Wednesday, November 5, 2008

நானும் காதலிக்கிறேன்..!

வரப்போகும் காதலிக்காய்,
என்னுள்
வந்துவிட்ட காதலதைக்
காகிதத்தில் வார்த்தெடுக்க
கரைந்துருகி வார்த்தையெடுக்கிறேன்.. !

நான்
காணக் காத்திருக்கும்
கண்களைக் கடந்து சென்ற காற்று
காயப்படுத்தியதோவென்று
கதறுமளவு, இன்னும்
காதலிக்க ஆரம்பிக்கவில்லையடி..!

ஆனால்,
நீ கடந்து சென்ற கணப்பொழுதில்
காட்டிச்சென்ற புன்சிரிப்பும்,
நடந்து வந்த பாதையிலேயே
நிகழ்ந்து முடிந்த என் மரிப்பும்,
கனவில் மாத்திரமே கண்டாலும்
இன்னும் என் கண்ணை
விட்டகலா விந்தைதான்
விளங்கவில்லையடி..!

காதல் சுகிக்கிறதுதான்..
கூடவே வலிக்கிறதடி..!
எங்கேயோ நீயிருந்து
இரவானால் போர்தொடுக்க..
பெண்ணியலின் புதிர்களனைத்தும்
புரியாமல் மனம் தவிக்க..
வலிக்கிறது..!

காத்திருப்போம்..
காதலுடன் காத்திருப்போம்..

நல் சுற்றமும், நட்பும் சூழ,
என் கொற்றவையை
உற்றவனிடம்
ஒப்படைக்கும் வரை
காத்திருப்போம்..

உச்சி முகர்ந்து,
இச்சை பகர்ந்து,
நெற்றி வழியே,
சுற்றி வந்து,
சேலைக்குள் சொன்ன சேதி
சேலைத்தலைப்புக்கும் கேட்காமல்
நாகரிகமாய்க் காதலிக்கும்
நாள் வரும் வரை காத்திருப்போம்..

இக்காலத்தவர்கள் போல்
பூங்காவில் மட்டும் காத்திருக்காமல்,
எக்காலத்துக்கும்
நீங்காமல் காத்திருப்போம்..
காதலிப்போம்..!



0 மறுமொழிகள்:

  ©Template by Dicas Blogger.

TOPO