Thursday, December 31, 2009

என் முதல் கவிதைத் தொகுதி!

ஆண்டின் இறுதி நாளென்பதாலோ என்னவோ வானம் துளிர்த்து விட்டிருக்கிறது இந்த மாலையில். மென் சில்லிடலுடன் வெளியே இறைந்து கிடக்கும் மற்றும் என் மனதுக்கு மிகவும் நெருங்கிய பெங்களூர் வானில் சற்று மிதந்து கிடந்தால் தேவலாம் போல!

வழக்கம் போல 'எனக்கு எழுத நேரமே இருப்பதில்லை' மற்றும் இன்ன பிற புலம்பல்களை விடுத்து, மிகுந்த மகிழ்வுடனும், நிறைந்த மனதுடனும் எழுதத் துவங்குகிறேன். நாட்களின் இறுதி மற்றும் துவக்கம் என்பன போன்ற செயற்கை செய்கைகளினின்று சற்று பக்குவப்பட்டு, ஒவ்வொரு நாளும் இதே மனோநிலையுடன் இருக்க விரும்புகிறேன்.

என் மகிழ்வுக்கும், நிறைவுக்குமான காரணிகளைப் போட்டுடைப்பதை விட்டு, விட்டு, கண்ட வர்ணனைகளில் கவனம் செலுத்தும் விரல்களின் மேல் மெலிதாய் கோபம் வருகிறது.

இன்னும் சில நிமிடங்களில் பிறக்கப் போகும் புத்தாண்டை வரவேற்க இன்முகம் காட்டுவதற்காகவும், என் முதல் கவிதைத் தொகுதியான 'உறங்கி விழித்த வார்த்தைகள்' தயாராகி வருகிறது என்பதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவும்தான் எனக்கிந்த மகிழ்ச்சி! ஆனாலும் உள்ளுக்குள் சற்று பயமாகவுள்ளது.

ஆம். ஏதோ விளையாட்டாய் வலையில் எழுதத் துவங்கினேன். என் அன்றாட அவதானிப்புகள், சமூகக் காழ்ப்புகள், கவிதைக்கே உரித்தான சுய புலம்பல்கள் என்று நீளும் எல்லாவற்றையும் கவிதை என்ற பெயரில் எழுதி வைத்திருக்கிறேன். கட்டற்ற இணையம் தரும் சுதந்திரத்தில் எனக்கு வாய்க்கப் பெற்ற இந்த மனோநிலையை சற்று தாமதமாகவே புரிந்து கொண்டேன்.

மிக விரைவாக முடிவு செய்யப்பெற்று, உருக்கொண்டு, புத்தகமும் வெளிவரும் சமயத்தில், என் பதற்றம் ஏனோ சற்று கூடியது. நான் எழுதியிருப்பதெல்லாம் கவிதை என்ற பரிமாணத்தில் அடங்குமா என்ற சந்தேகம் கூடத் தோன்றியது.

கூர் மிகுந்த இலக்கிய வெளியின் விமர்சனக் கத்திகளை சமாளிக்கும் அளவுக்கு, தயார் செய்து கொண்டு களமிறங்கியிருக்கவில்லையோ என்ற ஐயப்பாடுதான் இந்தக் குழப்பத்தின் துவக்கப் புள்ளி.

இந்த இருதலைக் கொள்ளி நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்தவர், இத்தொகுப்புக்கு
அணிந்துரை எழுதியிருக்கும் வா.மணிகண்டன் அவர்கள். ‘விமர்சனம் என்பது தனியொருவனின் குறுக்கு வெட்டுப் பார்வை. அது வெறும் பார்வை மட்டுமே; கவிதையின் மீதான மதிப்பீடோ, தீர்ப்போ இல்லை’ என்று ஆரம்பத்திலேயே அட்டகாசமாகப் போட்டுடைத்திருக்கும் அவரின் பார்வை, மிக நேர்த்தியான, சார்புகளில்லாத சமநிலை பொருந்திய ஒன்றாகக் கருதுகிறேன்.

என் கவிதைகள் என் குழந்தைகள். அவற்றில் பிழை இருந்தாலும் அது என்னுடையதாக இருக்கட்டும். பக்கத்து வீட்டுக்காரனுடையதாக இல்லாத வரை மகிழ்வே. நிறையென்று ஏதேனும் இருந்தால் அது பாரதி முதல் பிரமிள் வரையான மூதாதையர்களின் சாயல் என்று நினைத்துக் கொள்ளலாம்!

’இந்தத் தொகுப்பில் குறைகள் இருக்கின்றன’ என்ற நேர்மையின் உச்சத்தில் வெளிப்பட்ட வா.மணிகண்டனின் கருத்துடன் என் முதல் தொகுப்பு வெளிவருவது, என் நேர்மைக்கும் ’கொஞ்சூண்டு’ கம்பீரமூட்டுகிறது.

என் குழப்பம் தீர்த்து வைத்த வா.மணிகண்டன் மற்றும் புத்தகம் வெளிவர உதவிகரமாயிருந்த சகோதரி
உயிரோடை லாவண்யா மற்றும் பொன்.வாசுதேவன் அவர்களுக்கும், வலை வழி வாசித்து, பின்னூட்டமிட்டு, ஊக்கப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்! சென்னையில் நடந்து வரும் புத்தகக் கண்காட்சியில் இன்னும் ஓரிரு நாட்களில் புத்தகம் கிடைக்கும்.

சமீபத்தில் நான் நிறுவனம் மாறவிருப்பதாக
எழுதியிருந்தேன். இப்பொழுது மாறியும் விட்டேன். விஷயம் என்னவென்றால், நிறுவன மாற்றத்தால் டிசம்பர் மாதம் சம்பளம் வராததால், கையில் காலணா இல்லை. காசில்லாத காரணத்துக்கே புத்தகப் பதிப்பை நிறுத்தி விட உத்தேசித்தேன். அதைத் தடுத்து, நல்ல புத்தி சொல்லி, புத்தக வெளியீட்டை ஊக்கப்படுத்திய தாக்ஷாயணிக்கும், சமயத்தில் கடன் தந்து உதவிய என் சகோதரி என்பதற்கும் மேலான காயத்ரி மற்றும் நண்பன் என்பதற்கும் மேலான பரத், ஆகிய அனைவருக்கும் நீங்கள் எதிர்பார்ப்பதைப் போல் நன்றியெல்லாம் சொல்லப் போவதில்லை. வெறும் நன்றி சொல்லித் தீர்க்க முடியாதென்பதால், வாழ்ந்து நிறைத்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன்.

அனைவருக்கும் இந்தச் சிறியேனின், மனங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Read more...

Thursday, December 3, 2009

வார்த்தை விளையாடாமை - II

மருதாணி போட்டுக் கொண்டால்
ஊட்டி விடுவாயா என்றாள்.
மருதாணி போட்டுக் கொண்டு
ஊட்டி விடு என்றேன்.
அழகாய் சிவந்தது
காதல்.

வார்த்தை விளையாடாமை - I

Read more...

Monday, November 30, 2009

கோவையிலிருந்து சூலூர் வரை!




கடந்த வாரக்கடைசியில் கோவை சென்றிருந்தேன். தோழியின் திருமண விழாவுக்கு அம்மாவுடன் சென்றுவிட்டு, காந்திபுரம் மஃப்சல் பேருந்து நிலையத்தில், எங்களூரான சூலூர் செல்லும் பேருந்துக்காகக் காத்திருந்தோம். அப்போது வந்தவொரு தனியார் திருப்பூர் பேருந்தில் ஏற முற்படுகையில், "திருப்பூர் மட்டும் ஏறிக்கோ.. திருப்பூர் மட்டும் ஏறிக்கோ.." என்ற கூவல் கேட்டது.

"ணா.. சூலூர் போறவெங்கெல்லாம் ஏறக்கூடாதாண்ணா.." என்றதற்கு,

"முன்னாடி நிக்கற வண்டீல போயேறிக்கப்பா.. நீயேறி உக்காந்துக்குவ.. அப்பறம் திருப்பூர் டிக்கட்டெல்லாம் ஏத்த வேண்டாமா" என்று அன்புமிழும் பதிலை வாங்கிக் கட்டிக் கொண்டேன்.

"யேண்ணா.. நாங்கெல்லாம் காசு குடுக்கறதில்ல..?" நமக்கும் இருக்குமல்லவா ரோஷம்.

"யேறாதனா.. யேறாதப்பா.. போ..!"

இதற்கு மேலும் பேசாதிருந்தால், வாய்கலப்பானது, கை மற்றும் கால் கலப்புகளாகி நான் அடிபடும் (?!) வாய்ப்பு பிரகாசமானது என்று தெரியுமாதலால், என்னை அமைதிப்படுத்தி, அடுத்த பேருந்தைக் கண்டறியும் சீரிய முயற்சியில் அம்மா ஈடுபட வேண்டியதாயிற்று.

சூலூர் டவுன் பஞ்சாயத்து கோவை நகரிலிருந்து, திருப்பூர் செல்லும் வழியில் முதல் 18 கி.மீ தொலைவிலுள்ளது. இரண்டாம் 18 கி.மீ தொலைவில், பல்லடம் நகரும், மூன்றாம் 18 கி.மீ தொலைவில் திருப்பூர் நகரும் உள்ளன. மேலும் உடுமலை, தாராபுரம் போன்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளும் சூலூர் வழியாகத்தான் சென்றாக வேண்டும்.

ஆனால் சூலூர் பயணிகள் ஏறி, 'அமர்ந்து' கொள்வதால் திருப்பூர், உடுமலை போன்ற ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் உட்கார இடமின்றி ஏற மாட்டார்கள். எனவே பேருந்து நிறையும் வரை, இறுதி வரை செல்லும் பயணிகளை மட்டும் ஏறச் சொல்லிவிட்டு, 'சூலூர் செல்லும் பயணிகள் நின்று கொண்டு பயணம் செய்தால் போதும்' என்ற அலட்சிய மனோபாவத்தை, எழுதாத விதியாகப் பின்பற்றுவதுதான் இங்கு பிரச்சினையே.

சூலூரிலிருந்து, திருப்பூர் செல்லும் பயணிகளை ஏற்ற எப்படியும் சூலூரில் பேருந்தை நிறுத்தித்தான் ஆகவேண்டும். சூலூரில் ஏறும் பயணிகள் நின்று கொண்டுதான் திருப்பூர் வரை பயணமும் செய்கிறார்கள். இது இப்படியிருக்கையில், ஒரு 18 கி.மீ மட்டும் நாங்கள் அமர்ந்து கொண்டு பயணம் செய்வதை இவர்களால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. இடமில்லாவிட்டால் சரி. நின்று கொள்கிறோம். இருக்கும் போது ஏன் நிற்க வேண்டும்?

கவனிக்க வேண்டிய அடுத்த அம்சம், இறுதி வரை செல்லும் பயணிகள் எந்த ஆட்சேபணையும் காட்டாமல், அடுத்த பேருந்தில் ஏறிக் கொள்கின்றனர். அதுதான் 5 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இருக்கிறதே. பிரச்சினை துவங்கும் புள்ளி, பண முதலைகளின், காசாசை கொளுந்து விட்டெறிகையில்தான்.

'தனியார் பேருந்துகள்தான் இப்படியா' என்று கேட்டால், 'அரசுப் பேருந்துகளில் இன்னும் மோசமாகத் திட்டுகின்றனர்' என்று சொல்கிறார்கள். என் கல்லூரிக் காலத்தில் இதே பிரச்சினை தலை தூக்கியபோது, அமைதியாகத்தான் மறியல் செய்ய அமர்ந்தோம். ஆனால் பேச்சு, வீச்சாக மாறி, சில பல பேருந்துகள், தங்களின் சில பல கண்ணாடிகளை இழக்கும் நிலை வந்த பின், சூலூர் மக்கள் மதிக்கப்பட்டோம். இருக்கும் குரூரத்துக்கு மீண்டும் அவையெல்லாம் விரைவில் நடக்கும் (அ) நடக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

முடிந்த அளவுக்கு காந்தியனாக இருக்கத்தான் நான் முயற்சிக்கிறேன். ஆனால் முகத்திலறைந்தாற் போல் வந்து விழும் வார்த்தைகள், கொள்கைகளைத் தூக்கிக் குப்பைக் கூடையில் குமுறிவிட்டு, "ஒரு கண்டக்டருக்கே இத்தன திமிருன்னா.." என்று கிளப்பிவிடும் எண்ணக் கசடுகளில், காந்தியன் ஹிட்லரியனாக மாறுவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. எய்தவனைப் பற்றி யோசிக்காமல் அம்பின் மேல் கோபம் வரத்தான் செய்கிறது.

நான் பரவாயில்லை. நின்று கொண்டு வருகிறேன். முதியவர்கள் என்ன செய்வர்? நகரப் பேருந்தில் செல்லலாம் என்றால், முதலாவதாக எண்ணிக்கையில் அவை குறைவு. இரண்டாவதாக மஃப்சல் பேருந்து நிலையத்திலிருந்து, நகரப் பேருந்து நிலையம் ஏறக்குறைய முக்கால் கி.மீ. எல்லோருக்கும் நடக்கக் காலாலாகுமா?

இங்கே கர்நாடகத்தில் பரவாயில்லை. மக்களைக் கொஞ்சமேனும் மனிதர்களாக மதிக்கிறார்கள். ஒவ்வொரு முறை தமிழ்நாடு செல்லும் போதும், 'கூடிய வரை இங்கே வரக்கூடாது' என்ற எண்ணம் வலுப்பெறும் வகையில்தான் ஒவ்வொன்றும் நடக்கின்றன.

இதையெல்லாம் எண்ணி, எனக்கு வந்த கோபத்துக்கு, மனதுக்குள் எல்லாருக்கும் மரண தண்டனை விதித்து விட்டு, வலையிலும் பதிவித்து விட்டேன். எதற்கும் கையாலாகாத பொதுஜனங்களான நம்மால் வேறென்ன செய்துவிட முடியும்? சொல்லுங்கள்!

Read more...

Thursday, November 26, 2009

பொய்க்கால் கவிதை

சற்று வலுவாகத் தட்டினால்
உடைந்துவிடும்படி சொல்லிவிட்ட
ஒரு பொய்யை
ஒளித்து வைக்க
இடம் தேடியலைந்தலைந்து
இறுதியில் கவிதைக்குள்
இட்டு வைத்தேன்.
பின்னந்தக்
கவிதையை ஒளித்து வைக்க
இடம் தேடியலைந்தலைந்து
கிடைக்காமல்,
இறுதியில்
நான் பொய்யே சொல்லவில்லையே
என்று கவிதையிடம்
சொல்லிவிட்டேன்.

Read more...

Wednesday, November 25, 2009

கைசுடும் பிளம்புகளுக்குக் காலநீர் சுரப்புகள்




1. உன் கிறீச்சிடல்களுடன்
நகர மறுத்த என் கால்கள்
அடர் வனமொன்றின் கூதல் மாலை
இருளினுள் ஒளிந்துகொள்ள முற்பட்டும்,

பொதுவாய் சொல்லப்படும்
உதாரணங்களையும் என்மேல் வீசாது
தனியான என் திமிருக்கும்
மதிப்பளிக்கும் உன் வெயில் நேரங்களும்,

பனிப்புலமொன்றின் காலையில் தேநீரின்
வெதுவெதுப்போடு
ஒன்றின் இருண்மை இன்னொன்றில்
நீங்க
நமக்காக.


-oOo-


2. சற்று முன்னர் மாறிவிட்டிருக்கும்
என் சுற்றத்தினுள்
சிரமப்பட்டு நுழைகிறேன்.
கிஞ்சித்தும் யோசிக்காமல்
கலைத்துப் போடுகிறது
காலம் திரும்பவும்.
சமச்சீர் பொதித்த
தினசரியின் போக்கு மாற்றி
பாலையில் தொலைந்த
மணற்துகளாக்கி எனைத்
தனித்து விடுகிறது.
பஞ்சுப்பொதி சேர்த்து வைத்து
உள்ளடங்குகையில்
கூடு முட்காடாகிறது.
எனில் அனைத்தும் அனைவரும்
திரும்பத், திரும்ப
அவ்வாறே இருப்பது
திரும்பத், திரும்ப
அவ்வாறில்லாமல் ஆவதற்கான
காத்திருப்புதானோ.
நீள்கிறது சுழற்சி.


-oOo-

11/02/2009 அன்று எழுதியது.

Read more...

Tuesday, November 24, 2009

Academy Award வசனம் முதல் ஆகாவழி வசனம் வரை!

யதார்த்தமும், கனவுகளும் சந்தித்துக் கொள்ளும் புள்ளி புதிர் நிரம்பியதாக உள்ளது. வாழ்வின் பாதையை நிர்ணயம் செய்யும் வல்லமை அல்லது காரணியைப் பற்றிய Robert Zemeckis-ன் Forrest Gump திரைப்படத்தின் ஒரு வசனம் வாழ்வோடையின் பல கரைகளில் நினைவுக்கு வருகின்றது. 'இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்ட வாழ்வுக்கும், காற்றிலாடும் இறகு போல கட்டற்று அலையுறும் வாழ்வுக்கும் இடையேதான் அனைவரும் உருண்டு கொண்டிருக்கிறோம்' என்று கூறும் வசனமது.

கடந்த சில மாதங்களாக என் தகுதிக்கும், உழைப்புக்கும் அப்பாற்பட்ட எழுத்தை என்னால் வெளிக்கொணர முடிந்ததை, என்னளவிலேனும் உணர முடிந்தது. 11 மணி நேர அலுவலுக்குப் பின்பு, எழுத்துக்காகவேனும் வாசிப்பு, அதனைத் தொடர்ந்து எழுத்து, வாரமிரு நாள் இசைவகுப்பு மற்றும் நாம சங்கீர்த்தனம், எதிர் காலத்திற்காக முதுகலைப் படிப்பு என்று அசுரத்தனமாகவே வாழ்ந்திருந்தேன்.

ஒரு கட்டத்தில் எதற்காக இப்படி ஓடிக்கொண்டிருக்கிறேன் என்ற என் மீதான ஆயாசம், கவனியாது விடப்பட்டிருந்த குடும்பத்தைக் கொண்டு வந்து நினைவு முழுதுக்கும் பரப்பி விட்டது. தமிழ் சினிமாவின் ஒரு மிகச்சாதாரணமான ஒரு செண்டிமெண்ட் சினிமா நாயகனின் வாழ்வை, எனதோடு ஒப்பிட, குமுதம் வாசகர்களாலும் கூட ஐந்தாறு வித்தியாசங்களை கண்டறிய முடியாதென்பது திண்ணம்.

இப்படியிருக்கையில், வரும் சம்பளத்தை மட்டும் வைத்துக் கொண்டு, குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டேயிருந்தால், 'தங்கச்சி' திருமணத்தை யார் நடத்துவது? வலைப்பக்கத்தை நிரப்புவதினும் அடர்வு மிகுந்த பொறுப்புகள் தட்டிக் கழிக்கப்படுவதாய் உள்ளே உறுத்தின.

இந்திய மென்பொருள் துறையைப் பொறுத்தவரையில் ஒரு நிறுவனத்திலிருந்து, இன்னொரு நிறுவனத்திற்கு பணி மாறினால் இரண்டு மடங்கு சம்பாத்தியத்துக்கு வழி கிட்டும். அதற்குரிய உழைப்பும், அனுபவமும் முதலீடாதல் மட்டும் அவசியம்.

பார்த்தேன்! வாசிப்பு, எழுத்து, இசை, ஆன்மீகம் என்ற தனிப்பட்ட ஆர்வங்களை சற்று ஆறப்போட்டுவிட்டு, 'உட்கார்ந்து' படிக்கத் துவங்கினேன். காலையில் நேரமே தொலைபேசும் தாக்ஷாயணி எழுப்பி விடுவாள். அம்மா அருகிலில்லாத கவலையில்லை. போலவே கனவுகள் மடித்து வைக்கப்பட்ட கவலைகள் மறக்கடிக்கப்பட சில தணிவுகள் அவளாலேயே சாத்தியப்பட்டன.

ஏகப்பட்ட interviewக்கள்! (Interview க்கு தமிழ் வார்த்தை நேர்முகத்தேர்வு என்று கொண்டால், தொலைபேசி வழியான interviewக்களை என்ன சொல்வதென்று தெரியவில்லை) பேசினேன். பேசு, பேசென்று பேசினேன். விளைவாய் கையில் 4 வேலை வாய்ப்புகள். எதைத் தெரிவு செய்வதென்று இன்னும் முடிவு செய்யாத நிலையில், இவ்வரிகளை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

படிப்பு, படிப்பென்று இருந்ததில், சற்று சோர்வு ஏற்படும் போது, ஒரு மாற்றத்திற்காகவேனும், வலையகப்பக்கம் வரத் தோன்றினாலும், என் மன நிலையின் எந்திரத் தன்மையை, இலக்கியார்வம் குறைத்து விடுமோ என்ற பயம் பின்னிருந்ததால், நான் வந்துதான் தூக்கிப் பிடிக்கும் நிலை தமிழிலக்கியத்துக்கு எக்காலத்திலும் வராது என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்.

சொந்தக்கதை எழுதுவது உவப்பில்லாத ஒன்றான போதும், எழுத்துக்கான மனோபாவம் என்னிலிருந்து மிகத் தொலைவுக்கு சென்று விட்டதைப் போன்றிருந்த பிரம்மை தொலையவா, இல்லை.. 'மதன் என்றிங்கே ஒருவன் இருந்தானே.. அவன் என்னவானான்?' என்று எவரேனும் நினைத்திருந்தால், அதற்கு பதில் சொல்லவா என்று தெரியாமல் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

இன்னும் சில வாரங்களில், புது நிறுவனத்தில் நுழைந்திருக்க வேண்டும். அங்கே நமக்கென்று ஒரு இடத்தைப் பிடிப்பதற்கும், வாங்கும் சம்பளத்திற்கு வஞ்சகமில்லாமலிருப்பதற்கும் 'நன்றியோடு' உழைக்க வேண்டும். எழுத லாயக்குப்படும் என்று தோன்றவில்லை.

'எழுத்தின் அலாதி எல்லோருக்கும் தெரிவதில்லை. தெரிந்தவர்கள் எல்லோராலும் எழுத முடிவதில்லை' என்று ஏதாவது உளுத்துப் போன வசனத்தைப் பேசி, என்னை ஆற்றிக் கொள்வேன். எழுத முடியாவிடின், சத்தமில்லாமல் ஒரு வாசகனாகவேனும் எழுத்தோடு உயிர்த்திருக்க முயற்சி செய்வேன்.

Read more...

Monday, November 23, 2009

சுழலாடி வாழ்வு

நேற்றின் குழிகளுக்குள்
நான் இன்றை
விதைத்திருக்கவில்லை.

நாளைகளின்
மீதான நடுக்கம்
விழித்தே இருக்கிறது.

Read more...

Wednesday, September 9, 2009

சவுகர்யம்

கற்பனையில்
வித விதமாய்
குறிகள்
காந்தாரிக்கு
திருதிராஷ்டிரனுடையதைத்
தொடுகையில்.

Read more...

Sunday, August 30, 2009

சந்திப்பு

வீறிட்டு
அழுது கொண்டிருந்த
குழந்தையிடம்
ஏதோ சொல்ல நினைத்தது
அழகாய் புன்னகைக்கும்
அதே குழந்தையின்
புகைப்படம்.

Read more...

Friday, August 28, 2009

Cognitive Poetics - சில கடிதங்களும், புரிதல்களும்

நண்பர் அபிலாஷ் அவர்கள் சமீப காலமாக உயிர்மை மற்றும் உயிரோசையில் மிக நல்ல கட்டுரைகளை எழுதி நல்ல அடையாளத்திற்கு உள்ளாகியிருப்பவர். சமீபத்தில் அவர் எழுதிய படைப்பின் G-spot: எழுத்தும் வாசிப்பும் என்ற கட்டுரை அறிமுகப்படுத்திய Cognitive Poetics என்ற சற்று நுணுக்கமான, புதுமையான விமர்சன முறையைப் பற்றிய கடிதப் பரிமாற்றம். மேற்கொண்டு படிக்கும் முன் கட்டுரையைப் படித்தல் நலம். இல்லையென்றால் எதுவும் புரியாது.

-oOo-

2009/8/18 abilash chandran <
abilashchandran70@gmail.com>

நண்பர்களே,

வணக்கம். Cognitive linguistics எனும் சுவாரஸ்யமான ஒரு விமர்சன முறையை அறிமுகப்படுத்தி ஜெயமோகன், சுஜாதா, சாரு, மனுஷ்யபுத்திரன், பூமா ஈஸ்வரமூர்த்தி ஆகியோரின் படைப்புகளை நுணுக்கமாக அணுகும் கட்டுரை ஒன்றினை எழுதியுள்ளேன்:
படைப்பின் G-spot: எழுத்தும் வாசிப்பும்

என்னைப் பொறுத்தவரையில் இதுவொரு புது முயற்சி என்பதால் உங்கள் கருத்துக்களை அறிய் விரும்புகிறேன். குறிப்பாய் ஒரு கேள்விக்கு விடையளியுங்கள்:


இந்த விமர்சன முறை வாசகர்\எழுத்தாளர்களுக்கு பயன்படுமா?
உங்கள் பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி,

நட்புடன்

அபிலாஷ். ஆர்

-oOo-

2009/8/25 Mathan <mathansri@gmail.com>

அன்பின் அபிலாஷ்,

உங்கள் கட்டுரையைப் படித்தேன்.

எனக்குப் பிடித்தது. புதுமைகளைப் புகுத்தி, வழமைகள் தரும் வழவழப்பை நீக்குவது, வாழ்வுக்கும் சரி, இலக்கியத்துக்கும் சரி, ஒன்றும் புதிதில்லையே. அந்த வகையில் உங்கள் முயற்சிக்கு என் கம்பளம் சிவப்பாகிறது!

நீங்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் இம்முறை என்னைப் பொறுத்தவரை படைப்பாக்கத்தின் புதிய பரிமாணங்களை வெளிக் கொணர உதவுவதுடன், புரிந்து கொள்ள மிகவும் கடினமான உத்திகளையும் வாசகனுக்குக் கற்றுத் தர உதவி செய்யும் என்று நான் நினைக்கிறேன்.

படைப்பை உருவாக்குபவர் கவனத்திற்குட்பட்டோ / படாமலோ (?!) உபயோகித்திருக்கும் இந்த உத்திகள் மிக அடர்த்தியான / செறிவான வாசிப்பனுபவத்திற்குப் பின்னர்தான் கிட்டும் என்று நம்பத் தோன்றுகிறது. இந்த நம்பிக்கைக்கு உரம் போடும் காரணிகளாக எனக்கில்லாத வாசிப்பனுபவமும், உங்களுடைய வாசிப்பனுபவமும் இருக்கின்றன. :)

ஆனாலுமெனக்கு பின்புலமும், மைய உருவும் சேர்ந்து நடத்தும் நாடகம், எந்த அளவுக்கு படைப்பாளிக்கும், வாசகனுக்கும் இடையில், முன்நிர்ணயிக்கப்பட்ட கட்டமைப்பில் நிகழ சாத்தியப்படும் என்ற சந்தேகம் தோன்றுகிறது. நீங்கள் குறிப்பிட்டிருந்த எழுத்தாளர்களே கூட, Cognitive Poetics முறையை மனதில் கொண்டு எழுதியிருக்க மாட்டார்கள்தானே. அப்படி முயற்சித்தாலும், அவர்கள் மனதில் கொண்டிருந்த பின்புலம் எந்த அளவுக்கு வாசகனுக்குப் புலனாகும்?

நம் சூழலில்தான் படைப்பின் எல்லாப் பரிணாமங்களுமே ’சுய புரிந்துகொள்ளல்’ முறையில் அரங்கேறுகின்றனவே. இது ஒரு ஆரம்ப நிலை வாசகனின் அனுபவ முதிர்ச்சிக் குறை காரணமாகத் தோன்றிய சந்தேகமாகக் கூட இருக்கலாம். தெரியவில்லை.

ஒரு சிறு முயற்சி. பாருங்களேன்.

நான் உள்ளே இருந்தேன்.

கதவைப் பூட்டும்
சப்தம் கேட்டது.

உள்ளிருந்து பூட்டினாயா
வெளியிலிருந்து பூட்டினாயா
என்றேன்.

பதில் வரவில்லை.

வெளியிலிருந்து
பூட்டியிருந்தால்தான்
பதில் வராது
என்ற பதில்
வராத பதிலிலிருந்து
வந்தது.

உள்ளேயிருந்தும்
பூட்டியிருக்கலாமோ?

ஆனாலும்
பதிலில்லையே.

தெரியவில்லை.

இது என்னுடையதுதான். இதை எழுதும் போது எனக்கு Cognitive Poetics முறை பற்றி இப்போது தெரிந்திருக்கும் அரை குறையும் தெரியாது என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இங்கு பின்புலமாக தெளிவின்மையின் ஒரு நிலை அல்லது அதையொட்டிய அறியாமையைப் போக்கும் ஒரு முயற்சி.

->தெளிவைத் தேடியடையும் பொருட்டு ஒரு கேள்வி வருகிறது.அதற்கு பதில் கிடைக்கவில்லை.

->ஆனால் வராத பதிலிலிருந்து வந்த அல்லது புரிந்து கொள்ளப்பட்ட ஒரு படிநிலை பதிலுக்குப் பிரதியீடாகிறது.

->தெளிவினை நெருங்கி வந்துவிட்டோமோ என்ற ஐயம் வரும் வேளையில் இன்னுமொரு கேள்வி வந்து, ஏறி வந்த ஜானை முழம் சறுக்க வைக்கிறது.

எனில்,

முதல் கேள்வி
அதற்குக் கிடைத்த பதில் - சற்று தெளிவு
மீண்டும் ஒரு கேள்வி - மிஞ்சும் குழப்பம்

என்பனவற்றை முன், பின் நகர்ந்து ஊடாடும் மைய உருவங்களாகக் கொள்ளலாமா?

உங்கள் பதில் இல்லை என்பதாகவும் இருக்கலாம். மாறாக இதே கவிதையில், உங்கள் கற்பனைக்கும், புரிதலின் வடிவுக்கும் ஒத்த, என்னிலிருந்து மாறுபடும் பின்புலமும், மைய உருவும் கிட்டலாம்.

எனவே, மேற்கூறிய ’எழுத்தாள - வாசக’ உறவை ஒட்டிய எனது வினாவின் ’பின்புலம்’ சற்று உறுதியாகிறதுதானே.

நேரமிருப்பின் பதிலளியுங்கள்.

கட்டுரைக்கும், கருத்துக் கேட்டமைக்கும் நன்றிகள்.

-மதன்

-oOo-

2009/8/27 abilash chandran <abilashchandran70@gmail.com>

நண்பர் மதனுக்கு

இரண்டு விசயங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். என் கட்டுரையை மிக நன்றாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். சற்று கடினமான விவாதப் பொருளை இணையத்தில் எழுத வேண்டாமே என்று நேற்று தான் ஒரு நண்பர் அறிவுரைத்தார். உங்கள் புரிதல் மற்றும் எனக்கு வந்துள்ள பிற கடிதங்கள் தீவிர வாசகர்கள் எங்கு எழுதினாலும் படித்து ஆழமான பொருளை சென்றடைவார்கள் என்ற நம்பிக்கையை தருகிறது.

அடுத்து உங்கள் அருமையான கவிதை பல அர்த்த தளங்கள் கொண்டது. அக்கவிதையை தந்ததற்கு நன்றி.

Cognitive poetics எழுத்தாளனோ வாசகரோ தங்களுக்கான உபபிரதிகளை கண்டடையலாம்; CP வாசிப்புக்கு அப்பாற்பட்டும் இது நிகழலாம் என்கிறது. இந்த கட்டற்ற வாசிப்பு தானே இலக்கியத்தின் ஒளிமிகுந்த தளம். முன்-நிர்ணயிக்கப்பட்ட எந்த உறவும் நிச்சயம் இல்லை.

நான் இக்கவிதையை எப்படி புரிகிறேன் என்பதை கீழே தந்துள்ளேன்.

கதவு ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டு அது குறித்து பிற தகவல்கள் இன்றி ஒரு பின்புலமாக அது செயல்படுகிறது. யார் கதவைப் பூட்டினது என்பதே கவிதையின் முக்கிய விவாதச்சரடு. இது சம்மந்தமான கவிதை சொல்லியின் தெளிவின்மை ஒரு தத்துவார்த்த ஆழத்திற்கு கவிதையை எடுத்து செல்கிறது. அதாவது யார் பூட்டினது என்னும் தொடர் கேள்விகள், அவை அதிகமான இடத்தை பற்றுவதாலும், நிகழ்வுகளை ("யார் பூட்டினது") குறித்து பேசுவதாலும், மைய உருவம் ஆகின்றன.

கதவை உறவின் குறியீடாக கொள்ளலாம். அனைத்து உறவுகளும் ஓரிடத்தில் அடைப்பை நேரிடும். ஒருவித முட்டி நிற்கும் தன்மை; வருடக்கணக்காய் பழகியும் ஒருவரது மனதிற்கும் நாம் புழங்க முடியாத இடங்கள் இருக்கும். இருத்தலியல் பார்வையில் அணுகும் போது கதவு தான் பின்புலம்; அதுவே பிரபஞ்ச இயக்கத்தின் குறியீடாகிறது. மனித-பிரபஞ்ச உறவை யார் இயக்குவது என்ற புள்ளியிருந்து இக்கவிதையை வாசிப்பதும் சாத்தியம்.

உள்ளிருந்தா வெளியில் இருந்தா என்று மைய உருவங்கள் கேள்விகளாய் ஊசலாடுவது உண்மை தான். இரு மைய உருவங்களும் ஆரம்பத்திலேயே மாறி மாறி இடத்தை பிடிக்கின்றன், இழக்கின்றன; மூன்றாவதாய் ஒரு மைய உருவத்துக்கு சாத்தியம் உள்ளதாய் எனக்குப் படுகிறது. முழுக்க முழுக்க ஒரு வாசிப்பு பின்னணியில் இருந்தே இதைக் கூறுகிறேன். மாறுபட்ட முறையிலும் மற்றொருவர் இவ்விமர்சன முறையை கவிதையில் செலுத்தலாம்.

இக்கடித பரிவர்த்தனையை என் வலைப்பூவில் பிரசுரிக்க விரும்புகிறேன். உங்கள் அனுமதி உண்டா?

அன்புடன் அபிலாஷ்.ஆர்

-oOo-

2009/8/27 Mathan <mathansri@gmail.com>

அன்பின் அபிலாஷ்,

சந்தேகங்களைத் தெளிவு செய்ததற்கு நன்றி.

கதவு உறவின் குறியீடு என்பது A very good catch. இதே தளத்தை மனதிற் கொண்டுதான் அந்தக் கவிதை எழுதப்பட்டது என்பதை நான் இங்கு சொல்ல வேண்டும். சரியான பின்புலத்தை அடையாளங் கண்டு கொண்ட வாசிப்பு, அவரவர் புனைவின் ஆழத்திற்கொத்து பல்வேறு உப பிரதிகளுக்கும், மைய உருவங்களுக்கும் வழிகோலுகிறது.

சாத்தியமிருப்பதாக நீங்கள் சொன்ன மூன்றாவது மைய உருவை ஒரு முறை முயன்றுதான் பார்ப்போமே.

பூட்டுதல் - உறவின் பிரிதல் அல்லது விலகல்.

வெளியில் சென்று பூட்டியிருந்தால் உறவிலிருந்த இருவருக்கும் பிரிவு.

உள்ளிருந்து பூட்டியிருந்தால், இருவருக்கும், உலகிற்குமான பிரிவு. ஆனால் உறவு நிலைக்கிறது.

மேற்கண்ட இரு நிலைகளில் எது உண்மையென்று தெரியாது.

மூன்றாவதாக, உள்ளேயிருந்தே பூட்டிவிட்டு, பூட்டியவர் பதில் சொல்லாமல் விட்டுவிட்டால் புலப்படாத ஒரு காரணத்தினால், விருப்பமிருந்தும் (உள்ளேயிருந்தும்), பகிரப்படாததால் ஒரு உறவு முறிகிறது.

ஊடே இரண்டாவது மைய உரு உண்மையாக இருக்காதா என்ற கவிதை சொல்லியின் ஏக்கம் மிக மெல்லிய இழையாகக் கசிகிறது.

நீங்கள் அனுமதி கேட்கும் அளவு நான் பெரியவனில்லை. தாராளமாகப் பதிவிடுங்கள்.

கடினம் என்றெல்லாம் யோசிக்காமல் இன்னும் பல புதுமைகளை அறிமுகப்படுத்துங்கள். வாழ்த்துக்கள்.

நேரத்துக்கு நன்றி.

ப்ரியமுடன்,

-மதன்


Read more...

Tuesday, August 25, 2009

அரிப்பெடுத்தலும், ஆகாசமளத்தலும்!

காதலைப் பிடிக்கவே பிடிக்காத என் அறைத்தோழரும், மாமாவும் ஆனவரின் உறவினன் ஒருவன் காதலித்துத் திருமணம் செய்து கொண்டான். வழக்கம் போலவே வடசென்னை வார்த்தைகள் மாமாவின் வாயிலிருந்து அள்ளி வழங்கப் பெற்றுக் கொண்டிருக்கையில், இருவர் வீட்டிலும் காதலுக்கு ஒப்புக் கொண்டிருந்ததாகவும், அந்தப் பையனின் தங்கை திருமணம் முடிந்த பின், ஊரழைத்து செய்விப்பதாகவும் கூறியிருந்த நிலையில், இவன் இப்படித் திருமணம் செய்து கொண்டு வந்து நின்றதில் கோபம் உச்சாணிக்கேறியிருந்தது.

"சரி விடுங்க மாமா.. பாவம் அவனுக்கென்ன கஸ்டமோ" என்று என் வேதாந்தம் பல்லிளிக்கையில், சினத்துடன், "அவனுக்கு அரிப்புடா வேறென்ன.." என்றது மாமா. மாமாவின் அந்தவொரு சொல்லாடல் எனக்கு பல்வேறு சிந்தனைகளைத் தந்தது. காமத்தை அரிப்புடன் ஒப்பிடும் நுண் வர்ணனை இதுவரை சாத்தியப்பட்டிராத பரிமாணங்களை வெளிச்சப்படுத்தியது.

காமம், அரிப்பு என்ற வேறுபட்ட இரு ஊக்கிகளுக்கான இணை புள்ளிகளை இதுவரை யாரேனும் பதிவு செய்துள்ளனரா தெரியவில்லை. அந்தரங்க உறுப்பில் ஏற்படும் அரிப்புதனை, எதிர் பாலுறுப்பில் தேய்த்து ஆற்றிக் கொள்ளும் ஆழரசியல் இவ்வகை சொல்லாடல்களினூடே ஒளித்து வைக்கப்பட்டுள்ளதோ.

போலவே அரிப்பெடுத்தலின் போது நாமாற்றும் எதிர் வினைகள் போன்றே காமத்தின் ஆரம்பம் முதல் உச்சம் வரையிலான செயற்பாடுகளும் அமைந்திருத்தல் ஆச்சரியமளிக்கிறது. யோசித்துப் பாருங்களேன். காமத்தின் படிநிலைகள் விரலில் துவங்கி, உதடு வழியே, உறுப்புகளில் முடிவடைகின்றன. ஒவ்வொரு நிலையிலும் கருவிகள் யாதாயினும், அசைவுகள் சொறிதலைப் போன்ற இயக்கத்தையே கொண்டிருக்கின்றன.

காமம், அரிப்பு இரண்டுக்குமே தோல்தான் களமாகிறது. தோல் மீதான, தோலின் வேட்கையே அரிப்புக்கும், காமத்துக்குமான மூலாதாரம்.

ஊர்ப்பக்கம் ஆட்டுக்கு முதுகரிக்கையில், சுவரில் சென்று தேய்த்திருத்தலைக் கண்டிருப்போம். அதேபோல பாலுறுப்புகளில் அரிப்பாக ஊரும் ஏதோ ஒன்றும், சொறிதலை அல்லது அதை ஒத்தவொரு தேய்த்தலை எதிர்நோக்கி நம்மை உந்தித் தள்ளுதலே நம்மினம் நிலைத்திருப்பதற்கு ஊற்றுச்சுனையாகிறது.

உடல் முழுதும் முத்தமிடலாம்தான் என்றாலும், காதுமடல் எப்படி சில்லிட்டு சிலிர்க்க வைக்கும் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்களோ (எனக்குத் தெரியாது!), அதே போல, நடுமுதுகில் பயன்படுத்தப்படும் சீப்பும் சற்று அதிகப்படியான சுகத்தைத் தருகிறதே.

'சொறிய சொறிய சொகந்தான்..', 'சொறுஞ்சுட்டவங் கை சும்மாருக்காது..' என்று கொங்கு நாட்டில் சில சொலவடைகள் உண்டு. இவைகளை ஆராய்ந்தால் இன்னொரு கட்டுரை எழுதலாம் போலிருக்கிறது!

இங்கே ஒற்றுமைகளை நிறுத்திவிட்டு இந்தவிரு விஷயங்களுக்கான சில வேறுபாடுகளைப் பார்ப்போம்.

சுகத்தை மனதிற் கொண்டு சொறிதல் நிகழ்வதில்லை. ஆனால் வெளித்தூண்டி அல்லது வேதியூக்கி ஒன்றின் விளைவாய் துவங்கும் சொறிதல் சுகத்தையும் தந்து செல்கிறது. மறுபுறம் காமத்திலோ அதன் பிரதான காரணியான இனவிருத்தியைக் காட்டிலும் சுகித்திருத்தலே கிளர்ச்சியினை ஊக்குவிக்கிறது. இன்பத்தேடலே காமத்தின் ஆதாரப்புள்ளியாகிறது.

அரிப்பு ஓரிடத்தில் ஏற்படுகையில், உதவிக்கு வரும் விரல்களுக்கு எந்த இன்பமும் இல்லை. ஆனால் காமத்தில் இந்த ஏற்பாடு இருந்திருந்தால், அதாகப்பட்டது ஒரு பாலருக்கு மட்டும் சுகமென்றாகியிருந்தால் மானுடத்தின் சம நிலைக்கே பங்கம் வந்திருக்குமல்லவா!

எப்போதோ படித்ததன்படி, மனிதனுக்கடுத்து, இன்பம் பெறும் நோக்கோடு துணையோடு கலவும் ஒரேயொரு இனம் டால்ஃபின். டால்ஃபின்களுக்கு அரிப்பு ஏற்பட்டால் சொறிகையில் அதுவும் நம்மைப் போலவே இன்பத்தையும் பெறுகிறதா இல்லை தோலின் மேலான வேதிவினையோடு நின்று விடுகிறதா தெரியவில்லை.

எனக்குத் தெரிந்த வேற்றுமைகள் அவ்வளவே.

பெண்பாலரின் அதி உணர்வு குவிமையமான க்ளிட்டோரிஸில் பீறிட்டு வழிவது அரிப்பா, காமமா என்று ஒருகணம் யோசித்தல் என் பார்வையின் பிம்பத்துக்கு முழுமையாய் உங்களைக் கூட்டிச் செல்லலாம். தேய்ப்புகளால் திமிறியெழும் உணர்வுகளைச் சொல்ல க்ளிட்டோரிஸை விட தோதானதொரு உதாரணம் இருக்க முடியாது. உறவின் போது பெண்ணின் இந்த விடை தெரியாத் தவிப்புக்கு வினையாற்றுதலே ஆணின் தலையாய கடனாகிறது.

இந்த சிந்தனைகளுக்குப் பின்பெல்லாம், கொசுக்கடித்து லேசாய் தடித்து, சிவந்தாலும் க்ளிட்டோரிஸின் ஞாபகம் வந்து தொலைக்கிறது எனக்கு!

Read more...

Sunday, August 23, 2009

வலி

எல்லாரையும் சற்று தள்ளி
விளையாடிக் கொண்டிருந்த குழந்தை
குப்புறடித்து விழுந்து விட்ட போது
பதறாதிருக்க அனைவரையும் சைகித்தவள்,
விழுந்ததை எல்லாரும் பார்த்த வலியினும்
விழுந்த வலியின் வலியொன்றும்
பெரிதல்ல
என்றுணர்ந்தவள்,
அம்மா எனப்படுகிறாள்.

Read more...

Thursday, August 20, 2009

என் இனிய ஆஃப் பாயிலே.. - கவிப்பேரரசு வைரமுத்து

ஆஃப் பாயிலுக்கு அர்ப்பணம் செய்ய கவிப்பேரரசு வைரமுத்து ஒரு கவிதையெழுதினால்.. ஒரு சிறு கற்பனை. அவர் பாணியிலேயே படித்தல் உசிதம்.

-oOo-

என் இனிய ஆஃப் பாயிலே..
என் இனிய ஆஃப் பாயிலே..

சிரத்தையது சிதறாது
உன் ஓட்டுவெளியில் ஓட்டையிடுகிறேன்.

ஆழமுற ஓடுடைதல்
உன் உயிருக்கு ஊழாகலாம்!

உடைவித்த ஓடு - விரி
உயரம் ஓங்கா திருத்தல் நலம்.

கீழ்வானின் மஞ்சளுயிர்
கிழிந்தொழுகக் கண் தகுமோ?

உயிருடைந்தே வீழ்கையிலும்
ஃபுல் பாயிலாகிப் புறப்படுவாய்
ஃபுல் வாயிலும் இனிப்படைவாய்

தாழ்வுக்குத் தலை வணங்கா(து)
தன்மானம் தற்காப்பாய்!

உன் உயிரூற்றை
வெளியூற்றி
ஒரு சொட்டு சூரியனில்
உப்பு மிளகிட்டுக்
காத்திருத்தலின் கணங்களவை..

பெண்டிருக்குக் காத்திருத்தலிலுங்
கண்டிராதவை
கொண்டு தருபவை!

உன்
பொன் சிவந்து
என் உயிருவந்த
பின்

ஆற வைத்த
இளஞ் சூட்டில் - உனை
சேர வைத்த
நா முகட்டில்

வெள்ளை
மஞ்சள்
உப்பு
மிளகு
இது அதுவுடனும்
அது இதுவுடனும் - பின்
இவை அவையுடனும்
அவை இவையுடனும்,

கூடிக் கலைந்து,
குலுங்கிப் பிணைந்து,

இமைகள்
சுழன்று கொள்ள,
சுமைகள்
கழன்று கொள்ள,

காதலோடு
ஓதுகிறேன்..

என் இனிய ஆஃப் பாயிலே..
என் இனிய ஆஃப் பாயிலே..!

உப்புள் ஊறி வந்த நீயும்
தொப்புள் கீறி வந்த நானும்
வாய்க்குள் வம்பாடலாம் வா!

ஒன்றுக்குள் ஒன்றாதல்தான்
மோகத்தில் முத்தெடுத்தலாம்.
ஒன்றான ஒன்றாகி நாமும்
மேகத்தில் பூத்தொடுக்கலாம் வா!

உனக்காக வந்த
எனக்காக வெந்த - நீ
கணக்காக
சொந்தமானாய்!

துளிர்த்தடங்கும்
நா நரம்புகளில்
நாணேற்றி
நான் விடுவேன்!

நீங்காது
நின்று
சுவையளித்து
சுகமளித்து
'நான்' என்பதிறக்கி
நீ விடுவாய்!

ஏறுதலும் இறங்குதலும்
ஏற்றமுற முடியும்.
முடிந்தபின்
ஏறியிறங்கும்
ஆட்டங்களெல்லாமே
இனிப்பென்று புரியும்!

தொண்டைக்குழி கடந்து
நீ போகையில்
பெண்டுக்குழி பொதிந்து
நான் போன சுகம்
போலிருக்க

காதலோடு மட்டுமல்ல
உனக்காய்
காமத்தோடும் கத்துகிறேன்..

என் இனிய ஆஃப் பாயிலே..
என் இனிய ஆஃப் பாயிலே..!

Read more...

Monday, August 17, 2009

ஸ்வர்ணலதா என்றொரு குயில்குரலி!


ஒரு ஆதிக்க சக்தியாகவே அங்கீகரிக்கப் பெற்றுவிட்ட சக போட்டியாளனின் புகழுக்கு முன்பு, ஏனையோரின் திறமைகள் போதுமான கவனத்திற்குட்படாமல் போவது இயல்பாக நிகழும் துரதிர்ஷ்டம். சச்சின் - சவுரவ். SPB - மனோ. ஏன்.. என்னைப் பொறுத்தவரை ரஜினி - கமல் கூட. இந்தப் பட்டியலில், பாடகி ஸ்வர்ணலதாவை எவரோடு சேர்ப்பதென்று தெரியவில்லை. குறிப்பிடும்படியான எந்தவொரு காரணமும் பிடிபடவில்லை இவருக்கு போதுமான அளவு அடையாளம் கிடைக்காமற் போனதற்கு.(ஒரு நல்ல புகைப்படம் கூட இணையத்தில் இல்லை)

எஸ்.ஜானகி, பி.சுசீலா, சித்ரா, சுஜாதா போன்ற எல்லாரையும் விட எனக்கேனோ ஸ்வர்ணலதாவை அதிகமாய் பிடிக்கிறது. உயிர்ப்புடன் உணர்வுகளை இழையோட்டும் சாரீரம் தரக்கூடிய அனுபவங்களை அநாயாசமாக சாத்தியப்படுத்துகிறார். மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும், உச்சரிப்பில் எந்தக் குறையும் சொல்ல முடியாது இவரிடம். ஸ்ருதியைப் போலவே அக்ஷரமும் சுத்தம்!

காதல் பாடல்களில் இவர் குரலோடு சில்லிடும் ஒரு மென்புன்னகை என் காதுகளைத் தீண்டிக் கொண்டே இருக்கிறது.(பார்வை ஒன்றே போதுமே படத்தின் துளித் துளியாய், காதலர் தினத்தின் காதலெனும் தேர்வெழுதி, ஜென்டில் மேனின் உசிலம்பட்டி பெண்குட்டி)

ரொமாண்ட்டிக் பாடல்களில் துளிரும் காமமும், உடன் ஒழுகும் தாபமும் பெண்ணுணர்வை இயல்பாகப் புலப்படுத்துகின்றன.(உழவன் படத்தின் ராக்கோழி ரெண்டு, தர்மதுரை படத்தின் மாசி மாசம் ஆளான பொண்ணு)

பிரிவை முன்னிறுத்தும் பாடல்களானால், செவிப்படலத்தில் குறுகுறுக்கும் ஏக்கம் பின்னோடுகிறது. (அலை பாயுதேவின் எவனோ ஒருவன் வாசிக்கிறான், என் ராசாவின் மனசிலே குயில் பாட்டு ஓ வந்ததென்ன)

போலவே துள்ளலான பாடல்களின் போது பொங்கும் ஆரவாரத்தை அப்படியே குரல் வழி கடத்தி நம்முள்ளும் பாய்ச்சுகிறார். (கேப்டன் பிரபாகரன் படத்தின் ஆட்டமா தேரோட்டமா, இந்தியன் படத்தின் அக்கடானு நாங்க உட போட்டா, சில்லுனு ஒரு காதல் படத்தின் கும்மியடி)

இப்படி எவ்விதப் பாடலானாலும் அழுந்தப் பதியும் இவர் முத்திரை அளவுக்கு வேறெவரிடமும் எனக்குத் திருப்தி கிட்டுவதில்லை.

ஆரம்பத்தில் பயன்படுத்திக் கொண்டதைப் போல் பின்னாட்களில் இளையராஜா, ஸ்வர்ணலதாவுக்குப் போதுமான வாய்ப்பளிக்கவில்லை என்பது என் கருத்து. சத்ரியன் படத்தின் மாலையில் யாரோ மனதோடு பேச-வும், அமைதிப்படை படத்தின் சொல்லிவிடு வெள்ளி நிலவே-வும் தவிர்க்க முடியாத பாடல்கள்.

ராஜாவின் இசையில் ஸ்வர்ணலதா பாடி அதிகம் பிரபலமாகாத சில நல்ல பாடல்கள் - பெரிய மருது படத்தின் விடல புள்ள நேசத்துக்கு, சக்திவேல் படத்தின் மல்லிக மொட்டு மனசத் தொட்டு, பாண்டித்துரை படத்தின் மல்லியே சின்ன முல்லையே மற்றும் கானகருங்குயிலே.

ரஹ்மானிடம் கேட்டீர்களானாலும் என்னைப் போலவே அவரும் ஸ்வர்ணலதாவை அதிகம் பாராட்டுவார் என்பது அவர் ஸ்வர்ணலதாவுக்குக் கொடுத்த அதிக எண்ணிக்கையிலான மற்றும் தரமான வாய்ப்புகளிலிருந்து தெரிய வருகிறது. தனிப்பாடல்கள் தவிர்த்து ரஹ்மானின் நிறையப் பாடல்களில் அங்கங்கே ஸ்வர்ணலதாவின் குரல் ராகமிழுத்துப் போகும். உதாரணத்துக்கு அந்த அரபிக் கடலோர-த்தின் ஆரம்பத்திலும், இடையிலும், பாடியது யாரென்று பலருக்கும் தெரியாத ஹம்மிங்கும், பூங்காற்றிலே உன் சுவாசத்தை பாடலுக்கு முன்னும், பின்னும் ஒலிக்கும் கண்ணில் ஒரு வலியிருந்தாலு-ம்.

சற்றேறத்தாழ ரஹ்மானின் எல்லாப் படங்களிலுமே ஸ்வர்ணலதாவுக்கு வாய்ப்பளித்திருக்கிறார். கருத்தம்மா படத்தின் போறாளே பொன்னுத்தாயி பாடலுக்கு சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்த 'எல்லாப் புகழும் ரஹ்மானுக்கே'!

இந்தியனின் மாயா மச்சிந்திரா பாடலின் இரண்டாவது சரணத்தில் "அஜ்ஜிமா.. ச்செல்ல புஜ்ஜிமா" என்ற வரியை இவர் பாடிக் கேட்கையில், இதை சொல்லிக் கொஞ்சிக் கொண்டே காதலனின் கன்னத்தை செல்லமாய் கிள்ளும் காதலியின் தோற்றம் நினைவுக்கு வருகிறது. புன்னகைக்காமல் இருக்க முடிவதில்லை.

சில்லுனு ஒரு காதல் படத்தின் கும்மியடி பாடலை திருநெல்வேலி வட்டார வழக்கில் பாடியிருப்பது அழகு. முத்தாய்ப்பாக சரணங்களுக்கு இடையில் அவர் சிரிக்கும் அந்த ஒரு சிரிப்பு, அது சொல்லும் வெட்கம், அதிலிருக்கும் எள்ளல் போன்ற எதைப்பற்றியும் நான் எதுவும் சொல்லப் போவதில்லை. நீங்களே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

பாடலுக்கிடையே அளவான, அழகானதொரு சிரிப்பை உதிர்ப்பதில் SPBயும், ஜானகியும் பேசப்பட்டதற்கு சற்றும் குறைவில்லாத சிரிப்பு ஸ்வர்ணலதாவினுடையது.

இத்தனை சிறப்புகள் இருந்தும், ஆறு மொழிகளில் தடம் பதித்திருந்தும் கூட சமீப காலங்களில் இவர் வாய்ப்பில்லாது இருப்பது, அவருக்கல்ல.. நமக்குத்தான் குறை. செய்யும் வேலையை முழு விருப்புடன், ஈடுபாட்டுடன் தருவதுடன், படைப்பின் தரத்துக்கான உறுதியைப் பலமுறை நிரூபித்திருக்கும் ஸ்வர்ணலதா அவர்களுக்கு இனியேனும் முன்போல் வாய்ப்புகள் கிடைக்கட்டும்.

மேற்குறிப்பிட்டவை அல்லாத, எனக்குத் தெரிந்த மற்ற சில இனிய பாடல்கள்:

பாடல் - படத்தின் பெயர்

போவோமா ஊர்கோலம் மற்றும் நீ எங்கே - சின்னதம்பி
மலைக்கோயில் வாசலில் - வீரா
என்னுள்ளே என்னுள்ளே - வள்ளி
என்னைத் தொட்டு - உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்
காலையில் கேட்டது - செந்தமிழ் பாட்டு
ராக்கம்மா கையத்தட்டு - தளபதி
ஊரெல்லாம் உன் பாட்டுதான் - ஊரெல்லாம் உன் பாட்டுதான்
நன்றி சொல்லவே உனக்கு - உடன்பிறப்பு
நான் ஏரிக்கரை மேலிருந்து - சின்னத்தாயி
ராஜாதி ராஜா உன்- மன்னன்
ஆறடி சுவருதான் - இது நம்ம பூமி
உளுந்து வெதக்கையிலே - முதல்வன்
ஹாய் ராமா - ரங்கீலா
சொல்லாயோ சோலைக்கிளி - அல்லி அர்ஜுனா
மெர்க்யூரிப் பூக்கள் - மிஸ்டர் ரோமியோ
குச்சி குச்சி ராக்கம்மா - பாம்பே
மெல்லிசையே - லவ்பேர்ட்ஸ்
முக்காலா முக்காபுலா - காதலன்
குளிருது குளிருது - தாஜ்மஹால்
அஞ்சாதே ஜீவா - ஜோடி
முத்தே முத்தம்மா - உல்லாசம்
ஒரு நா ஒரு பொழுது - அந்திமந்தாரை
திருமண மலர்கள் - பூவெல்லாம் உன் வாசம்
திலோத்தமா - ஆசை
அந்தியில வானம் - சின்னவர்
விடை கொடு விடை கொடு - பிரியாத வரம் வேண்டும்

க்ளிக்கினால் பாடலைக் கேட்கலாம்.

Read more...

Sunday, August 16, 2009

குழந்தை மரம்

தின்றுகொண்டிருந்த
பழ மும்முரத்துக்கும்

வாயோர வடிதலின்
வடவடப்புக்கும் இடையே

"கொட்டைய முழுங்குனா
வயித்துல மரம் வளருமாப்பா.."

காதோரமாய் காத்திருந்த கேள்வியொன்று
நினைவுக்கு வந்தவளாகக் கேட்டாள்.

என் ஆமோதித்தலின்
நொடி விதை வெடிப்பில்

அவள்
வயிற்றில் வேர்பதித்து
தலை வெளி
கிளை பரப்பி
பரிபூரணத் தருவாக
விரிந்து நின்றது

அவள்
ஊஞ்சலாடிய மரமொன்று

கனிந்திருந்த
அதன் பழங்களைப்
பறித்துப் பிரீதியுடன்
தின்னத் தொடங்கினாள்
கொட்டைகளுடன்.

Read more...

Thursday, August 13, 2009

கல்லுறைவின் கருமாதிகள்



மீளாத் துயில்களின்
ஆழ்ந்த சூன்யத்தின் சொரூபங்களில்
உறைந்து நிற்கும்
கற்பிம்ப சித்திரங்கள்
அல்லது சித்தரிப்புகள் உங்களுக்கு
இறுகிய சிந்தனா பாவ
செரிப்புகளைப் பழக்கமுறுத்தலாம்.

சிற்பங்களாகவும் புலன் பெறும்
அவற்றைக் கடக்கும் நாட்கள்
வெற்றைக் கொண்ட சுய நிரப்பலின்
புற ஊதா
புறமூதாக் குதிர்களுக்குள்
இல்லாத ஆக்ஸிஜனை
இருட்டுக்குள் தொலைத்த பின்

காலக்கல்லில் உருளிக் குழைந்த
சிற்பங்கள் சுவாசிக்காமல்
சாவதே மேல்
உறைவு
கல்லுக்கா
காலத்துக்கா
பதிலில்லை

வாருங்கள்
ரசிப்பின் சாதலினுள்
சிற்பத்தின் சாதலை
ரசிப்போம் சற்று.



புகைப்படத்தில் விஷகன்னிகா, பேளூர், கர்நாடகா.

Read more...

Wednesday, August 12, 2009

தன்னைத் தானே..

தன்னைத் தானே
எழுதிக்கொள்ளும்
கவிதையொன்றை
உருவாக்கினேன்.
அது எப்போது தன்னை
முடித்துக் கொள்வது
என்று கேட்டது.
உன்னைப் படிப்பவர்
புன்னகைத்தவுடன் என்றேன்.
சரி நீ எழுதுவதைப்
படிப்பவர் இப்போது
புன்னகைக்கிறார்
நீ நிறுத்துவாயா என்றது.
நானும் புன்னகைத்துக் கொண்டே
சரி என்றுவிட்டேன்.

-oOo-

தன்னைத் தானே
எழுதிக்கொள்ளும்
கவிதையொன்றை
உருவாக்கினேன்.
அது எப்போது தன்னை
முடித்துக் கொள்வது
என்று கேட்டது.
உன்னைப் படிப்பவர்
புன்னகையை
நிறுத்தியவுடன் என்றேன்.
சரி என்று சொல்லிவிட்டு
எழுதிக் கொள்ளத் துவங்கியது.
முடிவுறுவதற்கு
மனமில்லாமலேயே.

-oOo-

தன்னைத் தானே
எழுதிக்கொள்ளும்
கவிதையொன்றை
உருவாக்கினேன்.
அது தனக்கு
சொந்தக்காரன்
நானா நீயா என்றது.
எனக்கு நீயும்
உனக்கு நானும்
சொந்தக்காரர்கள் என்றேன்.
அது உடனே
இன்னொருவரையும்
கைகாட்டிப் புன்னகைத்தது.
அவரும் புன்னகைக்கிறார்.

-oOo-

தன்னைத் தானே
எழுதிக்கொள்ளும்
கவிதையொன்றை
உருவாக்கினேன்.
அது உள்ளபடியே
தன்னைத் தான்களுடன்
எழுதிக் கொண்டேயிருந்தது
புன்னகைக்கும்
நான்களையும்
புன்னகைக்கும்
உங்கள்களையும்.

முழுவதையும்தான் நவீன விருட்சத்துக்கு அனுப்பினேன். முதல் பத்தி மட்டும் பிரசுரமாகியுள்ளது. தன்னைத்தானே நினைத்து சிரித்துக் கொண்டேன்!

அழகிய சிங்கர் அய்யா அவர்களுக்கு நன்றி.

Read more...

Tuesday, August 11, 2009

கமல்ஹாசன்! - வேறென்ன சொல்ல?

கமல்ஹாசன் என்ற ஆளுமையைப் பற்றிய பிம்பம் நினைவுக்கு வந்தவுடனேயே, கட்டறுப்புகள் எவற்றுக்கும் அஞ்சாத ஒரு பாசாங்கின்மையும், உள்ளேயிருப்பதன் சாரத்தை முகமூடிகளுக்குள் பதுக்கி வைத்து கள்ளம் ஒழுக கொஞ்சம், கொஞ்சமாய் துப்பாத தன்மையும், சுய சார்புகள் யாவற்றுக்கும் பிடி கொடுக்காமல் நிஜத்தை, எதார்த்தத்தை விசிறியடிக்கும் வார்த்தைகளில் 'இதுதான் நான். என்னை நீங்கள் ஏற்றுக் கொள்ள யோசிக்கும் சுதந்திரம் உங்களுக்கேயானது' என்று நான் கடைப் பிடிக்கும் பாடத்தைக் கற்றுக் கொடுத்த முதிர்வும், இப்படி நீளும் சில காற்புள்ளிகளும் வந்து மறைகின்றன.

சினிமா என்ற வணிக வட்டத்துக்கு உள்ளேயும், வெளியேயும், எத்தனையோ கருத்து முரண்கள் இருந்தாலும், "கமல்றா.." என்று அருகிலமர்ந்திருக்கும் குணச்சித்திர மாமாவின் வயதையும் பொருட்படுத்தாது, திரையரங்கில் நான் அடிக்கும் விசில்கள், நம்மனைவருக்குமே இதுபோன்ற ஒருசார்புடைமைகள், காரணங்களுக்கு அப்பாற்பட்ட விருப்பக் கூறுகள் இருத்தல், அன்றாட கழிசடைகளினின்று சற்றேனும் ஆசுவாசப்படுத்திக் கொள்ளவேனும் உதவும் என்ற காரணத்துக்காக ஒப்புக் கொள்ளலாம்.

கீழ்க்கண்ட நகரொளிப் படத்தைப் (வீடியோ!) பாருங்களேன். மிடுக்கும், கம்பீரமும், தேஜஸும் வேண்டாம், வேண்டாமென்று விரட்ட, விரட்ட வந்தமர்கின்றன விரலசைவில்.




ஆரம்பமே அசரடிக்கிறது. வந்து நின்றவுடன் "ஆழ்வார்பேட்ட தெய்வமே.." என்றொருவன் கத்துகிறான். "எனக்கதுல நம்பிக்க கெடையாது" என்ற வாசகத்தை எதிர்பாராதவொரு நிகழ்வின் எதிர்வினை என்பதற்கான எந்தவொரு அடையாளத்தையும் கொணராது கூறி, அதே அசந்தர்ப்பத்தை, "நம்பிக்கையென்பது இந்த மேடையைப் பார்க்கும்போது வருகிறது" என்று தன் பேச்சுக்கான முதலடியாக்கித் தடாலடியாகத் தொடங்கும் அச்சுப் பிசகாத்தனத்தை ரசிக்காமல் இருக்க முயன்று தோற்பதில், என் ரசனை மெருகேறுகிறது.

"என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களே" என்ற வாசகத்தை அவை வணக்கக் குறிப்பின் இறுதி வரியாகச் சேர்த்து ஒவ்வொரு மேடையிலும், கைதட்டல் வாங்கத் தெரியாத கமல்ஹாசனுக்கு, ரஜினிகாந்த் பேசிய பின் கடைசியாகப் பேசும் வாய்ப்பை வழங்குவதால் தமிழ் சினிமாவுலகின் மனுநீதிக்கு ஒரு இழுக்கு ஏற்படுவதை தமிழினம் ஏற்கலாமா? கூடாது! வலிந்து திணிவுறப் பெற்ற இந்நாகரீகங்களுக்கான கமலின் புன்னகை, பக்குவத்தின் உதட்டில் வீற்றிருக்கும்.

'காற்றோடு புணரும் அசைவுகளை'க் கண்டு, உளம் மிகுந்த உவகையுடன் "வசந்த்த முல்லை போலே வந்து ஆடிடும் வெண்புறா"வினைக் குப்புறப் போட்டுப் புணருபவர்கள், கவிதைக்கு மிக அருகிலான அவ்வாசகத்தின் ஆழ்அர்த்தத்தைப் புரிந்து கொள்ள இயன்றிருந்தால் குணாவும், மகாநதியும் குப்புறப் படுத்திருக்கத் தேவையிருந்திருக்காதே.

போதைப் பொருள் விற்கும் கும்பலில் தன்னையும் சேர்த்துக் கொண்டு, அவதூறை அள்ளிப் பூசிக் கொண்டு அவர் பங்கு போட்டுக் கொள்ள முன்வரும் சகோதரத்துவம், கமர்ஷியல் சினிமாக்காரர்களுக்கான கமலின் கொடை. அப்படி சம்பாதித்ததை காதலோடு ஒரு பிரதேசத்தின் சினிமாவை, அதன் தரத்தை மேடுறுத்தப் பாடுபடும் கமலுக்கும் கொஞ்சம் செலவழித்து, நன்றி செலுத்தலாம் இவர்கள்.

அமீரின் அளவு மறந்த பாராட்டுக்கொரு பதிலாக, "இது பணிவு அல்ல!"
அடக்கத்துடன் "மொழி யார்ட்டேர்ந்து எடுத்தா என்ன?"
உச்சமாய் எனைக் கவர்ந்த "கொக்கு கொண்டோந்து போட்டதில்லையே!"
என்று நயம் மிளிரும் மற்றும் கருத்தாழ்ந்தவைகளை வரிக்கு வரி எழுதச் சொன்னாலும், நான் தின்னும் கரும்பு, படிப்பவர்களுக்கு அலுப்பைக் கூலியாக்கி விடுதல் கூடாது என்பதால் இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

ஒரு சொல்தேர்ந்த பேச்சுக்குரிய எல்லா அலகுகளும் அளவு குறையாது இணைந்திருக்கும் கமல்ஹாசனின் எல்லாப் பேச்சுகளிலும் ஆங்காங்கு ஏற்படும் தடுமாற்றங்கள், முன் தயாரிப்பில்லாத பேச்சின் விளைவே ஒழிய, அத்தடுமாற்றங்களின் பொருட்டு உரையின் சுவாரசியம் குறைவதாக எண்ணி விடுதல் சரியாகாது.

குறிப்பு: http://www.youtube.com/watch?v=vuL9PBPxepc - யில் மேற்கண்ட வீடியோவில் இல்லாத சில பகுதிகளைக் காணலாம்.

Read more...

Thursday, August 6, 2009

உறுவலிக் குறிப்பு

உயிர்ச்சுருளினைத் உருவித்
தூரத் தூக்கியெறியும் வேளை
ஒரு குறிப்பெழுத முற்படுகிறேன்

அகத்தடவல்களுக்கான மயிலிறகுகள்
நரகத்தின் ஏதேனும் ஒரு கொடுமுகட்டில்
நீ ஒளித்து வைத்த
புத்தகத்திற்குள் இருக்கலாம்
அதே பக்கத்தில் துவங்கும்
என் ஊழுக்கான பதிலிடல்கள்
அத்தியாயங்களாக நீட்சியுறலாம்.

நீயழிந்து போன
நீ என்ற
சொற்பிடியிலிருந்து சுயவிடுதலை
செய்து கொள்ளவேனும்
அக்குறிப்பை எழுத விழைகிறேன்.

உன் புத்தகத்தின் இன்னுமொரு
பக்கம் என் குறிப்புக்காகக் காத்திருக்கும்.

உயிரோசை 10/08/2009 மின்னிதழில் பிரசுரமானது.

Read more...

Wednesday, August 5, 2009

அவொ அப்பத்தா இன்னோன்னு?

சமணங்கால் போட்டு குக்காரைலெல்லா
மூணாங்கோப் ட்றாயர் முடிஞ்சுன்ன
காலுந் தொடயுந் தொட்டுக்கற
வெட்ட லேசா விரிச்சு
'இதென்னோனு தெரீமாடா'னு
கேப்பா லோகனாயகி.
'தெரியாதுடி களுத முண்ட'னு
கத்தியுட்ட்டனொரு நாளு
அன்னைக்கு சாய்ங்காலம்
'இதென்னோனு சொல்லாத்தா'னு
ஆத்தாகுட்டயே கேட்டதுக்கு
'ஆரு சொன்ன வெகரண்டா'னு
வெசாரிச்சுட்டு,
எளகிப்போச்சு எங்காத்தாளோடது
நீயே காட்றி நிமுண்டிக்கிறேன்-னு போயந்த
அமுக்குனிகுட்டயே கேட்டுக்கடா'னு
சோலிய நிறுத்தாம
சொல்லிப் போட்டுச்சு
அப்பத்தா

Read more...

Tuesday, August 4, 2009

ஓட்டம்



அக்குளின் கனத்த வாசம்
சட்டைகளுக்குள் ஊரிக் கொண்டிருக்கும்
மாலை 6 மணி சென்.ஜான்ஸ் சிக்னலின்
நான்முனைகளிலும்
புளுத்துக் கொண்டேயிருக்கும்
வாகனங்களில்
இன்னும் சற்று எஞ்சியிருக்கும்
அவசரத்தின் எச்சம்
மற்றுமொரு நாளைக் கடத்திவிட
பச்சை விளக்குக்குக் காத்திருக்கையில்,
பேரோலமிட்டபடியே
முட்டி மோதி எப்படியோ
முன்னே வந்து விட்ட
ஆம்புலன்ஸ் ஒன்று
அத்தனை கண்களும் பார்த்திருக்க,
ஆத்திர கதியிலொரு U டர்ன் அடித்து
வேகமெடுத்தும்,
எடுக்க முடியாமலும்,
அரந்து பறந்தந்த
வண்டித் திரளுக்குள்
புள்ளியாகி மறையும்
ஒற்றை நொடியில் உறைக்கிறது
எதற்கிப்படி ஒவ்வொரு நாளும்
ஓடுகிறோம் என்று.

Read more...

Monday, July 27, 2009

கைப்பழக்கம், சுய இன்பம், சொப்பன ஸ்கலிதம், இன்ன பிற - சில உண்மைகள்!

குறிப்பு: சற்று நீண்ட கட்டுரை. மன்னிக்கவும்.

என் பள்ளி இறுதியாண்டில் (2002), ஒரு நாள் வீட்டில் யாருமில்லாத மாலை நேரம் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தேன். ரிமோட்டின் ஏதோவொரு பொத்தான் என்னை சேலம் சிவராஜ் சித்த வைத்திய சாலையில் கொண்டு தள்ளியது. அங்கிருக்கும் எத்தனையோ சிவராஜ்களில் ஒரு மூத்த சிவராஜ் பேசிக்கொண்டிருந்தார்.

"தமிழ் நாட்டு இளைஞர்கள் கைப்பழக்கத்திற்கு அடிமையாகி, சீரழிந்து சின்னா பின்னமாகி வருகிறார்கள். சுய இன்பம் அனுபவிப்பதால், ஆண்மை இழப்பு ஏற்படும். மனைவியைத் திருப்திப்படுத்த முடியாது. உச்சி முதல் உள்ளங்கால் வரையான நாடி, நரம்புகள் அனைத்தும் ஒரு சீராக வலுவிழக்கும்.

என்னிடம் தினமும் இது போல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வருகிறார்கள். அனைவரும் 25 வயதுக்குட்பட்டவர்கள். என் பேரக்குழந்தைகள் இப்படிச் சீரழிவதை என்னால் தாங்க முடியவில்லை. உங்களுக்கும் கைப்பழக்கம் இருந்தால், நீங்கள் என்னிடம் வாருங்கள். நான் உங்கள் தாத்தா மாதிரி. உங்கள் வீட்டுக்குத் தெரியாமல் நான் உங்களைக் குணப்படுத்துகிறேன்.." அது இது என்று மிகவும் அக்கறையாகப் பேசிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் கண்ணீர் வேறு வடித்தார்.

நான் அரண்டு போய்விட்டேன். நான் மட்டுமல்ல. என் வயதையொத்த எந்தவொரு இளைஞன் பார்த்தாலும் பயந்துதான் போவான்.
இதில் மறைத்து வைக்க ஒன்றுமில்லை. வயது அப்படி! ஒரு ஆர்வத்தில், வளரும் தன்னுடலை ஆராய்தலின் ஈர்ப்பில், தனியாக இருக்கும் சில சந்தர்ப்பங்களில் சுயபுணர்ச்சியில் ஈடுபடுடத் தொடங்கியிருக்கும் ஒரு விவரந்தெரியாத விடலையிடம் இப்படிப்பட்ட தகவல்கள் தரப்பட்டால் விளைவுகள் மோசமாகத்தான் இருக்கும்.

மிகவும் பயந்து போனால் அவன் என்ன செய்வான். அப்படி, இப்படி என்று எப்படியாவது காசைப் புரட்டிக் கொண்டு, கோவை லலிதா லாட்ஜில் மாதாமாதம் 22 மற்றும் 23ஆம் தேதிகளில் ஆஜராகும் ஒரு சிவராஜைப் பார்க்கப் போவான். காசைக் கொடுத்து விட்டுக் காலில் விழுவான். "அவரும் நீ ஒண்ணும் பயந்துக்காத தம்பி நாங்க பாத்துக்கறோம்" என்று வாங்க வேண்டியதை வாங்கிவிட்டு லேகியத்தையும், சூரணத்தையும் கொடுத்துவிட்டு "வர்ட்ட்டா.." என்று போய்விடுவார்.

நமக்கு அந்த அளவுக்கெல்லாம் தைரியம் இல்லையென்றாலும், எனக்குக் குழந்தை பிறக்காது என்று உள்ளூர நம்பத் தொடங்கி விட்டேன். அவர் வேறு மறதி, பயம், சந்தேகம் போன்ற சகஜமாய் நிகழ்பவற்றையெல்லாம் கூட இந்த 'வியாதி'க்கான அறிகுறிகளாகச் சொல்லியிருந்ததால் பேனாவை மறந்து விட்டுப் பள்ளி சென்று விட்டால் கூட பயமாகவே இருந்தது. ஒரு மாதிரி என்னை நானே தேற்றிக் கொண்டு அப்படியெல்லாம் ஒன்றும் ஆகாது என்று இருந்தேன். பள்ளி, கல்லூரி எல்லாம் முடிந்தது.

இப்போதுதான்.. ஏறத்தாழ ஒரு வருடத்திற்கு முன்பு செக்ஸாலஜிஸ்ட் ஒருவரிடம் உரையாடும் வாய்ப்பு தற்செயலாகக் கிடைத்தது (அப்போதும் தற்செயல்தான். நானாகப் போகவில்லை). அவரிடம் ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டேன். சுய இன்பம் குழந்தைப் பேறைப் பாதிக்குமா என்று. சிறு புன்னகையுடன் அவர் சொன்னார்-

"Masturbation is a Healthy Sexual Behaviour. நீ சுய இன்பம் செய்யவில்லை என்றால்தான் குறைபாடு இருப்பதற்கான வாய்ப்புகளுண்டு. செய்கிறாய் என்றால் You are sexually perfectly alright. 95% ஆண்கள் சுய இன்பம் அனுபவிக்கிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. அப்படியானால் 100க்கு 95 பேருக்குக் குழந்தை பிறக்காமல் அல்லவா போக வேண்டும். அப்படி இல்லையே. துணையுடன் வாரமிருமுறை உறவு கொண்டால் தீங்கில்லை என்று சொல்லும் உன்னுடைய அந்த மருத்துவம் (சிவராஜ்), அதே செயலை திருமணத்துக்கு முன்பு துணையில்லாமல் செய்து கொண்டால் மட்டும் எப்படித் தவறென்று சொல்ல முடியும்?

If Masturbation is wrong, and of course Sex is also WRONG. அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகி விடாமல் பார்த்துக் கொள்தல் மட்டும் அவசியம். அது வெறும் பழக்கம் மட்டுமே. வியாதி அல்ல.

நீ உன்னைக் குழப்பிக் கொள்ளாதே. அதிகபட்சம் வாரம் இரண்டு அல்லது மூன்று முறையென்ற இடைவெளியில், சீராக உன்னால் சுய இன்பத்தைக் கட்டுப்பாட்டுடன் செய்ய முடிகிறது என்றால், ஒரு சராசரியான செக்ஸ் வாழ்க்கை உனக்காகக் காத்திருக்கிறது. சந்தோஷமாக இரு!"

சுய இன்பத்தை அடுத்து நம் சிவராஜ் அவர்கள் கூறிய இன்னொரு முக்கியமான 'வியாதி' - சொப்பன ஸ்கலிதம்! அதாவது உறங்குகையில் விந்து வெளியாதல். திருவாளர் சிவராஜ் அவர்கள் இதையும் ஒரு மிகக் கொடிய நோயாக சித்தரித்தார். இதைப் பற்றியும் கேட்டேன். அவர் பதில் -

"வளரும் இளைஞனின் உடலில் குறிப்பிட்ட பருவத்தில் உற்பத்தியாகத் தொடங்கும் உயிரணுக்கள், முதல் முறை வெளியாவதற்கு இயற்கையே ஏற்படுத்தியிருக்கும் ஒரு முறைதான் இந்த சொப்பன ஸ்கலிதம். சரியாகச் சொன்னால் பெண்கள் ருதுவாதலை ஒத்த ஒரு ஆண் பூப்பெய்தல். ஆங்கில மருத்துவம் இதை Nocturnal Emission என்கிறது. துளி கூட இதனால் உடல் நலத்திற்கோ, குழந்தை பெறுதலுக்கோ பாதிப்பில்லை. இளைஞன் உடலுறவுக்குத் தயாராகி விட்டதற்கு ஒரு alerting mechanism தான். முதல் முறை மட்டுமல்ல. வாழ்வின் எந்த காலகட்டத்திலும் இது ஏற்படலாம். பயப்படத் தேவையே இல்லை."

'என்னடா இது.. தூங்கும்போது இப்படி ஆகுதே' என்று குழம்பிப் போயிருக்கும் இளைஞன் சிவராஜ் பேசுவதைக் கேட்டால் என்ன ஆகாமல் இருப்பான்?

இவையெல்லாவற்றையும் விட மருத்துவர் சொன்ன அடுத்த வாசகம்தான் மிக முக்கியமானது.

"ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் 2 ஆண்டுகளாகப் பணிபுரியும் உனக்கே இவையெல்லாம் தெரியாது எனும் போது, இந்நாட்டின் மற்ற இளைஞர்களை நினைத்து மிகுந்த அச்சப்படுகிறேன்."

இவ்வரிகள்தான் நம் சமூகம் எனக்கு மாட்டிவிட்ட முகமூடியைப் பிய்த்தெறிந்து விட்டு, இதை எழுதும் தைரியத்தைக் கொடுத்தன. இப்படியே படித்தவன், படிக்காதவன் என்று எல்லாரும் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தால், பின் நம் இளைஞர்களுக்கு உண்மையை யார்தான் சொல்லித் தருவது?

பாலியலை மூடி மூடி வைப்பதன் மூலம் நாம் இங்கே காப்பாற்றுவதற்கு எந்தக் கலாச்சாரம் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. செக்ஸ் என்ற சொல் வீடுகளுக்குள் புழங்கத் தகாதவொன்றாகவே இருக்கிறது. கெட்ட வார்த்தை! உடலியல் குறித்தான எந்த ஒரு விளக்கமும் குழந்தைகளுக்குப் பெற்றோரிடமிருந்து தரப்படுவதில்லை.

பண்பாடு, கலாச்சாரம் என்பதான மாயைகள் ஏற்படுத்தியிருக்கும் பொய் வலைக்குள் இவை சாதாரணமாக சாத்தியம். சரி. வீட்டில் தான் இந்நிலை. பள்ளியிலாவது தரமான பாலியல் கல்வி தரப்படுகிறதா எனில், நமக்குக் கிடைப்பதெல்லாம் ஒரு பெரிய 'இல்லை' மட்டுமே.

அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பாலியல் கல்வியெல்லாம் சொல்லித்தர மாட்டார்கள். ஏனெனில் அது அவர்களைப் பொறுத்தவரை ஒரு தரக்குறைவான செயல். அவமானம்! சிறார்கள் அவர்கள் உடலையும், உறுப்புகளையும் பேணுவதற்குக் கற்றுத் தருவதிலிருக்கும் ஆசிரிய தர்மம் புரியாதவர்கள். தத்தம் பிள்ளைகளுக்கே அவற்றை சொல்லித் தர எண்ணம் வராதவர்கள், ஊரான் பிள்ளைகளுக்கு எப்படிப் பயிற்றுவிப்பார்கள்?

அவ்வளவு ஏன்? நான் இங்கே இத்தனை நியாயம் பேசுகிறேனே.. எப்படி? என் வலைப்பக்கத்தை என் பெற்றோர்கள் படிப்பதில்லை என்ற தைரியந்தான். என் உடன் பிறந்தோர் இருக்கும் வகுப்புக்கு பாலியல் கல்வி தரச் சொன்னால் செல்வேனா. மாட்டேன்! நம்முடைய மூன்றாந்தர சமூகம் என்னை அப்படித்தானே வளர்த்து வைத்திருக்கிறது. அடுத்த தலைமுறைக்காவது இந்தத் தேவையில்லாத தயக்கங்கள் இல்லாத வகையில் குழந்தைகளை வளர்க்க வேண்டும்.

இப்படிப்பட்ட ஒரு சமூகக் கட்டமைப்பில் வளரும் இளைஞர்கள், பாலியல் மற்றும் உடலுறவு சம்மந்தப்பட்ட தவறான தகவல்களை வணிக நோக்கில் பரப்பும் காசாசை விஷமிகளிடம் எளிதாக சிக்கிவிடும் அபாயங்கள் மயிரிழை அளவேனும் குறையவும், எனக்குத் தெரிவதற்குத் தாமதமான நடைமுறை மற்றும் அறிவியல் பூர்வமான உண்மைகளை ஒரு சிலருக்கேனும் சரியான தருணத்தில் கொண்டு சேர்க்கவும் இது ஒரு சிறு முயற்சி.


தொடர்புடைய சுட்டிகள்:

http://www.ayurvediccure.com/over_masturbation.htm

http://www.webmd.com/sex-relationships/guide/masturbation-guide
http://www.afraidtoask.com/masturbate/MedView.htm
http://en.wikipedia.org/wiki/Nocturnal_emission

Read more...

Friday, July 24, 2009

என் பங்குக் காதல் கவிதைகள்..


அடுத்த முறையேனும்
காதலில் வெற்றி பெற
ஆசைப்படுகிறேன்
உன்னுடனேயே.

இன்னொரு முறையெனினும்
காதலில் ஆசையோடு
தோற்றுக் கொள்கிறேன்
உன்னுடனேயே.


-oOo-


ஒரு அவன்.
ஒரு அவள்.
ஒரு காதல் வந்தது.
ஒரு உலகம் காணாமல் போனது.


-oOo-


நம்முடையவர்களும்,
நம்முடையதுகளும்
எல்லாவித
சமரசங்களுக்கும்
ஆட்படுத்தப்படுகிறார்கள்
நம்முடையதுக்காக


-oOo-


என் பெயரைக்
கூவினேன்.
உன் பெயராய்
எதிரொலித்தது.
மாற்றின் சாத்தியமும்
பலித்தது.
யாரோ சொன்னார்கள்
எதிர் மலையில்தான்
தற்கொலை முனை
உள்ளதென்று.


-oOo-


'காத்திருத்தல்' என்ற
வார்த்தைக்குள்
'காதல்' என்ற
வார்த்தை.

ஒருவரையொருவர்
காத்து இருத்தலும்,
ஒருவருக்காக ஒருவர்
காத்திருத்தலும்
நிகழாத போது
'திருத்த' என்கிறது
வாழ்க்கை.

Read more...

Tuesday, July 21, 2009

சூட்சுமப் பூட்டுகள்



நான் உள்ளே இருந்தேன்.

கதவைப் பூட்டும்
சப்தம் கேட்டது.

உள்ளிருந்து பூட்டினாயா
வெளியிலிருந்து பூட்டினாயா
என்றேன்.

பதில் வரவில்லை.

வெளியிலிருந்து
பூட்டியிருந்தால்தான்
பதில் வராது
என்ற பதில்
வராத பதிலிலிருந்து
வந்தது.

உள்ளேயிருந்தும்
பூட்டியிருக்கலாமோ?

ஆனாலும்
பதிலில்லையே.

தெரியவில்லை.

Read more...

Monday, July 20, 2009

கையாலாகாக் கவிதைக் குறிப்புகள்

சினிமாப் பாடல்களல்லாது, கவிதை அல்லது அதை எழுதும் கவிஞன் என்றாலே ஒரு இளப்பம் நம் சமூகத்தில் நிலவுகிறது. சமீபத்தில் நெடுநாள் கழித்து இணையத்தில் சந்தித்த ஒரு நண்பனிடம் வேலை நேரம் போக, அவ்வப்பொழுது எழுதுவதுண்டு என்று கூறிக் கொண்டிருந்தேன். உடனே, "இந்தக் காதல் கவிதை எல்லாம் எழுதுவியாடா மச்சி.. ?" என்ற அவன் கேள்வியில் இருந்த ஏளனத் தொனி சற்று யோசிக்க வைத்தது.

'வேலை வெட்டியில்லாதவன்கள், இப்படித்தான் எதையாவது எழுதிக் கொண்டிருப்பான்கள், இதுக்கெல்லாம் நேரத்தை செலவழிக்க முடியுமா' என்பது போன்றதொரு பொதுப்புத்தி எழுதுபவர்களைப் பற்றியிங்கு பரவலாகவே காணப்படுகிறது. விவேக் ஒரு படத்தில், "ஒரு.. ஸ்வீட் ஸ்டாலே.. பனியாரம் சாப்பிடுகிறதே.. ஆச்சரியக் குறி.." என்று காமெடி செய்தது கூட இந்த வெகுஜன மனநிலையின் ஒரு மறைமுக வெளிப்பாடுதானோ என்று சந்தேகிக்கிறேன்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும், ஒரு கவிஞன், ஒரு படைப்பாளி இருக்கிறான் என்பதும், ஒவ்வொருவருக்குள்ளும் எண்ணிலாப் படைப்புகள் ஊறிக் கிடக்கத்தான் செய்கின்றன என்பதும் நாமனைவரும் அறிந்த உண்மைதான். ஆனால் எந்தப் புள்ளியில் இந்தப் படைப்புகளை எழுத்தாய் கொட்ட ஒருவன் முயற்சிக்கத் தொடங்குகிறான் என்ற கேள்விக்கான பதில் ஒருவருக்கொருவர் மாறுபடலாம்.

எனக்குப் பள்ளி நாட்களில் தமிழ் என்றால் உயிர்.(இப்போதுப் பிடிக்கும்தான். இருந்தாலும் தாய்நாடு, தாய்மொழி போன்ற செயற்கை பிம்ப ஆதிக்கங்களின் பொய்மை நீர்த்து விட்டது) தமிழைப் பற்றி யாராவது தவறாகப் பேசினால் ஆத்திரம் தலைக்கேறி விடும். என்ன பிடிக்கும் என்று கேட்டால் கூட அம்மாவுக்குப் பின் தமிழைத்தான் சொல்வேன். தாய்த்தமிழுக்கு என்னாலான ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டி யோசித்ததில்தான் "எழுதலாம்" என்ற எண்ணம் உதயமானது. அதுவும் அப்போது புதுக்கவிதையாவது ஒண்ணாவது.. படித்ததெல்லாம் பாடப்புத்தகத்தில் இருந்த பாரதியும், திருக்குறளும், சங்கத்தமிழ்ப் பாக்களும்தான்.

திருக்குறளும், புறநானூறும் கடினமாக இருந்ததால், 'வளர்ந்த' பிறகு அவற்றை எழுதிக்கொள்ளலாமென்று முடிவெடுத்து, பாரதி பாணியிலேயே, நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும் அள்ளித் தெளிக்கும் 'கவிதை'கள் எழுதித் தள்ளினேன். பின்பு கல்லூரி வந்ததா.. கூட என்ன வரும்? வேறென்ன காதல்தான்! எனக்குக் காதல் மனதில் வாராவிட்டாலும், கவிதையில் நன்றாகவே வந்தது. அதிலும் காதல் தோல்விக் கவிதைகள் பிரவாகமெடுத்தூற்றின!


புள்ளி வைத்தாய்
கோலமானேன்
தள்ளி வைத்தாய்
அலங்கோலமானேன்!


-oOo-

நான் உன்னை என்
மனச்சிறையில் வைத்தேன்
உன் அப்பாவோ என்னை
மத்திய சிறையில் வைத்தார்!


-oOo-

சொர்க்கத்தை மறைக்கும்
சாதனம்
அடுத்த வீட்டு சுவர்!


-oOo-

ஜன்னல் கம்பிச்
சிறையினின்று
தப்பிப் பறக்கிறதென்
வெண்ணிலா!

என்ற வகையில் (நல்ல வேளையாக ஞாபகத்திலில்லாத) இன்னும் பலவற்றை வகுப்பறை வேளைகளிலேயே ஆக்கித் தமிழன்னையின் திருவடித் தாள்களுக்கு கவிதாபிஷேகம் செய்வித்தேன். ஒன்று, இரண்டு சுமாராகத் தேறும் என்ற போதும் பெரும்பாலும் எல்லாம் மூன்றாந்தரம்தான்.

பாரதிக்குப் பின் துரோணாச்சாரியாராக அருள வந்தவர், நமது வைரமுத்து. டூயட் படத்தின் இறுதிக் காட்சியில், பிரபு ஒப்பிக்கும் "கண் பார்த்ததும், கெண்டைக் கால் பார்த்ததும்" என்று தொடங்கும் கவிதையைப் பின்பற்றி அதே சந்தத்தில் நான் என் வரிகளைப் போட்டு எழுதிய காதல் தோல்விக் கவிதை கல்லூரியெங்கும் என் பிரசித்தியைப் பரப்பிற்று.

ஆதாமேவாளுக்கு நம்மாலான நன்றியைச் செலுத்துகையில் இடையிடையே குடும்ப, சமூக மற்றும் நாட்டு நலன் குறித்து வேறு 'கவிதை'யெழுதினேன். உரைநடையை ஒடித்துப் போட்டு நடைபெற்ற இப்படியானதொரு கவி வாழ்வு ஒரு நன்னாளில் கல்லூரி நூலகத்தின் கடைக்கண் பார்வை பட்டு, சற்றேனும் உருப்படுவதற்கான சில பல வழிகளைக் காட்டியதின் விளைவாக, அன்று தொட்டு என் கவிதாவேசப் பிரசங்கித்தனங்கள் அனைத்தையும் நிறுத்தி விட்டு, இயல்பாகவும், சுமாராகவும் எழுத முயற்சித்து வருகிறேன்.

இப்படி ஒவ்வொரு மனிதனுக்கும், அவனுக்குள் இருக்கும் கவிஞனை அடையாளங் காட்டும் சூழ்நிலைகள் ஒவ்வொரு வகையாக இருக்கும். சொல்லப்போனால் பலருக்கும் வலி, பிரிவு, தோல்வி, தற்கொலை, விரக்தி, அவமானம் என்று எதிர்மறை நிகழ்வுகள்தான் கவிதைக்கான முதற்காரணியாக இருக்கும்.

அவனவன் இப்படி படாதபாடுபட்டு ஒரு கவிஞனாக உருப்பெற்று கவிதையெழுதினால், இவர்கள் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு "இவனுங்க வேலையத்தவனுங்க" என்பது போல் முத்துதிர்ப்பது, 'எங்கள் வேலையில்லாத் தனத்தையல்ல; விஜய் படத்திற்கு சென்று விசிலடிக்கும் நம் சமூகத்தின் ரசனையைத்தானே பறை சாற்றுகிறது' என்ற உண்மையை, இதுவரை ஒரு கவிதையைக் கூட உருப்படியாக எழுதாவிடினும், என்றேனும் ஒருநாள் ஒன்றே, ஒன்றையாவது எழுதப்போகும் நானும் ஒரு கவிஞன் என்ற கடமைக்காகவேனும், உரக்கக் கூறிக் கொள்கிறேன்.

ஆகவே பொது ஜனங்களே, உங்களை நாங்கள் கேட்டுக் கொள்வதெல்லாம், நீங்கள் உங்கள் ரசனையை மாற்றிக் கொள்ளவே வேண்டாம். நீங்கள் விஜய் படத்தில் பிஸியாகவே இருங்கள். எங்களைப் பற்றி குறை கூறாதீர்கள். தயவு செய்து! நாங்கள் எங்கள்பாட்டுக்கு இருந்துவிட்டுப் போகிறோம்.

Read more...

Thursday, July 16, 2009

ஈஷ்வரோ ரக்ஷது!



வழமை போலவே அலாதியானதொரு பெங்களூரின் குளிர் மாலை. அலுவலகத்தின் ஆறாம் தளத்திலிருந்து, வேறுபட்ட தொலைவுகளில் வானளாவும் அபார்ட்மெண்டுகளும், வளர்ந்து வரும் அபார்ட்மெண்டுகளும், வளர்த்து வரும் நெடிதுயர்ந்த க்ரெய்ன்களும், சீரான வேகத்தில் உலவிக் கொண்டிருக்கும் மேகக் குழுமங்களும், சாரலுக்கும், தூறலுக்கும் பிறந்த குழந்தையாய் மேல்விழும் துளிகளும், பரந்து கிடக்கும் வானும், தொலைவில் ஊரும் மானுடமுமாய் இயற்கையின் பிரம்மாண்டம் ஏற்படுத்திய குறு குறுப்பும், குறித்து வைக்காத இன்னும் சில இனிமைகளும்.. அன்றாட இறுக்கங்களிருந்து சற்று ஆசுவாசமளித்தன.

இவற்றை விடுத்து உணவகத்தின் உட்சென்று, சமோசாவை சன்னாவும் ஆசை எனக்கில்லை. என்றாலும், சொல்லிப் புரிய வைக்க முடியாத நம் அலுவலக நண்பர்களிடம், ஒரு முறை, கொழிக்கும் பணத்தைக் கொட்ட இடமில்லாத உங்கள் காலாண்டுக் கொண்டாட்டங்களை, மேல்தட்டு Bar-களுக்கு சென்று, 4 மணிநேரம் கும்மாளமிட்டு, போதைத் தலைவலியையும், ரூ. 40,000 செலவையும் தடுப்பதற்காக இல்லாவிடினும், ஒரு அரை நாளையும், ஒரு வேளை சோறையும் சேவாசதன் குழந்தைகளுக்குக் கொடுப்பதற்காகவேனும் செய்யலாமே என்று சொன்னபோது, எல்லாரும் என்னை Septic-காகப் பார்த்தார்கள். அப்போதே இங்கே மௌனம்தான் எனக்கேற்ற வழியென்று முடிவெடுத்து இருந்ததால், அமைதியாக உள்ளே சென்று விட்டேன்.

வெளிப்புறத்துக் கூதல் உள்ளும் உருண்டு கொண்டிருந்தது. நம் மக்களுக்கு ஊர்வம்பு பேசுவதில் உவப்பு அதிகமாயிருந்தது. என்னைப் போலவே எல்லோரும் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் சகஜப் புத்தியில்லை. அது ஏன் உங்கள் விருப்பம் ஊர்வம்பில் தொடங்கி, உள்ளூர் அரசியலோடு நின்று விடுகிறது என்பது புரியாத அறிவீனனாகத்தான் கேட்கிறேன். பொதுவாகவே சாஃப்ட்வேர் மக்களைப் பற்றிய மதிப்பீடுகள் நம் சமூகத்தில் எதிர்மறையாகவே இருக்கும். பணத்தைக் கண்டபடி செலவழிப்பதில் துவங்கி, கலாச்சார சீர்கேடு வரை வகை வகையாக. எம்மக்களும், பரத கண்டத்தின் எந்தப் பகுதியிலிருந்து வந்திருந்தாலும், அச்சில் வார்த்த அழகோவியங்களாய் அதற்கேற்றாற்போல்தான் நடந்து கொள்வார்கள். Unity in Diversity!

வெளிநாட்டிலிருந்து திரும்பி வருகையில் ஒருவர், அவரால் மிச்சம் பிடிக்க முடிந்த டாலர்களுக்கு சாக்லேட்டுகள் வாங்கி வந்திருப்பார். சாக்லேட் தீர்ந்து போவதற்குள் எடுத்துக்கொள்ள வேண்டுமே. Literally அடித்துக் கொள்வார்கள்!

கூழைக் கும்பிடு என்பதை நான் புரிந்து கொண்டது இங்குதான். என்னதான் வேலை பார்த்தாலும், ஆண்டிறுதியில் நம் பதவி / ஊதிய உயர்வு, வெளிநாட்டு வாய்ப்பு என்று சகலமும் 'அவர்' முடிவுக்குட்பட்டதால், ஸ்டேப்ளர் வாங்கி வரும் வேலைக்குக் கூட சிலரை உபயோகிக்கும் 'ப்ராஜக்ட் மேனேஜர்'களும் உண்டு. அவர் என்ன சொன்னாலும் பல்லைக் காட்டும் வித்தை ஏனோ எனக்கு வாய் கூடுவதேயில்லை. இரு தரப்பிலும், அனைவரும் அப்படியில்லை என்பது ஆறுதல்.

அதி முக்கியமாக ஆறாம் வகுப்பு மாணவர்கள் போல் யூரினலுக்குள் பபுள்கம்மைத் துப்பி வைப்பது! பபுள்கம் இல்லாத யூரினல் தேடினாலும் கிடைப்பதில்லை. கேட்டால் துப்புரவாளர் க்ளவுஸ் போட்டிருக்கிறாராம். அதனால் துப்பலாமாம். என் நாகரீக வெங்காயங்களை உரித்தெறிந்து விட்டுப் பேசச் சொன்னால், எல்லோரும் பேய்ந்த பின் அதே பபுள்கம்மை அவன் வாயிலேயே போட்டுவிட்டு, அதை சுத்தம் செய்யும் பொறுப்பிலிருப்பவரை, அதே பபுள்கம்மின் மேல் பேய வைக்க வேண்டும்.. You know.. Professionals!

அடுத்தவரைக் குற்றம் சொல்லும் என் வாக்கியம் முடியும் முன்பே, என் முதுகின் அழுக்கு எனக்கு நினைவுக்கு வரும் சராசரியன் நான். பின் ஏன் இத்தனை குறை சொல்கிறேன்? ஆண்டுக்கு அரை லட்சம் சம்பாதிக்கும் நீங்கள், உங்கள் சம்பாத்தியத்திலிருந்து தராவிடினும், உங்கள் அலுவலகம் அள்ளித் தருவதிலிருந்து, கிள்ளித் தந்து கூட ஒரு குழந்தைக்கு சோறு போடாது அனுபவிக்கும் கொண்டாட்டங்கள் எனக்குக் குமட்டலைத் தந்ததால், இங்கே என் புலம்பல்களுக்கு நானே நியாயம் கற்பித்துக் கொள்கிறேன்.

சமோசா சன்னாக்கள் தீரும் நிலையிலிருந்தன. என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது என் காதுகளில் தன்னைத் திணிந்து கொண்டது. சாரை சாரையாய் வார்த்தைகள் காதுகளை சல்லடை போட்டு வென்றிருந்தன.

"You Expect Promotion in September?"

"Not sure in the Office man.. But for sure I will get promotion in my life!"

"Hey good man.. You know what? In Denmark know.. They will give you Promotion and Hike when you get promoted as a Dad too!"


இத்துணை நேரம் அமைதி காத்த என் சாத்தான் என்னிடமிருந்து தன்னை அவிழ்த்துக் கொண்டு சொன்னது.

"You gotta be careful dude.. Next time when you are lookin for promotion, your manager would like to give you a Child too!"

Read more...

Monday, July 13, 2009

ஸ்கிப்பிங் கயிறு


பின்னாடி இருந்தது.
இரு கைகளாலும்
இழுத்து முன்னாடி போட்டாள்.
தாண்டினாள்.

பின்னாடி இருந்தது.
இரு கைகளாலும்
இழுத்து முன்னாடி போட்டாள்.
தாண்டினாள்.

அக்காளின் வயதிலிருந்து
குழந்தையின் ஆசைக்கு
ஸ்கிப்பாகி, ஸ்கிப்பாகி
விழுந்து கொண்டிருந்தது
ஸ்கிப்பிங் கயிறு.

Read more...

Friday, July 10, 2009

A Pulp Fiction கவிதை



7 மணிக்கு எழ
6:50க்கு அல(லா)ற
வைக்கும் கடிகைக்குள்
சேமித்து வைக்கிறேன்
என் நாளைகளுக்காக
ஒரு
10 நிமிட சொர்க்கத்தை.

என் சொர்க்கங்கள்
உங்கள் கைக்கெட்டுபவை
என்பதென் இயலாமையாகலாம்.
ஆனால் அதைக் குலைக்காமல்
இருப்பது உங்களுக்குப்
பெருந்தன்மையாகலாம்.

எது வேண்டுமானாலும்
நிகழலாம் இவற்றில்.
மேற்கண்ட பத்திகள்
ஒரு கவிதையாகவோ,
இரு கவிதைகளாகவோ,
மொத்தமும் ஒரு
கவிதையாகவே இல்லாமல்
கூடத் தெரியலாம்.
அதைப் போல.


pulp (pŭlp) ~ A magazine or book containing lurid subject matter and being characteristically printed on rough, unfinished paper

Read more...

Monday, July 6, 2009

தமிழ் வலையுலகும், அக்கா முலையும்!

எழுத்துலகில் யான் ஆற்றி வரும் அரும்பணிகளுக்கு(?!) இடையில், என் கெரியரின் மிக முக்கியமானதொரு ஆய்வறிக்கையை எழுதப் புகுகிறேன்! அவ்வப்போதைய கவிதைகள், கதைகள், கட்டுரைகள் மற்றும் இன்னபிற என்று எழுதியவற்றை இங்கு இட்டு வைத்து விட்டு, வருபவர்களையும், வாசிப்பவர்களையும் கொஞ்சம் அவதானித்ததில், புலனான ஒரு அதிர்ச்சியைப் பகிர்ந்து கொள்ள இந்த இடுகை.

அவையாவன: இங்கே வலப்புறத்தில் பார்த்தீர்களானால், சில Gadgets இருக்கும். அவைகளில் ‘வந்த திசைகள்’ என்றிருக்கும் Gadget-டானது உலகின் எந்தப் பகுதியிலிருந்து, எப்போது வாசக அன்பர்கள் வருகை தந்தார்கள் என்று காட்டும்.

‘வர வைத்த விசைகள்’ என்ற Gadget-டானது, வருகையாளர் வேறேதேனும் வலைப்பக்கத்திலிருந்து இணைப்பு கிடைத்து வந்திருந்தால் எந்தத் தளத்திலிருந்து வந்தார்கள் என்பதை, Bangalore Arrived from tamilish.com அல்லது Madras arrived from jyovramsundar.blogspot.com என்று காட்டும். இது முதல் வகை.

அல்லாமல், வருகை தருபவர்கள் இணையத்தில் ஒரு குறிப்பிட்ட வார்த்தையை கூகிளிலோ அல்லது வேறேதேனும் தேடுபொறியிலோ தேடி, அந்த வார்த்தை நம் தளத்திலிருப்பதன் மூலம் இணைப்புக் கிடைத்து வந்திருந்தால், California Arrived from google.co.xx என்று காட்டும். இது இரண்டாம் வகை.

என் எழுத்தையும் மதித்து நண்பர்கள்
யாத்ரா, வேலன் அண்ணாச்சி, MSK ஆகியோர் இந்தத் தளத்திற்கு அவர்கள் வலைப்பூவிலிருந்து இணைப்புக் கொடுத்திருந்ததைக் கூட நான் அறிந்து கொண்டது இந்த Gadget மூலமாகத்தான்.



சில தமிழ் சினிமா குணச்சித்திரங்கள் சொல்வதைப் போல் 'இப்ப விஷயம் என்னான்ன்னா..' என்று இழுக்காமல் நான் சொல்ல வருவது.. இந்த ‘வர வைத்த விசைகள்’ என்ற Gadgetல் நேற்று, Madras Arrived from google.co.in என்றொரு உள்ளீடு இருந்தது (ஊர் பெயர் மாற்றப்பட்டுள்ளது). நானும் வழக்கம்போல் Right Click -> Open in New Window-வைக் கிளிக்கி விட்டேன்.

அடுத்த விநாடி, சேலம் சிவராஜ் சித்த மருத்துவர் சொல்வது போல் (அடடா.. விஷயத்திற்கேற்ற உதாரணம்!), உச்சி முதல் உள்ளங்கால் வரையான அத்துணை நாடி நரம்புகளும் அதிர்ந்தடங்கின. காரணம் - அந்த வாசக சிகாமணி தேடியிருந்தது 'அக்கா முலை' என்ற வார்த்தையை!

இந்தப் பேரிலக்கிய வாசகப் பெருந்தகை தேடிய 'அந்த' வார்த்தை, என்னுடைய
'எல்லோரும் மறந்துவிட்டிருப்பது' என்ற கவிதையில் தற்செயலாய் இடம் பெற்றிருந்ததாலேயே அந்தப் புனிதரின் விரல் முனைச் சுவடுகள் நம் தளத்திற்குக் கிடைக்கப் பெற்றன என்பது பிற்பாடு புரிந்து புளகாங்கிதம் அடைந்தேன்.

அதிர்ச்சி அடங்க சில நிமிடங்கள் பிடித்த பின், மிக நீண்ட நாட்களுக்குப் பின் வயிறு வலிக்க சிரித்தேன். சிரித்து முடித்த பின், இப்படியும் மனிதர்களா என்ற ஆச்சர்யம் கொண்டேன். இதற்கு முன்பு ஓரிரு முறை வெறுமனே 'முலை' என்று தேடி, அதன் மூலம் வருகை புரிந்தவர்களைக் கண்டுள்ளேன். அப்போது கூட ஒன்றும் பெரிதாய் படவில்லை. சரி.. எதைப் பிடிப்பது.. Sorry.. படிப்பதென்பது அவரவர் விருப்பம், சுதந்திரம் என்று லூசாக விட்டுவிட்டேன்! ஆனால், இம்முறை 'அக்காவினுடையதையே' தேடி என்னை எதிர்வினையாற்றாமல் இருக்க விடவில்லை நம் இலக்கியார்விகள்.

ஆனாலும், அடுத்த முறை இதுபோல காமத்தேனைத் தேடிப் பருக வரும் வாலிப வயோதிக வண்டுகள், சப்பையான நமது தளத்தைக் கண்டு அதிருப்தியடையாமலிருக்க, அவர்களுக்கு http://storyintamil.blogspot.com என்றவொரு அஜால் குஜால் தளத்தை, காம சூத்திரக் களஞ்சியத்தை, வாத்ஸ்யாயனாருக்கே கற்பனை சொல்லிக் கொடுக்கும் ஒரு இன்பப்பீடியாவைப் பரிந்துரை செய்வதில் தன்யனாகிறேன்.

என்னளவில் எழுந்த அதிர்ச்சியை, ஆச்சர்யத்தை, ஆதங்கத்தைப் பதிவு செய்ய எண்ணியதன் விளைவே இக்கட்டுரை. படித்த கையுடன், 'உங்க அக்காவுக்கெல்லாம் அது இல்லையா.. இது இல்லையா?' என்றெல்லாம் கேட்க வேண்டாமென்று அனானித் திலகங்களைத் தாழ்ந்த பணிவன்புடன் கேட்டுக்கொண்டு விடை பெறுகிறேன். நன்றி. வணக்கம்!

Read more...

Sunday, July 5, 2009

சற்றே இருளார்ந்த அறைகள், ஊடே நீட்சியாய் மனிதர்கள்



பரவிக் கிடந்த என் போர்வையில்
சுயபோகத்தில் வீணாய்ப் போன என்
லக்ஷங்கோடி மழலைகள் ஊர்ந்து கொண்டிருந்தார்கள்.

இருளை எழுப்பிவிட்டுப் படுக்கையில் அமர்ந்த பின்
எதேச்சையான பார்வையில் நேற்றைய
கனவில் கண்ட மார்பகம் சப்பிக் கிடந்தது ஒற்றையாய்.

சிலுவைகளை Dildoக்களாக உபயோகிக்கும்
அந்தப் பெண்கள் நம் அனைவரின்
தங்கைள், தமக்கைகள், தாய்கள்.

துணைகளற்ற அறைகளனைத்தும் கற்பனையில்
காசு கேட்கா வேசிகளும், ஆக்கப்படாத கவிதைகளும்
Vaginaவுக்கு மாற்றான உள்ளங்கைகளும் விடுத்து

யாதொன்றும் நிரம்பியில்லை

நம்முடையதும்

Read more...

Friday, July 3, 2009

இந்த நாள் இனிய நாள்..


தேமேயென்று புல்லை நக்கிக் கொண்டிருந்த
மேஷத்தின் புட்டத்தில் கொம்பைத்
தேய்த்தது பின்னாலிருந்த ரிஷபம்.
கீழே விழுந்த சில காய்ந்த புழுக்கைகளை
அள்ள வந்த இரு மிதுனப்பெண்களில்
ஒருத்தியின் காலைக் கொட்டியது
கொடுக்கு விறைத்த கடகமொன்று.
பிடரியுதறிக் கிளம்பிய சிம்மத்திற்கு
கன்னியின் முலையில்
பாலருந்தும் பசியிருக்கையில்
ஒய்யாரித்து வந்த கன்னி ஏந்தியிருந்த
அலங்காரத் துலாமின் ஒரு தட்டினடியில்
பின்னால் வால்நீண்டெழுந்த
பொன்மஞ்சள் விருச்சிகம் ஒட்டியிருந்ததால்
குறியெய்ய வேண்டியது
சிம்மத்திற்கா, விருச்சிகத்திற்கா என்று
தனுசு குழம்பியது.
மேஷத்திற்காகப் பழிவாங்க
ரிஷபத்தின் உறுப்பில் தேய்க்க
தனக்கும் கொம்பிருக்கிறதென்று
மகரம் வீறு கொள்ள,
கும்பத்தினுள் சுவரொட்டி நீந்திக் கொண்டிருந்த
மீனம் ஒரு குதி போட்டு
இன்று யார்யாருக்கென்ன பலனென்று கேட்டதில்
போட்டது போட்டபடி போட்டுவிட்டு
போய் நின்றனவாம் எல்லாமும்
தினசரி கேலண்டரின் முன்.

Read more...

Friday, June 26, 2009

இன்று காலை காற்றடித்ததே பார்த்தீர்களா?

வெயிலில்லாத இன்று காலையில்
நான் காற்றடித்ததைப் பார்த்தேன்.
ஓடி வந்து கட்டிக்கொண்ட
குழந்தையை ஒத்து
மெதுவாய் துவங்கி
ஆவர்த்தன வேகமெடுத்து.
ஆச்சரியம் சுரந்தூறியது எனக்குள்.
உங்களுக்குத் தெரியாது..
எத்தனையாண்டுகளுக்குப் பின்
இன்று காற்றடித்தது என்று.
அதுவும் அத்தனை இதமாக.
அத்தனை மிருதுவாக.
சுற்றியிருந்த செடி கொடி மரங்களின்
காற்றுக்கு ஆடும் தன்மை
எனக்கு நினைவுக்கு வந்துவிட்டது.
அவைகளும் சந்தோஷித்தன
காற்றைக் கண்டு.
எப்படி வளர்ந்து விட்டது
தெரியுமா அது?
இத்துனூண்டில் பார்த்தது.
அப்படியே பாவாடையைப்
பரப்பிக் கொண்டு வந்து
இருப்பது, இல்லாதது
என்று எல்லாவற்றையும்
அள்ளிக் கொண்டு போனது.
காற்றை நோக்கிய
இன்று காலைய புன்னகைதான்
என்னுடைய மிக அழகானதாக
இருக்கக் கூடும்.
அது சரி..
நான் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறேன்.
நீங்கள் காற்றைப் பார்த்தீர்களா?

Read more...

Thursday, June 25, 2009

நம்ம செந்தில்குமாரும், தனலட்சுமியும்..

சற்றே இலகுவாக எழுதி நாள்பட்டாற் போல இருந்தது. எதையேனும் எழுதுவோமே என்று தொடங்குகிறேன். நகைச்சுவை முயற்சிக்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது. பாழும் மனதிற்கு ஆசைக்கா பஞ்சம்? உழைப்பும், முயற்சியும் தான் பற்றாக்குறையில் லோல்படுகின்றன.

மென்பொருள் பணியில் இருப்பதனால் சந்திக்க நேரும் பிரச்சினைகளைப் பற்றி அவ்வப்போது எண்ணிக்கொண்டிருப்பதுண்டு. அதில் குறிப்பிடத்தக்க ஒன்று. ஒவ்வொரு முறை ஊருக்கு செல்லும் போதும், சொந்தக்கார மற்றும் / அல்லது பெரியவர்கள் எவரையேனும், எதிர்கொண்டு பதில் சொல்ல வேண்டி வரும். தலைமுறை இடைவெளிக் கண்றாவியெல்லாம் இல்லை. நான் என்னதான் சிரத்தையாகப் பேசவேண்டும் என்று முயற்சித்தாலும், இவர்கள் செய்யும் அட்டூழியம் அளவில்லாமல் பொறுமையை சோதிக்கும்.

"எந்தக் கம்பெனி" என்பார்கள். சொல்வேன்.
"பெங்களூர்தான?" கொஞ்சம் முன்னாடிதான் யாராவது சொல்லிச் சென்றிருப்பார்கள். இருந்தாலும் கேட்பார்கள்.
"ஆமாம்". 'சரி சொல்லியாயிற்று' என்று பெருமூச்சு விட்டால் ஆயிற்றா. இனிமேல்தான் இருக்கும் பட்டாசே.
சற்றே நெற்றியைத் தேய்த்து யோசித்து.. "அந்தக் கம்பெனில.. உனக்கிந்த செந்தில் குமாரத் தெரியுமா..? நம்ம தண்டபாணி பையன்!"

ஐய்யா.. எனக்குத் தாங்காமல்தான் கேட்கிறேன்.. எங்க கம்பெனி என்ன சுப்ரமணியம் & கோ.வா..? எல்லாக் 'குமார்'களையும் தெரிந்து வைத்துக் கொள்ள..? பெருமைக்காக சொல்லவில்லை.. பத்துக்கும் மேற்பட்ட கிளைகளில் பெங்களூர் முழுதுக்கும் இருக்கும் 30,000க்கும் அதிகமானவர்களில் நான் எங்கிருந்து செந்தில் குமாரைத் தேடுவேன்? அப்படியே எனக்கு அந்தப் புண்ணியவானைத் தெரிந்தாலும், இப்போது அவரைப் பற்றிப் பேசி என்ன சாதிக்கப் போகிறோம்?

இவர்களுக்கு எதையாவது பேச வேண்டும். எதையாவது என்றால் எதையாவது.. அந்த 'எதையாவது' என்ற வார்த்தையை Ctrl+B மற்றும் Ctrl+U செய்து கொள்ளுங்கள். என்னிடம் எப்படியும் மைக்ரோசாஃப்ட், மெய்ண்டெனென்ஸ், டெவெலப்மெண்ட் என்று பேச முடியாதுதான். போகட்டும். சரி.. சகித்துக் கொள்ளும்படியாகவாவது முயற்சி செய்யக் கூடாதா? தமிழ், சமூகம், குடும்பம், அரசியல், தொடங்கி நமிதாவின் நாபிக்கமலம் வரை எதுவானாலும் கூட அவர்கள் கருத்தை அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் பேசுவேன். இப்படியொரு கேள்வி கேட்டால் கடுப்பாகுமா.. இல்லையா..?

இது பரவாயில்லை. சென்ற முறை ஒருவர், கம்பெனியைப் பற்றி கவலைப்படாமல், பெங்களூர் என்றவுடனேயே ஒரு 'தனலட்சுமி'யைப் பற்றிக் கேட்டார். எனக்குப் பற்றிக்கொண்டு வந்துவிட்டது. 'இவர்களிடம் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் பெயரை மட்டும் சொல்லக் கூடாது' என்று முடிவு செய்தேன். அடுத்த முறை இவர்கள் செந்தில்குமாரிடமும், தனலட்சுமியிடமும் கேட்க வேண்டுமென்று என் பெயரைக் குறித்துக் கொள்வார்கள். யார் கண்டது.. ஏற்கெனவே என் மேல் எத்தனை பேர் காண்டாகியிருக்கிறார்களோ?!

Read more...

Wednesday, June 24, 2009

வார்த்தை விளையாடாமை - I

கண்மூடி
வாங்கிக்கொள்வாயா என்றேன்.
வாங்கிய பின்
கண்மூடிக்கொள்வேன் என்றாள்.
மோக்ஷமடைந்தது
முத்தம்.

Read more...

Tuesday, June 23, 2009

முதல் கடைசி நிசி கழிதலின் சில தன்சிதறல்கள்


அடர் இரவின் இந்தப் பொழுதுக்கென்று இருக்க வேண்டிய சற்றே குளிர்ந்த சுகந்தத்தை நுகர்வில் கண்டடைய முயன்று, தோல்வியுற்றுக் கொண்டிருக்கிறேன். நான் எனக்கான மனோபாவ நிலைகளிலிருந்து விலகி, வெகுதூரம் வந்திருந்ததை அவ்வப்போது உணரச் செய்து கொண்டேயிருந்தது சூழல். தணிவுக்கான சாதகாம்சங்கள் சாத்தியப்படுவதற்கான விகிதாச்சாரம், இறுகும் பனிக்கட்டியின் வெப்பநிலையோடு போட்டி போடுகிறது.

என் எந்த சாதிப்புகளையும் பிரஸ்தாபிக்கும் சகஜப் புத்தி நினைவுக்கு வராத போதும், இலக்கியப் பரிச்சயத்தையேனும் முன்னிறுத்தி சொல்வதானால், பித்தேறியிருக்கிறேன் நான். எதை எழுதினாலும் எழுத்தில் வித்தை காட்டச் சொல்லி மேலோங்கும் எண்ணம், ஏனோ இப்போது, "திடீரென" மனசாட்சி விழித்துக் கொண்ட பிச்சைக்காரனுக்குரிய கூச்சத்தினை எனக்குள் உட்புகுத்துகின்றது.

விகல்பமில்லாத உணர்வுகள் பிரவாகிக்கின்றன. திரைகளே தேவையில்லாத இத்தனை உணர்வுகள் ஊற்றிக் கொண்டேயிருப்பது, என் சராசரி வாழ்வுக்கு முதல் முறையாதலால், பதட்டம் கூடுவதும், நொடிமுள் நகர்வதும் என் காலத்தின் நேர்மறையான கூறுகளாகி இருக்கின்றன.

ஒரு தோல்வி.. சாதாரணமான ஒரு தோல்வி என்பது இப்படி பூதாகரமான ஒன்றாக உருப்பெற்றது, நான் என்னை உலக வீரனாக பாவித்துக் கொண்டிருந்த ஒரு ஆட்டத்தின் பொன்வேளையில், அது நிகழப் பெற்றதால் இருக்கலாம். நான் கவ்வாவிடினும், என் வாய்வழி புகுத்திய மண்பிடி, என்னால் நேசிக்கப்பட்ட உள்ளங்கையினுடையது என்பதே இந்தக் கணத்தில் நான் அனுபவிக்கும் எல்லா நன்மை, தீமைகளுக்கும் ஊற்றுக்கண்ணென்பது சற்றே கலங்கலாகப் புரிகிறது.

இத்துணை வர்ணிப்புகளுடன் எதன் பொருட்டு இதை எழுதிக் கொண்டிருக்கிறேன் என்ற கேள்வியை யாரேனும் கேட்டு விடுவீர்களோ என்ற பயம் உள்ளுரத் தோன்றுகிறது. அந்தக் கேள்வியின் நியாயம் புரிவது போலிருந்தாலும் தெம்பூறவில்லை. ஆம். எதன் பொருட்டு இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்? எது நடக்காது என்று நான் இறுமாந்து திரிந்திருந்தேனோ, அது செவ்வனே நடந்து முடிந்த பின், எதை எழுதிக் கிழித்துக், கற்றை கட்டினாலும், நடந்து முடிந்த ஒன்று, இல்லாமல் போகாது எனும்போது, உங்கள் கேள்விக்கு என்னிடம் பதிலில்லை.

பிரிவைத் தவிர வேறெதற்கும் இத்தனை வல்லமை இருக்குமா என்ற இப்போதைய ஐயம், தனக்கு வந்த தலைவலியையும், பல்வலியையும் பற்றிப் பேசும் பழமொழியை நினைவுறுத்துகிறது. அவ்வக் காலங்களுக்கான உணர்வுகள், அவ்வப்போது பெரியவை. இப்போது.. மற்றும் வேறெப்போதையும் விட எனக்கிந்தப் பிரிவு பெரியதாயும், ரணம் மிக்கதாயும் இருக்கிறது. நாளை அடுத்தது. சுழற்சி என்ற வட்டத்தைத்தான் நம்மையறியாமல், நாமாகவோ, அல்லது அடுத்தவருக்காகவோ, நம்மைச் சுற்றிக் கிழித்துக் கொண்டிருக்கிறோமே.

நேற்று வரை கூட இப்படியொரு பொழுது எனக்கு வாய்க்கும் என்று நம்பவில்லை. அதிகமில்லாத ஓரிரு நிமிடங்கள்தான். அவசரத்துக்கு உதாரணமாய், ஆண்டுக்கணக்கில் காதலித்தவளை முதலிரவில் புணர்கையில், முதல் உச்சத்தில் வாய்க்கும் அந்த தேவமணித்துளிகளைப் போல ஒரு சில நிமிடங்கள்தான். சந்தித்தறியா இரவொன்றைப் பரிசளித்துவிட்டு சற்றே தள்ளி நின்று, பரிகசித்துக் கொண்டிருக்கின்றன.

நான் கேட்பது சிக்கலில்லாத ஒரு கேள்விதான். காதல் தோல்வி, நட்பில் தோல்வி, உறவில் தோல்வி, மயிரில் தோல்வி.. என்று என் புலம்பலுக்கான காரணம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே. இரண்டு மணி நேரம் முன்பு வரை வெற்றி பெற்றுக் கொண்டிருந்த இருவரை, அல்லது ஒருவரை, இப்போது தோல்வி பிழிந்து சப்பும் சந்தர்ப்பவசத்தை வார்த்தைகள் வாரித் தந்து விடும் என்ற உண்மை புரிந்திராத வாயிலிருந்து வந்து விழவில்லையே நஞ்சில் தோய்ந்த சொற்கள்!

தெருவில் விடப்பட்ட என் நேசம், என்னை நோக்கித்தானே பாவமாய் பார்க்கிறது. எருமைக்கு ஒப்புவிக்கப்பட்டதுதான் என் தோலென்றாலும், அந்நேசத்திற்காகவேனும் நான் ஒரு பதிலைத் தேடி உழல வேண்டியது அவசியமாகிறது. உடல், மன, ஆன்ம எல்லைகள் வலியின் வரம்புகளை ஸ்பரிசிக்கின்றன. கோழைத்தனம் என் சுவாசக் குழாயெங்கும் நிரம்புவதை உணர்கிறேன். வெட்கிக், குறுகிக், குனிந்து படுத்து, அவமானத்தைப் புணர்ந்தெழப் ப்ரியப்படுகிறேன். ஆசுவாசம் கிட்டும் அப்பொழுதேனும் என்றின்னும் நம்பிக் கொண்டிருப்பதால்.

ஒரு புது வரியைத் தொடங்கும், இந்தக் கணத்தில் என் செயல்பாடுகள் யாவும் நின்று போய்விடக் கூடாதா என்ற ஏக்கம் உள் முழுதும் செங்குத்தாய் நிலைகொள்கிறது. உயிர் இருக்கட்டும். அசைவுகள் இல்லாது போகட்டும். நகர்வுதான் குத்துகிறது. குமைகிறது. அது நின்று போகக் கடவட்டும். ஆனால் உயிரில்லாமல் போய்விட்டால், இந்த இரவைக் கடந்து சென்று நான் சாதிக்க விரும்பும் விடியல், நரகத்தின் வாயிலில் கிடைக்கக் கூடியதாகப் போய்விடும்.

நேசங்கள், சாபங்களாக வந்து வீழாதிருக்கும் சமயம் மிக மெதுவாகவே கடந்து செல்கிறது. வென்று காட்டிய அத்தனையும் நிலையாமையென்ற பள்ளத்தினுள் உருண்டு, இருண்ட பாதாளத்தினுள் சத்தமெழுப்பாது மறைகின்றன. அதிக சலனமில்லாமல் இந்த இரவைக் கடக்க ஆசைப்படுகிறேன். வெற்றியென்ற இலக்குக்கு, இலக்கான அனுபவம், பக்குவமாக சுவாசிக்க உதவுகிறது. இதுவே என் கடைசி நிசியாக இருந்தாலும், பொழுது விடிவது எவ்வித மாற்றத்திற்கும் ஆளாகாதிருக்க நான் வரமளிக்கிறேன்.

ஒரு புள்ளியில் மையங் கொண்டு, ஆழ்ந்த ஒரு மூச்சுவிட்டு, என்னைத் தூக்கியெறிந்த என் நேசங்களின் திசைகளுக்காகப் பொங்கித் ததும்பும் மகிழ்வோடு புன்னகைக்கிறேன். என் பிறழ்வுகள் எனக்குள் புதைதலைப் போல, அவர்களுக்கான என் காழ்ப்புகள், பிரார்த்தனைகளாக உருமாறும் இத்தருணத்தில், நானே தேவனாக.. நானே அமரனாக.. நானே யாதுமாக ஆதலில் அமைதிக்குள் அழியத் துவங்குகிறேன். இரவு தீர்ந்து கொண்டிருக்கிறது..

Read more...

Friday, June 19, 2009

ஒரு புகைப்படம் மற்றுமொரு கவிதை

சமீபத்தில் ஆர்க்குட்டை மேய்ந்து கொண்டிருந்த போது, என் நண்பன் வினோத் எடுத்த புகைப்படம் ஒன்றைக் காண நேர்ந்தது. நிச்சலனமான மனநிலையோடு இருந்ததாலோ என்னவோ, பார்த்த மாத்திரத்தில் அந்தப் படம் என்னுள் ஏற்படுத்திய உள்மன ரீதியிலான மாற்றங்கள் அசாதாரணமானவையாகவும், அடர்வு மிக்கவையாகவும் இருந்தன.

வினோத் புகைப்படக் கலையில் மிகுந்த நாட்டம் கொண்டவன். முறையான பயிற்சி இல்லாதபோதும், விருப்பத்தின் பொருட்டே அக்கலையின் நுண்கூறுகளைக் கற்று, தனக்குத் தானே பயிற்சி செய்து வருபவன். என்னுடைய 'நானும், இளைய தளபதி விஜயும்' என்ற கதையில் ஏற்றப்பட்டிருக்கும் என்னுடைய புகைப்படங்கள் வினோத்தின் கண்வண்ணமே.

இயல்பான, இறுக்கமில்லாத துகள்களை ஒருசேரக் கோர்த்து, கடற்கரைக் காற்றை சிறிது தூவி, சூரியனைக் கொஞ்சம் குனிந்து அமரச் சொல்லி, அழகு, மழலை, அக்கறை, பசி, பகிர்தல் என்று நீளும் ஒரு கற்றை உணர்வுகளையும், மணலாய் சிந்திவிட்டு, மனம் கனக்கப் பார்த்துக் கொண்டேயிருந்தேன். அவளை!

அந்தத் தருணத்தில் எனக்குள் உண்டான எண்ணங்களை எங்கேயாவது பத்திரப்படுத்தி வைக்க வேண்டுமே என்று பதற்றப்பட்டதன் விளைவாய், 'வழக்கம்போல்' ஒரு கவிதை வாய்த்தது. படமும், கவிதையும் தொடர்கின்றன.

வினோத்தின் ஏனைய புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.


விழி கொள்ளாத வெளியானபோதும்
கூண்டில் திளைக்கும் கிள்ளையில்லாத
வானைக் காட்டிப் பதைக்கிறாள்.
அடி மறைக்கும்
துண்டுகள் கிழிந்திருப்பினும்
இருட்டக் காத்திருக்கும்
அந்திமங்களில் ஒளி துப்பி ஒத்துழையும்
பெட்ரமாக்ஸுக்குத்
தலைப்பாகையிட்டவனைத்
தொழப் போகிறேன்.
சுழலுக்குத் தாளாமல்
பெட்டியோடு ஒண்டியிருக்கும் சருகும்
என்றேனும் பசுமையாய் இருந்திருக்கும்.
விரிபட்ட வெள்ளைச் சீட்டில் விழுவது
அவன் பசிமைக்குப் பத்தப்போவதில்லை.
மிஞ்சியவையெல்லாம்
பெட்டி, பெட்ரமாக்ஸ் காதலும்,
பாசமாய்ப் பார்க்கும்
பிங்க் ஷூக்களுமே!

Read more...

Thursday, June 4, 2009

ஒரு கவிதையும், அது கற்றுத் தந்த பாடமும்.

வெற்றிகள் இனித்துக் கொண்டே இருக்கக் கூடியவை. எல்லாருக்குமே வெற்றியைப் பகிர்ந்து கொள்வதில்தான் எத்தனை ஆனந்தம். மனித மனத்தின் நுண் உளவியல் தன் தீரங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும், நிலைப்பாட்டை அர்த்தம் செய்து கொள்வதற்கும் உதவிகரமாயிருப்பதால், விளம்பர மனோ நிலையிலேயே உழலக் கற்றுக் கொண்டிருக்கிறது.

வெற்றி பெற்றுக் கொண்டே இருத்தல் என்பது இயலாத ஒன்றானதால், பெற்ற வெற்றிகள் இதுவரை அளித்து வந்த போதையின் வெற்றிடத்தை நிரப்பவேனும் மனிதன் மீண்டும், மீண்டும் முயற்சிகளைத் துவங்குகிறான். வெற்றிகளைப் பொதுவில் வைத்து இன்பம் காணும் மனம், ஒரு தோல்வியையேனும் அடுத்திருப்பவனுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராய் இருப்பதில்லை.

என்னளவில் தோல்விகள் தரும் வலியைப் பகிர்ந்து கொள்வதற்கு என் நண்பர்களுள் எவரேனும் ஒருவரை என்னை அறியாமல் நான் தெரிவு செய்து வந்திருக்கிறேன். ஒருவருடன் பகிர்ந்து கொண்டேன் என்பதிலில்லாத ஆச்சரியம், எல்லாத் தோல்விகளையும் அதிகபட்சம் ஒருவருடன் மட்டுமே பகிர்ந்து கொள்ள முனைந்தும், அதற்கான காரணமாக, அவருடனான அன்யோன்யத்தை முன்னிறுத்தியும், என் மனம் செய்து வந்த உள்ளரசியல் இன்றென்னை ஆச்சரியத்திற்குள்ளாக்குகிறது.

இந்த ஆடு புலி ஆட்டத்திற்கொரு முடிவு கட்டும் எண்ணம் என்னை ஆட்கொண்டது, இன்று சில கோப்புகளைப் புரட்டிக் கொண்டிருக்கையில்தான். உயிரோசைக்கு அனுப்பிய கவிதைகளையெல்லாம் இட்டு வைத்திருந்த ஃபோல்டரில், ஒரு கவிதையைக் கண்டேன். நீண்ட நாட்களுக்கு முன்பு எழுதி, உயிரோசையில் அந்த வாரம் வராமல் போன பிறகு அதனை மறந்தே போயிருந்தேன்.

பிரசுரமாயிருந்தால் அடுத்த நிமிடமே வலையில் இட்டு வைக்கும் மனம், ஒரு தோல்வியை மட்டும் தலையணைக்கடியில் ஒளித்து வைத்தது என் நடுவு நிலைமைக்கு சான்றாகாது என்பது அந்தக் கவிதையைப் பார்த்த மாத்திரத்தில் உறைத்தது. சுமாரான ஒன்றாக இருந்தாலும், அது கற்றுக் கொடுத்த பாடத்திற்கும், அப்பாடத்தைப் பின்பற்ற முடிவு செய்ததற்கும் விளைவான அக்கவிதை கீழே.

துளியாய் வழிதலின் ஆராய்வு

முத்தம் உகுத்த நிலவோடு
நானும் உதிர்ந்து கிடக்கும்
இரவில்
உன் நினைவின் வீச்சம்
விஷப் பொழுதின் வீதிகளில்
ஓடி விளையாட என்னை
அழைத்துத் துரத்துவதும்,
உரசியுலவும் வளிப்புள்ளிகள் போல்
என் புறத்தில் நீ நடந்த நாள்
நினைவிலிருப்பதன் நீட்சியாகவே
நீ வந்து நின்றவுடன் அடிக்கும்
உன் பிரத்தியேக வாசம்
செய்த குழப்படிகளை
என்னால் மறக்கலாகாததும்,
வெகுநேரம் நீர்ப்பட்டுத்
தாரைகளிலூறிய விரல்களாய்
சொத, சொதத்த மனதும்,
மற்றும் உள்ளே நைந்த நீயும்
காரணமாயிருக்கலாம்.
என் வரிகளின் சிதிலத்தில்
துளித் துளியாய் இன்னும்
நீ வழிந்திருத்தலுக்கு.

Read more...

Sunday, May 10, 2009

சில நொடிச் சிந்தனைகள் சில

சர்க்கரை டப்பாவுக்குள்
செத்துக் கிடந்தது
எறும்பு.

-o0o-

7 மணி. தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
பதறியடித்து எழுந்தாள்
ரிமைண்டர் அடித்தவுடன்.

-o0o-

முன் சீட்டில் அவருடன்
அழகாக வேடிக்கை பார்க்கும் பிரவுனி.
மனைவி விவாகரத்தாகியிருந்தாள்.

-o0o-

பாஸ்வோர்டாய் காதலி பெயர்.
ஒவ்வொரு மெயில் ஐடிக்கும்
வேறு வேறாய்.

-o0o-

சௌந்தர்ய லட்சுமி
கிழிந்து வழிந்தாள்
ATM குப்பைக்கூடையில்.

-o0o-

மொத்த அபார்ட்மெண்ட்டுக்கும்
Happy New Yearக் கோலம் போட்டிருந்தாள்
வேலைக்காரி.

-o0o-

அமெரிக்க நாயின்
குரைப்புச் சத்தம்
கான்ஃப்ரன்ஸ் காலில்.

-o0o-

நடுவீதியிலொரு
கவன ஈர்ப்புத் தீர்மானம்
நைட்டிக்கு மேல் துண்டு.

-o0o-

சிமெண்ட் ரோட்டில்
சில கால்தடங்கள்
அவசரம் ஆறிப்போய்.

-o0o-

தண்டவாளத்தில்
மலமாக
ரயிலின் நன்றி.

Read more...

Thursday, May 7, 2009

யானும் ஒரு லௌகீகன்

கார்னர் சைட்டா..?
செம்மண் பூமியா..?
சிட்டில இருந்து எவ்ளோ தூரம்..?
மெயின் ரோட்டுக்குப் பக்கம்னாப் பரவால்ல..
பஞ்சாயத்தப்ரூவ்டா..?
தார் ரோடு, தண்ணி வசதி..?
ரொம்ப சதுரமாவோ, செவ்வகமாவோ வேண்டாம்..
NOC முக்கியம்..
தாய்ப் பத்திரமெல்லாம்..?
பக்கத்துல வீடெதும் ஆயிருக்கா..?
.
.
.
.
சற்று கூடக்குறைய
உருவகப்படுத்த வேண்டுமானால்
சில பழைய படங்களில் வருவது போல்
வகை வகையாய் முகரூபங்கள்
மாறி மாறி வந்து வந்து கேட்கையில்
இறுக இறுகக் கண் மூடவும்,
முழங்கைகள் முகம் மறைக்கவும்,
இடவலமாய் தலையை ஆட்டுவேன்
என்று சொல்லலாம்.
பர்சனல் லோனைப் போட்டதில்
ரெஜிஸ்ட்ரேஷனும் ஆயிற்று.
பாரதி ஸ்வரூபனாய் வாழ நினைத்த
நான் கடன் வாங்கிக்
கட்டப் போகும் வீட்டுக்கும்
மஞ்ச பெயிண்ட் கிடைக்கும்.
தாக்ஷாயணி பொதினா சட்னி
நன்றாய் செய்வாள்.
நைட்டுக்கும் நன்றாய்த்தான் இருப்பாள்.

Read more...

Friday, May 1, 2009

சாரு - கடிதம் II

from Mathan V
to charunivedita@charuonline.com
date Fri, Mar 27, 2009 at 4:38 AM
subject ஒரு சிறுகதை முயற்சி


ப்ரிய சாரு,

மீண்டும் மதன்.

என் முயற்சிகளைத் தங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்ற ஆசையுடனும், தங்கள் நேரத்தைத் திருட முயற்சி செய்கிறேனோ என்ற தயக்கத்துடனும், என் அடுத்த சிறுகதை முயற்சியின் லிங்கைத் தருகிறேன்.

http://azhagiyalkadhaigal.blogspot.com/2009/03/blog-post_27.html

வலைத்தளங்களுக்கெல்லாம் நீங்கள் வர மாட்டீர்கள் என்று தெரியும். வந்து பார்ப்பீகள் என்று நம்புகிறேன் ஏனோ.

நன்றி.

--மதன்

பதில் கடிதம்:

படித்தேன் மதன். ஆனால் கதை என்னைக் கவரவில்லை. நாம் கற்க வேண்டியது இன்னும் எத்தனையோ இருக்கிறது. சிறுகதைகளில் கு.ப. ரா., தி. ஜானகிராமன், எம்.வி. வெங்கட்ராம், மௌனி, ஆதவன், அசோகமித்திரன், கி. ராஜநாராயணன், ந. முத்துசாமி, சுஜாதா, எஸ். ராமகிருஷ்ணன், ஷோபா சக்தி என்று பல சாதனையாளர்களை நாம் தாண்ட வேண்டியிருக்கிறது. ஷோபா சக்தியின் சிறுகதைகளை நீங்கள் படித்திருக்கிறீர்களா? உங்களுடைய ஆத்தா என்ற கதையைப் போல் தமிழில் ஒரு நூறு கதைகள் எழுதப் பட்டுள்ளன. இப்படி ஏற்கனவே எழுதப் பட்ட ஒரு கதையை நாமும் ஏன் மீண்டும் எழுத வேண்டும்?

5.4.2009.

7.20 p.m.

from Mathan V
to charunivedita@charuonline.com
date Sat, Apr 25, 2009 at 2:36 PM
subject Re: ஒரு சிறுகதை முயற்சி

ப்ரிய சாரு,

எத்தனையோ நாட்களுக்குப் பிறகு தமிழில் தட்டச்சு செய்கிறேன். கடைசியாக எழுதியது உங்களுக்கு எழுதிய கீழ்க்கண்ட கடிதம் தான். மிக அதிகப்படியான வேலைப்பளுவின் காரணமாக உங்களுக்கு உடனே பதில் எழுத முடியவில்லை. மன்னியுங்கள்.

வழக்கம் போலவே, எத்தனை சிறுவனாக இருந்தாலும், என் கடிதத்தையும் மதித்து, என்னுடைய 'ஆத்தா' என்ற கதையைப் படித்து, தங்கள் கருத்தைப் பகிர்ந்து கொண்டிருந்தீர்கள்.

எதிர்மறைக் கருத்தாக இருந்தாலும் அதை உவந்து ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை உங்கள் எழுத்திலிருந்தே கற்றுக்கொண்டிருக்கிறேன். சாருவின் வாசகனாக இருந்துவிட்டு, நடுநிலைமையில்லாமல் இருந்தால் எப்படி? உங்கள் நேரத்துக்கும், கருத்துக்கும் நன்றி சாரு.

எழுத்து ஏனோ என்னை ஈர்த்துக் கொண்டே இருக்கிறது. இளம்பிராயந் தொட்டு எழுத்தின் மேல் ஒரு இனம்புரியாத காதல். இப்பொழுது உங்களையெல்லாம் படிக்கும் போது அது பல்கிப் பெருகுவது எப்படி என்று யோசிப்பது அர்த்தமில்லாத ஒன்றாகத்தான் இருக்கும். நீங்கள் சொன்னது போல சிறுகதை, கவிதை மற்றும் பல இலக்கிய வடிவங்களிலும் நம்மைத் தாண்டி நெடுந்தொலைவு சென்றுவிட்ட எத்தனையோ மகானுபாவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தொட்ட எல்லைகளையெல்லாம் தாண்டி நம் படைப்பை எடுத்துச் செல்லும் கடைமையும், உழைப்பும் ஒவ்வொரு படைப்பாளிக்கும் இருக்க வேண்டும்.

இந்த உண்மை புரிந்த மூத்த படைப்பாளியான நீங்கள், எதுவும் தெரியாத என்னைப் போன்ற கத்துக் குட்டிக்கு அதைத் தெரியப்படுத்தியிருக்கிறீர்கள். ஒரு வகையில் பார்த்தால் நீங்கள் உங்கள் கடைமையை செய்ய நான் உதவியிருக்கிறேன். தெருவோர பேட்ஸ்மேன் ஒருவன் சச்சினைப் பார்த்தால் ஆட்டோகிராஃப்தான் கேட்க வேண்டுமா. பேட்டிங் நுணுக்கங்களைப் பற்றியும் கேட்கலாம்தானே?

உங்களுடைய நேர்கோட்டு விமர்சனங்களுக்காகவும், எதைப் படிக்க வேண்டும், எவருடையதைப் படிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளவும் தான் எதையாவது எழுதித் தொலைத்தால், அதனை உங்களுக்கு அனுப்ப ஆவலுறுகிறது.

எழுத வேண்டும் என்ற ஆசை மட்டும் தான் சாரு என் மூலதனம். 'அதற்கான உழைப்பு முதலில் வாசித்தலின் வடிவில் வெளிப்பட வேண்டும்' என்ற உண்மையே சமீபமாகத்தான் புரிந்தது. வெறும் ஆசையை மட்டும் வைத்துக் கொண்டே என் சில கவிதைகளுக்கு உங்கள் பாராட்டைப் பெற்றது என்னுடைய மிகப் பெரிய சாதனையாகத்தான் கருதுகிறேன். எனில், நீங்கள் சொன்ன எழுத்தாளர்களையெல்லாம் படித்து விட்டு முயற்சி செய்தால் ஓரளவுக்குத் தேறும் படைப்புகளைத் தர முடியும் என்ற நம்பிக்கையும் துளிர்விடத்தான் செய்கிறது.

நீங்கள் சமீபமாய் எழுதியிருந்தீர்கள். ‘வலையில் எழுதுபவர்கள் பொழுது போக்குவதற்காக எழுதுகிறார்கள்’ என்று. இருக்கலாம். ஆனால் நான் அப்படியில்லை சாரு. நீங்கள் சொல்வீர்களே. ‘எழுத்து என்னுடைய பேஷன்’ என்று. அதைப் போல. எனக்கும் அது ஒரு பேஷன். என்ன.. உங்களுக்கு இருப்பதை அளவில் ‘சற்று’ குறைவாக இருக்கிறது. இதை வளர்த்து, வார்த்து வைத்துக் கொள்வது என் கடைமை.

ஆத்தா என்ற அந்தக் கதையைப் பற்றி நீங்கள் சொல்லும்போது "உங்களுடைய ஆத்தா என்ற கதையைப் போல் தமிழில் ஒரு நூறு கதைகள் எழுதப் பட்டுள்ளன. இப்படி ஏற்கனவே எழுதப்பட்ட ஒரு கதையை நாமும் ஏன் மீண்டும் எழுத வேண்டும்?" என்று சொல்லியிருந்தீர்கள். ஏற்கெனவே என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று தெரியாததால் வந்த வினைதான் சாரு இது. தெரிந்திருந்தால் இதுவரையில் இல்லாத முறையில் தான் முயற்சி செய்திருப்பேன். பரவாயில்லை. குட்டுப்பட்டாலும், சாரு கையில் தானே குட்டுப்பட்டேன்! என் எழுதும் ஆசைக்குத் தீனி போட முதலில் படிக்க ஆரம்பிக்கிறேன். எதிர் காலத்தில் எப்போதாவது உங்களுக்குப் பிடிக்கும் வகையில் எழுதியிருக்கிறேன் என்று தோன்றினால் அனுப்புகிறேன் சாரு. எப்படியும் இன்னும் ஒரு இரண்டு, மூன்று ஆண்டுகளாவது ஆகும் என்று நினைக்கிறேன்.

உங்கள் எழுத்தில் தினமும் உங்களை சந்தித்து, என் எழுத்தில் உங்களை சந்திக்கக் காத்திருக்கும்,

மதன்

Read more...

  ©Template by Dicas Blogger.

TOPO