு 33 வயதாம். என்னால் நம்பவேஏஏ முடியவில்லை. ஷ்ருதிஹாசன் சரீரத்திலும், சாரீரத்திலும் ஷகிராவின் சாயல் தென்படுவதாகத் தோன்றுகிறது.



இணையத்தின் புண்ணியத்தில் வரிகள் பின்வருமாறு:

You're a good soldier
Choosing your battles
Pick yourself up
And dust yourself off
And back in the saddle

You're on the frontline
Everyone's watching
You know it's serious
We're getting closer
This isnt over

The pressure is on
You feel it
But you've got it all
Believe it

When you fall get up
Oh oh...
And if you fall get up
Oh oh...

Tsamina mina
Zangalewa
Cuz this is Africa

Tsamina mina eh eh
Waka Waka eh eh

Tsamina mina zangalewa
Anawa aa
This time for Africa

Listen to your god
This is our motto
Your time to shine
Dont wait in line
Y vamos por Todo

People are raising
Their Expectations
Go on and feed them
This is your moment
No hesitations

Today's your day
I feel it
You paved the way
Believe it

If you get down
Get up Oh oh...
When you get down
Get up eh eh...

Tsamina mina zangalewa
Anawa aa
This time for Africa

Tsamina mina eh eh
Waka Waka eh eh

Tsamina mina zangalewa
Anawa aa

Tsamina mina eh eh
Waka Waka eh eh
Tsamina mina zangalewa
This time for Africa

கால்பந்துக்கு மட்டுமல்ல. சில சூறாவளி சமயங்களில் நம் கிளைகளை மீட்டெடுக்கவும் உதவும் வரிகள். அதிலும் But you've got it all.. Believe it..  என்ற வரியைப் பாடும்போது நெடுமட்டமாய் அசையும் ஷகிராவின் முகம் தரும் தன்னம்பிக்கையை எழுதி விளக்க முடியுமென்று தோன்றவில்லை. பார்த்து வேண்டுமாயின் உணரலாம்.

இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்ட முயலும் செம்மொழி வீடியோவைக் காட்டிலும், சத்தியமாய் 100 மடங்கு பரிந்துரைக்கலாம்.

பாடலைக் காண க்ளிக்கவும்!

Read more...

Thursday, June 17, 2010

பதிவுலக நண்பர்களும், பகிர வேண்டிய சில நன்றிகளும்!

ஏறத்தாழ இரண்டாண்டுகளாக வலையில் எழுதி வந்தாலும் நான் ஒரு சொல்லிக் கொள்ளும்படியான பதிவன் என்றெனக்குத் தோன்றவில்லை. தொடர்ச்சியாக எழுதுவதில்லை. எழுதுவதும் உருப்படியாக இல்லை. சக பதிவர்கள் எவரையும் சந்தித்ததில்லை. பதிவர் சந்திப்புகளில் கலந்து கொண்டதில்லை. இலக்கியக் கூட்டங்களைப் பார்த்ததேயில்லை. ப்ப்பா.. எத்தனை இல்லைகள்!

அண்ணன் ஜோ அவர்கள் சில முறை பெங்களூர் பதிவர்கள் சந்திப்புக்கு அழைத்தார். என்னால்தான் சில தனிப்பட்ட காரணிகளால் கலந்து கொள்ள முடியவில்லை. பதிவர் சந்திப்புக்கு வராமல் நான் பெண் நண்பிகளுடன் (!) ஊர் சுற்றுவதாக அவதானித்து தன்னுடைய கூர் நுண்ணுணர்வின் வன்மையை நிரூபித்தார் அண்ணன் ஜோ அவர்கள்! அவர் வாக்கு பலித்தால் காதற் கடவுளாம் Eros-க்குப் பொங்க வைத்து சாமி கும்பிடுவதாக இந்த நேரத்தில் வேண்டிக் கொள்கிறேன்.

இன்னும் நிறைய எழுத வேண்டும். இனியாவது வாசிக்கத் துவங்க வேண்டும். இவை போன்ற சந்திப்புகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையெல்லாம் இருக்கத்தான் செய்கிறது. என்ன செய்ய.. நேரமில்லை என்று சொல்ல மாட்டேன். மாறாக, சோம்பேறித்தனம் என்பதை ஒப்புக் கொள்வேன்.

இந்தச் சூழ்நிலையில் நான் சந்திக்க நேர்ந்த ஒரே பதிவர் அண்ணன் ஜீவா aka ஜீவ்ஸ் அவர்கள். பதிப்பித்த புத்தகங்களில் எனக்குத் தரவேண்டிய புத்தகங்களைத் தூக்கிக் கொண்டு அண்ணன் பொன்.வாஸ் அவர்கள் பெங்களூர் வந்த போதென்று பார்த்து நான் கோவைக்குச் செல்ல வேண்டியதாகி விட்டது. ஆக அவரையும் சந்திக்க முடியவில்லை.

புத்தகங்களை ஜீவ்ஸிடம் கொடுத்துச் சென்றிருந்தார் வாசு அண்ணன். அவைகளை வாங்கச் சென்ற போதுதான் ஜீவ்ஸைப் பார்த்தேன்.
கூரான கண்கள். நேர்த்தியான வார்த்தைகள். வீடு முழுக்கப் புத்தகங்கள். இனிமையான நண்பர் ஜீவ்ஸ். கிட்டத்தட்ட ஒரு மாதம் புத்தகங்களை வைத்திருந்ததற்கு அவருக்கு நன்றி!

-0-

சென்ற முறை கோவைக்குச் சென்றிருந்த போதுதான் கலாப்ரியாவுக்காக விஷ்ணுபுரம் நண்பர்கள் நடத்திய கூட்டம் நிகழ்ந்தது. செல்ல வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால் பாருங்கள்.. தூங்கித் தொலைத்து விட்டேன். ஞாயிறு இரவு கிளம்புகையில்தான் காந்திபுரத்தில் வலை நண்பர்கள் அந்நிகழ்வு குறித்து வைத்திருந்த ஃப்ளெக்ஸைப் பார்த்தேன்.

சந்தோஷமாக இருந்தது நிறையவே. ஊரெங்கும் குறிப்பிட்டவொரு மாநாட்டுக்கு அழைக்கும் போர்வையில் நிகழ்ந்திருந்த சுயமோக விளம்பரங்களை, கொள்கைக் கூவ(ங்)ல்களைக் கண்டு அடைந்திருந்த அலுப்புணர்வுக்கு செல்வேந்திரனும், வா.மணிகண்டனும் இன்னும் சிலரும் ஆறுதலளித்தார்கள். நிகழ்ச்சியை நடத்தியதோடு, அதற்கும் சேர்த்து அவர்களுக்கு நன்றி. மனதார!

-0-

அதே கோவை வாசத்தின் போது, அன்னபூர்ணாவில் அம்மாவுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் ஒரு தொலைபேசி அழைப்பு. அண்ணன் பா.ரா சவுதியிலிருந்து அழைத்து, என் புத்தகத்தைப் படித்ததாகவும், நன்றாக இருந்தது என்றும் பாராட்டினார். வாழ்த்தினார். நான் பேசிவிட்டு வைத்ததும், என் பேச்சிலிருந்து நடந்ததைப் புரிந்து கொண்ட அம்மாவின் கண்களில், மகனின் புத்தகத்தை ஒருவர் கண்காணாத தொலைவிலிருந்து அழைத்துப் பாராட்டுவதைக் கண்ட புளகத்தின் ஈரம் தெரிந்தது. என்னைப் பாராட்டியதை விட, இதற்குத்தான் நான் பா.ரா-வுக்கு நன்றி சொல்ல வேண்டும். மிக்க நன்றி பா.ரா!

-0-

சரியாக ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் என் அலுவலக நண்பனொருவன் அவனுடைய நண்பரொருவர் CA இறுதித்தேர்வுக்காக திருப்பூரில் சில நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என்றும் நான் கோவையென்பதால் என்னால் உதவ முடியுமா என்றும் கேட்டான். அந்த நண்பர் சிரமப்படும் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதையும் அவன் குறிப்பிட மறக்கவில்லை. என் நண்பனும், அவன் நண்பரும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். எனக்கோ திருப்பூரில் யாரையும் தெரியாது. சரி முயற்சிக்கிறேன் என்று மட்டும் கூறி வைத்தேன்.

திடீரென ஒரு மின்னல். கொஞ்சம் பழைய சமீபத்தில் சகோதரி அன்புடன் அருணா அவர்கள் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்தவர்களுக்கு பதிவர் கம் மருத்துவர் புரூனோ மற்றும் சில நண்பர்கள் உதவியதைப் பற்றி எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது. மேலும் சிங்கை நண்பர் ஒருவரின் உயிரைக் காக்கவெல்லாம் வலையில் உதவுகிறார்களே.. நாம் ஏன் பதிவுலகில் முயற்சிக்கக் கூடாது என்று யோசித்ததில் என் சிற்றறிவுக்குத் தட்டுப்பட்டது அண்ணன் பரிசலும், வெயிலானும்தான். திருப்பூர் பதிவர்கள் எத்தனையோ பேர் இருந்தாலும் எனக்கு வேறு யாரையும் தெரியாது!

சரியென்று அவர்கள் தளத்திலேயே முகவரியைத் திருடி, ஒரு மின்னஞ்சல்தான் அனுப்பினேன். சற்று நேரத்திலேயே பரிசல் ஃபோன் செய்தார். கொங்குத் தமிழ் வாசத்தில் 'வரச் சொல்லுங்க.. பாத்துக்கலாம்' என்றார்.

'எம்மேல நம்பிக்க இருக்கல்ல.. நீங்க நேரா ரெக்கார்டிங் தியேட்டர் வந்துடுங்க' என்று ட்யூன் ஓக்கே ஆகும் முன்பே ராஜா சார் கண்மணி அன்போடு பாடலின்போது கமல்ஹாசனிடம் சொன்னது நினைவுக்கு வந்தது எனக்கு.
உபயம்: யூ ட்யூப்!

தேர்வு நடக்கவிருந்த ஜீவாபாய் மேனிலைப்பள்ளியருகேயே, தெலுங்கு பேசும் ஒருவருடனேயே தங்க வைத்து, எல்லா உதவிகளையும் செய்து வைத்திருக்கிறார் பரிசல். தேர்வுகளை முடித்துக் கொண்டு ஊருக்குச் சென்ற அந்நண்பர் ஃபோனில் எனக்கு நன்றி சொன்னபோது நெகிழ்ச்சி கேட்டது. அண்ணன் பரிசலுக்கும், வெயிலானுக்கும் நன்றி!

சரியான நேரத்தில் செய்யப்படும் உதவிக்கு, சரியான நேரத்திலேயே நன்றியும் செய்யப்பட வேண்டும். அவ்வகையில் நேரந்தப்பி நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன். பணிப்பளு மற்றும் இதர பல பிரச்சினைகளின் காரணமாக. பரிசலும், வெயிலானும் கோபித்துக் கொள்ள மாட்டார்கள் என்று நம்புகிறேன்!

சந்திப்போம்!

Read more...

Thursday, May 13, 2010

குரல்வளையில் தடம் பதியும் தனிமையின் கொடும் பற்கள் (அ) என்னை என் தனிமை கொன்றால் அது கொலையா தற்கொலையா (அ) என் நிர்வாணத்தை எப்போதும் தனிமை எட்டிப்பார்த்து விடுகிறது



நெடுமரங்களடர்ந்த அத்துவானத்திற்குள் என்னை ஒளித்து வைத்துக் கொண்டு என்னோடே சித்து விளையாடிக் கொண்டிருக்கிறது என் தனிமை. தாடைக்குள் அடங்காத நாவில் ஒழுகிக் கொண்டேயிருக்கும் ஞாபகச் சொட்டுகளை கவனியாமல், வழி மறந்தலையும் ஒரு செவலை நாய், மரங்களை நோக்கிக் காலைத் தூக்கி, நிறுத்தாமல் அடித்து விடுகிறது அந்தந்த நாட்களுக்கான காழ்ப்புகளை, வன்மக் கழிவுகளை.

எனதிலிருந்து எனது விலகி என்னைக் காண்கையில், கரைந்து வரும் கடமைகள் குறித்தான உன்மத்தப் பிரவாகம் தென்படலாம். என் மீதான பரிவின் கரையில் நிகழ்வதது என்பதுதான் என் வாதப் பிரதிவாதம்.

கண் நீளக்கூடிய தொலைவு மட்டும் மணற் கடலாய் இறைந்து கிடக்கும் பிரதேசம்தான் நான் தேடிக் கொண்டிருக்கும் வாழ்க்கை என்ற துகளாய் உருக்கொண்டு விடுமோ என்ற பயம், நான் உறங்கும் போதும் என் விழியசைவின் பதற்றத்தில் தெரிவதாகக் காலையெழுந்ததும் கண்ணாடி சொல்கிறது.

நான் தூங்கும் எழிலைப் பார்த்து ரசிக்க தாக்ஷாயணி இல்லாத குறையை இந்தக் கண்ணாடிதானே போக்குகிறது என்ற சமாதானம் எனக்குத் தேவையேயில்லை எனும்போது அது சொல்லும் கூறு கெட்ட வார்த்தைகளுக்குச் செவி மடுக்கும் தேவை மட்டும் எங்கிருந்து வரும்?

பகிர்தலின் தளத்தில்தான் வாழ்வு பல்கிப் பெருகுகிறது என்பதில் நிறைந்து கிடக்கும் உண்மை, இந்தப் பத்துக்குப் பதினைந்து அறைக்குள் வசிக்கத் துவங்கும் முன் வரை என் கபாலத்திற்குள் கால் பதிக்கவில்லை.

ஆங்காங்கே கிடக்கும் பொருட்கள் ஏன் என்னைப் பார்த்துக் கொண்டேயிருக்கின்றன? உள்ளே உருளும் ஒரு துளிக் கடலினுள் சங்கமித்து விடத் தெரியாத அற்பமான என்னிடம் அவை அப்படி எதைத்தான் எதிர்பார்க்கின்றன? நானும் அவைகளும் தனியதுகளாகத்தான் வாழ்கிறோம் என்றாலும், எங்களின் தனிமைகள் ஒற்றுமையோடு இருப்பதை எனக்கு உறைக்க வைக்கத் திட்டம் போடுகின்றனவா?

ஒவ்வொரு நாளையும் நக்கித் தீர்த்துப் பணமாக ஆக்கிவிட்ட திருப்தியுடன் வீடு திரும்பிய பின், குறிப்பிட்ட ஏதேவொரு பொருளை நான் வைத்திராத ஓரிடத்தில் காண்கிறேனோ என்ற ஐயப்பாடு, அந்த நொடியை, க்ஷணத்திலொரு குத்தூசியாக மாற்றித் தணலில் ஊற வைத்தெடுத்து என் கண்களில் குத்துகிறதோ என்னவோ.. என் குறியைக், குதத்தை எதை ஊன்றிப் படுத்தாலும், உறக்கத்தில் மட்டும் கண் முழுக மாட்டேனென்கிறது.

நாவாட நான் விரும்பாவிடினும், இந்த மின்விசிறி என்னுடன் எதையாவது பேசிக் கொண்டேயிருக்கிறது. அதற்கு மின்சாரம் பீய்ச்சும் காப்பர் கம்பிகளுக்கு உப்புக் காப்பிட யோசித்தேன், அப்படியேனும் அதற்கு ரோஷம் வர. என் திட்டத்தைப் பற்றி எனக்கே சொல்லிக் கெக்கலிக்கிறது. பொருட்களை இடம் மாற்றி வைத்து, பயமாள்ந்த கிணற்றில் என்னைத் தள்ளிவிட்ட கயவாளி அதுதான் போலும்.

Cast Awayயில் வரும் Wilson என்ற பந்துக் கதாபாத்திரத்தைப் போலென்னைப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறது. தனிமையின் அமானுஷ்யத்தில், தான் பிறழ்ந்து விடாமல் இருக்க என்னைப் பகடையாக்கி, உருட்டுகிறது. ஒளி வலையொன்று தோன்றி மறையப் போகும் ஒரு கால நுனிக்குப் பின்பு நான் உறைந்து போவது நிகழும் என்று ஜோஸ்யம் சொல்கிறது.

வெள்ளொளி மின்னும் புத்தம் புதுக் கத்தி ஒன்று வாங்கி வந்த பின்தான் என் கற்பனைக் குதிரைக்குக் கடிவாளம் அறுபட்டது. அதற்குப் பின்பும் கூட, 'எழுதி வைத்ததெல்லாம் என் மேலான குற்றப்பத்திரிக்கையல்ல. உன் மரண வாக்குமூலம்..' என சளைக்க வைக்கிறதெனை, தன் வாலைத் தான் கவ்வச் சுற்றும் நாய் ஜன்மமாம் இந்த மின்விசிறி. உதிர வாசந் தெரியாத சைவக்கத்தி வைத்திருக்கும் பெண்டுகன் என்கிறது.

ஆகட்டும். மின்னலை அறுத்தெரிபவனுடைய கத்தி, அவன் நரம்பு வாயில்களைத் திறப்பித்த துர்லபத்தை சாதித்துக் காட்டியதில், இன்னமும் நிறுத்தாமல் பேசிக் கொண்டிருக்கும் மின்விசிறியை விட, நக இணுக்கு வழியே நச்சைப் புகட்டி என்னைக் கோழையாக்கியிருக்கும் இந்தத் தனிமையின் கங்கணத்திற்குப் பங்கதிகம்.

என் கருங்குருதிக் கறையைக் காய வைக்க வேகவேகமாய் தன்னை சுழற்றிக் கொள்ளப்போகும் மின்விசிறிக்காக, அதன் றெக்கைகளுக்குள் ஊடுபாவி, சுக்கு ஆயிரமாய் குதறப்போகும் தனிமையை நான் மிச்சம் வைத்துச் செல்லும் நெகிழ்வுடன், இடக்கை வாகில் அறுத்துக் கொள்ளத் துவங்குகிர்ர்....

Read more...

Monday, May 10, 2010

நானிற்குள் பதுங்கும் விலங்கு


















ஒரே மொடக்கில்
அன்பின் இறுதிச் சொட்டுவரை
உறிஞ்சி விட எத்தனிக்கும்
வாய்களை நிரப்பத்
தினவெடுத்தவிரு முலைகளில்லாதது
என் நான்

மடியில் தலை வைத்த காலத்துக்கு
திதியாகி விட்டது
தலையில் மடி வைத்துப்
பாளம் பாளமாய் வெடித்துக்
கிடந்த வெக்கைப் பரப்பின்
அருகம்புற் பனித்துளியில்
முகம் பார்க்கையில்

தலையில் வைத்திருந்த
மடிக்குள்ளேயே உறிஞ்சப்பட்டது
முழுவுடலும்

முனை மழுங்கிய
கோரைப்பற்களை மறைக்க முற்படுகிறது
நானிற்குள் பதுங்கிய
விலங்கொன்று


நன்றி: கீற்று

Read more...

  ©Template by Dicas Blogger.

TOPO